செங்கோட்டையிலிருந்து செங்கோளை (செவ்வாய்) அடைந்ததன் மூலம் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் அசாத்தியமான சாதனை செய்திருக்கிறது. அந்தத் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி முதலான ஆதாரங்களை வைத்துப் பார்க்கும்போது நிச்சயம் இது சாதனைதான்.
இதை விட அதிகமாக இந்திய அறிவியலாளர்களால் சாதிக்க முடியுமா? நிச்சயமாக; ஆனாலும் கடந்த 60 ஆண்டு கால இந்திய அறிவியலாளர்களின் செயல்பாடுகளை பெரும் தோல்விகளாகச் சித்தரிப்பது அநீதியானது. இந்தியா தனக்கே உரிய ஆராய்ச்சி, மேம்பாடு வழிமுறைகளைக் கொண்டது.
அவற்றின் பலன்கள் குடிமக்கள் அனைவரையும் சென்றடைந்திருக்கின்றன, நம் தேசத்தை வாழ்வதற்கேற்ற ஒரு இடமாக மாற்றியமைத்திருக்கின்றன. பூமியில் வாழ்பவர்களில் ஆறில் ஒருவர் இந்தியர் என்பதைக் கொண்டு பார்க்கும்போது இந்த எண்ணிக்கையிலான மக்களின் தேவைகளை இந்திய அறிவியல் பூர்த்திசெய்யும் என்றால் அது மனித குலத்துக்கே செய்யும் பெரும் சேவையன்றோ?
பழக்கூடை
சுதந்திரம் அடைந்தபோது இந்தியா என்பது பல்வேறு சமஸ்தானங்கள், நிஜாம்களின் பழக்கூடையாகத்தான் இருந்தது. அப்படிப்பட்ட நாட்டை இந்த 60 ஆண்டுகளில் இந்திய மூளைகள் உலகம் பொருட்படுத்தியாக வேண்டிய ஒரு சக்தியாக மாற்றியிருக்கின்றன. உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திருப்பதும், 121 கோடி வயிறுகளுக்கு உணவு அளித்திருப்பதும் இந்திய வேளாண் அறிவியலாளர்களின் சாதனையே தவிர ஏசி அறைகளுக்குள் உட்கார்ந்து கணினி விசைப்பொறிகளைத் தட்டிக்கொண்டிருக்கும் தொழில்நுட்ப ஜாம்பவான்களின் சாதனை அல்ல.
வெறுமனே இந்திய உழைப்பை அவுட்சோர்ஸிங் விட்டதன் மூலமாக ஒன்றும் நாம் உலகின் மருந்துக்கடையாக ஆகிவிடவில்லை. உலகிலேயே மிகவும் குறைந்த செலவில் கிரகம் விட்டுக் கிரகம் செல்லும் செயற்கைக்கோளை செவ்வாய் கிரகத்துக்கு நாம் அனுப்பியிருக்கிறோம் என்பது நம் விஞ்ஞானிகளின் உழைப்பன்றி வேறு எதன் அடையாளம்? உலகின் தகவல் தொழில்நுட்பத் தலைநகராக பெங்களூரு விளங்குகிறதென்றால் அங்குள்ள ‘இந்திய அறிவியல் நிறுவனம்’ (ஐஐஎஸ்சி) போன்ற நிறுவனங்களெல்லாம் அறிவையும் திறனையும் வளர்த்ததுதான் காரணம்.
நாராயணமூர்த்தியின் குற்றச்சாட்டு
இன்ஃபோஸிஸ் நிறுவனர் சமீபத்தில் இந்தியாவின் உயர் நிறுவனங்களின் பங்களிப்புகளைக் கேள்வி கேட்டு சாட்டையடி அடித்திருக்கிறார். “இவையெல்லாம் நம் சமூகத்தையும் உலகத்தையும் மேம்படுத்துவதற்கு என்னதான் செய்திருக்கின்றன? இந்தியக் கண்டுபிடிப்பு என்று சொல்லக்கூடிய ஏதாவது ஒன்று இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையின் பகுதியாக ஆகியிருக்கிறதா?” என்றெல்லாம் கேட்டிருக்கிறார். மேலோட்டமாகப் பார்த்தால் இந்தக் கேள்விகள் சரி என்று தோன்றக்கூடும். உண்மையில் இந்தக் கேள்விகள் ஆழமற்றவையே, இந்திய அறிவியல் துறை மீது புரிதல் இல்லாதவையே.
நாராயண மூர்த்தியின் குற்றச்சாட்டை மறுத்துப் பேசும் பாரத ரத்னா சி.என்.ஆர். ராவ் இந்திய அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் மேம்பாட்டுத் துறையில் தகவல் தொழில்நுட்பத் துறையினர் முதலீடு எதையும் செய்யாததைச் சுட்டிக்காட்டிக் குற்றம் சாட்டுகிறார். மூன்றில் இரண்டு பங்கு முதலீடு அரசிடமிருந்துதான் வருகிறது என்கிறார் அவர்.
உலகை இயக்கும் எலி
அரை நூற்றாண்டுக்கு முன்புதான் இந்தியா உணவுப் பற்றாக்குறையால் பீடிக்கப்பட்டிருந்தது; கோதுமை போன்ற தானியங்கள் அமெரிக்காவிலிருந்து கோடிக் கணக்கான டன்கள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டன. இந்தியா சிதைந்துகொண்டிருக்கிறது என்றெல்லாம் சொன்னார்கள்.
இன்ஃபோசிஸ் நிறுவனம் பிறந்த 1981-ல்தான் இந்தியா தனது 68.3 கோடி மக்களுக்காக 12.9 கோடி டன்கள் உணவுத் தானியங்களை உற்பத்தி செய்தது. 2014-ல் 121 கோடி மக்களுக்காக 26.3 கோடி உணவு தானியங்களை இந்தியா உற்பத்தி செய்திருக்கிறது. 35 வருடங்களில் இரண்டு மடங்கு உற்பத்தி! கடுமையாக உழைத்த வேளாண் விஞ்ஞானிகளும், அவர்களை நம்பிய விவசாயிகளும் இல்லையென்றால் இதெல்லாம் சாத்தியமாகியிருக்குமா?
இறக்குமதியாளர் இந்தியா இப்போது ஏற்றுமதியாளர் இந்தியாவாக ஆகியிருக்கிறது. உலகின் மிகப் பெரிய மூன்றாவது பொருளாதாரத்தைத் தற்போது கொண்டிருக்கும் இந்தியா ‘பாம்பாட்டிகளின் தேசம்’ என்ற நிலையிலிருந்து ‘உலகை இயக்கும் எலியின் (மவுஸ்)’ தேசமாக ஆகியிருக்கிறது.
இந்தியாவும் சீனாவும்
இதனாலெல்லாம் இந்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறை சரியாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்று சொல்லிவிட முடியாதுதான். இவ்வளவு பெரிய நாடாக இருந்தாலும் தொடர்ந்து குறைந்த அளவு நிதியாதாரம், குறைவான பணியாளர்கள் போன்றவை பெரும் பிரச்சினைகளாகத் தொடர்கின்றன. இந்திய அறிவியல் துறையில் 2 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். 10 ஆயிரம் மக்களுக்கு 4 ஆராய்ச்சியாளர்கள் என்பது இந்தியாவின் விகிதம்.
இதுவே அமெரிக்காவில் 79, சீனத்தில் 18. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறைக்காக 0.9% மட்டுமே ஒதுக்குகிறது. சீனாவோ 2% ஒதுக்குகிறது. ‘பலவீனமான அறிவியல் தொழில் சூழல், தரமான பல்கலைக்கழகங்கள் குறைவாக இருப்பது, வலுவற்ற உற்பத்தித் துறை, வேரூன்றியிருக்கும் சிவப்பு நாடா பிரச்சினை’ போன்றவற்றால் இந்திய அறிவியல் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக ‘நேச்சர்’ இதழ் 14-05-2015 அன்று தலையங்கம் தீட்டியிருக்கிறது.
2013-ல் பத்து லட்சம் பேருக்கு 17 என்ற வீதத்தில்தான் இந்தியா காப்புரிமைகளைப் பெற்றிருக்கிறது. சீனா- 541, தென்கொரியா - 4,451 என்ற வீதத்தில் காப்புரிமைகள் பெற்றிருக்கின்றன. இதையெல்லாம் இந்தியாவுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
படைப்புத் திறன்
உலக சுகாதார நிறுவனத்தின் கணிப்பின்படி உலக அளவில் மூன்றில் ஒரு குழந்தைக்குப் போடப்படுவது இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டிருக்கும் தடுப்பூசி மருந்தே. எப்போதும் வெளிநாட்டுத் தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்துகொண்டிருக்கும் ஒரு தேசத்தைப் பொறுத்தவரை இது ஒன்றும் சாதாரணமான சாதனையல்ல.
தொழில்நுட்பத்துக்குச் செலவு செய்வதில் இந்தியா கஞ்சத்தனம் காட்டிவருவது உண்மைதான்; அதற்காக, தரம் குறைந்த தொழில்நுட்பத்தைப் பின்பற்றுகிறது என்பதல்ல அர்த்தம். மங்கள்யான் வெற்றிக்குப் பிறகு இந்திய விண்வெளிக் கழகத்துடன் சேர்ந்து பணியாற்ற நாஸாவே முன்வருவது குறிப்பிடத்தக்கது. ‘கிராவிட்டி’ என்ற ஹாலிவுட் படத்துக்கு ஆன செலவை விட மங்கள்யான் அனுப்புவதற்குச் செலவு குறைவாக ஆகியிருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.
நிலவுக்கு இந்தியா அனுப்பிய முதல் செயற்கைக்கோளான சந்திராயன் - 1 மட்டும் சாதாரண விஷயமா? நிலவில் நீரின் மூலக் கூறுகளை அது கண்டுபிடித்திருப்பதை நினைவில் கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக உலகத்துக்கு பூஜ்யம் எனும் கணித சாதனையை அளித்தவர்கள் இந்தியர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். அந்தப் பங்களிப்புக் கெல்லாம் பண மதிப்பு இட முடியுமா? லாபக் கணக்கின் அடிப்படையில் படைப்புத் திறன் செயல்படுவதில்லை.
இந்திய தேசிய அறிவியல் அகடமியின் தலைவர் ராகவேந்திரா கடக்கர், நாராயண மூர்த்திக்கு இப்படி பதிலளித்திருக்கிறார்: “நாராயண மூர்த்தி சொல்வது முற்றிலும் தவறு. எனினும் அவரை மறுத்துப் பேச நான் முயற்சிக்கப்போவதில்லை. நாம் இன்னும் நன்றாகப் பணிபுரிய வேண்டும் என்ற நோக்கத்தில் தந்தை ஸ்தானத்தில் உள்ள ஒருவர் இடித்துக்காட்டியதுபோல் எடுத்துக்கொள்ளவே நான் விரும்புகிறேன்.” இருப்பதைக் கொண்டு உயரத்தை எட்டுதல் என்பது இந்தியர்களின் மரபணுக்களில் உள்ள விசேஷமான பண்பு. இந்தியர்களின் அந்தப் படைப்பாற்றல் சாத்தியத்தைப் போற்றும் தருணத்தில் அந்த ஊக்கத்தையும் உற்சாகத்தையும் நாம் கொன்றுவிடக் கூடாது.
- புகழ் பெற்ற அறிவியல் எழுத்தாளர்
© ‘தி இந்து’ (ஆங்கிலம்), சுருக்கமாகத் தமிழில்: ஆசை