உலகை உலுக்கிய சர்வாதிகாரிகள் பட்டியலில், ‘பாசிசம்' என்ற சித்தாந்தத்துக்குச் சொந்தக்காரரான பெனிட்டோ முசோலினிக்கு நிரந்தர இடம் உண்டு. 1922 முதல் 1943 வரை இத்தாலியை ஆண்ட முசோலினி, ஹிட்லருடன் இணைந்து இரண்டாவது உலகப் போரில் இறங்கியவர். வட மத்திய இத்தாலியின் பிரிடாபியோ பகுதியில் 1883 ஜூலை 29-ல் பிறந்தார் முசோலினி. அவரது தந்தை அலெசாந்த்ரோ முசோலினி, சோஷலிசத்தால் ஈர்க்கப்பட்டவர். மெக்ஸிகோ அதிபர் பெனிடோ யுவரோஸ், இத்தாலிய சோஷலிஸ்டுகளான ஆமில்கேர் சிப்ரியானி, ஆண்ட்ரியா கோஸ்டா ஆகியோரின் பெயர்களை இணைத்துத் தனது மகனுக்கு ‘பெனிடோ ஆமில்கேர் ஆண்ட்ரியா முசோலினி' என்று பெயர் சூட்டினார்.
1902-ல் வேலை தேடி சுவிட்சர்லாந்து சென்றார் முசோலினி. அங்கு சோஷலிஸ்ட் இயக்கத்தில் ஆர்வம் ஏற்பட்டது. 1904-ல் மீண்டும் இத்தாலிக்குத் திரும்பி, சோஷலிஸ்ட் பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்தார். சிறிது காலம் ஆசிரியராகவும் பணி யாற்றினார். 1915-ல் இத்தாலியின் ராணுவத்தில் சேர்ந்தார். இரண்டு ஆண்டுகள் அதில் பணிபுரிந்தார். அபாரமான தனது பேச்சுத் திறமையால் அறிவுஜீவியாகக் கருதப்பட்டார்.
கருஞ்சட்டைப் படை
1919 மார்ச் மாதம் இத்தாலிய பாசிஸ்ட் கட்சியைத் தொடங்கினார். வேலையற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் அதில் சேர்ந்தனர். அவர்களைக் கொண்டு ‘கருஞ்சட்டைப் படை' ஒன்றை உருவாக்கினார். கருஞ்சட்டை வீரர்களுடன் ரோம் நகருக்கு மாபெரும் பேரணியாகச் சென்று ஆட்சியைக் கைப்பற்றப்போவதாக மேடைகள்தோறும் முழங்கினார் முசோலினி. அப்போது பிரதமராக இருந்த லூகி ஃபேக்டா இவர்களை ஒடுக்கத் தவறினார்.
சிறந்த நிர்வாகியாக இருப்பார் என்று கருதியோ என்னவோ, 1921-ல் முசோலினியிடம் ஆட்சியை ஒப்படைத்தார் மன்னர் விக்டர் இம்மானுவேல். முசோலினி பிரதமரானதும் நீதித் துறையின் செல்வாக்கைக் குறைத்தார். பத்திரிகைச் சுதந்திரத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார். தன்னை ‘இல் டூச்சே' (நாட்டின் தலைவர்) என்று அழைக்க வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தார்.
இத்தாலியப் பேரரசு
‘இத்தாலியப் பேரரசை’ ஏற்படுத்த விரும்பிய முசோலினி, 1923-ல் கோர்ஃபு என்ற கிரேக்கத் தீவின் மீது குண்டுமாரி பொழிந்து அதைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இத்தாலியின் காலனியான லிபியாவில் அரசியல் கைதிகளுக்கு உடலுழைப்பு முகாம்களைத் திறந்து
வைத்தார். கைதிகளை விஷ வாயுவைச் செலுத்திக் கொல்லுமாறும் கட்டளையிட்டார். 1935, 1936-ல் அபிசீனி யாவைக் கைப்பற்றியபோதும் விஷவாயு முகாம்களில் பலர் கொல்லப்பட்டனர். தனது ஆட்சியை “பாசிசப் பேரரசு, சமா தானப் பேரரசு, நாகரிகம் – மனிதாபிமானம் கொண்ட பேரரசு” என்று மெச்சிக்கொண்டார் முசோலினி.
உலகப் போரில் வாங்கிய அடி
வாய்ச் சவடால் அடித்து வந்தாலும், உலகப் போரில் தீவிரம் காட்டாமல் 1940 ஜூன் வரையில் ஒதுங்கியே இருந்தார். அதற்குள் ஜெர்மானியப் படைகள் ஐரோப்பா முழுவதையும் கதிகலங்க வைத்திருந்தன. அடிக்கடி போர் திட்டங்களை மாற்றிக்கொண்டே இருந்து ராணுவத்தைக் குழப்பினார் முசோலினி. பிரான்ஸ் மீது அவர் நடத்திய தாக்குதல் ஜவ்வாக இழுத்தது. அதற்குள் ஜெர்மனியோடு போர் நிறுத்த ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டுவிட்டது பிரான்ஸ்.
கிரேக்க நாட்டின் மீது படையெடுத்த இத்தாலிய ராணுவம், அந்நாட்டு வீரர்கள் திருப்பி அடித்ததைத் தாங்க முடியாமல் அல்பேனியாவுக்குள் நுழைந்தது. அல்பேனியாவை இத்தாலி கைப்பற்றியதன் ரகசியம் அதுதான். வடக்கு ஆப்பிரிக்காவில் நடத்திய படையெடுப்பும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இழுபறியாகிவிட்டது. நல்ல வேளையாக ஜெர்மானியப் படைகள் வந்து இத்தாலியப் படைகள் களத்திலிருந்து சேத மில்லாமல் விலக உதவின.
கோர முடிவு
லிபியாவையும் அபிசீனியாவையும் மீட்ட நேச நாடுகள், 1943-ல் இத்தாலி மீது படையெடுத்தன. ரோம் நகரின் மீது குண்டுகளை வீசின. அந்த ஆண்டு ஜூலை 25-ல் மன்னர் விக்டர் இம்மானுவேல், முசோலினியைக் கைது செய்து பல்வேறு ஊர்களில் சிறை வைத்தார். ஜெர்மானிய கமாண்டோக்கள் அவரை மீட்டுத் தங்கள் ஆக்கிரமிப்பில் இருந்த வடக்கு இத்தாலியில் தங்க வைத்தனர். அங்கிருந்துகொண்டு பொம்மை (இத்தாலிய) அரசின் அதிபராகத் தன்னைக் காட்டிக்கொண்டார் முசோலினி. 1945 ஏப்ரல் 27-ல் ஜெர்மானிய ராணுவ அதிகாரியைப் போல மாறுவேடமிட்டு, சுவிட்சர்லாந்துக்குச் செல்ல முயன்றபோது, இத்தாலியைச் சேர்ந்த அரசு எதிர்ப்புப் படை வீரர் ஒருவரால் அடையாளம் காணப்பட்டார்.
அடுத்த நாளே மிலன் நகருக்குக் கொண்டுசெல்லப்பட்டு, மக்கள் கூடும் சதுக்கத்தில் பெரிய கம்பத்தில் கட்டித் தொங்க விடப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மனைவி கிளாரா பெட்டாசி, அவளுடைய தம்பி மார்செலோ பெட்டாசியும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவரது அமைச்சர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இதே கதிதான் ஏற்பட்டது. முசோலினிக்கு ஏற்பட்ட இந்தக் கதி ஹிட்லரின் காதுகளை எட்டியது. பெர்லின் நகருக்குள் சோவியத் துருப்புகள் நுழைந்துவிட்டன என்று கேள்விப்பட்டதும் மனைவி இவா பிரௌனைச் சுட்டுக்கொன்றுவிட்டு, விஷம் குடித்ததுடன் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்தார் ஹிட்லர். இரு சர்வாதிகாரிகளின் வாழ்வும் இப்படியாக முடிவுக்கு வந்தது.
******************
முதல் உலகப் போரில் கிடைத்த மாபெரும் தோல்வி ஜெர்மனியை நிலைகுலையச் செய்திருந்தது. அந்தப் போரின் முடிவில்,1919 ஜூன் 28-ல் ஜெர்மனிக்கும் நேசநாடுகளுக்கும் இடையில் கையெழுத்தான வெர்சைல்ஸ் ஒப்பந்தமும் ஜெர்மனிக்குக் கடும் நெருக்கடியை அளித்திருந்தது. வெற்றிபெற்ற நாடுகளுக்குப் பெரிய தொகையை ஜெர்மனி நஷ்ட ஈடாகத் தர வேண்டிவந்தது. 10% நிலப் பகுதியை ஜெர்மனி இழந்தது. இதற்கிடையே முதல் உலகப் போரின்போது பவேரியா ராணுவத்தில் பணியாற்றிய ஹிட்லர், 1930-களின் தொடக்கத்தில் ஜெர்மனி அரசியலில் அசாத்தியமான வளர்ச்சி பெற்றிருந்தார். 1933-ல் ஜெர்மனியின் அதிபரானதும் ஐரோப்பிய நாடுகளை வென்று தனது சாம்ராஜ்யத்தை விரிவாக்க வேண்டும் என்று முடிவுசெய்தார். அதன் ஒரு பகுதியாகத்தான் 1939 செப்டம்பர் 1-ல் போலந்து மீது போர் தொடுத்தார்.
தொடக்க வெற்றிகள்
போர் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு ஜெர்மனியின் கைதான் ஓங்கியிருந்தது. மேற்கு ஐரோப்பாவின் பல பகுதிகளை ஜெர்மனி ராணுவம் கைப்பற்றியிருந்தது. இத்தாலியின் அதிபர் பெனிட்டோ முசோலினி, மத்தியத் தரைக்கடல் பகுதியில் ரோமானியப் பேரரசை நிறுவ வேண்டும் என்ற எண்ணத்தில், ஜெர்மனியுடன் இணைந்து போரில் ஈடுபட்டார். போரில் கிடைத்த ஆரம்ப வெற்றிகளால் ஊக்கம் பெற்ற ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் நாடுகளையும் ஊடுருவித் தாக்கிக்கொண்டிருந்தது. பிரான்ஸ் மீதான தாக்குதலில் ஜெர்மனிக்கு இத்தாலி கைகொடுத்தது. ஆஸ்திரியா, செக்கோஸ்லோவேகியா, போலந்து, நார்வே, டென்மார்க், பெல்ஜியம், கிரேக்கம் என்று ஐரோப்பாவின் பல நாடுகளில் ஜெர்மனியின் போர் முரசு ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தது.
போர்த் தளவாடங்கள்
போர் என்றால், ராணுவத் தளவாடங்கள் வண்டி வண்டியாகத் தேவை அல்லவா? போர் விமானங்கள், பீரங்கிகள், இயந்திரத் துப்பாக்கிகள், நீர்மூழ்கிக் கப்பல்கள் என்று குண்டூசி தொடங்கி வெடிகுண்டு வரை ஜெர்மனிக்கும் பிற நாடுகளுக்கும் தேவைப்பட்டன. பிரிட்டனின் நட்பு நாடான அமெரிக்கா நேரடியாகப் போரில் குதிக்கவில்லையே தவிர, பிரிட்டனுக்குத் தேவையான ராணுவத் தளவாடங்களை டன் கணக்கில் அனுப்பிக்கொண்டிருந்தது. அதே நேரம், ஜெர்மனியின் ராணுவத் தளவாட அமைச்சர் ப்ரிட்ஸ் டோட் ஜெர்மனியின் ஆயுதத் தேவைகளை நிறைவேற்றக் கடுமையாக உழைத்துக்கொண்டிருந்தார். 1942 பிப்ரவரி 8-ல் விமான விபத்தில் அவர் இறந்ததை அடுத்து ஆயுத உற்பத்தியில் நெருக்கடி ஏற்பட்டது. அப்போது ஹிட்லரின் நம்பிக்கைக்குரிய கட்டிடக் கலைஞரான ஆல்பர்ட் ஸ்பியர் ராணுவத் தளவாட அமைச்சரானார். அவரது பெரும் முயற்சியால் ஜெர்மனியின் போர் விமானங்கள், பீரங்கிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது.
அமெரிக்கா என்ற அசுரன்
அமெரிக்காவின் பேர்ல் ஹார்பர் மீது 1941 டிசம்பர் 7-ல் ஜப்பான் தாக்குதல் நடத்தியது. ஜப்பானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மறைமுகமான சந்தைப் பொருளாதார மோதல்கள்தான் அமெரிக்கா மீதான தாக்குதலுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. முதல் உலகப் போரின்போதும் கடைசிக் கட்டத்தில்தான் அமெரிக்கா களமிறங்கியது. ஆனால், போரைக் கச்சிதமாக முடித்தும் வைத்தது. அதேபோல், இந்தப் போரிலும் அதுவரை பார்வையாளராக இருந்த அமெரிக்கா, பேர்ல் ஹார்பர் தாக்குதலுக்குப் பின்னர் ஆவேசத்துடன் களமிறங்கியது. அந்த நேரம் பார்த்து, அமெரிக்காவின் கவனம் ஜப்பான் மீதுதான் இருக்கும் என்று நினைத்து, ஹிட்லர் அந்த நாட்டின் மீது போர்ப் பிரகடனம் செய்தார். அதுவே ஜெர்மனியை வீழ்ச்சியை நோக்கி அழைத்துச் சென்றது. அமெரிக்காவின் தொழில்துறை காட்டிய அசுர உழைப்புக்கு ஜெர்மனியால் ஈடுகொடுக்க முடியவில்லை. ஜெர்மனி 1944-ல் மட்டும் 40,000 போர் விமானங்களைத் தயாரித்தது என்றால், அமெரிக்கா அந்த ஆண்டில் 1,14,000 விமானங்களைத் தயாரித்தது. பிரிட்டன், ரஷ்யா ஆகிய நாடுகளும் ஆயுத உற்பத்தியில் ஜெர்மனியைத் திணறச் செய்தன.
ஆப்பிரிக்காவில் காத்திருந்த அதிர்ச்சி
போர் வாகனங்களுக்குத் தேவையான எரிபொருளும் ஜெர்மனியின் கையிருப்பில் இருந்து குறைந்துகொண்டே வந்தது. வடக்கு ஆப்பிரிக்காவைக் கைப்பற்றினால், அங்கிருந்து மத்தியக் கிழக்கு நாடுகளின் எண்ணெய் வளத்தைப் போருக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ஜெர்மனி திட்டமிட்டிருந்தது.
1942-ல் லிபியாவின் டோப்ருக் துறைமுகத்தை ஜெர்மனியின் ஃபீல்டு மார்ஷல் இர்வின் ரோமெல் கைப்பற்றினார். ஆனால், அவர் தொடர்ந்து முன்னேறியபோது பிரிட்டன் படைகளின் கடுமையான தாக்குதலைச் சந்திக்க நேரிட்டது. மொராக்கோ மற்றும் அல்ஜீரியாவிலும் பிரிட்டன் படைகள் ஜெர்மனி மற்றும் இத்தாலி வீரர்களை ஓட ஓட விரட்டின.
ரஷ்யர்களின் தீரம்
இந்தப் போரில் சோவியத் ஒன்றியத்தின் பலத்தைப் பற்றி ஹிட்லர் தப்புக்கணக்கு போட்டிருந்தார். அதிபர் ஸ்டாலினின் உறுதிமிக்க வார்த்தைகளால் ஊக்கம்பெற்ற ரஷ்யர்கள் தீரத்துடன் போர் புரிந்தனர். 1941-ல் மாஸ்கோவைக் கைப்பற்ற ஹிட்லர் போட்டிருந்த திட்டம் பலிக்கவில்லை. தொடர்ந்து போரிட்டதால் களைத்திருந்த ஜெர்மன் வீரர்கள் ரஷ்யாவின் கடும் குளிரைச் சமாளிக்க முடியாமல் திணறினர். இதைப் பயன்படுத்திக்கொண்டு, ரஷ்யர்கள் ஜெர்மன் படைகளைச் சிதறடித்தனர். அதே போல் ஸ்டாலின்கிராடு பகுதியில் நடந்த சண்டையின் முடிவில் 2,35,000 ஜெர்மன் வீரர்கள் கைதுசெய்யப்பட்டனர். 2,00,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இறுதி வீரம்
தோல்வி உறுதியான நிலையில், ரஷ்யாவின் கர்ஸ்க் பகுதியில் நடந்த சண்டையில் ஜெர்மன் வீரர்கள் தங்களிடம் மிச்சமிருந்த வீரத்தை வெளிக்காட்டினர். நிலத்தில் நடந்த மிகப் பெரிய டாங்க் சண்டை என்று வர்ணிக்கப்படும் இந்தச் சண்டையில், மொத்தம் 40 லட்சம் வீரர்கள் கலந்துகொண்டனர். 13,000 டாங்குகள், 12,000 போர் விமானங்கள் என்று பிரம்மாண்டமாக நடந்த அந்தப் போரில், ஜெர்மன் வீரர்கள் தீரத்துடன் போரிட்டாலும் வெற்றி ரஷ்யர்கள் பக்கம் இருந்தது.
1943-ல் ஜெர்மனி மீது நேச நாடுகளின் படைகள் கடும் தாக்குதலில் இறங்கின. பலர் கொல்லப்பட்டனர். போரில் தோற்றுவிட்டோம் என்பதை ஜெர்மனி மக்கள் புரிந்துகொண்டனர். நாஜிப் படைகள்மீது அந்நாட்டு மக்கள் கடும் கோபமடைந்தனர். மே 7, 1945-ல் ஜெர்மனி நேச நாடுகளிடம் சரணடைந்தது. அதற்கு முன்பாக, ஏப்ரல் 30-ல் ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டார்.
ஹிட்லரைப் பகடி செய்து, சார்லி சாப்ளின் இயக்கி நடித்த ‘தி கிரேட் டிக்டேட்டர்’ படத்தில், சர்வாதிகாரி ஹைங்கல் கண்களில் ஆதிக்க வெறி மின்ன, உலகப் பந்து போன்ற பலூனை, தட்டித் தட்டி விளையாடுவார். திடீரென்று பலூன் வெடித்துவிடும். கிட்டத்தட்ட அதே நிலைதான் ஹிட்லருக்கு ஏற்பட்டது.
*****************
போர் என்பதை நாகரிக சமுதாயம் வரவேற்காது. சமாதானத்தின் அவசியத்தைத்தான் உலகப் போர்கள் உணர்த்துகின்றன. ஆனால், அந்தச் சமாதானம் நிலைபெறத்தான் போர்களும் நடக்கின்றன என்பதுவே வரலாற்று விந்தை!
முதல் உலகப் போரைப் போலவே இரண்டாவது உலகப் போரும் பல அதிநவீன கண்டுபிடிப்புகளுக்கு வழிகோலியது. போர்க்களத்தில் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட பல கருவிகளும் தொழில்நுட்பங்களும் சமாதான காலத்திலும் பலனளித்தன. போர்க் கருவிகளில் மட்டுமல்ல, உயிர் காக்கும் மருத்துவக் கருவிகளிலும் முறைகளிலும் பல கண்டுபிடிக்கப்பட்டன. சமூகங்களில் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டன. பல நாடுகளின் நில எல்லைகள் மாற்றி வரையப்பட்டன. சில நாடுகள் பிரிந்தன, சில நாடுகள் சேர்ந்தன. பழைய பெயர்கள் மறைந்தன, புதிய பெயர்கள் தோன்றின. ராணுவக் கூட்டணிகள் உருவாயின, ராணுவக் கூட்டணிகள் சிதறின.
ஐரோப்பியக் காலனியாதிக்கம் முடிவுக்கு வந்தது. அமெரிக்காவில் மனித உரிமைக் கழகம் ஏற்பட்டது. நவீனப் பெண்களுக்கான உரிமை இயக்கங்களும் முகிழ்த்தன. விண்வெளியை ஆராயும் எண்ணங்களுக்கு உத்வேகம் ஏற்பட்டது.
இந்தப் போரில் நாஜி ஜெர்மனி, பாசிஸ்ட் இத்தாலி, சக்ரவர்த்தியின் ஜப்பான், அவர்களுடைய சிறு ஆதரவு நாடுகள் ‘அச்சு நாடுகள்' என்ற பெயரில் ஓரணியாகத் திரண்டு போரில் ஈடுபட்டன. பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்த பல நாடுகள், சோவியத் சோஷலிஸ்ட் குடியரசு நாடுகள், அமெரிக்கா ஆகியவை ‘நேச நாடுகள்' என்ற பெயரில் தனி அணியாகத் திரண்டு அச்சு நாடுகளை எதிர்த்தன. நேச நாடுகள்தான் போரில் இறுதியாக வென்றன. இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு அமெரிக்கா, சோவியத் ரஷ்யா என்ற இருபெரும் வல்லரசுகள் தோன்றின. ஆனால், இவ்விரு வல்லரசுகளுக்கு இடையிலேயே ‘பனிப்போரும்' பிறகு தொடங்கியது.
போர் எப்போது தொடங்கியது?
முதலாம் உலகப் போர் 1918-ல் முடிந்தது. ஆனால், அங்கிருந்தே இரண்டாவது உலகப் போர் தொடங்கியதாகக் கூறுவோரும் உண்டு. 1931-ல் சீனாவிடமிருந்து மஞ்சூரியாவை ஜப்பான் கைப்பற்றியதிலிருந்து இந்தப் போர் தொடங்கியது என்றும் சொல்வார்கள். இத்தாலி அபிசீனியாவில் (எத்தியோப்பியா) நுழைந்து, 1935-ல் அதைக் கைப்பற்றியதும் இந்தப் போரின் இன்னொரு தொடக்கப் புள்ளி. ஜெர்மனியின் ரைன்லாந்தை அடால்ஃப் ஹிட்லர் ராணுவமயமாக்கியதும் இன்னொரு முக்கியமான கட்டம். ஸ்பெயின் நாட்டின் உள்நாட்டுப் போர் (1936-39), செக்கோஸ்லோவேகியாவை ஜெர்மனி 1938-ல் ஆக்கிரமித்தது,
7.7.1937-ல் சீனாவின் மார்கோபோலோ பாலத்தை ஜப்பான் கைப்பற்றியது என்று இரண்டாம் உலகப் போருக்குப் பல்வேறு நதிமூலங்கள் சொல்லப்படுகின்றன. எனினும், 1.9.1939-ல் போலந்து மீது ஜெர்மனி படையெடுத்ததால் பிரிட்டனும் பிரான்ஸும் ஜெர்மனிக்கு எதிராகப் போர் அறிவிப்பு செய்ததால், அதிகாரபூர்வமாக இந்தப் போர் தொடங்கியது எனலாம்.
தொடக்க சம்பவம் ஏதுமில்லை
முதலாம் உலகப் போருக்குக் காரணம் என்று அரச குடும்பத்தைச் சேர்ந்தவரின் படுகொலையைக் குறிப்பிட்டதைப் போல, இரண்டாவது உலகப் போருக்கு ஏதாவது ஒரு சம்பவத்தை மட்டும் குறிப்பிட முடியாது. ஜார் மன்னர் தலைமையிலான ரஷ்யாவை ஜப்பான்(1904-05) போரில் வென்ற பிறகு, ஆசியாவிலும் பசிபிக் பிராந்தியத்திலும் தன்னுடைய சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த ஜப்பான் துடித்ததும் போருக்கு முக்கியக் காரணம். ஜப்பானை மனதில் வைத்தே அமெரிக்கா தனது கடற்படையை அவ்வப்போது நவீனப்படுத்திவந்தது.
முதல் உலகப் போருக்குப் பிறகு, உலக அளவில் பொருளாதாரத்தில் ஸ்திர நிலை இல்லை. 1930 சமயத்தில் மிகப் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டு, நாடுகளின் தொழில்வளங்களும் பொருளாதாரமும் முடங்கின. அதே நேரத்தில் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் தங்கள் நாட்டு மக்களுக்கு தேசிய உணர்வை வெறித்தனமாக ஊட்டிவந்தன. அதனால், அவற்றுக்குத் தங்களுடைய எல்லையை விரிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணமும் ஏற்பட்டது. ரஷ்யாவில் ஏற்பட்ட போல்ஷ்விக்குகளின் புரட்சி முதலாளித்துவ நாடுகளைப் பீதியில் ஆழ்த்தின. கம்யூனிஸம் பரவாமல் தடுக்க வேண்டும் என்று நினைத்தன. சோவியத் யூனியனுக்கு எதிராக இத்தாலி, ஜெர்மனி, ருமேனியா, ஜப்பான் அணி சேர்ந்தன. ஆனால், அவை நேச நாடுகளைப் போல இணைந்து செயல்படாமல் தனித்தனியாகச் செயல்பட்டதால் போரில் தோற்றன.
இரண்டாவது உலகப் போரில் வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு அரங்குகளில் முக்கியமான தாக்குதல்களும் படையெடுப்புகளும் நிகழ்ந்தன. அவை ஒவ்வொன்றும் போரின் வேகத்தை விரைவுபடுத்தியதோடு போக்கையும் மாற்றின. அவற்றைத் தனித்தனியாக அறிவதன் மூலம் இந்தப் போரின் போக்கை உணர முடியும்.
1.9.1939-ல் போலந்து மீது ஜெர்மனி படையெடுத்ததால், பிரிட்டனும் பிரான்ஸும் ஜெர்மனிக்கு எதிராகப் போர் அறிவிப்பு செய்ததால் அதிகாரபூர்வமாக இந்தப் போர் தொடங்கியது எனலாம்.
**********************
இரண்டாம் உலகப்போரின்போது, 1944-ம் ஆண்டில் இம்பால், கோஹி மாவில் ஜப்பானியர்களை எதிர்த் துப் போரிட்டு வெற்றியை தேடித் தந்த இந்திய வீரர்களின் தியாகங்கள் நினைவுகூரப்படு கிறதா என்று கேட்டால், ஏமாற்றமே மிஞ்சுகிறது.
இந்த ஜூன் மாதத்துடன் அப்போர் முடிவடைந்து 70 ஆண்டு கள் ஆன நிலையில், அதில் கள மாடி உயிர் துறந்த வீரர்கள் குறித்து எந்தவிதமான செய்தியை யும் ஊடகங்களில் காண முடிய வில்லை. எது எதற்கோ சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கி வரும் தொலைக்காட்சி சேனல்கள், இந்த போர் குறித்து ஓரிரு வார்த்தைகள் கூட குறிப்பிடவில்லை.
ஆனால், ஆறுதல் அளிக்கும் விதமாக பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளின் பிரதிநிதி களும், இப்போரில் பங்கேற்ற சில வீரர்களும் இணைந்து சனிக் கிழமை நினைவு நிகழ்ச்சிக்கு இம்பாலில் ஏற்பாடு செய்திருந்த னர். இதில் இந்திய ராணுவத்தின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
பொதுவாக, நாடு சுதந்திர மடைந்ததற்கு முன்னதான ராணு வத்தின் செயற்கரிய செயல் பாடுகளுக்கு இப்போதைய ராணு வம் அந்த அளவிற்கு முக்கியத் துவம் அளிப்பதில்லை. அவர்கள் வெளிநாட்டு (பிரிட்டிஷ்) அரசுக்கு ஆதரவாக போரில் ஈடுபட்டவர்கள் என்ற கண்ணோட்டத்தில்தான் பார்க்கப்படுகின்றனர்.
இப்போது இம்பாலில் நடைபெற்ற நினைவு நிகழ்ச்சிக்குப் பிறகாவது, இரண்டாம் உலகப் போரின்போது நேச நாடுகளுக்கு ஆதரவாக போரிட்ட இந்திய வீரர் களின் தியாகத்திற்கு அங்கீகாரம் கிடைக்கும் என நம்புவோம்.
வரலாற்றில் மிகவும் கொடூர மான போர்களில் இதுவும் ஒன்று என வர்ணிக்கப்படும் இம்பால், கோஹிமா போர்க் களத்தில் ஜப்பான் ராணுவத்தை இந்திய ராணுவம் எதிர்கொண்டது. பிரிட்டிஷ் ஆட்சியில் முதல் முறை யாக வெளியிலிருந்து வந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தினர் களம் இறங்கியது இந்தப் போரின்போதுதான்.
இந்தியாவைக் கைப்பற்ற 1944ம் ஆண்டு ஜப்பான் படை யினர் இம்பால், கோஹிமா ஆகிய பகுதிகளின் வழியாக நுழைய முயன்றனர். இந்த ஜப்பான் படையுடன் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவப் படையும் இணைந்து செயல்பட்டது.
இவர்களை எதிர்கொள்ள ஒப்பீட் டளவில் மிகவும் குறைந்த எண் ணிக்கையிலான பிரிட்டிஷ் அரசின் இந்திய ராணுவத்தி னர் தொடக்கத்தில் அனுப்பிவைக் கப்பட்டனர். போரில் மிகவும் தீரத்துடன் போராடிய இந்திய ராணுவத்தின் 17, 20, 23-வது பிரிவு காலாட் படையினர், ஜப்பானின் 15-வது ராணுவப் பிரிவை இம்பாலில் சிதறடித்தனர். கோஹிமாவில் தாக்குதல் நடத்திய 15 ஆயிரம் ஜப்பான் வீரர்களை, வெறும் 1,500 பேரைக் கொண்ட முதலாவது அசாம் ரெஜிமென்ட் பிரிவைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர் கள் எதிர்கொண்டனர். ஆக்ரோஷத் துடன் எதிர்தாக்குதல் நடத்திய இந்திய வீரர்கள், ஜப்பான் வீரர் களை நாட்டிற்குள் நுழைய விடா மல் இரு வாரங்கள் தாக்குப் பிடித் தனர். பின்னர் 161-வது பிரிவு இந்திய காலாட் படை அப்பகுதிக்கு வந்து, ஜப்பான் வீரர்களை விரட்டி அடித்தது.
கடும் தாக்குதலை எதிர் கொள்ள முடியாமல் 1944ம் ஆண்டு ஜூலை 3-ம் தேதி, பர்மா பகுதிக்குள் பின்வாங்க ஜப்பான் முயன்றது. ஆனால், அதற் குள் ஏராளமான ஜப்பான் வீரர் கள் உயிரிழந்திருந்தனர். ஊன மடைந்தும், உடல் நலம் குன்றியும் அப்பகுதியில் சிக்கிக் கொண்ட ஏராளமான ஜப்பான் வீரர்கள், காப் பாற்றுவதற்கு ஆளின்றி பரிதாப மாக உயிர் துறந்தனர்.
இந்த சம்பவங்களையெல்லாம் ‘இம்பால் 1944’ என்ற பெயரில் ஜப்பான் திரைப்பட இயக்குநர் ஜுனிச்சி கஜியோகா படம் எடுத் துள்ளார். அவர் கூறுகையில், “போரில் உயிரிழந்த ஜப்பான் வீரர்க ளின் உறவினர்கள் சிலர், இப்போதும் இம்பாலுக்கு வந்து தங்கள் அன்புக்குரியவரின் எலும் பாவது கிடைக்காதா என்று தேடிச் செல்கின்றனர்” என்றார்.
லெப்டினென்ட் கர்னல் (ஓய்வு) அனில் பட் கூறுகை யில், “இரண்டாவது உலகப் போரின்போது நமது ராணுவம் பெற்ற வெற்றி மிகப்பெரிய சாதனை யாகும். ஆனால், யாரும் அதுபற்றி பேசாமல் இருப்பது வருத்தம் அளிக் கிறது. இப்போதைய மத்திய அர சாவது உரிய அங்கீகாரம் அளிக் கும் என நம்புகிறேன்” என்றார்.
**************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக