ஒரே ஒரு ஆள்தான் உங்கள் வாழ்க்கையைக் கெடுக்கும் சர்வ வல்லமை பெற்றவர்: அது நீங்கள் மட்டும்தான்!
மன்னித்தலின் பலன்களை மதங்கள் அனைத்தும் போதிக்கின்றன. மன்னித்தலும் மறத்தலும் எவ்வளவு பெரிய மன விடுதலையைத் தரும் என மன்னித்தவர்களுக்குத்தான் தெரியும்.
பழைய காயங்கள் ஆற அவற்றை மீண்டும் தீண்டாமல் இருப்பது முக்கியம். ஆனால் வெறுமையான மனதுக்கு கடந்த காலமும் அதன் கசப்பான எண்ணங்களும்தான் மிஞ்சுகின்றன.
நான் அதிகம் மதிக்கும் நண்பர் ஒருவர் முப்பது வயதுகளிலேயே பெரிய பதவிகள் பெற்றவர். தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். அவருடன் பழகி நான் கற்றுக்கொண்டது ஒன்று தான்: “எந்த விஷயத்திலும் எதிராளியைப் பழி சொல்லக் கூடாது.” ‘இது நிகழாமல் இருக்க நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று மட்டுமே அவர் யோசிப்பார். அவரை எதிர்க்கும் சிலருடன் கூட நட்பை இழக்க மாட்டார். தன் எதிர்ப்பைக் கண்ணியமான சொற்களில் பதிவு செய்து விட்டுத் தன் நிலையைக் காத்துக் கொள்வார்.
தொடர்ந்து வெற்றி பெறுகிற அவரின் சூத்திரங்கள் இவை தான். எல்லா முடிவுகளுக்கும் தானே காரணம் எனத் திடமாக நம்புவது; அதற்கான உழைப்பைத் தொடர்ந்து தருவது.
ஒரு கடந்த கால கசப்பான அனுபவம் பற்றிப் பேச்சு வந்த போது சொன்னார்: “ஓ, அது நடந்ததே மறந்து போச்சு.”
பிரெஞ்சு நாட்டின் தலைமைச் செயல் அதிகாரி என்னுடன் பேசும்போது சொன்னார்: “இந்தியர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுகிறார்கள். காயப்படுகிறார்கள். ஆனால் அவற்றை வார்த்தைகளில் வெளிப்படுத்துவதில்லை. செயலில் காட்டுகிறார்கள்!” அவரை மறுத்துப் பேச முடியாமல் தலை ஆட்டினேன்.
வேலையில் மகிழ்ச்சியாய் இருப்பவர்கள் நிகழ்காலத்தில் இருப்பவர்கள். அது தரும் அனுபவத்தில் திளைப்பவர்கள். வருங்காலத்தை நம்புபவர்கள்.
அதெல்லாம் சரி, மோசமான பணி அனுபவத்திலிருந்து மீள் வது எப்படி? மன்னிப்பது எப்படி?
உங்களுக்கு மோசமான அனுபவம் அளிப்பவரும் மோசமான அனுபவம் உட்கொண்டவர்தான். வெறுப்புக் கொள்வதைவிட பரிதாபம் கொள்ளுங்கள். அவரைக் கையாள்வதும் ஒரு வாழ்வியல் கலை. அதைக் கற்றுக்கொள்ளுங்கள். இது வெறும் பணி இடர்பாடு என்று அறிந்து கொள்ளுங்கள். இதை உங்கள் ஆளுமையில் ஏற்றிக்கொள்ளாதீர்கள்.
இந்த அனுபவத்திலிருந்து அவரும் நீங்களும் நிறைய கற்றுக்கொள்வீர்கள். காலம் தன் சுழற்சியில் யாரை எங்கு வைக்கும் எனத் தெரியாது. அதனால் வெறுப்பு வளர்க்காமல் கடமையைச் செய்யுங்கள்.
மனதை அமிலப்பாத்திரமாக்கி அதைக் காலம் முழுவதும் காக்க வேண்டாம். மனதைக் கழுவிவிட்டு... ஓ... இங்கிருந்து தான் ‘கழுவி கழுவி ஊற்றுவது’ வந்ததோ?) புதிய பானம் நிறையுங்கள்.
மன்னிப்பைவிட வலிமை யான ஆயுதம் எதுவுமில்லை. மறதியைவிடச் சிறந்த மன மருந்து எதுவுமில்லை.
நிறைய வரலாறு படியுங்கள். கேளுங்கள். வரலாறு என்பது வெறும் சம்பவங்களின் கோவை அல்ல. அது தந்த பாடங்களின் தொகுப்பு.
தொடர்புக்கு:
gemba.karthikeyan@gmail.com
**************
பன்முக இசைவே ஒரு திறனாய்…
இது பன்னாட்டு கம்பனிகள் வந்ததால் ஏற்பட்ட மாற்றங்கள் அல்ல. இயல்பாகவே நம் சமூகத்தில் அனைத்துப் பிரிவு மக்களையும் அணைத்துச் செல்லும் கலாச்சாரம் இருக்கிறது. சென்னையில் ஒரு தெருவை எடுத்துக்கொண்டால் அங்கு நாயரின் தேனீர் கடை, மார்வாடியின் அடகுக் கடை, இஸ்லாமியரின் மெத்தைக் கடை, சிந்திக்காரரின் இனிப்புக்கடை என இருப்பதை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம்.
இந்தியாவின் பன்மொழித் தன்மை நம் இசைவுத்தன்மையை பதப்படுத்திருக்கிறது.
இதனால் Global managers ஆக செயல்படுவதற்கு நம் இந்தியர்கள் அதிகம் தகுதி படைத்தவர்கள் என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது. நிறுவனங்களில் இன்று Diversity என்ற ஆங்கிலச் சொல் பெரும் புழக்கத்தில் உள்ளது. உலக அளவில், அதற்கான பயிற்சிகளும் நடைபெறுகின்றன.
இனி வருங்காலங்களில் வேலைத் தேர்வில் கூட இந்த பன்முக கலாச்சாரத் தன்மை ஒரு திறனாய் பாவித்து சோதனை செய்யப்படும் என்பது என் யூகம்.
சிறுக்கும் எண்ணம்
ஆனால், நிதர்சனத்தில் இன்று நம்மில் பலர் இந்தப் பன்முகக் கலாச்சாரத்தை மதிப்பதில்லை. கலாச்சாரப் பரிவர்த்தனை செய்ய முயல்வதில்லை. அது நம் தனிச்சிறப்பு என்பதை மறந்து விட்டோம்.
அதை விடப் பெரும் பிரச்சினை நாம் நம் வேர்களை மறந்து வருவது. தாய் மொழியில் கல்வி என்றில்லை, எதையுமே படிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. பாரம்பரியம் பற்றியெல்லாம் கவலையில்லை. வரலாறு தெரியாது. நம் முன்னோர்கள் பற்றிய அடிப்படைத் தகவல்களைக்கூடத் தேடிப்போவதில்லை.
தொழில் கல்வியும் ஆங்கிலமும் போதும் என்ற எண்ணம் ஒரு தட்டையான வாழ்க்கை முறைக்கு நம்மவர்களை தள்ளிவிட்டிருக்கிறது.
பப்ளிக் எக்ஸாம் என்றால் விளையாட்டை நிறுத்திவிடுகிறோம். ப்ரபஷனல் கோர்ஸ் என்றால் அவர்களே மொழிகளை நீக்கிவிடு கிறார்கள். பணம் பண்ண உதவாத எந்த அறிவையும் சிறப்பாகக் கொண்டாடுவதில்லை. இதனால் நம் எண்ணமும் செயலும் சிறுத்துக் கொண்டு வருகின்றன.
வேர்களை மறப்பதா?
பல இன்டர்வியூகளில் தங்களின் சொந்த ஊர் பற்றி ஒன்றுமே சொல்லத் தெரியாத பலரை சந்திக்கிறோம். குறிப்பாக, அயல் நாட்டவர்கள் முன்னிலையில் தங்கள் வேர்களை அறியாதவர்கள் (அறிய முயலாதவர்கள் ) மேம்போக்காக பதில் கூறுகையில் அவர்கள் நல்ல எண்ணத்தை ஏற்படுத்துவதில்லை.
இதற்குக் காரணம் நேரக் குறைவோ, வாய்ப்பின்மையோ அல்ல. மனப்பான்மைதான். “எதுக்கு தேவையில்லாததை தெரிஞ்சிகிட்டு?” என்ற எண்ணம்தான் உண்மையான காரணம்.
யு.பி.எஸ்.சி போன்ற போட்டித் தேர்வுகளுக்காகப் படிப்பவர்கள் பொது அறிவு தேர்வு எழுதுவதற்காக எல்லாத் தகவல்களை திரட்டிப் படிப்பார்கள். விரல் நுனியில் வைத்திருப்பார்கள். காரணம் தேர்வில் ஜெயிக்க. இன்று கார்ப்பரேட் வேலைகளுக்கு தொழில் தெரிந்தால் போதும் என்கிற எண்ணம் தான்
பொது அறிவைப் போக்கிவிட்டன. இதில் விசித்திரம் என்னவென்றால் இன்று கூகுளும் விக்கிபீடியாவும் உங்கள் தேடலை துரிதப்படுத்தியுள்ளன. ஆனால் அவசரமாகத் தேவைப்படாத எதையும் பலர் நாடிப்போவதில்லை.
பன்முக கலாச்சார நுண்ணறிவு
உங்கள் கலாச்சாரத்தின் குறுக்கு வெட்டு தெரியுமா? எத்தனை பிற கலாச்சாரங்கள் பற்றி உங்களுக்குத் தெரியும்? மற்ற கலாசாரங்களி லிருந்து எவ்வளவு விஷயங்களை உள் வாங்கியிருக்கிறீர்கள்?
எவ்வளவு விஷயங்களில் பிறரை பாதித்திருக் கிறீர்கள்? யோசியுங்கள். பன்முக கலாச்சார நுண்ணறிவு உங்கள் வேலைத் தேர்விலும், தொழில் வாழ்க்கையிலும் பயன்படும்.
“என்ன செய்யலாம் இதற்கு? ” என்று கேட்பவர்களுக்கு ஒரு ஹோம் ஒர்க்.
தமிழ் நாட்டில் வாழ்பவர்களுக்கு இது குறிப்பாகப் பயன்படும்.
உலகப் பெருங்கிராமம்
கீழ்க்கண்ட ஊர்களைப் பற்றி என்னவெல்லாம் தெரியும் என்று யோசியுங்கள். ஸ்ரீவில்லிப்புத்தூர், கீழ்வெண்மணி, கங்கைகொண்ட
சோழபுரம், சித்தன்னவாசல், சுசீந்திரம், காரைக்கால், பத்மநாபபுரம் மற்றும் செஞ்சி.
இவர்களைத் தெரியுமா என்று பாருங்கள்.
அகிலன், ஆத்மாநாம், பால தண்டாயுதம், கக்கன், தாள முத்து நடராசன், சுந்தர ராமசாமி, டி.கே.பட்டம்மாள், மணியம் செல்வன், வாசன், சத்தியமூர்த்தி மற்றும் என்.எஸ்.கிருஷ்ணன்.
முதலில் நம் வேர்களை அறிந்து கொள்வோம். நம் கலாச்சாரம் அறிவோம். பின் பிற கலாச்சாரங்கள் அறிவோம்.
நாம் உண்ணும் உணவில் எத்தனை கலாச்சாரங்கள் கலந்திருக் கின்றன என்று ஆராய்ந்து பாருங்கள். உலகம் எனும் பெரும் கிராமத்தின் ஒருங்கிணைப்பு தெரியும்!
தொடர்புக்கு : gemba.karthikeyan@gmail.com
*****************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக