புதன், 23 செப்டம்பர், 2015

மனதின் ஆழத்தை அளந்தவர்!

“பனிப்பாறை போன்றது மனம். ஏழில் ஒரு பங்கு மட்டுமே தண்ணீருக்கு மேலே மிதக்கும்” எனும் சுவாரஸ்யமான ஒப்புமையால் மனதின் ஆழத்தை விளக்கியவர் சிக்மண்ட் பிராய்ட்.
ஆஸ்திரியாவைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான இவர்தான் முதன்முதலில் மனிதர்களின் பல்வேறு செயல்பாடுகளுக்கு முக்கியக் காரணம் மனம்தான் என அறிவியல்பூர்வமாக நிரூபித்தார்.
இயல்பாக இருக்கும் ஒருவர் திடீரென விசித்திரமாக நடந்துகொள்ளக் காரணம் பேய், பிசாசு போன்ற அமானுஷ்யச் சக்திகள் அல்ல; ஆழ்மனதில் ஏற்படும் பாதிப்புகளே என விளக்கினார். ‘இட்’, ‘ஈகோ’, ‘சூப்பர் ஈகோ’ எனும் மூன்று அடுக்குகள் உள்ளன. மற்ற உடல் உறுப்புகள்போல இவற்றுக்கு உருவம் கிடையாது. ஆனால் இவைதான் நம்மைத் தொடர்ந்து வழிநடத்துகின்றன என்றார்.
விழிப்பு நிலைபோலவே தூக்கத்திலும் மனம் மிக உற்சாகமாகச் செயல்படும். அப்போது ஆழ்மனதில் அடக்கிவைத்திருந்த விஷயங்களைக் கிளறி எடுக்கும். அப்படிப்பட்ட உள்மனதின் வெளிப்பாடுகளே கனவு என ’கனவுகளின் விளக்கம்’ புத்தகத்தில் எடுத்துரைத்தார். நவீன மனநல மருத்துவத்தின் தந்தை எனப் போற்றப்படும் பிராய்ட் தனது 83-வது வயதில் 1939 செப்டம்பர் 23-ல் மரணமடைந்தார்.
-சரித்திரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக