நோபல் பரிசு பெற்ற அணுசக்தி அறிஞர் என்ரிகோ ஃபெர்மியின் பிறந்தநாள் இன்று. இந்த நாளில் அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…
• இத்தாலியில் வளம் மிகுந்த குடும்பத்தில் பிறந்தார். அண்ணன் மறைந்த சோகத்தில் இருந்து மீள, பெற்றோர் வாங்கித் தந்த இயற்பியல் புத்தகங்களைப் படித்தவர் அதன் மீது ஆர்வமானார். அப்போது அவருக்கு வயது 14.
• இளம் வயதிலேயே நண் பர்களோடு இணைந்து பல்வேறு சுவாரசியமான ஆராய்ச்சிகளைச் செய்தார். ரோமில் தண்ணீர் அடர்த்தி பற்றிக்கூட ஆய்வு செய்தார்.
• இயற்பியலில் சிறந்த அறிஞராக விளங்கிய ஃபெர்மி 26 வயதில் ரோம் பல்கலை.யின் பேராசிரியராக உயர்ந்தார்.
• பீட்டா சிதைவை ஃபெர்மி கண்டுபிடித்ததன் மூலம் அடிப்படை விசைகளில் 4-வது விசையான அணுக்கரு விசை உலகுக்கு தெரியவந்தது.
• புள்ளியியல் விதிகளை வகுத்தார். அதற்கேற்ப இயங்கும் மூலத்துகள்கள் ‘ஃபெர்மியான்’ என்று அழைக்கப்படுகின்றன.
• ஆரம்பத்தில் மின்இயங்கியல் துறையில் ஆய்வு செய்தவர், செயற்கை கதிரியக்கத்தை க்யூரி தம்பதி கண்டறிந்த பின்னர் அந்த பக்கம் கவனத்தைத் திருப்பினார். நியூட்ரான்களால் தனிமத்தை மோதச்செய்து, புதிய தனிமங்களை உருவாக்கினார். அவை கதிரியக்கத் தன்மை கொண்டவையாக இருந்தன. இந்த ஆராய்ச்சிக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 37.
• இத்தாலியில் முசோலினி ஆட்சியில் யூதர்களுக்கு எதிராக சட்டங்கள் போடப்பட்டன. யூதப் பெண்ணை மணந்திருந்த ஃபெர்மி எப்படி தப்பிப்பது என்று யோசித்தார். ஸ்வீடனில் நோபல் பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்கு குடும்பத்தோடு சென்றவர் அப்படியே அமெரிக்காவுக்கு பறந்துவிட்டார்.
• அணுப் பிளவு சாத்தியம் இல்லை என்று கூறப்பட்ட சூழலில் ஆட்டோஹான், ஸ்ட்ராஸ்மென் இருவரும் அதை சாதித்தனர். அதை நியூட்ரான்களைக் கொண்டு கட்டுப்படுத்த முடியும் என்று கூறிய ஃபெர்மி, அதுசார்ந்த ஆய்வுகளில் ஈடுபட்டார். ஒரு மைதானத்துக்குப் பின்புறம் இருந்த ஆய்வகத்தில் உலகின் முதல் கட்டுப்படுத்தப்பட்ட அணு வினையை சாதித்தார்.
• அணுஉலை, அணுகுண்டு இரண்டும் உருவாவதற்கான அச்சுப்புள்ளி இவரால் போடப்பட்டது. மன்ஹாட்டன் திட்டத்தில் இணைந்து அணுகுண்டு உருவாக்கத்தில் பங்காற்றினார். ‘சிகாகோ பைல்’ எனப்படும் உலகின் முதல் அணு உலை, இவரது வழிகாட்டுதல் மற்றும் ஆய்வில் எழுந்தது. இதன் காரணமாக, ‘அணுகுண்டின் தந்தை’ என அழைக்கப்படுகிறார்.
• ஹைட்ரஜன் குண்டு தயாரிக்க குழு அமைக்கப்பட்டபோது அதை கடுமையாக விமர்சித்தார். பின்னர் அக்குழுவில் உறுப்பினராகி அது சாத்தியமில்லை என்று நிரூபிக்க முயன்றார். Synchrocyclotron-ஐ உருவாக்கி அதன்மூலம் அணுப்பிளவு மற்றும் அணு ஆய்வுக்கான புதுக் கதவுகளை திறந்துவிட்டார். குடல் புற்றுநோய் ஏற்பட்டு சிகாகோ இல்லத்தில் தூக்கத்திலேயே மரணமடைந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக