செவ்வாய், 9 செப்டம்பர், 2014

காவிரி பாசனப் பகுதியில்..மீத்தேன் வாயு!!

காவிரி பாசனப் பகுதியில் உள்ள தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய  மூன்று மாவட்டங்களும் பழங்காலம் தொட்டே தமிழ்நாட்டின்  நெற்களஞ்சியமாக அமைந்துள்ளன. நில வளமும் காவிரியின் நீர்  வளமும் வரலாற்றில் பெரிதும் பேசப்படுகின்றன. இத்தகைய செழிப்பான  பாசனப் பகுதிகளை தமிழர்களின் கலை இலக்கிய பண்பாடு, நீண்ட  வரலாறு, விவசாயிகளின் வாழ்வாதாரம், ஏன் தமிழகத்தின்  இதயத்தையே செயலிழக்கச் செய்யும் Ôநிலக்கரி படுகை மீத்தேன் வாயுÕ  எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு தமிழக அரசின் புரிதலோடு  நிறைவேற்ற முயற்சி செய்துள்ளது. இதனால் ஏற்படப் போகும்  பாதிப்பை உணர்ந்த விவசாயிகள், பல்வேறு கட்டங்களாக  போராட்டங்கள் நடத்தி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு,  புதுச்சேரி கடலோரப் பகுதியில் புதுச்சேரியை அடுத்த பாகூரில்  தொடங்கி நெய்வேலி, ஸ்ரீமுஷ்ணம், ஜெயங்கொண்டம் வழியாக  மன்னார்குடிக்கு தெற்கு பகுதி வரையில் காவிரி படுகையில் பழுப்பு  நிலக்கரியும் அதனுடன் சேர்ந்து மீத்தேன் எரிவாயு வளமும் இருப்பதாகக்  கண்டறிந்துள்ளனர். பழுப்பு நிலக்கரியின் மதிப்பீடு பாகூர் பகுதியில் 766  மில்லியன் டன், நெய்வேலி, ஜெயங்கொண்டம், வீராணம் பகுதியில்  6,835 மில்லியன் டன், மன்னார்குடி பகுதியில் 19,788 மில்லியன்  டன்னாக உள்ளது. இந்த பகுதிகளில் உள்ள மீத்தேன் வாயுவின்  மதிப்பீடு 98,000 கோடி கன அடி.

மீத்தேன் வாயுவை எடுக்கும் உரிமத்தை கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி  கார்ப்பரேஷன் லிமிடெட் (ஜிஇஇசிஎல்) என்ற நிறுவனத்துக்கு கடந்த  29.07.2010ல் இந்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு  அமைச்சகம் வழங்கியுள்ளது. நிலத்தை தோண்ட உரிமம் வழங்கி  மீத்தேன் எடுப்பு வேலைக்கான சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் அனைத்து  உதவிகளும் தர மாநில அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.  கடந்த 2012ல் மத்திய அரசின் சுற்றுச்சூழல் - வனத்துறை அமைச்சகம்  667 ச.கி.மீ. பரப்பளவில் மீத்தேன் எரிவாயு எடுக்க தடையில்லா சான்று  வழங்கியுள்ளது. மீத்தேன் எரிவாயு எடுக்கப்பட உள்ள நிலப்பரப்பு:  தஞ்சை மாவட்டத்தில் திருவிடைமருதூர், கும்பகோணம், ஒரத்தநாடு,  பாபநாசம் வட்டங்கள், திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல்,  வலங்கைமான், நீடாமங்கலம், மன்னார்குடி வட்டங்கள். மொத்த  நிலப்பரப்பு 691 சதுர கி.மீ. இதில் 24 கி.மீ. பரப்பு பழுப்பு நிலக்கரி  எடுக்கப்படுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 667 ச.கி.மீ. மீத்தேன்  வாயு எடுக்கத் தரப்பட்டுள்ளன. இந்த திட்டத்தை செயல்படுத்தினால்,  காவிரி படுகை நிலத்தடி நீர் வளம் வற்றுவதோடு, பாசனப் பகுதி  முழுவதும் மாசுபடிந்த நீரால் பாதிக்கப்பட்டு பாலைவனமாகும் என்று  பாதிப்பின் பட்டியலை விளக்கி நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.    

விவசாயிகள், சமூக ஆர்வலர்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து,  கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்துக்கு  தரப்பட்டிருந்த உரிமத்தை தற்காலிகமாக தமிழக அரசு நிறுத்தி  வைத்துள்ளது. இத்திட்டத்தின் பாதிப்புகளை ஆராய்வதற்காக எம்.எஸ்.  சுவாமிநாதன் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த  குழுவின் அறிக்கை விரைவில் அரசிடம் தாக்கல் செய்யப்பட உள்ளது.  நிபுணர் குழுவின் அறிக்கையின் முடிவு எப்படி இருக்குமோ என்ற  பரிதவிப்பு தமிழக மக்களின், குறிப்பாக காவிரி பாசனப் பகுதி மக்களின்  தூக்கத்தை தொலைத்துள்ளது என்றும் சொல்லலாம். மீத்தேன் வாயு  எடுப்பதற்கு தமிழக அரசு வழங்கியுள்ள உரிமங்களை முழுவதுமாக ரத்து  செய்ய வேண்டும். விவசாயிகளிடம் இருந்து விலைக்கு வாங்கிய  விவசாய நிலங்களை அவர்களிடமே திருப்பித் தரவும், கிரேட் ஈஸ்டர்ன்  எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் மீத்தேன் வாயு எடுக்க  ஆழ்துளை குழாய் கிணறுகளைத் தோண்டும் எண்ணெய் மற்றும்  இயற்கை எரிவாயு நிறுவனத்தின் (ஒஎன்ஜிசி) நடவடிக்கைகளை உடன்  முற்றிலும் நிறுத்திட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது நல்ல  உள்ளங்களின் எதிர்பார்ப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக