கணிதத்தில் சாதனைகள் செய்பவர் களுக்கு நோபல் பரிசு வழங்கப் படுவதில்லை. நூறாண்டுகளுக்கு முன்னால் கணிதத்துக்கு தரப்பட்ட முக்கியத்துவம் அவ்வளவுதான்.
ஆனால், இன்று கணிதத்தின் துணையில்லாமல் எந்த அறிவியல் பிரிவிலும் பெரிய சாதனைகளை புரிய முடியாது. எனவே, கணிதத்துக்குக் கட்டாயம் நோபல் பரிசு வழங்கலாம் என்ற கருத்து இருந்தாலும், அதற்கான சந்தர்ப்பம் இன்னும் அமையவில்லை.
கணிதத்தின் நோபெல்
இதனால், கணித மேதைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்ற குறை ஏற்பட்டது. இதனைப் போக்க நோபல் பரிசுக்கு இணையாக உருவானதுதான் ஏபல் பரிசு. 2003 முதல் ஆண்டு தோறும் மே மாதத்தில் இது வழங்கப்படுகிறது.
நார்வே நாட்டின் தலைசிறந்த கணித மேதையாகக் கருதப் படுபவர் நீல்ஸ் ஹென்றிக் ஏபல்(1802 1829). வறுமையில் வாடியபோதும் கணிதத்தில் அற்புதமான படைப்புகளை வழங்கினார். 27- வயதிலேயே வறுமையாலும் நோயாலும் இறந்துவிட்டார். இவரது சிந்தனைகள் கணிதத்தின் நவீன வளர்ச்சிக்கு உதவின.
நார்வே நாட்டு அரசு இவரைப் போற்றும் வகையில், அவரது 200- வது பிறந்த வருடமான 2002-ல் ஏபல் நினைவு நிதியை உருவாக்கியது. தற்சமயம் இந்த நிதித் தொகை நார்வே நாட்டின் கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. சமூகத்தில் கணிதத்தின் தரத்தை மேம்படுத்தவும், இளைஞர்களை கணித ஆய்வுக்கு ஊக்குவிக்கவும் இது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டையும் பெற்றவர்
முதல் ஏபல் பரிசு 2003-ம் ஆண்டில் பிரெஞ்சு கணித வல்லுநரான ஜான் பேரே சேரே என்பவருக்கு நார்வே நாட்டு மன்னரால் வழங்கப்பட்டது.
2015-ம் ஆண்டுக்கான ஏபல் பரிசு, ஜான் நேஷ் மற்றும் லூயிஸ் நிரன்பெர்க் ஆகிய இரு கணித அறிஞர்களுக்கும் மே மாதம் 19 ஆம் தேதி வழங்கப்பட்டது. இந்த விருதுக்கான பரிசுத் தொகை சுமார் 5 கோடி ரூபாய்.
ஓர் வரிசைக்கு மேலுள்ள பகுதி வகைக்கெழுச் சமன்பாடுகளின் இயலை உருவாக்கியதற்காகவும், அதனை இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் பல்வேறு அறிவியல் துறைகளில் செம்மையாகப் பயன்படுத்தியதற்கும் இவ்விருவருக்கும் 2015-ம் ஆண்டுக்கான ஏபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
ஜான் நேஷ் ‘Game Theory’ என்ற கணித உட்பிரிவில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்திய ‘நேஷ் சமநிலை’ என்ற கோட்பாட்டுக்கு 1994 -ம் ஆண்டில் நோபல் பரிசை பொருளாதாரத் துறையில் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, நோபல் பரிசு மற்றும் ஏபல் பரிசு ஆகிய இரு தலைசிறந்த பரிசுகளையும் வென்ற ஒரே நபராக விளங்குகிறார் நேஷ்.
இவரது வாழ்வை மையமாக வைத்து ‘A Beautiful Mind’ என்ற ஆங்கிலத் திரைப்படம் வெளிவந்தது. 2001-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படம் உள்ளிட்ட நான்கு ஆஸ்கார் விருதுகளை இது தட்டிச் சென்றது.
இப்பரிசை வென்று அமெரிக்காவில் தனது இல்லத்துக்கு ஜான் நேஷ் செல்லும்போது விபத்தில் சிக்கி இவரும் இவரது மனைவி அலிசியாவும் அந்த இடத்திலேயே உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது.
நோபல் பரிசுக்கு இணையான ஏபல் பரிசை இந்தியாவில் (சென்னையில்) வாழ்ந்து தற்சமயம் அமெரிக்காவில் குடியேறிய திரு. சீனிவாச வரதன் என்ற கணித வல்லுநர் 2007- ல் பெற்றார்.
மேலும் விவரங்களுக்கு www.abelprize.no என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.
http://tamil.thehindu.com/general/education/கணிதத்துக்கான-நோபல்-பரிசு/article7603180.ece?widget-art=four-all
தொடர்புக்கு: piemathematicians@yahoo.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக