ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

மது

மது அருந்துவது பாவம், அது ஒரு குற்றச்செயல், அது அருவருக்கத் தக்கது, மது உயிருக்குக் கேடு இவற்றை எல்லாம் மாணவர்களிடையே சில நிமிடங்களாவது போதியுங்கள். யோகா உட்பட எவ்வளவோ விஷயங்களைப் பாடத்திட்டங்களாக வைக்கும் அரசுகள் இதையும் ஒரு பாடமாக வைக்க முன் வர வேண்டும். அந்தப் பாடத்தில் மதுவால் ஏற்படும் உடல், மன, குடும்ப, சமூக, பொருளாதார நலக் கேடுகளை அறிவியல்பூர்வமாக விளக்க வேண்டும். பாடங்களுக்கு அப்பாற்பட்டும் இதுபோன்ற விஷயங்களை விவாதத்துக்கு உட்படுத்தும் களங்களைப் பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டும்.
பெரியவர்களாகிய நம்மைவிடப் பெரும் மாற்றங்களை மலரச் செய்யும் வல்லமையைப் பெற்றவர்கள் குழந்தைகள். ஆண்டிபட்டி அருகே பொம்மநாயக்கன்பட்டி கிராமத்தில் கொல்லப்படவிருந்த ஒரு பெண் சிசுவைக் காப்பாற்ற கெஞ்சிக் கூத்தாடி, அடிவாங்கி, கடைசியாக அந்தக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஓடிவிட்டான் சிறுவன் கணேசபெருமாள். இரவெல்லாம் எங்கேயோ வைத்து அந்தப் பிஞ்சை பொத்திக் காத்தவன், விடிந்ததும் தனது பள்ளி ஆசிரியரையும் காவல் துறையினரையும் வரவழைத்து, குழந்தையைக் காப்பாற்றினான். அந்த ஒரு குழந்தையை மட்டுமல்ல, பொம்மநாயக்கன்பட்டியில் இன்று நூற்றுக்கணக்கில் பெண் குழந்தைகள் விளையாடுகின்றன என்றால், காரணம் அந்த மாணவன் செய்த மகத்துவம். ஒடிசாவில் மனித உரிமைக் கல்வித் திட்டத்தின் கீழ் மாணவர்கள் வீதிகள் தோறும் மது ஒழிப்புப் பிரச்சாரம் செய்கிறார்கள். ராஜஸ்தானில் குழந்தைத் திருமணங்களை நிறுத்தியிருக்கிறார்கள் மாணவர்கள். தென் தமிழகத்தில் ‘குழந்தைகள் பாராளுமன்றம்’ மூலம் எத்தனையோ நல்ல காரியங்கள் நடந்திருக்கின்றன. தமிழகத்தில் குன்னூர் - பெட்டட்டி கிராமத்திலும், தர்மபுரி - பேபினமருதஹள்ளி கிராமத்திலும் மது ஒழிப்புப் பிரச்சாரத்தைத் தீவிரமாகச் செய்கிறார்கள் பள்ளிக் குழந்தைகள். பேபினமருதஹள்ளி கிராமத்தில் 100 % மது ஒழிப்பைச் சாத்தியமாக்கியிருக்கிறார்கள் குழந்தைகள். வாருங்கள், மதுவை முளையிலேயே கிள்ளி எறிவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக