செவ்வாய், 29 செப்டம்பர், 2015

தமிழை யார் எடுத்துச் செல்வது?

சாரு நிவேதிதா
COMMENT (4)   ·   PRINT   ·   T+  
பொள்ளாச்சி டாக்டர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மைய’த்தின் மூலம் ஆண்டுதோறும் நூறு அயல்மொழி நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படவுள்ளது பற்றிய செய்தியை ‘தி இந்து’ செப்டம்பர் 26 இதழில் கண்டேன். மிகவும் வரவேற்கத்தக்க பணி. பாரதி தொடங்கி வைத்த இந்தப் பணியை க.நா.சு. தீவிரப்படுத்தினார். நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும் செய்ய வேண்டிய அந்தப் பணியை க.நா.சு. ஒருவரே நின்று ஆயுள் பூராவும் செய்தார். அவர் செய்ததைத் தொடர்ந்து இன்று பல மொழிபெயர்ப்பாளர்கள் ஆங்கிலத்திலிருந்து ஏராளமான அளவில் தமிழில் மொழிபெயர்த்துக்கொண்டிருப்பதையும் நாம் அறிவோம். உலக அளவில் பிரபலமான எந்த எழுத்தாளராக இருந்தாலும் அல்லது, பிரபலம் ஆகாத தாஹர் பென் ஜெலோன் (மொராக்கோ) போன்றவர்களாக இருந்தாலும் அவர்களின் படைப்புகள் தமிழ் மொழிபெயர்ப்பில் கிடைக்கிறது. ஆனால், அதே அளவுக்குத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் ஆங்கிலத்திலோ அல்லது பிற ஐரோப்பிய மொழிகளிலோ கிடைக்கிறதா என்றால் இல்லை என்றே பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. ஒப்பீட்டளவில் பார்த்தால் ஆங்கிலத்திலிருந்து தமிழில் வருவதில் நூற்றில் ஒன்று அல்ல; ஆயிரத்தில் ஒரு சதவீதம் கூட தமிழ் நூல்கள் ஆங்கிலத்தில் செல்வதில்லை.
தமிழகத்துக்கு வெளியே தெரியாது
பல மொழி எழுத்தாளர்கள் கலந்துகொள்ளும் சர்வதேச எழுத்தாளர் கருத்தரங்குகளில் தமிழைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு ஆட்களே இல்லை. ஆனால் இங்குள்ள ஒவ்வொரு எழுத்தாளரும் நூற்றுக் கணக்கான புத்தகங்களை எழுதியவர்களாகவும் சர்வதேசத் தரத்தில் எழுதுபவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டுக்கு வெளியே அவர்கள் பெயர் தெரிவதில்லை. இந்தியின் நிர்மல் வர்மாவை நமக்குத் தெரிகிறது. மொழிபெயர்ப்பும் உள்ளது. ஆனால், இங்கே உள்ள அசோகமித்திரனை இந்தியில் தெரியாது. இவ்வளவுக்கும் அசோகமித்திரன் இந்தியாவே பெருமைப்பட வேண்டிய ஒரு மேதை. இலக்கியத்தில் அவர் அளவுக்கு சாதித்திருப்பவர்கள் உலக இலக்கியத்திலேயே கம்மி என்று சொல்லலாம். ஆனால், நமக்கே அவரைப் பற்றி அதிகம் தெரியவில்லை. அது மட்டும் அல்ல. நோபல் பரிசு பெறத் தக்க அளவுக்குத் தமிழில் ஒரு டஜன் பேருக்கு மேல் இருக்கிறார்கள். பெயரையும் சொல்ல முடியும். அசோகமித்திரன், சா. கந்தசாமி, ந. முத்துசாமி, ஆ. மாதவன், இந்திரா பார்த்தசாரதி, ஞானக்கூத்தன், தேவதச்சன், தேவதேவன், வண்ணநிலவன், மனுஷ்ய புத்திரன், எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன், ஷோபா சக்தி, இளங்கோவன் (சிங்கப்பூர்) என்று பலர். இந்தப் பட்டியல் என்னுடைய தனிப்பட்ட ரசனை சார்ந்தது. சீரிய தமிழ் இலக்கிய வாசிப்பு இருப்பவர்களால் இந்தப் பட்டியலில் இன்னும் சிலரையும் சேர்க்க முடியும். இவர்கள் அனைவரும் இன்னமும் தீவிரமாக எழுதிக்கொண்டிருப்பவர்கள். பிரெஞ்சு மொழியைத் தவிர உலகின் வேறு எந்த மொழியிலும் இந்த அளவுக்கு சர்வதேசத் தரத்தில் படைப்புகள் உருவாகிக்கொண்டிருக்கவில்லை. உலக இலக்கியத்தைக் கூர்மையாக அவதானித்துக்கொண்டிருப்பவன் என்ற முறையில் இதை என்னால் அழுத்தமாகச் சொல்ல முடியும்.
ஆங்கிலம், தமிழ் வித்தியாசம்
இவ்வளவு பேர் இருந்தும், இவ்வளவு அதிகமாக எழுதியும் தமிழ்நாட்டுக்கு வெளியே ஏன் தமிழ் எழுத்து செல்லவில்லை? இரண்டு காரணங்கள். நம் பெருமையை நாமே சொன்னால்தானே அடுத்தவருக்குத் தெரியும்? சொல்வதற்கு யார் இருக்கிறார்கள்? தமிழ் அறிந்தோருக்கு ஆங்கிலம் தெரியவில்லை. ஆங்கிலம் தெரிந்தவர்களுக்குத் தமிழ் இலக்கியப் பரிச்சயம் அறவே இல்லை. இன்று நேற்று அல்ல; நூறு ஆண்டுகளாக இதே நிலைமைதான். உதாரணமாக, 1954-ல் நடந்த ஒரு சம்பவம். சுந்தர ராமசாமியின் ‘க.நா.சு. நினைவோடை’ என்ற அற்புதமான நூலில் இந்தச் சம்பவம் வருகிறது.
பிற மொழிகளில் எழுத்தாளர் நிலை
திருவனந்தபுரத்துக்கு வந்திருந்த க.நா.சு.வை நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரிக்குப் பேச அழைக்கிறார்கள் சு.ரா.வும் கிருஷ்ணன் நம்பியும். ஆனால், அந்தக் கல்லூரிப் பேராசிரியருக்கு க.நா.சு.வைத் தெரியவில்லை. ஆனால் க.நா.சு. ‘தி இந்து’ (ஆங்கிலம்) நாளிதழில் மதிப்புரை எழுதும் விஷயம் ஞாபகம் வந்த சு.ரா. அதைப் பேராசிரியரிடம் சொல்கிறார். உடனே பேராசிரியர், “ஓ… கே.என்.எஸ்-ஸா? அதை முதலிலேயே சொல்லக் கூடாதா? நன்றாகத் தெரியுமே” என்கிறார். “ஹிண்டுவில் எழுதுவதென்றால் எவ்வளவு பெரிய ஆளாக இருக்க வேண்டும் என்று என்னை விட க.நா.சு.வைப் புகழ ஆரம்பித்துவிட்டார் பேராசிரியர்” என்கிறார் சு.ரா. ஆங்கிலத்துக்கும் தமிழுக்குமான இடைவெளியை இந்தச் சம்பவத்திலிருந்து நாம் புரிந்துகொள்ளலாம். ஆனால், பிற மொழிகளில் எப்படி இருக்கிறார்கள்?
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸிலிருந்து ஒரு எழுத்தாளர் இந்தியா வந்திருந்தார். உடனே இந்தியாவின் எல்லா முக்கிய நகரங்களிலும் உள்ள அலியான்ஸ் ஃப்ரான்ஸேஸ் மற்றும் பிரெஞ்சைப் பாடமாக போதிக்கும் சர்வகலாசாலைகள் எல்லாவற்றிலும் அவருடைய கலந்துரையாடல் நடந்தது. மறுநாளே அது பற்றி தினசரிகளில் செய்தி வருகிறது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் பிரெஞ்சுத் துறையிலும் அவர் விரிவுரையாற்றினார். அவருடைய புத்தகத்தைப் புகைப்பட நகல் எடுத்து, ஒரு மாதத்துக்கு முன்பே மாணவர்களிடம் கொடுத்து, படித்துவிட்டுக் கலந்துரையாடலுக்கு வரச் சொல்லியிருந்தார்கள் பிரெஞ்சுத் துறை பேராசிரியர்கள். இவ்வளவுக்கும் அவர் எழுதியிருந்தது அந்த ஒரே ஒரு நூல்தான்.
பரிசுகளின் பயன்பாடு
தமிழ் அளவுக்கு இவ்வளவு தீவிரமாக இலக்கியச் செயல்பாடுகள் உலகின் பிற மொழிகளில் நடக்கவில்லை என்ற போதும் தமிழ் இலக்கியத்துக்கு இதுவரை ஒரு சர்வதேச விருது கூட வழங்கப்படாததற்குக் காரணம் வேறு யாரும் அல்ல; நாம்தான். உதாரணமாக, தாகூரை விடவும் கவிதையில் சிறந்த பாரதிக்கு ஏன் நோபல் கிடைக்கவில்லை? தாகூரின் கீதாஞ்சலி மொழிபெயர்ப்புக்கு அப்போது உலகப் புகழ் பெற்றிருந்த டபிள்யூ,பி. யேட்ஸ் முன்னுரை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் உலக அளவில் அதை அறிமுகமும் செய்தார். அதை எடுத்துக்கொண்டு தாகூர் சுமார் 30 நாடுகளுக்குச் சென்று அறிவுஜீவிகளிடமும் கவிகளிடமும் அறிமுகம் செய்துகொண்டார். தாகூருக்கு நோபல் கிடைத்தது 1913-ல். பாரதி இறந்த ஆண்டு 1921.
பரிசுகளின் பயன்பாடு என்னவென்றால், எந்த மொழிக்குப் பரிசு கிடைக்கிறதோ அந்த மொழியில் நடக்கும் இலக்கியச் செயல்பாடுகள் உலக அளவில் பிரபலமாகும். இலக்கியத்துக்கான நோபல் பரிசு தாகூருக்குப் பிறகு எந்த இந்திய எழுத்தாளருக்கும் கிடைக்காவிட்டாலும் பல சர்வதேசப் பரிசுகளை இந்தியாவின் பிற மொழிகள் வாங்கியிருக்கின்றன. குறிப்பாக இந்தி, வங்காளம், மலையாளம், கன்னட மொழிகள். சர்வதேச அளவில் தமிழ் இலக்கியம் பற்றிப் பேச ஆள் இல்லை. ஒருசிலரே இருந்தாலும் அவர்கள் சங்க இலக்கியத்திலிருந்து ஒரு அங்குலம்கூட நகர்வதாகத் தெரியவில்லை. அதேபோல் சமகாலத் தமிழ் இலக்கியத்துக்குச் சரியான ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இல்லை. அப்படியே கிடைத்தாலும் அது தரமான மொழிபெயர்ப்பாக இல்லை. எனவே இப்போதைய உடனடித் தேவை, ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பதை விட தமிழ் இலக்கியம் ஆங்கிலத்துக்கும் பிற ஐரோப்பிய மொழிகளுக்கும் செல்வதற்கான வழிவகைகள் காணப்பட வேண்டும். அதற்கான மொழிபெயர்ப்புக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். மேலும், எந்த மொழியில் மொழிபெயர்ப்பு நடக்கிறதோ அந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும் அந்தக் குழுவில் பங்கேற்றிருக்க வேண்டும்

அபூர்வ மான ‘ரத்த நிலா

வானியல் நிகழ்வுகளில் அபூர்வ மான ‘ரத்த நிலா’ நேற்று உலகின் பல்வேறு பகுதிகளில் தெரிந்தது.
நேற்று முழுநிலவு நாள். பூமிக்கு மிக அருகில் நிலா வந்த தால், வழக்கத்தை விட 14 சதவீதம் மிகப்பெரிய நிலாவாகக் காட்சிய ளித்தது. இதன் ஒளியும் வழக்கத்தை விட 30 சதவீதம் பிரகாசமாக இருந்தது. இதுபோன்று பெரிய நிலாவாகத் தோன்றுவதை சூப்பர் மூன் என அழைப்பர்.
சந்திர கிரகணம் என்பது சூரிய னுக்கும் நிலவுக்கும் இடையே பூமி வரும் போது ஏற்படுகிறது.இதனால் சூரிய ஒளி நிலவில் படுவதை பூமி மறைத்துவிடுகிறது. பூமியின் நிழல்தான் நிலவில் படுகிறது. முழு நிலவன்று மட்டுமே சந்திரகிரகணம் ஏற்படும்.
சந்திர கிரகணத்தன்று சூப்பர் மூன் வருவதால் நிலா, பூமிக்கு மிக அருகில் வருகிறது. இதனால் பூமியின் வளி மண்டலத்தில் பட்டுச் சிதறும் சூரிய ஒளியில் சிவப்பு நிற அலைவரிசை மட்டும் நிலவின் மேற்பரப்பில் பட்டுப்பிரதிபலிக்கும். அப்போது நிலா இளஞ்சிவப்பு முதல் ரத்தச் சிவப்பு வரையிலான நிறங்களில் காட்சியளிக்கும்.
இந்த வானியல் நிகழ்வை ரத்த நிலா என அழைக்கின்றனர். இதுபோன்று, பூமிக்கு மிக அருகில் முழுநிலவு தோன்றும்போது சந்திர கிரகணம் ஏற்படுவது அபூர்வ நிகழ்வாகும். கடந்த 1982-ம் ஆண்டு இதுபோன்று சூப்பர் மூன் தினத்தில் சந்திர கிரகணம் ஏற்பட்டது. நேற்று ரத்த நிலா உலகின் பல்வேறு பகுதிகளில் தெரிந்தது.
அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, மேற்கு ஆசிய பகுதிகளில் இந்த ரத்த நிலா தெரிந்தது. இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 5.40 மணிக்கு ரத்த நிலா தெரிந்தது.
வானியல் ஆர்வலர்களுக்கு மட்டுமின்றி, வானியல் ஆய்வாளர் களும் ரத்த சிவப்பு நிலாவில் மிக்க ஆர்வம் காட்டினர். சந்திர கிரகணம் ஏற்பட்ட சமயத்தில் நிலவில் ஏற்பட்ட தட்பவெட்ப மாற்றங்கள் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
அடுத்த ரத்தசிவப்பு நிலா வரும் 2033-ம் ஆண்டு நிகழும் என கணிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்தவர்களில் மோர் மோன் தேவாலய மரபைப் பின்பற்று பவர்கள் ரத்த நிலா தோன்றினால் உலகம் அழிந்து விடும் என நம்புகின்றனர். இதனால், அவர் களின் மத நம்பிக்கை குறித்தும் நேற்று பெரிய எதிர்பார்ப்பு நிலவியது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய் கிரகத்தில் நீரோட்டங்கள் கண்டுபிடிப்பு

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்: புதிய ஆதாரங்களுக்காக நாசாவை கவுரவித்த கூகுள்

COMMENT   ·   PRINT   ·   T+  
  • செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரமாக நாசா வெளியிட்ட புகைப்படம்.
    செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரமாக நாசா வெளியிட்ட புகைப்படம்.
  • செவ்வாய் கிரகத்தில் பள்ளத்தாக்குகளில் நீரோட்டம் இருப்பதற்கான ஆதாரமாக நாசா வெளியிட்ட புகைப்படம்.
    செவ்வாய் கிரகத்தில் பள்ளத்தாக்குகளில் நீரோட்டம் இருப்பதற்கான ஆதாரமாக நாசா வெளியிட்ட புகைப்படம்.
  • கூகுள் டூடுலில் நாசாவுக்கு பாராட்டு.
    கூகுள் டூடுலில் நாசாவுக்கு பாராட்டு.
செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதை கண்டுபிடித்துள்ள நாசாவுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதத்தில் இன்றைய கூகுள் டூடுல் முகப்புப் பக்கம் மாற்றப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பிவைக்கப்பட்ட அமெரிக்காவின் நாசா விண்கலன் நேற்று (திங்கள்கிழமை) புதிய படங்களை அனுப்பியது. அந்தப் புகைப்படங்களில், பள்ளத்தாக்குகளிலும், சரிவுகளிலும் நீண்ட நீரோடைகள் இருப்பதைக் காட்டும் ஆதாரங்கள் இடம்பெற்றிருந்தன.
இது தொடர்பாக வாஷிங்டன்னில் செய்தியாளர்களை சந்தித்த நாசா விஞ்ஞானிகள், "செவ்வாய் கிரகத்தில் திரவ நிலையில் தண்ணீர் இருப்பது உறுதியாகியுள்ளது. கிரகத்தின் மேற்பரப்பில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த நீரானது உப்புக்கரிக்கும் தன்மைகொண்டதாக இருக்க வாய்ப்புள்ளது.
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, அந்த கிரகம் இன்னமும் புவியியல் ரீதியில் உயிர்ப்போடு இருப்பதை உறுதி செய்கிறது.
எனவே, நீரோட்டம் இருப்பதால் செவ்வாய் கிரகத்தில் எளிமையான உயிரிகளும் இருக்கலாம் என்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகியிருக்கின்றன.
இதனைத் தொடர்ந்து அங்கு மனிதர்கள் வசிக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வை விஞ்ஞானிகள் தொடர உள்ளனர்" எனத் தெரிவித்தனர்.
மிகவும் வியக்கத்தக்க, பலன் தரக்கூடிய இந்த செய்தியை பாராட்டும் விதமாக கூகுள் நிறுவனம் இன்றைய டூடுலை தனது முகப்பில் மாற்றியுள்ளது.
கூகுளின் முகப்புப் பக்கத்தில் இருக்கும் அந்த டூடுலை கிளிக் செய்தால், செவ்வாய் கிரகம் குவளையில் இருக்கும் தண்ணீரை ஸ்ட்ரா மூலம் குடிப்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் விண்வெளி ஆராய்ச்சி கண்காணிப்பு மையத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருப்பதாக இந்திய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அத்துடன் அமெரிக்காவின் பல செயற்கைகோள்களும் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளன.

இந்தியாவின் முதல் விண்வெளி ஆராய்ச்சி கண்காணிப்பு மையத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருப்பதாக இந்திய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அத்துடன் அமெரிக்காவின் பல செயற்கைகோள்களும் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளன.
தென்னிந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்திலிருந்து ராக்கெட் மூலம் இவை அனைத்தும் திங்களன்று விண்ணில் ஏவப்பட்டுள்ளன.
அஸ்ட்ரோசாட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி கண்காணிப்பு மையமானது நட்சத்திரக் கூட்டங்களையும், தொலைதூர விண்வெளி கிரகங்களின் செயற்பாடுகளையும் விரிவாக ஆராயும்.
சர்வதேச அளவில் விண்வெளி ஆய்வுத்துறையில் இந்தியாவின் செல்வாக்கை அதிகரிக்கச் செய்யவேண்டும் என்கிற இந்திய அரசின் தொடர் முயற்சியின் ஒருபகுதியாகவே இன்றைய இந்த வெற்றிகரமான விண்வெளி செயற்பாடுகள் பார்க்கப்படுகின்றன.
கடந்த ஆண்டு செவ்வாய் கிரகத்துக்கான தனது மங்கள்யான் விண்கலனை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது பெரும் சாதனையாக பார்க்கப்பட்டது.

பிஎஸ்எல்வி சி-30 ராக்கெட் மூலம் விண்வெளி ஆய்வு செயற்கைக்கோள் 'ஆஸ்ட்ரோசாட்' இன்று (28-ம் தேதி) காலை 10 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
ஆஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள்களுடன் 6 வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் சரியான சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.
இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ), இந்தியாவின் முதலாவது விண்வெளி ஆய்வு செயற்கைக்கோளான 'ஆஸ்ட்ரோ சாட்' செயற்கைக்கோளை இன்று காலை 10 மணிக்கு ஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-30 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
ஒன்றரை டன் எடை கொண்ட ஆஸ்ட்ரோசாட் செயற்கைக்கோளுடன் கனடா, இந்தோனேசியா ஆகிய நாடுகளின் 2 சிறிய செயற்கைக் கோள்கள், அமெரிக்காவின் 4 நானோ செயற்கைக் கோள்கள் என மொத்தம் 6 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன.
ஆஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் புற ஊதாக்கதிர்கள் மற்றும் எக்ஸ்ரே கதிர் மண்டலங்கள் கொண்ட விண்வெளிப் பகுதியை ஆய்வு செய்யும். பால்வெளி வீதியில் இருப்பதாக நம்பப்படும் கருந்துளை குறித்தும் இது ஆய்வு செய்யும். ஆஸ்ட்ரோசாட் செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கான 50 மணி நேர ‘கவுன்ட்-டவுன்’ கடந்த சனிக் கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. இன்று விண்ணில் செலுத்தப்படுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்தது. திட்டமிட்டபடி சரியாக காலை 10 மணிக்கு செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.
விண்வெளி ஆராய்ச்சி துறை யில் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய 3 நாடுகள் மட்டுமே இதுவரை விண்வெளி ஆய்வு செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளன. இந்நிலையில், ஆஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டதால், இப்பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நீர் ஓடுவதைக் காட்டும் புதிய தரவுகளை நாசா வெளியிட்டிருக்கிறது. செவ்வாய் கிரகத்தில் எளிமையான உயிரிகள் இருக்கலாம் என்பதற்கான சாத்தியப்பாட்டையும் சிறிய அளவுக்கு இந்த கண்டுபிடிப்பு அதிகப்படுத்தியிருக்கிறது.

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நீர் ஓடுவதைக் காட்டும் புதிய தரவுகளை நாசா வெளியிட்டிருக்கிறது.
செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட சுற்றுகலன் அனுப்பி வைத்திருக்கும் புதிய படங்களில் பள்ளத்தாக்குகளிலும், சரிவுகளிலும் நீண்ட நீரோடைகள் இருப்பதைக் காட்டும் தெளிவான ஆதாரங்கள் காணப்படுகின்றன.
இன்றுவரை மேற்பரப்பில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த நீரானது உப்புக்கரிக்கும் தன்மைகொண்டதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
வாஷிங்க்டனில் இன்று திங்கட்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது இந்த தகவல்களை நாசா விஞ்ஞானிகள் வெளியிட்டனர்.
உப்புகளில் பலவகை உண்டு என்றும், அவரை கரைந்து நீராக ஓடுவதற்கான சுழலை உருவாக்குவதாகவும் விஞ்ஞானிகள் விளக்கினர்.
செவ்வாய் கிரகத்தில் திரவ வடிவில் நீர் இருப்பதானது, அந்த கிரகம் இன்னமும் புவியியல் ரீதியில் உயிர்ப்போடு இருப்பதை உறுதி செய்கிறது.
மேலும் செவ்வாய் கிரகத்தில் எளிமையான உயிரிகள் இருக்கலாம் என்பதற்கான சாத்தியப்பாட்டையும் சிறிதளவுக்கு இது அதிகப்படுத்தியிருக்கிறது

பூமியைக் காப்பாற்றுங்கள்!

உலகின் தட்பவெப்ப நிலையைப் பராமரிப்பதில் துருவப்பனி மண்டலங்கள் முக்கியப் பங்குவகிக்கின்றன.
பூமி என்னவாகும் என்று நினைத்தால் பயமாக இருக்கிறது. இப்போதே பல சுற்றுச்சூழல் சீர்கேடுகள் சரிப்படுத்த முடியாத அளவுக்குப் போய்விட்டன. துருவங்களில் உள்ள நிரந்தர உறைபனிப்பாறைகளில் விரிசல்கள் ஏற்பட்டு, தண்ணீர் அவற்றின் வழியாகக் கீழே இறங்கித் தரையை அடைகிறது. அதன் காரணமாகத் தரையில் நங்கூரமிட்டதைப் போல அமர்ந்திருந்த பனிப்பாறைகள் மிதக்கத் தொடங்கி, கடலை நோக்கி நகர்கின்றன. வாயு மண்டலத்தின் வெப்பநிலை உயர்ந்துவருவதால் துருவங்களிலுள்ள பனிப்பாறைகள் உருகத் தொடங்கிவிட்டன. உலகின் தட்பவெப்ப நிலையைப் பராமரிப்பதில் துருவப்பனி மண்டலங்கள் முக்கியப் பங்குவகிக்கின்றன. வெள்ளை நிறப்பனி மண்டலங்கள் சூரியனின் வெப்பக்கதிர்களைப் பிரதிபலித்து விண்வெளிக்கு அனுப்பிவருகின்றன. பனிப்பரப்பு குறைந்து கடல்பரப்பு அதிகமாவதால் இவ்விதமாகத் திருப்பியனுப்பப்பட வேண்டிய வெப்பம் வளிமண்டலத்திலேயே தங்கிவிடுகிறது. இதனால் வளிமண்டல வெப்பம் உயர்வதும், பனிப்படலங்கள் உருகுவதும் ஒன்றுக்கொன்று காரணகாரியங்களாகி ஒரு ‘சுழல் செயல்பாடாக’அமைகின்றன.
காரண காரியச் சுழல்
துருவப்பனிப் பரப்பினடியில் மீத்தேன் போன்ற ஏராளமான வாயுக்கள் சிக்கியுள்ளன. பனிமலைகள் உருகும்போது அவை வெளிப்பட்டு வளிமண்டலத்தில் கலக்கும். இத்தகைய பசுங்குடில் வாயுக்கள் வளிமண்டலத்தில் நிறையும்போது அதன் வெப்பநிலை உயர்ந்து, தாவரங்கள் அழிவது அதிகமாகிறது. உலகளாவிய வெப்பநிலை 3 செல்சியஸ் டிகிரி உயருமானால் உலகிலுள்ள காடுகளில் பாதிக்குமேல் அழிந்து சிதையும். இதுவும் ஒரு காரண காரியச் சுழலாகும்.
அலாவுதீனின் மந்திர விளக்கைப் பயன்படுத்தி பசுங்குடில் வாயுக்கள் உருவாவதை இந்தக் கணம் முதலே தடுத்துவிட்டாலும்கூட, இக்கணம் வரை கலந்துவிட்ட வாயுக்களின் விளைவாக வளி மண்டல வெப்பநிலை இன்னும் 10 ஆண்டுகளுக்குள் 2 செல்சியஸ் டிகிரி உயர்ந்தே தீரும் என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். இப்போது சராசரியாக நூறாண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் வழக்கமுடைய வெள்ளம், வறட்சி போன்றவை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரத் தொடங்கும். இப்போதே இங்கிலாந்தின் தென்பகுதியில் வெப்பநிலை உயர்வை உணர்ந்த வனவிலங்குகள் வட பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன. நிலைமை முற்றினால் வெப்ப மண்டல உயிரினங்களான முதலைகளும் நீர் யானைகளும் துருவப் பகுதிகளுக்கு வசிக்கப் போகலாம்.
பூமத்திய ரேகைப் பகுதியிலுள்ள கடல் நீர் சூடாகி ஆவியாகத் தொடங்கும். தொழில்புரட்சி தொடங்கிய பின் நிலக்கரியும் பெட்ரோலியப் பொருட்களும் அதிக அளவில் எரிக்கப்பட்டு பசுமைக்குடில் வாயுக்கள் வளிமண்டலத்தில் சேருவது அதிகமாகிவருகிறது. அவற்றில் கிட்டத்தட்ட பாதியளவை மண்ணும் கடலும் தாவரங்களும் உட்கவர்ந்துகொள்கின்றன. ஆனால், வெப்பநிலை அளவுக்கு மீறுமானால் அந்த வாயுக்கள் சில விநாடிகளுக்குள் பீறிட்டெழுந்து வளிமண்டலத்தில் கலந்துவிடும். 5.5 கோடி ஆண்டுகளுக்கு முன் இத்தகைய ஒரு நிகழ்வு ஏற்பட்டு, பூமியிலிருந்த உயிரினங்களில் பாதிக்குமேல் அழிந்துவிட்டன.
பேரழிவு உண்டாகும்
வளிமண்டல வெப்பநிலை உயர்ந்தால் துருவங்களிலும் இமயமலை, ஆல்ப்ஸ் மலை போன்ற இடங்களிலும் உள்ள பனிக்கட்டிகள் உருகி ஆறுகள் மூலமாகக் கடலை அடையும். கடல் மட்டம் பல மீட்டர்கள் உயர்ந்து பல தீவுகளையும் கடலோர நாடுகளையும் மூழ்கடித்துவிடும். இப்போதே மாலத்தீவுகளின் அரசு மணலையும் கற்களையும் பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கடற்கரையை உயர்த்திக் கட்டிவருகிறது.
கிரீன்லாந்திலும் தென் துருவத்தின் மேற்குப் பகுதிகளிலும் உள்ள பனிமலைகள் இப்போது கடலடித் தரையைத் தொட்டவாறு அமர்ந்துள்ளன. அவற்றின் நிறையும் பருமனும் மெல்ல மெல்லக் குறைந்துவருகின்றன. அவை பிளந்து சரிந்து விழுமானால், உலகெங்கிலும் பல மீட்டர் உயரத்துக்குச் சுனாமி அலைகள் எழுந்து பேரழிவையுண்டாக்கும். துருவங்களிலுள்ள பனிமலைகள் முழுவதும் உருகிவிடுமானால், உலகளாவிய கடல்பரப்பு கிட்டத்தட்ட 5 மீட்டர் வரை உயர்ந்துவிடும்.
பனி உருகிக் கடலில் கலக்கும்போது கடல் நீரின் அமிலத்தன்மை அதிகமாகி சிப்பி, நத்தை போன்ற ஒட்டுண்ணிகளின் ஓடுகள் அரிக்கப்பட்டு அவை அழியும். மீன்களின் முக்கிய உணவான ‘பிளாங்டன்கள்’மறையும். அந்த மீன்களை உண்டு வாழும் திமிங்கிலம், ஸீல், வால்ரஸ் போன்றவை பாதிக்கப்படும்.
வளிமண்டல வெப்பநிலை உயர்ந்தால் கடல்பரப்பில் நீர் சூடாகி வடக்கு நோக்கியும் தெற்கு நோக்கியும் பாயும். துருவங்களிலிருந்து குளிர்ந்த நீர் கடலடித் தரைக்கு இறங்கி நிலநடுக்கோட்டை நோக்கி ஓடும். இதன் காரணமாகக் கடல் பரப்புக்கு மேலே வெப்பவாயுச் சலனம் ஏற்பட்டுச் சூறாவளிகளும் சுனாமிகளும் தோன்றும். அவற்றின் விளைவாகப் பூமியின் சுழற்சி வேகம் கூட மட்டுப்படலாம். கோடைக் காலங்களும் குளிர்காலங்களும் நீட்சியடையும். அதன் விளைவாக என்னென்ன தீமைகள் விளையும் என்பதை விஞ்ஞானிகளால்கூட ஊகிக்க முடியவில்லை.
அமெரிக்காவின் நடவடிக்கை
மேலை நாடுகளிலும் அமெரிக்காவிலும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் பசுமைக் குடில் வாயுக்களின் அளவைக் குறைப்பது முதல் பொதுப் போக்குவரத்தை ஊக்குவிப்பதுவரை பல நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர்.
சென்னையில் கார் தொழிற்சாலைகள் அமைந்ததும் நடுத்தர வருமானக்காரர்கள் கூட கார்களை வாங்கி ஓட்டுவதும் மகிழ்ச்சிக்குரிய விஷயமல்ல. நம் நாட்டின் பெருநகரங்கள் எல்லாவற்றிலும் கார்களும் பஸ்களும் லாரிகளும் நீராவி இன்ஜின்களும் கரிமவாயுக்கள் கலந்த புகையை ஏராளமாக வெளிவிடுகின்றன. மேலை நாடுகளில் அனுசரிக்கப்படும் வாகனப் பராமரிப்பு உத்திகள் இந்தியாவில் இன்னமும் முழு அளவில் அறிமுகப்படுத்தப்படவில்லை. போக்குவரத்து சிக்னல்களில் நிற்கும்போது இன்ஜின்களை ஓடவிடுவது, திடீர் திடீரென்று வேகத்தைக் கூட்டி சீறிப்பாய்வது போன்றவற்றால் எரிபொருள் வீணாவதுடன் காற்றும் மாசுபடுகிறது. அதைச் சுவாசிக்கிற மக்களுக்கு நுரையீரல் பாதிப்புகளும் இதயக் கோளாறுகளும் உண்டாகின்றன.
ஒவ்வொரு தனி மனிதரும் உலகின் சூழலில் தோன்றத் தொடங்கியிருக்கிற சீரழிவைத் தடுத்து நிறுத்தச் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஒரு மரக்கன்றை நட்டு நீருற்றிப் பராமரிப்பது அவற்றில் ஒன்று. வீட்டில் சேரும் குப்பைகளில் மக்கக் கூடியவற்றைப் பிரித்தெடுத்து உரக் குழிகளில் இட்டுத் தொழு உரமாக மாற்றலாம். கண்ணாடி, உலோகம், பிளாஸ்டிக் போன்ற கழிவுகளை மறு சுழற்சி செய்கிற அமைப்புகளிடம் சேர்ப்பித்துவிடுவது நல்லது. வீட்டில் சேரும் கழிவுநீரைச் சுத்திகரித்துத் தோட்டங்களிலும் கழிப்பறைகளிலும் பயன்படுத்த முடியும். மக்களே, சகாக்களே… ஏதாவது செய்யுங்கள். பூமியைக் காப்பாற்றுங்கள்!
- கே.என். ராமசந்திரன், அறிவியல் கட்டுரையாளர்.

திங்கள், 28 செப்டம்பர், 2015

இஸ்ரோ செலுத்தும் விண்வெளி டெலஸ்கோப்


ஆஸ்ட்ரோசாட்' என்ற விசேஷ செயற்கைக் கோளை ராக்கெட் மூலம் உயரே செலுத்துகிறது. இதைப் பறக்கும் டெலஸ்கோப் என்று வர்ணிக்கலாம். ஏனெனில், இது செயற்கைக்கோள் போல பூமியைச் சுற்றிச் சுற்றி வருகின்ற அதே நேரத்தில், விண்வெளியை நோக்கியபடி நட்சத்திரங்களை ஆராயும். பூமியில் அதாவது தரையில் அமைந்த டெலஸ்கோப்புகள் மூலம் கண்டறிய முடியாத விஷயங்களைக் கண்டறிவது அதன் நோக்கமாகும்.
இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் எண்ணற்ற டெலஸ்கோப்புகள் ஏற்கெனவே உள்ளன. இவை மூலம் கடந்த காலத்தில் எவ்வளவோ கண்டுபிடிப்புகள் செய்யப்பட்டுள்ளன. எனினும் இவற்றால் அறிய முடியாத விஷயங்கள் நிறையவே இருக்கின்றன.
மின்காந்த அலைகள்
பகல் நேரமாக இருந்தால் சூரியனிலிருந்து ஒளி வருகிறது. இரவு நேரமாக இருந்தால் நட்சத்திரங்களிலிருந்து ஒளி வருகிறது. அந்த ஒளியை நம்மால் காண முடிகிறது. ஆனால் சூரியனாகட்டும் நட்சத்திரங்களாகட்டும் அவற்றிலிருந்து ஒளி மட்டுமன்றி வேறு வகைக் கதிர்களும் வருகின்றன. பலரும் பள்ளிப் பாடப் புத்தகத்தில் மின்காந்த அலைகள் பற்றிப் படித்திருப்பார்கள். அலை நீளங்களைப் பொறுத்து மின்காந்த அலைகள் பல வகைப்பட்டவை. இந்த அலைகளில் ஒளியும் ஒன்று. எக்ஸ்ரே கதிர்கள், காமா கதிர்கள் எனப்படுபவையும் இந்த மின்காந்த அலைகள் குடும்பத்தைச் சேர்ந்தவையே. புற ஊதாக் கதிர்கள் (அல்ட்ரா வயலட்) அகச் சிவப்புக் கதிர்கள் (இன்பரா ரெட்) ஆகியவையும் இந்த வகையைச் சேர்ந்தவை. வானொலி ஒலிபரப்புக்குப் பயன்படுத்தப்படுகின்ற ரேடியோ அலைகளும் இந்தக் குடும்பத்தில் அடங்கும்.
இந்த விதவிதமான அலைகளில் ஒளி அலைகள் மட்டுமே நம் கண்ணுக்குத் தெரியும். மற்ற வகை அலைகளை நம் கண்ணால் பார்க்க முடியாது. இது ஒரு புறம் இருக்க, நட்சத்திரங்களிலிருந்தும் இதர வான் பொருட்களிலிருந்தும் எத்தனையோ வகையான கதிர்கள் (அலைகள் என்றும் கூறலாம்) வெளிப்படுகின்றன. அவற்றையும் ஆராய்ந்தாக வேண்டும். நம் கண்ணுக்குத் தெரியாவிட்டால் என்ன, விசேஷ வகைக் கருவிகளைக் கொண்டு அந்தக் கதிர்களை ஆராயலாமே என்று கேட்கலாம். அதில் ஒரு பெரிய பிரச்சினை உள்ளது.
பூமியைச் சுற்றி அமைந்த காற்று மண்டலமானது நட்சத்திரங்களிலிருந்து வருகின்ற காமா கதிர்களையும் எக்ஸ் கதிர்களையும் தடுத்து நிறுத்திவிடுகிறது. காற்று மண்டலமானது ஒளி அலைகளை அனுமதிக்கிறது. ரேடியோ அலைகளை அனுமதிக்கிறது. சிலவகை புற ஊதாக் கதிர்களையும், அகச் சிவப்புக் கதிர்களையும் ஓரளவுக்கு அனுமதிக்கிறது. அந்த அளவில் உலகின் பல நாடுகளிலும் உள்ள டெலஸ்கோப்புகள் ஒளி அலைகளையும் ரேடியோ அலைகளையும்தான் ஆராய்கின்றன. பலவும் இரவு நேரங்களில் நட்சத்திர ஒளியை ஆராய்கின்றன. வேறு வகை டெலஸ்கோப்புகள் நட்சத்திரங்களிலிருந்து வரும் ரேடியோ அலைகளை இரவு பகல் என எல்லா நேரங்களிலும் ஆராய்பவையாக உள்ளன. அவற்றுக்கு ரேடியோ டெலஸ்கோப் என்று பெயர். இவை மிக அகன்ற ஆன்டெனாக்களைக் கொண்டவை. இவற்றைத் தொலைநோக்கி என்று கூற முடியாது. இவை எதையும் காண்பதில்லை. நமது காதுகள் எவ்விதம் ஒலி அலைகளைச் சேகரிக்கின்றனவோ அவ்விதம் அவை ரேடியோ அலைகளைச் சேகரிப்பவை. வேண்டுமானால், இவற்றைத் தொலைக் கேட்பிகள் என்று வர்ணிக்கலாம்.
எக்ஸ் கதிர் வானவியல்
இந்நிலையில், நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் எக்ஸ் கதிர்களையும் இதர வகைக் கதிர்களையும் ஆராய வேண்டுமானால், காற்று மண்டலத்தைத் தாண்டி உயரே சென்றாக வேண்டும் என்பதை விஞ்ஞானிகள் உணர்ந்தனர். பல மில்லியன் டிகிரி வெப்பத்தைக் கொண்ட நட்சத்திரங்கள் எக்ஸ் கதிர்களை வெளிவிடுகின்றன. சூரியனும்தான். 1963-ம் ஆண்டில் அமெரிக்காவில் ஒரு ராக்கெட்டைச் செலுத்தி, அதிலிருந்த கருவிகள் மூலம் சூரியனின் எக்ஸ் கதிர்களை ஆராய்ந்தனர். பின்னர், 1978-ம் ஆண்டில் நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படுகிற எக்ஸ் கதிர்களை ஆராய ஒரு செயற்கைக்கோள் செலுத்தப்பட்டது.
இவ்விதமாக அஸ்ட்ரானமி எனப்படும் வானவியல் துறையில் எக்ஸ் கதிர் வானவியல் என தனிப்பிரிவு தொடங்கியது. பின்னர் வேறு பிரிவுகளும் தோன்றின. நாசா உயரே செலுத்தியுள்ள
`சந்திரா' டெலஸ்கோப், நட்சத்திரங்களின் எக்ஸ் கதிர்களைக் கடந்த பல ஆண்டுகளாக ஆராய்ந்து, பல புதிய கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளது. இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டாக்டர் எஸ்.சந்திரசேகரின் பெயரைத் தாங்கிய இந்தப் பறக்கும் டெலஸ்கோப், சுருக்கமாக ‘சந்திரா டெலஸ்கோப்’ என்று அழைக்கப்படுகிறது.
கடந்த பல ஆண்டுகளில் பல பறக்கும் டெலஸ்கோப்புகள் உயரே செலுத்தப்பட்டுள்ளன. இவற்றில் ஹப்புள் டெலஸ்கோப்பும் அடங்கும். இது சுமார் 560 கி.மீ. உயரத்தில் அமைந்தபடி பூமியைச் சுற்றிவருகிறது. 11 டன் எடை கொண்ட இந்த டெலஸ்கோப், 1990-ம் ஆண்டில் செலுத்தப்பட்டது. காற்று மண்டலத்தில் உள்ள நுண்ணிய தூசு, வானை ஆராய்வதற்குப் பெரிய தொல்லையாக உள்ளது. இதைக் கருத்தில்கொண்டுதான் ஹப்புள் செலுத்தப்பட்டது. ஹப்புள் கடந்த பல ஆண்டுகளில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.
ஹப்புள் டெலஸ்கோப்பில் புற ஊதாக் கதிர்களையும் அகச் சிவப்புக் கதிர்களையும் வெளியிடுகின்ற வான் பொருட்களை ஆராயவும் வசதிகள் உள்ளன.
கோடானு கோடிதொலைவில் உள்ள நட்சத்திரங்களில் பலவும் சூரியனைப் போலவே கிரகங்களைப் பெற்றிருக்கலாம். அவற்றைப் பூமியில் இருந்தபடி கண்டுபிடிப்பது இயலாத காரியம். எனவே, நாசா இதற்கென
`ஸ்பிட்சர்' என்னும் டெலஸ்கோப்பைச் செலுத்தியது. இது 2003-ம் ஆண்டில் செலுத்தப்பட்டது. இந்த டெலஸ்கோப் எங்கோ உள்ள நட்சத்திரங்களைச் சுற்றுகின்ற பல கிரகங்களைக் கண்டுபிடித்துள்ளது. இது அகச் சிவப்புக் கதிர்களை வெளியிடும் வான் பொருட்களைக் கண்டறிவதற்கானது. இது முதல்கட்டப் பணியை முடித்துக்கொண்டு இரண்டாவது கட்டத்தை எட்டியுள்ளது.
ஆஸ்ட்ரோசாட் பறக்கும் டெலஸ்கோப், காமா கதிர்கள், எக்ஸ் கதிர்கள், அகச் சிவப்புக் கதிர்கள், புற ஊதாக் கதிர்கள் ஆகியவற்றை வெளியிடுகின்ற அனைத்தையும் கிரகித்து ஆராயும் திறன் கொண்ட டெலஸ்கோப், ஆகும். அதற்கான கருவிகள் இந்தப் பறக்கும் டெலஸ்கோப்பில் உள்ளன. இதையே வேறு விதமாகச் சொல்வதானால், இந்த டெலஸ்கோப் நியூட்ரான் நட்சத்திரங்கள், பல்சார்கள் எனப்படும் நட்சத்திரங்கள், வெள்ளைக் குள்ளன்கள் எனப்படும் நட்சத்திரங்கள், கருந்துளைகள், மிகுந்த ஆற்றலை வெளிப்படுத்துகின்ற அண்டங்களின் மையங்கள் முதலியவற்றை ஆராயும்.
தனித் தன்மை கொண்ட ஆஸ்ட்ரோசாட்
இந்த ஆராய்ச்சிகள் அல்லாமல் தரையில் அமைந்த டெலஸ்கோப்புகளுடனும் இணைந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும். இந்தியா இவ்வித ஆராய்ச்சிகளில் ஈடுபடுவது இது முதல் தடவை அல்ல. நட்சத்திரங்கள் வெளிவிடும் எக்ஸ் கதிர்களை ஆராய ஆரம்ப காலத்தில் பல நாடுகளும் பலூன்களையும் ராக்கெட்களையும் பயன்படுத்தியதுபோல இந்தியாவும் செய்துள்ளது. தவிர, 1996-ம் ஆண்டில் இந்தியா செலுத்திய ஐ.ஆர்.எஸ். பி-3 என்னும் செயற்கைக்கோளில் எக்ஸ் கதிர் பதிவுக் கருவிகள் வைக்கப்பட்டிருந்தன.
இப்போது செலுத்தப்படும் ஆஸ்ட்ரோசாட் பறக்கும் டெலஸ்கோப்பில் கனடாவின் நிபுணர்களும், இங்கிலாந்தின் லெஸ்டர் பல்கலைக்கழக நிபுணர்களும் உருவாக்கிய கருவிகள் இடம்பெற்றுள்ளன. ஆஸ்ட்ரோசாட் பறக்கும் டெலஸ்கோப்பை நாசா ஏற்கெனவே செலுத்திய ஹப்புள், சந்திரா டெலஸ்கோப், ஸ்பிட்ஸ் டெலஸ்கோப் ஆகியவற்றுடன் ஒப்பிட முடியாது. நாசாவின் டெலஸ்கோப்புகள் ஒவ்வொன்றும் தனித்தனி பணிக்கானவை. அதிக எடை கொண்டவை. அதிக நுட்பம் கொண்டவை. மாறாக ஆஸ்ட்ரோசாட் பல பணிகளையும் உள்ளடக்கியது என்ற வகையில் தனித் தன்மை கொண்டது.
ஆஸ்ட்ரோசாட் பறக்கும் டெலஸ்கோப் 1,650 கிலோ எடை கொண்டது. இது 650 கி.மீ. உயரத்தில் அமைந்தபடி மேற்கிலிருந்து கிழக்காக பூமியைச் சுற்றிவரும். இது பல சாதனைகளைப் படைத்துள்ள பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் உயரே செலுத்தப்படும்.
- என். ராமதுரை, மூத்த பத்திரிகையாளர்,
தொடர்புக்கு: nramadurai@gmail.com

ஒரு மொழி வழக்கொழிந்துபோவதும்

இப்பூவுலகிலிருந்து ஓர் உயிரி அற்றுப்போவதும் ஒரு மொழி வழக்கொழிந்துபோவதும் ஒன்றேதான்
இந்தித் திணிப்புக்கு எதிரான மொழிப் போரின் 50-வது ஆண்டை மொழியுரிமை ஆண்டாகக் கடைப்பிடிக்க வேண்டும் என கடந்த ஜனவரி மாதம், ‘தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கத்தினர்’ அறிவித்தபோது, அது ஒரு வெற்றுச் சூளுரையாகவே பலருக்கும் தோன்றியிருக்க வேண்டும். ஆனால், கடந்த 19, 20 ஆகிய தேதிகளில் சென்னையில் தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கத்தால் நடத்தப்பட்ட மொழி உரிமை மாநாடு இந்தியத் துணைக்கண்ட மொழியுரிமைப் போராட்ட வரலாற்றில் நிச்சயமாக ஒரு மைல்கல்லாகவே பதிவாகியிருக்கிறது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பிரதிநிதிகள் அம்மாநாட்டுக்கு வந்திருந்தார்கள். 500-க்கும் மேற்பட்ட பார்வையாளர்களில் பலர் தமிழகத்தின் மூலைமுடுக்குகளிலிருந்து வந்தவர்கள். எங்கிருந்தோ வந்தவர்கள் 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத் தியாகிகளுக்கு மலர் அஞ்சலி செலுத்தியபோது, நிகழ்ச்சிக்கு வந்திருந்த மொழிப் போராட்டத் தியாகிகள் நெகிழ்ந்தார்கள். பிற பார்வையாளர்கள் வியந்தார்கள். “இவர்கள் தமிழ் மொழிக்காகப் போராடிய தியாகிகள் மட்டுமல்ல, எங்களுடைய தியாகிகளும்கூட” என்று பிற மாநிலப் பிரதிநிதிகள் பேசியபோது தமிழ் இளைஞர் கூட்டம் ஆர்ப்பரித்தது. பிற மாநிலத்தவர்களின் பேச்சில் உண்மை இருந்தது. இந்தித் திணிப்பின் கோரப்பிடிக்குள் சிக்கித் தங்கள் அடையாளத்தை இழந்தவர்கள் அவர்கள். அதனால்தான் பெங்களூரிலிருந்தும் கொல்கத்தாவிலிருந்தும் மும்பையிலிருந்தும் பாட்டியாலாவிலிருந்தும் காலடியிலிருந்தும் நாம் புராணங்களில் மட்டுமே படித்திருக்கும் கோசல நாட்டிலிருந்தும் வந்த பிரதிநிதிகள் அவரவர் மொழிகளை அழிவிலிருந்தும் இழிவிலிருந்தும் காப்பாற்றுவதற்காக நம்மோடு கைகோக்க அணியமாக இருந்தார்கள். நமது நீண்டநெடிய மொழிப் போராட்ட வரலாற்றிலிருந்து என்ன கற்றுக்கொள்ள முடியும் என்று எதிர்பார்த்தார்கள். “நான் ஒரு புனித யாத்திரையாகத் தமிழகத்துக்கு வந்திருக்கிறேன்” என்று கூறினார் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஆய்வு முடித்தவரும் கொல்கத்தாவில் உயர்நிலைக் கல்வி நிறுவனமொன்றில் பணியாற்றுபவரும் வங்க மொழிப் போராளியுமான கார்கா சாட்டர்ஜி.
ஆதிக்க சக்திகளின் குறுக்கீடு
தமிழ் மொழியுரிமைக்காகப் போராடும் அமைப்புகளின் கூட்டமைப்பான தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கத்தையும் இந்தியாவின் பிற மொழிகளின் பிரதிநிதிகளையும் இணைத்தது எது? எந்த மொழிகளையும் நாம் எதிரிகளாக இனம் காணவில்லை. ஆனால், சில ஆதிக்க சக்திகள் ஒரு சில மொழிகளைக் குண்டாந்தடிகளாகக் கொண்டு நம்மை அடிப்பதைத் தடுத்துநிறுத்த வேண்டும் என்பதுதான் எல்லோருடைய பொதுக்கோரிக்கையாக இருந்தது. இந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளும் நமது மொழிகளைத் துவம்சம் செய்துகொண்டிருக்கின்றன. நமது மொழிகளோ அதிகாரமின்றித் தமது பிடிப்பை இழந்துகொண்டிருக்கின்றன. எந்தச் சந்தை அடிப்படைவாத சக்திகள் இயற்கையைக் கொன்று உயிர்ப்பன்மையை அழித்துக்கொண்டிருக்கின்றனவோ அதே சக்திகள்தான் மொழிப்பன்மையையும் சேர்த்து அழித்துக்கொண்டிருக்கின்றன. எந்த மதவாத சக்திகள், இந்தியாவின் பன்மத அடித்தளத்தை நிர்மூலமாக்குகின்றனவோ, அதே சக்திகள்தான் இந்தியாவின் பன்மொழி அடித்தளத்தையும் நிர்மூலமாக்குகின்றன.
மொழியுரிமைக்கான சென்னைப் பறைசாற்றம்தான் இந்த மாநாட்டின் மையமான நிகழ்வாக இருந்தது. சென்னைப் பறைசாற்றம் என்ன சொல்கிறது? அது முதலில் இந்தியாவில் பாதிப்பில் சிக்கியுள்ள மொழிகளை மூன்றாகப் பிரிக்கிறது.
முதலாவது, இந்திய அரசியல்சாசனத்தின் 8-ம் அட்டவணையில் பட்டியலிடப்பட்டிருக்கும் மொழிகள். இவற்றில் பல மொழிகள் மாநிலங்களில் ஆட்சிமொழியாக உள்ளன. பல ஆகாமலும் இருக்கின்றன. இந்த மொழிகளை மத்திய அரசின் ஆட்சிமொழிகளாக ஆக்க வேண்டும் என்பது முதல் கோரிக்கை.
இரண்டாம் வகை மொழிகள், 8-வது பட்டியலில் இடம்பெறுவதற்காக போராடிக்கொண்டிருப்பவை. முதல் வகை மொழிகளுக்குக் கொஞ்சமேனும் அதிகாரம் இருக்கிறது என்றால், இரண்டாம் வகை மொழிகளுக்கு அதுகூட இல்லை. எத்தனை மொழிகள் தங்களை 8-ம் அட்டவணையில் இணைக்க வேண்டும் என்று கோரியுள்ளன? மத்திய உள்துறை அமைச்சகமே அந்த பதிலைச் சொல்கிறது. 1.அங்கிகா, 2. பஞ்சாரா (லம்பாடி), 3. பாஸிகா, 4. போஜ்புரி, 5.போத்தி, 6.போதியா, 7.புந்தேல்கண்டி, 8.சத்தீஸ்கரி, 9.தக்தி, 10.ஆங்கிலம் 11.கார்வாலி 12.கோந்தி, 13. குஜ்ஜாரி, 14.ஹோ, 15.கச்சாச்கி 16.காமத்பூரி 17.கார்பி 18.காஷி 19.குடகு 20.கோக் பாராக் 21.குமோவானி 22.குராக் 23. குர்மாலி 24.லெப்சா 25. லிம்பு 26. மிசோ 27. மாகஹி 28.முண்டாரி, 29.நாக்பூரி 30.நிகோபாரி 31. இமாச்சலி 32.பாலி 33.ராஜஸ்தானி, 34. கோசலி, 35.செளரசேனி, 36.சிராய்கி, 37.தென்யிதி 38. துளு.
மேற்கண்ட பட்டியலில் உள்ள போஜ்புரி, அங்கிகா, புந்தேல்கண்டி, சத்தீஸ்கரி, கார்வாலி, லம்பாடி, குமோவானி, மாகஹி, இமாச்சலி, ராஜஸ்தானி, கோசலி போன்ற மொழிகளை இந்தியின் வட்டார வழக்குகள் என்று இந்திய அரசு சொல்கிறது. இல்லை என்று மறுக்கிறார்கள் இம்மொழிகளைப் பேசுபவர்கள். ஏற்கெனவே மைதிலி, தோக்ரி போன்ற மொழிகள் போராடி 8-ம் அட்டவணையில் இணைந்திருக்கின்றன. 8-ம் அட்டவணையில் இடம்பெறுவதால் அப்படி ஒன்றும் பயனில்லை என்று தெரிந்தும், தங்களுடைய அடையாளத்துக்காகவாவது அதில் இடம்பெற வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை. அது அரசியல் சாசன அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது. இம்மொழியினரின் கோரிக்கையை சென்னைப் பறைசாற்றம் ஏற்கிறது.
பரிதவிக்கும் மொழிகள்
மூன்றாவது வகையிலான மொழிகள் மிகவும் பரிதாபகரமானவை. 2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 122 பெரிய மொழிகளும் (10,000-க்கும் மேற்பட்டோர் பேசும் மொழிகள்) 1,599 சிறிய மொழிகளும் இருக்கின்றன. பாஷா ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டு மையம் வெளியிட்ட இந்தியாவின் மக்கள் மொழிக் கணக்கெடுப்பு, அதிர்ச்சிகரமான பல தகவல்களை வெளியிட்டிருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளில் 220 மொழிகள் வழக்கொழிந்துபோயிருக்கின்றன. இந்த மொழிகள் விடும் இறுதி மூச்சைக் கேட்க நீங்கள் நீலகிரிக்கும் மத்திய இந்திய காடுகளுக்கும் வடகிழக்கு மாநிலங்களுக்கும் இமயமலை அடிவாரங்களுக்கும் செல்ல வேண்டும். பெரிய மொழிகளைப் பேசுவோர் எப்போதும் சிறிய மொழிகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. வலியவன் வாழ்வான் என்கிற கோட்பாட்டின் அடிப்படையில் இம்மொழிகளின் மரணத்தை யாரும் பொருட்படுத்துவதில்லை. ஆனால் அந்தந்த மொழி பேசுவோரைப் பொறுத்தவரை அத்தகைய மரணங்கள் அந்த இனக்குழுவின் பேரூழி. இப்பூவுலகிலிருந்து ஓர் உயிரி அற்றுப்போவதும் ஒரு மொழி வழக்கொழிந்துபோவதும் ஒன்றேதான். இவ்வாறான அழிவின் விளம்பில் உள்ள மொழிகளுக்காகவும் சென்னைப் பறைசாற்றம் குரல் கொடுக்கிறது.
இதுவரை இந்தியாவில் கடைப்பிடிக்கப்பட்ட பேரரசுவாத மற்றும் காலனியவாத தன்மையுள்ள மொழிக்கொள்கை இனி நீடிக்க முடியாது என்பதை இந்த மாநாடு உணர்த்தியிருக்கிறது. அந்த அளவில் இந்த மாநாடு ஒரு வரலாற்று முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது. பல்வேறு மொழியினர் மாநாட்டிலும், மாநாட்டுக்கு வெளியே இணையப் பரப்பிலும் இணைந்து நின்ற காட்சி, ஒரு நிலைமாறு புள்ளியாகக் கருதப்படக் கூடியது. இது காலத்தினால் ஏற்பட்ட நல்வினை. பிரிவினை அல்ல, கூட்டுவினை!
- ஆழி.செந்தில்நாதன்,
தமிழ் மொழியுரிமைக் கூட்டியகத்தின் ஒருங்கிணைப்பாளர்.
தொடர்புக்கு; mozhiurimai2015@gmail.com

Modi speech about Technology

சிலிகான் வேலியில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், ஒரு வரியில் எல்லோரும் கவரும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பம் பற்றி பல கருத்துகளை தெரிவித்தார். அதைக் கேட்டு பிரபல நிறுவன தலைமை செயல் அதிகாரிகள் (சிஇஓ) ஆச்சரியம் அடைந்தனர்.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி சிலிக்கான் வேலியில் நேற்று நடந்த டிஜிட்டல் இந்தியா கூட்டத்தில் பேசினார். கூகுள், மைக்ரோசாப்ட், சிஸ்கோ உட்பட பல முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த தலைமை செயல் அதிகாரிகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

அவர்கள் மத்தியில் மோடி பேசுகையில், டிஜிட்டல் தொழில்நுட்ப புரட்சி பற்றியும் அதன் பயன்கள் குறித்தும் பல கருத்துகளை ஒரு ஒரு வரியாக எல்லோரையும் கவரும் வகையில் குறிப்பிட்டார். அதன் விவரம் வருமாறு: 

* உலகில் ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையையும் மாற்றியுள்ளது சிலிகான் வேலி. 

* உங்களில் பலரை டெல்லி, நியூயார்க், முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் சந்தித்துள்ளேன்.

* முகநூல் உட்பட இவைதான் நமது உலகின் அண்டை வீட்டாராக உள்ளன.

* முகநூல் மட்டும் ஒரு நாடாக இருந்திருந்தால், அதுதான் மக்கள் தொகை அதிகம் கொண்ட 3-வது நாடாக இருந்திருக்கும். 

* கூகுள் ஆசிரியர்களை குறைத்துவிட்டது. மிகவும் விரும்பப்படுவதாக உள்ளது.

* ட்விட்டர் எல்லோரையும் நிருபர்களாக்கி உள்ளது.

* போக்குவரத்து விளக்குகள் வேலை செய்ய சிஸ்கோவின் ரவுட்டர்கள்தான் சிறந்தவை.

* நீங்கள் விழித்திருக்கிறீர்களா, தூங்குகிறீர்களா என்பது இப்போது முக்கியமில்லை. 

* நீங்கள் ஆன்லைனில் இருக்கிறீர்களா ஆப் லைனில் இருக்கிறீர்களா என்பது முக்கியம்.

* நமது இளைஞர்களின் விவாதம் எல்லாம் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் அல்லது விண்டோஸ் பற்றியதாகவே உள்ளது.

* இவை எல்லாம் சிலிகான் வேலியில் உள்ள உங்களால்தான் சாத்தியமாகி இருக்கின்றன.

இவ்வாறு மோடி பேசினார். 

அவர் ஒவ்வொரு வரிகளாக சொல்லச் சொல்ல, பிரபல நிறுவனங்களின் அதிகாரிகள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தன்னுடைய சொந்த வாழ்க்கையை உதாரணமாகக் கூறி, இந்தியாவில் உள்ள கிராம பெண்கள்கூட இப்போது தொழில்நுட்பத்தைப் பற்றி தெரிந்து வைத்துள்ளனர் என்று மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.

மோடி மேலும் பேசுகையில் கூறியதாவது:

நீண்ட பயணம் செய்யாமல், சாகசம் செய்யாமல், சிறிய தீவில் உள்ளவர்களைக் கூட தொடர்பு கொள்ள டிஜிட்டல் தொழில்நுட்பம் உதவி உள்ளது. ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு செல்போன் மூலம் பணத்தை வேறு ஒருவர் கணக்குக்கு மாற்ற முடிகிறது. 

இந்தியாவில் குக்கிராமத்தில் உள்ள ஒரு தாய், தனக்கு பிறந்த குழந்தையை எளிதில் காப்பாற்ற முடிகிறது. குக்கிராமத்தில் உள்ள குழந்தை நல்ல கல்வியை பெற முடிகிறது. இவை எல்லாமே டிஜிட்டல் புரட்சியால்தான்.

சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஒருவர், இந்தியாவில் உடல்நலம் இல்லாமல் உள்ள தனது பாட்டியுடன் தினமும் ஸ்கைப் மூலம் பேசி ஆறுதல் சொல்கிறார். விவசாயிகள் தங்கள் நிலத்தின் மதிப்பை அறிந்துகொள்ள முடிகிறது, மீனவர்கள் அதிக மீன்களைப் பிடிக்க முடிகிறது. ‘செல்பி வித் டாட்டர்’ என்ற தலைப்பில் தனது மகளுடன் புகைப்படம் எடுத்து ஹரியாணாவைச் சேர்ந்த தந்தை வெளியிடுகிறார். அதன் மூலம் அனைவரின் கவனத்தையும் கவர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிகிறது.

இவை எல்லாமே சிலிகான் வேலியில் இருந்து கொண்டு நீங்கள் செய்யும் டிஜிட்டல் புரட்சியால்தான்.

இவ்வாறு மோடி பேசினார்.மோடியின் பேச்சைக் கேட்ட பிரபல நிறுவன அதிகாரிகள் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.

வியாழன், 24 செப்டம்பர், 2015

Electronics Sites

Scribd

https://www.scribd.com/doc/261967632/Eric-Bogatin-Signal-and-Power-Integrity-simplified-pdf

http://www.eevblog.com/wiki/index.php?title=Electronics_Books

http://www.epemag3.com/

http://www.elektor.com/projects/pcbs

http://circuitcellar.com/

http://www.siliconchip.com.au/

http://www.nutsvolts.com/

http://www.elv.de/journal-startseite-journal.html

புதன், 23 செப்டம்பர், 2015

பிரமிக்க வைக்கும் ஆகாயம்: கேமரா கவிதை

http://tamil.thehindu.com/bbc-tamil/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/article7678390.ece

2015ஆம் ஆண்டின், விண்வெளி தொடர்பாக எடுக்கப்பட்ட சிறந்த புகைப்படங்களை தேர்வுசெய்யும் போட்டிக்கு வந்த சில புகைப்படங்கள் மெய்மறக்க வைக்கின்றன.

2015ஆம் ஆண்டின், விண்வெளி தொடர்பாக எடுக்கப்பட்ட சிறந்த புகைப்படங்களை தேர்வுசெய்யும் போட்டிக்கு வந்த சில புகைப்படங்கள் மெய்மறக்க வைத்தன.
Insight Astronomy Photographer of the Year என்ற பெயரில் இந்தப் போட்டி நடத்தப்பட்டது.
க்ரீனிச்சில் இருக்கும் ராயல் ஆப்சர்வேட்டரியின் சிறந்த புகைப்படங்களைத் தேர்வுசெய்யும் பணி நடந்தது.
இந்தப் புகைப்படங்களை க்ரீனிச் ராயல் ஆப்சர்வேட்டரியில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை பார்வையிடலாம்