http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article7677936.ece?widget-art=four-rel
http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-2-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/article7607491.ece?widget-art=four-rel
http://denadschool.blogspot.in/
http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-1-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/article7586644.ece
http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/article7637042.ece?widget-art=four-rel
http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/article7637042.ece?widget-art=four-rel
தன் மாணவர்களுடன் ஆசிரியை விஜயலட்சுமி
எல்லாமே அரசாங்கம் குடுக்கும்; குடுக்கணும்னு எதிர்பார்க்கறதில்லை. நம்மளால என்ன முடியுதோ அதை செஞ்சாவே போதும்.
விஜயலட்சுமி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளியின் ஆரம்பப்பள்ளி ஒன்றில் படித்து, அங்கேயே உதவி ஆசிரியராகி, தலைமை ஆசிரியராகவும் ஆனவர். அதே ஆரம்பப் பள்ளியை, தமிழ்நாட்டின் மாதிரிப்பள்ளியாக மாற்றியிருப்பவர். 2010-ம் ஆண்டில் மாநிலத்திலேயே சிறந்த பள்ளிக்கான விருது, பள்ளிக்கல்வித் துறையின் காமராசர் விருது, மாவட்ட அளவிலான சிறந்த பள்ளிக்கான இந்தியச் சுடர் விருது மற்றும் பல விருதுகள் பள்ளிக்கு வந்து சேரக் காரணமாக இருந்தவர்.
அவரின் ஆசிரியப் பயணம்...
"நான் இப்போது வேலை பார்க்கும் பள்ளியில்தான் என் ஆரம்பக்கல்வியைப் படித்தேன். நல்ல விஷயங்களை மற்றவர்களுக்குப் பரப்பி, நாமும் முன்னேறித் தனித்துவமாக இருக்க ஆசிரியப்பணிதான் சிறந்தது என்பதை உணர்ந்து ஆசிரியப் பயிற்சியில் சேர்ந்தேன். ஊத்துக்குளிக்கு அருகில் உள்ள தேனீஸ்வரன்பாளையம் என்னும் கிராமத்தில் வேலைக்கு சேர்ந்தேன். ஒரு வருடம் கழித்து, நான் படித்த ஊத்துக்குளி ஆரம்பப்பள்ளிக்கே மாற்றல் கிடைத்தது.
எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள், அங்கேயே வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருபக்கம் சந்தோஷம்; மறுபக்கம் பயம். துணிந்து வேலைக்குச் சென்றேன். எனக்குத் தலைமை ஆசிரியராக இருந்தவரே அப்போதும் தலைமை ஆசிரியராய் இருந்தார். நான் படிக்கும்போது இருந்த 12 ஆசிரியர்களே அப்போதும் அங்கு வேலை பார்க்க, 13-ம் ஆளாய் நானும் வேலை பார்க்கத் தொடங்கினேன். முதல் மாதம் சம்பளம் வந்தவுடனே. தலைமை ஆசிரியர் என்னை அழைத்தார். ''என்கிட்டயே படிச்சு, என்கிட்டயே அடிவாங்கி, கடைசியில என்கிட்டயே சம்பளமும் வாங்கற; ரொம்ப சந்தோஷம்'' என்று மகிழ்ந்த கணம் இன்னும் என் நினைவடுக்கில் பத்திரமாய் இருக்கிறது.
படித்த பள்ளிக்கே தலைமை ஆசிரியர்
உதவி ஆசிரியராக அதே பள்ளியில் என்னுடைய பத்து வருடங்கள் கழிந்தன. எங்களின் தலைமை ஆசிரியர் ஓய்வு பெற, மற்றொரு தலைமை ஆசிரியர் பொறுப்பேற்றுக் கொண்டார். வந்த கொஞ்ச நாட்களிலேயே அவருக்கு உடல்நலமில்லாமல் போனது. அதற்கடுத்த தலைமை ஆசிரியரின் பெயர்ப் பட்டியலில் நான் இருக்க, தலைமை ஆசிரியை பதவி கிடைத்தது. கடிதம் வந்த அடுத்த நாளில் இருந்து அரையாண்டு விடுமுறை விடப்பட்டிருந்தது.
நான் படித்த பள்ளிக்கே தலைமை ஆசிரியர் ஆகியிருக்கிறேன். இந்தப்பள்ளியில் எனக்குக் கிடைத்த வசதிகளைவிடப் பலமடங்கு உயர்வாய் என் மாணவர்களுக்குச் செய்ய வேண்டும் என்று உறுதி பூண்டேன். ஒன்றாக வேலை பார்க்கும் மற்ற ஆசிரியர்களுக்கு எவ்விதமான தாழ்வு மனப்பான்மையும் வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் இரண்டு மாதங்கள் தலைமை ஆசிரியர் நாற்காலியிலேயே உட்காரவில்லை" என்கிறார்.
எல்லா ஆசிரியர்களும் தனக்குச் சகோதர, சகோதரி, நண்பர்கள்தான் என்பதை உணர்த்திவிட்டுத்தான் தலைமை ஆசிரியர் அறைக்குள்ளேயே நுழைந்திருக்கிறார். அறையைச் சுத்தம் செய்யும்போது, அவருக்கு ஆங்கிலேயே அதிகாரிகள் கையெழுத்திட்ட பள்ளி அனுமதி அட்டை கைக்குக் கிடைத்திருக்கிறது. 1906-ம் ஆண்டு அந்தப்பள்ளி தொடங்கப்பட்டிருக்கிறது. அப்போது 2005-ம் ஆண்டு. நூற்றாண்டு விழாக் கொண்டாட வேண்டிய நேரத்தில் இருப்பதைப் புரிந்து கொண்டார்.
பள்ளி நூற்றாண்டு விழா
எல்லோருமாக ஒன்றுசேர்ந்து பழைய ஆவணங்களையெல்லாம் ஒன்று திரட்டி, திருப்பூர், ஈரோடு, கோவை என பரவிக்கிடந்த முன்னாள் மாணவர்களைச் சந்தித்து, நன்கொடை பெற்றனர். கிடைத்த பணத்தைக் கொண்டு பள்ளிக்கு இரண்டு கட்டிடங்களைக் கட்டிவிட்டு, பொதுமக்களோடு சேர்ந்து நூற்றாண்டு விழாவைக் கொண்டாடினர். அப்போது ஈரோடு மாவட்டத்தில் இருந்த ஒரேயொரு தனியார் பள்ளியின் தரத்துக்கு இணையாக தங்கள் ஆரம்பப்பள்ளியையும் கொண்டு வரும் ஆசையை மற்ற ஆசிரியர்கள் மனதிலும் விதைத்தார்.
"நிதிவசூல் அனைத்தையும் வெளிப்படையாகவே மேற்கொண்டோம். பள்ளியின் புறக்கட்டுமானம், கல்வி மற்றும் கலை இலக்கிய செயல்பாடுகள் அனைத்தும் பொதுமக்கள் பார்வையில் படுமாறு பார்த்துக்கொண்டோம். இதன் மூலம், பொதுமக்களுக்கு, தங்கள் குழந்தைகளை எங்கள் பள்ளியில் கொண்டு வந்து சேர்க்கும் தன்னம்பிக்கையும், பண உதவி தேவைப்படும்போது தயங்காமல் கொடுக்கும் எண்ணமும் வரும் என்று யோசித்தோம்.
பள்ளிக்கு நிதி வேண்டி, சும்மா கொண்டுபோய் நோட்டீஸ் கொடுத்தால், தூக்கிப் போட்டுவிடுவார்கள் என்று யோசித்து, நோட்டீஸ் கொடுப்பதற்கு முன்னர், ஒலிபெருக்கி வைத்து விளம்பரம் செய்தோம். பின்னர் நோட்டீஸ்களைக் கொடுக்கத் தொடங்கினோம். 4 மணிக்குப் பள்ளி முடிந்ததும் இரவு 10 மணி வரை எல்லா ஆசிரியர்களும் வீடு வீடாகச் சென்று பேசியதில், 25 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. அந்த காலகட்டத்தில் மிகப்பெரிய தொகை அது. இதற்கு முன்னால் பலமுறை கேட்டும் உதவாத பலரும், அவர்களாகவே முன்வந்து, 'நாங்க என்ன செய்யணும், சொல்லுங்க!' என்றார்கள்.
புரவலர் திட்டத்தின் மூலம், ஆளுக்கு 1000 ரூபாய் வீதத்தில் 50,000 ரூபாயை சேகரித்தோம். கிடைத்த பணத்தை வைத்து, பள்ளி வகுப்புகளில் சுவரோவியங்களை வரைந்தோம். அவை வெறும் ஓவியமாக மட்டுமில்லாமல் படிக்கவும், அதைப்பார்த்து எழுதவும் வசதி கொண்ட தகவல்களாக இருக்குமாறு பார்த்துக் கொண்டோம். அதுபோக கேரம், செஸ், பரமபதம், ஸ்கேட்டிங் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
அசத்திய அறிவியல் கண்காட்சி
2014-ம் ஆண்டில் சென்னிமலையில் உள்ள நாச்சிமுத்து பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. அதில் மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்சி பள்ளிகளோடு சேர்ந்து மொத்தம் 243 பள்ளிகள் கலந்து கொண்டன. அதில் கலந்து கொண்ட மற்றும் பரிசு பெற்ற ஒரே அரசு, ஆரம்பப்பள்ளி நாங்கள்தான். எங்கள் பள்ளியின் ஒவ்வொரு மாணவர்களும் ஒவ்வொரு விதமாக அழகாக, தங்கள் செயல்முறை திட்டங்களை விளக்கினர். அந்த நிகழ்வுக்குப் பிறகு, பக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்த தனியார் பள்ளியில் இருந்து 18 குழந்தைகள் ஒன்றாக ஒரே நேரத்தில் வந்து எங்கள் பள்ளியில் சேர்ந்தனர். வாய்ப்புகள் கொடுக்கப்பட்டால் எங்கிருந்தாலும் ஜெயிக்கலாம் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் அது" என்று தன்னம்பிக்கை வார்த்தை சொல்கிறார்.
பள்ளி கட்டிடத்துக்காக அடமானம் வைக்கப்பட்ட நகை
கல்வியை நல்ல முறையில் கொடுக்க ஆரம்பித்த பின்னர், ஆசிரியை விஜயலட்சுமிக்கு வகுப்புகளின் தரத்தை முன்னேற்றும் எண்ணம் வந்தது. தன் பள்ளியை ஸ்மார்ட் பள்ளியாக ஆக்க எண்ணி, அரசின் உதவியால் கட்டிடம் கட்டும் பணி தொடங்கினார். ஆனால் தொடங்கிய பணி பாதிக்கும் மேல் நடந்து, பணப்பற்றாக்குறையால் அப்படியே நின்றது. எல்லாரும் என்ன செய்வதென்று புரியாமல் அப்படியே நிற்க, ஆசிரியை விஜயலட்சுமி சற்றும் சளைக்கவில்லை. தனது நகையை அடமானம் வைத்து, 75 ஆயிரம் புரட்டிக் கட்டிடத்தைக் கட்டி முடித்தார். இதைக் கேள்விப்பட்ட கல்வி அதிகாரி, அருகில் இருந்த பள்ளிக்கு வந்த காசோலையை வாங்கிவந்து இந்தப் பள்ளிக்கே கொடுத்திருக்கிறார்.
நல்லபடியாகப் போய்க் கொண்டிருந்த ஆசிரியை விஜயலட்சுமியின் பயணத்தில், நடுநிலைப்பள்ளிக்குத் தலைமை ஆசிரியராய் மாற்றல் வந்தது. ஆனால் தனது கனவுப் பள்ளியில் இன்னும் சாதிக்க வேண்டியிருக்கிறது என்று எண்ணியவர், மாற்றலை நிராகரித்துவிட்டார்.

கணினிவழிக் கல்வி
கணினியின் அவசியத்தை உணர்ந்து, பள்ளியில் அதற்கேற்ற மாதிரியான மாற்றங்களைப் பள்ளியில் புகுத்தினார். அது குறித்துச் சொல்பவர், "தலைமை ஆசிரியரின் அறையை கணிப்பொறி அறையாய் மாற்றினோம். அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் 2 கணினிகளையும், பொதுமக்கள் நிதியில் இருந்து 1 கணினியையும் வாங்கினோம், படிப்பதற்கு சிறிய நூலகங்கள், பேச ஒலிபெருக்கிகள், ஒலிப்பான்கள் ஆகியவை வகுப்பிலேயே தனித்தனியாக வைக்கப்பட்டன.
வெள்ளி மன்றம் என்ற பெயரில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையும் ஒரு மணிநேரம், மாணவர்களின் பாட்டு, பேச்சு, ஓவியம், நாடகம் என தனித்திறமைகளை வெளிப்படுத்தச்செய்வோம். அரசு விழாக்களை வித்தியாசமான முறையில் கொண்டாடுவோம். இந்த ஆண்டு சுதந்திர தினத்தில், 'விடுதலை வேள்வியில் தமிழகம்' என்ற தலைப்பில், 22 குறுநாடகங்களை நிகழ்த்தினோம்.
எங்கள் மாணவர்கள், விடுதலைப் போராட்டத்துக்காகப் போராடிய திருப்பூர் குமரன், வாஞ்சிநாதன், ருக்மிணி லட்சுமி உள்ளிட்ட 22 தேசத் தலைவர்களாக வேடமிட்டு, வீதிகளில் குறு நாடகங்களை நடத்தினர். அப்போது எடுக்கப்பட்ட காணொலிகள், தொகுப்பு வேலைகள் முடிந்து உள்ளூர்ச் சேனல்களில் ஒளிபரப்பப்பட இருக்கின்றன. இது போன்ற நிகழ்வுகள் அரசுப்பள்ளி மாணவர்களை ஊக்குவிப்பதோடு, மற்ற மாணவர்களையும் நம் பள்ளிக்கு வரத்தூண்டுமே என்ற எண்ணம்தான் இவையெல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கிறது" என்று நெகிழ்கிறார்.
ஆசிரியர்கள் விழாக்களுக்காக வைக்கப்பட்ட ஃப்ளக்ஸ், அட்டைப் பெட்டிகள் உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை வெட்டி, ஒட்டி, அட்டைகள் செய்து, அதில் மாணவர்களுக்கு எழுதிக் கொடுக்கின்றனர். இதற்காக மாவட்ட கல்வி அலுவலரிடம் இருந்து பாராட்டுப் பெற்றிருக்கிறது ஆசிரியர் குழு. அதுபோக, மாவட்ட தலைவர் நிதியில் இருந்து ஒன்றரை லட்சம் நிதி பெற்று, பள்ளியில் குடிநீர் சுத்திகரிப்பு தொட்டியை அமைத்திருக்கின்றனர். வாரம் ஒரு முறை யோகா வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
"சரியாகப் பேசத் தெரியாமல், ஒன்று, இரண்டு கூடச் சொல்ல வராமல், மூன்றாம் வகுப்புக்கு வந்துசேர்ந்தான் ஹரிஹரன். அப்பா இல்லை அவனுக்கு. கூலி வேலை செய்யும் அம்மா, தங்கைதான் வாழ்க்கை. பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் வேலையில் அமர்த்தப்பட்டிருக்கும் ஆசிரியை ஒருவரின் தீவிர முயற்சியில் மெல்ல மெல்லக் கற்றுத் தேர்ந்தான். இரண்டே ஆண்டில், ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது நாச்சிமுத்து கல்லூரியில் நடந்த அறிவியல் கண்காட்சிக்கு அவனை அழைத்துப் போனோம். அங்கே எவ்விதத் தடங்கலும் இல்லாமல் காற்றாலை குறித்த தனது செயல்முறைப் பாடத்தை விளக்கினான். அதைப்பார்த்துக் கொண்டிருந்த அவனின் அம்மாவுக்குக் கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது.
கண்ணீர் சொட்டச் சொட்ட ஆனந்தமாய்ப் பேசிய ஹரிகரனின் தாய், எங்களுக்கு அத்தனை முறைகள் நன்றி சொன்னார். நாட்கள் சென்றன. மகனும், மகளும் படிப்பதைப் பார்த்த, கூலி வேலை செய்யும் ஏழைத்தாய்க்கு, தானும் படிக்க வேண்டும் என்ற ஆசை துளிர்த்தது. தயக்கத்துடனே வந்து என்னிடம் கேட்டார். நான்காம் வகுப்பு படித்திருந்த அவரை டுட்டோரியல் வகுப்பில் சேர்த்து விட்டேன். கூலி வேலைக்குப் போய்விட்டு வந்து, மாலை வகுப்புக்குச் செல்கிறார். தன் குழந்தைகளோடு அமர்ந்து அவரும் படிக்கிறார். நிச்சயம் ஒரு நாள் வேறு வேலைக்குப் போவார். இதை விட எனக்கு வேறேன்ன வேண்டும்?"
க.சே. ரமணி பிரபா தேவி - தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in
**************
மாணவர்கள் மீதான அன்பாலும் அக்கறையாலும் அர்ப்பணிப்புடன் தனித்துவமாக கற்பிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் நல் அடையாள அணிவகுப்புத் தொடர் இது. |
நீலகிரி மாவட்டத்தின் மூலையொன்றில் இருக்கும் தேனாடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியின் ஆசிரியர் ஒருவர், தேசிய அளவில் புதுமையான கற்பித்தல் முறை போட்டியில் பரிசு பெற்றிருக்கிறார். மத்திய மனிதவள அமைச்சகம் நடத்திய அப்போட்டியில் கலந்து கொள்ளத் தமிழகத்தில் இருந்து தேர்வான ஆறு பேரில் ஆசிரியர் தர்மராஜும் ஒருவர். தகவல் தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்பத் துறையில், புதுமையான முறையில் கற்பித்ததற்கான பரிசு அது. தொழில்நுட்பம் வழியாக மட்டுமே பயணிக்காமல் பழங்குடி இன மக்களின் கல்வி மேம்பாட்டுக்காகவும் பாடுபடுபவர்.
ஆசிரியர் தர்மராஜின் பயணத்தை, அவர் வழியாகவே கொஞ்சம் திரும்பிப் பார்ப்போமா?
"என்னுடைய சொந்த ஊர் கோத்தகிரி. படித்து முடித்து புதுக்கோட்டை மாவட்டத்தில், முதுகுளம் என்ற ஊரில் ஓர் அரசு நடுநிலைப்பள்ளியில் வேலைக்குச் சேர்ந்தேன். ஆரம்பத்தில் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில், கிராமத்திலிருக்கும் பள்ளியில் சேர்ந்துவிட்டோமே என்ற ஆதங்கம் இருந்தது. ஆனால் அங்கு படித்த மாணவர்களின் ஆர்வம், என் ஆதங்கத்தைத் தூக்கியெறிந்தது.
வழக்கமான தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களைப் புதுமையான முறையில் கற்பிக்க எண்ணினேன். தமிழ் மற்றும் ஆங்கிலச் செய்தித்தாள்கள் வாங்கப்பட்டன. மாணவர்கள் தினமும் படித்துவிட்டு, காலை பிரேயரில் அதனை வாசிக்க வேண்டும். இதனால் அவர்கள் நாட்டு நடப்புகளை அறிந்து கொண்டதோடு, மொழியறிவும் வளர்ந்தது. ஓவிய வகுப்புகளின்போது, பத்திரிகைகளில் வரும் கேலிச் சித்திரங்களை மாணவர்கள் கரும்பலகைகளில் வரைய வேண்டும்.
வேதியியல் பாடத்தில் தனிம அட்டவணைகளில் இருக்கும் தனிமங்களின் அணு எண், நிறை எண், அணு எடை ஆகியவற்றை எண் வரிசை அடிப்படையில் கற்றுக்கொடுத்தேன். ஆர்வமாய்க் கற்றவர்கள், நாட்கள் செல்லச் செல்ல, அப்படியே அதை ஒப்பிக்க ஆரம்பித்தனர்.
விளையாட்டு மைதானத்தில் சமூக அறிவியல்
அதுபோக சமூக அறிவியலையும் ஆர்வத்துடன் படிக்க, செயல்முறைகளோடு கற்பிக்கலாம் என்று தோன்றியது. இந்திய வரைபடத்தைக் கருப்பொருளாக எடுத்து, பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் வரையும் எண்ணம் வந்தது. ஊருக்குப் போகும்போது, ஊட்டியில் இருந்து புல் கொண்டு வந்தேன்; அதை மைதானத்தில் வளர்க்கத் தொடங்கினோம். புற்கள் புல்வெளியாய் மாறத் தொடங்கியதும், இந்திய எல்லைகளுக்கு ஏற்றவாறு, புல்வெளியைச் சீர்ப்படுத்தினோம்.
இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா ஆகிய நீர்நிலைப் பகுதிகளை ஏற்படுத்த, சுமார் நான்கரை அடிக்குப் பள்ளம் தோண்டினோம். தண்ணீர் வற்றாதவாறு அதில் கான்கிரீட் தளம் போட்டு, தண்ணீர் பாய்ச்சினோம். மேலே இமயமலை, பர்வதை மலைகளுக்குக் கற்கள் இட்டு நிரப்பினோம். வெளியிலிருந்து யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல், ஆசிரியர்களும் மாணவர்களுமே இதை செய்து முடித்தோம். மாநில எல்லைகள், தலைநகரங்கள், தொழில்பேட்டைகள் ஆகியவற்றையும் அதில் குறித்தோம். மாணவர்கள் சலிக்காமல் இந்தியா குறித்த கேள்வி- பதில்களைக் கற்றுக்கொண்டே இருந்தனர்.
2002- 2003-ம் ஆண்டுவாக்கில், தமிழகத்தில் மழைநீர் சேகரிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. எங்கள் பள்ளியிலே முதல்முறையாக அதை ஏற்படுத்தினோம்.
பாடம் தாண்டி...
வழக்கமான பாடத்திட்டங்களோடு நின்றுவிடாமல், கல்வி தாண்டி, வேறு தளங்களிலும் பயணிக்கத் தோன்றியது. கூடுதல் கல்விசார் நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்தோம். மாவட்ட அளவில் நடக்கும் பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகளில் மாணவர்கள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டையில் இருக்கும் அனைத்துப் பள்ளிகளிலும் எங்கள் பள்ளி தனித்துப் பேசப்பட்டது. அனைத்துப் பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொள்ளும் கருத்தரங்குகள் நடைபெறும் இடங்களில் மாணவர்களால் வரையப்பட்ட ஓவியக் கண்காட்சிகளை நடத்தினோம்.
ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை இலக்கியக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நாடகம், விவாத மேடை, சொற்பொழிவுகள், கருத்தரங்குகள், மேடைப்பேச்சு ஆகியவை நடத்தப்பட்டன. மாணவர்கள் வெகு விரைவிலேயே எல்லாத் துறைகளிலும் கற்றுத்தேர்ந்தனர். எட்டாம் வகுப்பு முடித்து, உயர்நிலைப் பள்ளிகளுக்குச் செல்லும்போது, அங்குள்ள மாணவர்கள் இவர்களைக் கண்டு ஆச்சரியப்பட்டனர்.
இயற்கை மீதான அக்கறையை வளர்த்தெடுக்கும் பொருட்டு, மொட்டை மாடித் தோட்டத்தை வைத்தோம். தொட்டிகளில் செடிகள் வைக்காமல், மண் கொண்டுபோய், பாத்தி கட்டினோம். ஊட்டியில் இருந்து பூச்செடிகள் எடுத்து வந்து, மாடியில் நட்டோம். மாணவர்களின் முறையான பராமரிப்புக்குப் பிறகு, பள்ளியே நந்தவனமாகப் பூத்துக் குலுங்கியது" என்கிறார்.
மாணவர்களே இல்லாத பள்ளிக்கு வந்த மாற்றல்
கோத்தகிரி மாவட்டத்தில் தேனாடு என்னும் ஊரில் இருந்த ஆரம்பப்பள்ளி ஒன்று, 4 மாணவர்களுடன் மூடப்படும் நிலையில் இருந்தது. அங்கிருந்த ஆசிரியர், 4 மாணவர்களுக்கும் டிசி கொடுத்து, வேறு பள்ளிக்கு மாறச் சொல்லிவிட்டார். இந்நிலையில் மாற்றலாகி, தேனாடு வந்து சேர்ந்தார் ஆசிரியர் தர்மராஜ்.
அங்கிருந்த பள்ளியின் சுவர்களில் விலங்குகள், தாவர வகைகள், நிலங்களின் வேறுபாடுகள் உள்ளிட்ட ஏராளமான தகவல்களை ஓவியங்களாக வரைந்தார். அந்த நான்கு மாணவர்களையும் அழைத்துக் கொண்டு, வீடு வீடாகச் சென்று, கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மெல்ல மெல்ல அப்பள்ளியின் மீது மக்களுக்கு ஈடுபாடு வர ஆரம்பித்தது. மாணவர்கள் சேர ஆரம்பித்து, கல்வியும் கற்கத் தொடங்கினர்.

முளைத்த கணிப்பொறி ஆர்வம்
ஆசிரியர் தர்மராஜ், 2005-ம் ஆண்டு வரைக்கும் கணிப்பொறி என்றால் என்னவென்றே தெரியாமல்தான் இருந்திருக்கிறார். பாடப் புத்தகங்களை வைத்து மட்டுமே கற்பித்தார். 2006-ல் சென்னையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் கணிப்பொறி குறித்த பயிற்சி எடுத்தவர், அங்குதான் முதன்முதலில் மடிக்கணினியையே கண்டிருக்கிறார்.
அது குறித்து ஆர்வமாகப் பேசுபவர், "அப்போதுதான் முதன்முதலாக அந்தக் கறுப்பு நிறத் தோஷிபாவைப் பார்த்தேன். அபூர்வப் பொருளாகக் காட்சி கொடுத்தது அது. அங்கிருந்த அதிகாரியிடம், இதைத் தொட்டுப் பார்க்கலாமா என்று கேட்டேன். உடனே அவர், அதை உயிர்ப்பித்து, அடிப்படைச் செயல்பாடுகளைக் கற்றுக் கொடுத்தார்" என்கிறார்.
சென்னையில் இருந்து கோயம்புத்தூர் வந்திறங்கிய ஆசிரியர் தர்மராஜ், நண்பர்கள் சிலரின் உதவியுடன் மடிக்கணினி ஒன்றை வாங்கிய பின்னரே, வீடு திரும்பினார். மறுநாள் மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகூட இல்லாத தேனாடு பள்ளிக்கு, அக்கணினியை எடுத்துச் சென்றார். காலையில் வீட்டிலேயே சார்ஜ் செய்து பள்ளிக்கு எடுத்து வந்து, மதியம் வரை தனக்குத் தெரிந்த அடிப்படை விஷயங்களை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். மதிய உணவு இடைவேளைகளில் அருகிலிருக்கும் வீடுகளில் சார்ஜ் செய்து, திரும்பவும் கற்பிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
தேசிய அளவில் தேனாடு பள்ளி
2009-ம் ஆண்டு இந்திய அரசின் எரிசக்தி அமைச்சகம் தொடங்கிய ஓவியப் போட்டியில், மாணவர்களைக் கலந்துகொள்ள வைத்தார். எரிசக்தியின் பயன்பாடுகள் என்ன? அவற்றை எப்படி மிச்சப்படுத்துவது? இயற்கை வளங்களின் முக்கியத்துவம் உள்ளிட்டவைகளைத் தன் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்து மாணவர்களைத் தயார் செய்தார். 2009-ல் இருந்து, 12 வருடங்களாகத் தேசிய அளவில் நடந்து வரும் இப்போட்டியில், ஆயிரக்கணக்கான மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்சி பள்ளிகளுடன் போட்டி போட்டு, 7 முறை முதல் 10 இடங்களுக்குள் வந்திருக்கிறது தேனாடு பள்ளி.
பள்ளிக் கல்வித்துறையின் வழிகாட்டுதலோடு, செயல்வழிக் கற்றல் முறையைக் கணிணிவழிப்படுத்தி இருக்கிறார். ஆறாம் வகுப்பில் தொடங்கி பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான பாடவகைகளுக்கு அது தொடர்பான இடங்களுக்குச் சென்று படம்பிடித்து, காணொளியாக்கி, அதன் பின்னணியில் தமிழில் குரல் விளக்கங்களையும் கொடுத்திருக்கிறார்.
உதாரணமாக, காடு மற்றும் விலங்கு வகைகள் என்னும் தலைப்பில் இருக்கும் காணொளியில் இந்தியா முழுக்க உள்ள காடுகள், அதன் வகைகள், இருப்பிடங்கள், பயன்பாடுகள், மழைப்பொழிவுகள், வளர்ச்சி, காடுகளின் பரப்பளவு உள்ளிட்ட தகவல்களை, நேரடியாகச் சென்று படம்படித்து, தொகுப்பாக்கி, பின்னணி இசை சேர்த்து, உள்ளடக்கத்துக்கான குரல் கொடுத்திருக்கிறார். மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் தமிழக பள்ளிக் கல்வித் துறையின் ஒப்புதலுக்குப் பின்னரான வெளியீட்டுக்காகக் காணொளித் தொகுப்புகள் காத்து நிற்கின்றன.
சமூக சேவையிலும் சாதனை
கற்பித்தல் தாண்டி, சமூக ரீதியான செயல்பாடுகளிலும், ஆசிரியர் தர்மராஜ் அதிக அக்கறை காட்டி வருகிறார். வருடந்தோறும் எய்ட்ஸ் ஒழிப்பு தினத்தில் விழிப்புணர்வுப் பேரணி நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருப்பவர், பழங்குடி மக்களுக்காக ஹெச்ஐவி எதிர்ப்பு, இரத்த தானம், கண் தானம், உடல்நலம் தொடர்பான முகாம்களையும் நடத்தி வருகிறார்.
அத்தோடு பழங்குடி இன மக்களின் குழந்தைகளுக்காகவே, தனியாக பள்ளியொன்றையும் நிர்வகித்து வருகிறார் ஆசிரியர் தர்மராஜ். அரசின் உதவியோடு 13 வருடங்களாக இயங்கும் இப்பள்ளியில் இருந்து, இதுவரை 824 பழங்குடி மாணவர்கள் கல்வி கற்று அடுத்த நிலைக்கு உயர்ந்திருக்கின்றனர்.
எதிர்காலச் செயல்பாடுகள் குறித்தும் ஆர்வமாய்ப் பேசுகிறார். " எங்களின் ஆரம்பப் பள்ளி மாணவர்களை வைத்து, ஒரு படம் எடுக்கும் முயற்சியில் இருக்கிறோம். பத்தாண்டுகளுக்கு முன்பு நீலகிரியின் நிலை என்ன, இன்னும் இருபது ஆண்டுகள் கழித்து நீலகிரி எப்படி இருக்கும் என்பதைப் பற்றிப் பேசும் படமாக அது இருக்கும். அதற்காக மாணவர்களுக்கு கேமரா பயிற்சியளித்து வருகிறோம். அரசுப் பள்ளி மாணவர்களால் எடுக்கப்படும் அப்படம், மாறி வரும் நீலகிரி மாவட்டம் குறித்த வேதனையை உரக்கப்பேசும். நிலத்தடி நீர்க் குறைவு, மழைநீர்ப் பற்றாக்குறை, நிலச்சரிவு உள்ளிட்ட முக்கியப் பிரச்சனைகளை வலிமையாக எடுத்துரைக்கும்.
ஆசிரியப்பணி குறித்து என்றுமே எனக்குப் பெருமிதம்தான். ஒரு முறை, கோவையில் இருந்து கோத்தகிரி திரும்பிக் கொண்டிருந்தேன். எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டதில், இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் இருக்க நேரிட்டது. அப்போது எனக்கு அடிபட்ட சம்பவம், தேனாடு மக்களுக்குத் தெரிந்திருக்கிறது. கோவிலில் எனக்காகச் சிறப்பு பூஜைகள் செய்து, நான் குணமாக வேண்டுமென்று பலவித வேண்டுதல்களை வைத்திருக்கின்றனர். எதையும் அறியாமலே, குணமானவுடன் பள்ளிக்குச் சென்றேன். அங்கே நான் கண்டது அழுகையோடு கூடிய ஆனந்தக் கண்ணீரை உதிர்த்த அன்புள்ளங்களை!
கல்வியை கற்றுக் கொடுத்ததற்காக, ஓர் ஊரே அழுது புலம்பி, பிரார்த்தனைகள் செய்தது. இதைவிட ஒரு ஆசிரியனுக்கு, வேறு என்ன தேவைப்பட்டுவிடும்?
க.சே. ரமணி பிரபா தேவி - தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in
***********
மாணவர்கள் மீதான அன்பாலும் அக்கறையாலும் அர்ப்பணிப்புடன் தனித்துவமாக கற்பிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் நல்லடையாள அணிவகுப்புத் தொடர் இது. |
"பெரிய அளவில் பணம் சம்பாதிப்பதற்குப் பதிலாக, பெரிய மாற்றத்தை விதைக்க ஆசைப்பட்டேன். அதனாலேயே ஆசிரியர் ஆனேன்!"- தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் சாதித்ததற்காக குடியரசுத் தலைவரிடம் தேசிய விருது, அப்துல் கலாமின் பாராட்டு, மைக்ரோசாப்ட்டின் உலகளாவிய மன்ற, தேசத்தின் சாதனையாளர் விருது, நல்லாசிரியர் விருது மற்றும் ஏராளமான தேசிய, மாநில, ஊரக விருதுகள் பெற்ற சித்ரா என்னும் அரசுப் பள்ளி ஆசிரியரின் வார்த்தைகள் இவை.
இனி சித்ராவின் பயணம், அவரின் வார்த்தைகளிலேயே...
"1996-ம் ஆண்டு விக்கிரவாண்டி ஊராட்சியின் வாக்கூர்பகண்டை என்னும் ஊரின் தொடக்கப் பள்ளியில், என் ஆசிரிய வாழ்க்கை தொடங்கியது. அப்போது நான் ஒன்றாம் வகுப்பு ஆசிரியை. வழக்கமான அ, ஆ தானே என்றிருந்த எனக்கு, மாணவர்களே பாடம் சொல்லிக் கொடுத்துவிட்டார்கள், அவர்கள் எழுதிய 'அ'வையும், 'ஆ'வையும், படிக்க கூடுதல் முயற்சி தேவைப்பட்டது.
அப்போது பேருந்தில் பள்ளிக்கு வந்து சேர ஒன்றரை மணி நேரம் ஆகும். அந்த சமயத்தில் குஜராத்திய எழுத்தாளர் ஒருவர் எழுதிய 'கனவு ஆசிரியர்' என்ற புத்தகம் கிடைத்தது. அதில் கூறப்பட்டிருந்த வழிமுறைகளையும், அறிவுரைகளையும் எனக்கு ஏற்றாற்போல மாற்றிக் கொண்டேன். மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க, அரசு நடத்திய பயிற்சி முகாம் அதிக உதவியாக இருந்தது. 'விளையாட்டு வழி' கல்வி முறையைப் பின்பற்ற ஆரம்பித்தேன்.
மாணவியிடம் கற்ற பாடம்
குச்சி, புளியங்கொட்டைகளை வைத்து கணக்கு சொல்லிக் கொடுத்தேன். மாணவர்களை அருகில் இருந்த வயல்களுக்கு அழைத்துக் கொண்டு போய் அறிவியல் சொல்லிக் கொடுப்பதும், வகுப்பறையிலேயே விதைகள் இட்டு செடிகள் வளர்ப்பதும் வழக்கமாய் இருந்தது. மாலை நேரங்களில் பாட்டு மூலம் பாடம் கற்றுக் கொடுக்கத் தொடங்கினேன்.
ஒரு முறை ஆர்வமிகுதியில் மூன்றாம் வகுப்புக் குழந்தைகளுக்கு மினி கிரைண்டர் மாதிரி செய்து எடுத்துக் கொண்டு போனேன். "இது எதுக்கு டீச்சர்? இதுதான் எங்க வீட்டுலயே இருக்கே!" என்றாள் ஒரு மாணவி. அப்போதுதான் சிரமப்பட்டு கடினமான எதையும் செய்து காட்டுவது தேவையற்றது என்பதை உணர்ந்தேன்.
மனம் நெகிழ்ந்த தருணம்
மெல்ல மெல்ல கற்றலின்பால் குழந்தைகளுக்கு ஆர்வம் ஏற்பட்டது. பள்ளி மாணவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விழாக்களில் ஆவலுடன் கலந்து கொள்ள ஆரம்பித்தனர். சுதந்திர தினம், குடியரசு தினம் என அரசு விழாக் கொண்டாட்டங்களிலும் திருக்குறள் ஒப்பித்தல், பாட்டுப் போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகளிலும், பங்குபெற்றனர். குக்கிராமத்தில் இருந்து வெளியே கூட சென்றிருக்காத அக்குழந்தைகள், முதன்முதலாக ஆட்சியர் அலுவலகம் போய் பரிசுகளுடன் திரும்பி வந்தனர்.
பரிசுகளை வென்றதாகக் கேட்ட தருணத்தில் எங்கள் கால்கள் தரையிலேயே படவில்லை. ஒவ்வொரு விழாவிலும் போட்டிகளில் கலந்து கொள்வது வழக்கமானது. நீர்ப்பிரச்சினைகள், உடல்நலப் பிரச்சினைகள், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு குறித்த கார்ட்டூன் கதைகளை ஒவ்வொரு வாரமும் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன். பாண்டிச்சேரி வானொலி நிலையத்திலும் எங்கள் மாணவர்கள் ஏராளமான நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
எனக்காக போராடிய கிராமத்தினர்
'பள்ளிக்கு யார் வந்தாலும் பயப்படக்கூடாது. இயல்பாக அவர்களை வரவேற்று, பள்ளியைச் சுற்றிக் காண்பிக்க வேண்டும்' என்று சொல்லியிருந்தேன். ஒரு முறை மாவட்ட ஆட்சியர் எங்கள் பள்ளிக்கு திடீர் வருகை தந்தார். மாணவர்களே அவரை வரவேற்ற விதத்தைப் பார்த்து அசந்து போனவர், அடுத்த நாளே எங்களுக்கு விருதளித்துச் சிறப்பித்தார்.
ஒரு முறை நான், விடுமுறை காரணமாக வெளியூருக்குப் போய்விட்டு, திங்கட்கிழமை காலையில் பள்ளிக்குத் திரும்பினேன். சைக்கிளில் வேகமாக வந்து கொண்டிருந்த என்னைப் பார்த்து கிராம மக்கள் புன்முறுவல் பூத்தனர். எனக்கு எதுவுமே புரியவில்லை. பின்னர் தான் அந்தச் சிரிப்பின் பின்னால் இருக்கும் அன்பும், நம்பிக்கையும் புரிந்தது.
இரண்டு நாட்களுக்கு முன்னால், நான் மாற்றலாகி வேறு ஊருக்குச் செல்ல உத்தரவு வந்திருக்கிறது. ஆனால் கிராம மக்கள், என்னை அனுப்பக்கூடாது என்று தொடர்போராட்டம் நடத்தி, உத்தரவைத் திரும்பப் பெற வைத்திருக்கின்றனர். நான் வாங்கிய எல்லா விருதுகளின் ஆனந்தத் தருணத்தை விட, இந்தத் தருணமே என்னை அதிகம் சந்தோஷப்படுத்தியது" என்கிறார்.
கற்பித்தலில் எளிமைகளும் புதுமைகளும்
கற்றலிலும் கற்பித்தலிலும் எளிமையையும், புதுமையையும் விரும்பினார் ஆசிரியை சித்ரா. ஆரம்பப் பள்ளி மாணவர்கள் எழுதிப் பழக வேண்டுமென்பதற்காக, தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துகளை அச்சிட்டு, முத்திரையாக்கினார். அதை ஒவ்வொரு குழந்தையின் நோட்டுப்புத்தகத்தில் அச்சு வைத்து எழுதக்கற்றுக் கொடுத்தலில் புதுமை படைத்தார். வகுப்பில் கல்வியைத் தாண்டி நல்ல பழக்கங்களையும் கற்றுக்கொடுப்பதை வழக்கமாகக் கொண்டவர், கழிவறைகள் தேவையைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக, மத்திய அரசின் சுகாதாரத்துறை விருதையும் பெற்றிருக்கிறார்.
கலாம் தந்த வியப்பு
பள்ளியில் 'கடிதம் எழுதுதல்' பகுதியை நோட்டிலே எழுதித்தான் பழக்கப்பட்டிருப்போம். ஆனால் ஆசிரியை சித்ரா, அருகில் உள்ள தபால் நிலையத்தில் இருந்து அஞ்சல் அட்டைகளை வாங்கி கடிதம் எழுதக் கற்றுக் கொடுத்திருக்கிறார். அதன் நீட்சியாக, மாணவர்கள் சிலர், குடியரசு தின மற்றும் பொங்கல் வாழ்த்துக் கூறி, டெல்லி ஜனாதிபதி மாளிகைக்குக் கடிதம் எழுதி அனுப்பியிருக்கின்றனர். சற்றும் எதிர்பார்க்காத ஆச்சரியமாய் டெல்லியில் இருந்து பதில் கடிதம் வந்தது. அதில் அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாமின் கையொப்பம் இடப்பட்டு தமிழில் பதில் அளிக்கப்பட்டிருந்தது.
கணினி... சாதனையின் தொடக்கப்புள்ளி!
பள்ளி மெல்ல மெல்ல வளர்ச்சி அடையத் தொடங்கிய நிலையில், ஆசிரியை சித்ராவுக்கு வேறு ஊருக்கு மாற்றல் வந்தது. 2008-ம் ஆண்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அஸ்தினாபுரம் ஆரம்பப்பள்ளிக்கு வந்து சேர்ந்தார். கணிப்பொறியின் ஆக்கிரமிப்பு தொடங்கியிருந்த காலம் அது. ஆர்வமாய்க் கணினி கற்கத் தொடங்கினார் சித்ரா.
நினைத்த வேலைகளைக் குறுகிய நேரத்தில் செய்துவிட முடிகிற உலகத்தினுள் நுழைந்ததாய் உணர்ந்தார். தான் கற்றதை மாணவர்களுக்கும் சொல்லிக் கொடுக்க ஆசைப்பட்டார். ஆனால் அது மிகப்பெரிய சாதனையின் தொடக்கப்புள்ளியாக இருக்கும் என்பது அப்போது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.
பள்ளியில், மதிய உணவு இடைவேளைகளில் விருப்பமுள்ள மாணவர்கள் கணினி கற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தார். கணிப்பொறியை எப்படித் திறப்பது, இயக்குவது, மேலும் அடிப்படையான எம்.எஸ்.ஆபிஸ் குறித்தும் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்.

தனது பயணம் குறித்து மேலும் பேசுகிறார் சித்ரா.
"2010-ல் இணையத்தில் உலவிக் கொண்டிருந்த போது, சோலார் குக்கரின் செயல்முறையைப் பார்த்தேன். விளையாட்டாய் மாணவர்களிடம் காண்பித்து, அதை முயற்சித்துப் பார்க்கச் சொன்னேன். அவர்களும் சில முறைகள் முயன்றனர், ஆனால் அரிசி வேகாமல் அப்படியே இருந்தது. அடுத்தடுத்த நாட்களில் திரும்பத் திரும்ப அவர்கள் முயற்சிக்க, சோலார் குக்கர் வெற்றிகரமாக இயங்கியது.
சமூக சேவகி கிரண் பிர் சேத்தியின் 'டிசைன் ஃபார் சேஞ்ச்' அமைப்பு சிறந்த கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் பள்ளி மாணவர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் விருது வழங்குகிறது. அதன் சிறந்த 20 கண்டுபிடிப்புகளில் ஒன்றாக எங்களின் கண்டுபிடிப்பும் தேர்வாகியது. அச்சம்பவம், அங்கீகாரத்தை எதிர்பார்க்காமல், மாணவர்கள், புதிது புதிதாய்க் கண்டுபிடிப்புகள் நிகழ்த்த ஏதுவாக அமைந்தது.
பல ஆசிரியர்கள் பாடப்புத்தகத்தை, பைபிளாகத்தான் பார்க்கின்றனர். அதைத் தாண்டி வேறு எதையுமே மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை.
தொழில்நுட்பம் அதன் போக்கில் வளர்ந்துகொண்டே இருக்கிறது. அதன் நன்மைகளை உணர்ந்து பயன்படுத்துவது எப்படி என்பதை மாணவர்களே எங்களுக்குக் கற்றுக் கொடுக்கின்றனர்" என்கிறார்.
ஆசிரியப்பணி தவிர, பள்ளிக் கல்வித்துறையின் சமூக அறிவியல் பாடத் திட்ட உறுப்பினராகவும் இருக்கிறார் சித்ரா. பாடத்திட்டங்களை உருவாக்கும் சமயத்தில் இரவு பகலாக உழைத்து, புத்தகத்தை வடிவமைத்ததில் இவரின் பங்கும் தவிர்க்க முடியாததாய் இருந்திருக்கிறது. மாணவர்களைத் தன் இரு கண்களாய் பாவித்த கலாம் மாணவர்களுக்குப் பதிலளித்த சம்பவம், தற்போது மூன்றாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது.
ஆசிரியர்களை ஊக்குவிக்கும் பணி
சத்தமின்றி இன்னொரு முக்கியப் பணியையும் இவர் செய்து வருகிறார். தனக்கு ஏதோ ஒரு வகையில் தெரிந்த, அறிந்த அரசுப் பள்ளி ஆசிரியர்களில் எவரேனும் கற்பித்தலில் புதுமைகளைக் கையாண்டு வந்தால், அவரை அடையாளம் கண்டு பள்ளிக் கல்வித் துறையின் பாடத் திட்டக் குழுவில் இணைக்கும் வேலைதான் அது.
தனது கற்பித்தல் முறையையும், தன்னுடைய மாணவர்களின் திறமைகளையும் தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்களிடம் கொண்டு சேர்த்து, அவர்களுக்கும் தனது உத்திகள் சென்றடைய யூடியூபை நாடியிருக்கிறார் ஆசிரியை சித்ரா. அவ்வப்போது அதில் வீடியோ பதிவுகளை அப்டேட் செய்து வருகிறார். அரசுப் பள்ளி மாணவர்களின் ஆக்கங்களைப் படம்பிடிக்கும் சித்ராவின் யுடியூப் பக்க இணைப்பு https://www.youtube.com/user/chitra137
க.சே. ரமணி பிரபா தேவி - தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in
அன்பாசிரியர் 4 - குருமூர்த்தி: யூடியூபில் களத்தூர் அரசு பள்ளியும் காணொலி வித்தகரும்!
No.1 In Embedded Training - MNC Trainers with 10 to 20 Yrs Exp, 1000's of StudentsPlaced in Top Cosemertxe.com/Register-Now

காணொலியில் கற்பிக்கும் அன்பாசிரியர் குருமூர்த்தி
கல்லும் மலையும் கடந்து வந்தேன்; பெருங்காடும், செடியும் கடந்து வந்தேன்!
ஆசிரியர் குருமூர்த்தி, கற்றலில் பின்தங்கியிருந்த அரசுப்பள்ளி ஒன்றை செயல்வழிக் கற்றலின் மூலம், மாவட்டத்தின் சிறந்த பள்ளிகளில் ஒன்றாக மாற்றியவர். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான அனைத்துப் பாடங்களையும் முழுமையான காணொலியாக மாற்றியவர். காணொலிக் குறுந்தகடுகளை தமிழகம் முழுக்கவுள்ள ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கி வருபவர். ஓவியராக ஆசைப்பட்டவர், அப்பாவின் ஆசையால் ஆசிரியர் ஆகியிருக்கிறார். 2004-ம் ஆண்டு கடலூர் மாவட்டம், காளியான்மேடு என்னும் ஊரிலுள்ள அரசு ஆரம்பப்பள்ளியில் தனது பணியைத் தொடங்கிய ஆசிரியர் குருமூர்த்தியின் மனநிலை எப்படி இருந்தது?
"நான் படித்த காலத்தில், கல்விக்கு அதிக முக்கியத்துவம் தரப்படவில்லை. முக்கியமாக நான் படித்த பள்ளி அப்படித்தான் இருந்தது. நான் பட்ட துன்பத்தை என் மாணவர்களும் படக்கூடாது என்று முடிவெடுத்துத்தான் எனது பணியை ஆரம்பித்தேன். காளியான்மேட்டில் ஒன்றரை வருடங்கள் வேலை பார்த்த பின்னர், குருக்கத்தஞ்சேரிக்கு மாற்றல் கிடைத்தது.
நான் போனபோது அங்கிருந்த ஆரம்பப்பள்ளி, 'கற்றலில் பின்தங்கிய பள்ளி' என்ற பெயரோடு குறைந்த செயல்திறன் கொண்ட பள்ளியாக இருந்தது. ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் இரண்டு உதவி ஆசிரியர்கள் ஆகிய மூவரோடு, நான்காவதாய் நானும் போய்ச் சேர்ந்தேன். அது செயல்வழிக் கற்றல் முறை தொடங்கப்பட்டிருந்த சமயம். பள்ளி முடித்து, வீட்டுக்கு வந்து இரவில் செயல்வழிக் கற்றலுக்கான அட்டைகளை செய்திருக்கிறேன். நான்கு வருடங்கள் எல்லா ஆசிரியர்களும் இடையறாது உழைத்தோம். அதன் பலனாய், அப்போதைய கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்தினம் அவர்களால், 'மாவட்டத்தின் 75 சிறந்த பள்ளிகளில் ஒன்று' என்ற விருது எங்கள் பள்ளிக்கு வழங்கப்பட்டது.
இசைக்கப்பட்ட இசைக் கருவிகள்
தலைமை ஆசிரியரின் உதவியோடு, டி.வி.டி, கணிப்பொறி, தொலைக்காட்சி உள்ளிட்ட பொருட்களை வாங்கினோம். பள்ளியைச் சுற்றிலும் செடிகளை நட, மாணவர்கள் அதைப் பராமரித்தனர். 60 வருடங்களாக ஆண்டு விழாவே நடக்காமல் இருந்த பள்ளியில் முதல்முறையாக ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. இசை உபகரணங்களைச் செய்து மாணவர்களுக்கு அளித்தேன். தெர்மாகோலால் செய்யப்பட்ட வீணை, தபேலா, மத்தளம் மற்றும் மின் அட்டைகள், விளக்கப்படங்கள் ஆகியவை மாணவர்களுக்குக் கொடுக்கப்பட்டன. அடுத்தடுத்த நிலைக்குப் போய்க்கொண்டிருந்த நேரத்தில், திடீரென திருச்சிக்கு மாற்றல் வந்தது".

வீடியோ பாடங்கள்
2009-ம் ஆண்டு திருச்சி மாவட்டம், தொட்டியம் ஒன்றியத்தில் உள்ள களத்தூர் என்னும் ஊருக்கு மாற்றலானார் ஆசிரியர் குருமூர்த்தி. கற்பித்தலில் கணிப்பொறி அறிமுகமாகத் தொடங்கிய காலம் அது. "ஒருநாள், வகுப்பில், சமூக அறிவியல் பாடம் எடுத்துக் கொண்டிருந்தேன். அதில் கடல் பற்றிய பாடம் வந்தது; மெரினா கடற்கரையைப் பற்றி விளக்கினேன். ஆனால், வீட்டைவிட்டு, வெளியூருக்குக்கூட சென்றிருக்காத சில குழந்தைகளுக்கு கடலைப் பற்றி எதுவும் தெரியவில்லை; அந்தப் பாடமும் புரியவில்லை. அப்போதுதான் எனக்கு, பாடங்களைக் காணொலியாக்கிக் காண்பிக்கலாமே என்று தோன்றியது. வார்த்தைகளில் விளக்க முடியாத பாடங்களை, மாணவர்கள் காணொலி மூலமாக எளிதில் புரிந்துகொண்டனர். பின்னர் அதையே எல்லாப் பாடங்களுக்கும் பின்பற்ற ஆரம்பித்தேன்.
தினமும் பள்ளி முடிந்து இரவு நேரத்தில் வீடியோக்களை உருவாக்குவதை பழக்கப்படுத்திக் கொண்டேன். மே மாத விடுமுறைக்கு, ஊருக்கே செல்லவில்லை. 2 வருடங்களில் கிட்டத்தட்ட 3000 மணி நேரங்களை, காணொலி உருவாக்கத்துக்காக செலவிட்டிருப்பேன். பள்ளி நேரம் பாதிக்கப்படாதவாறு காணொலி உருவாக்கம் இருக்க வேண்டும் என்பதில் ஆரம்பத்தில் இருந்தே தெளிவாக இருந்தேன்.".
காணொலிகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன?
ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, கணிதம் தவிர்த்து, தமிழ், ஆங்கிலம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய நான்கு பாடங்களையும், பாட வரிகளுக்கு ஏற்றவாறு, படங்களைத் தொகுத்து வீடியோவாக்கத் தொடங்கியிருக்கிறார். உதாரணத்துக்குத் தமிழ்ப் பாடத்தை எடுத்துக் கொள்வோம். ஒரு நதி தனது வரலாற்றைப் பாடுவதாக ஒரு பாடம் இருக்கிறது. கல்லும் மலையும் கடந்து வந்தேன்; பெருங்காடும், செடியும் கடந்து வந்தேன்!
இந்த ஒற்றை வரிக்கு, ஒரு நதி மலையை, கானகத்தை, செடி, கொடி, மரங்களைக் கடந்து பாய்ந்து வருவது போல காட்சிகள் அமைத்திருக்கிறார் ஆசிரியர் குருமூர்த்தி. சில காணொலிகளில் பாட்டுகளும் பாடப்பட்டிருக்கின்றன. ஆசிரியை சித்ரா மற்றும் அவரின் குழுவினர் ஒன்றாக இணைந்து ராகத்துடன் சில பாடல்களைப் பாடிக் கொடுத்திருக்கின்றனர். தேனியைச் சேர்ந்த விஜயராஜா என்னும் ஆசிரியர் மூலம் பொம்மலாட்டத்தைக் கொண்டு, சில பாடங்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.புதுக்கோட்டையைச் சேர்ந்த செந்தில் என்பவர், 1, 2, 3-ம் வகுப்பு தமிழ்ப் பாடல்களுக்குத் தொழில்முறை பாடகர்களைக் கொண்டு இசையமைத்து, பாடல்கள் பாடிக் கொடுத்திருக்கிறார்.

படிக்கத் தெரியாத மாணவர்களையும் படிக்கவைத்த பள்ளி
"எங்கள் பள்ளியில் படித்து, ஐந்தாம் வகுப்பை முடித்து வெளியே செல்லும் மாணவர்கள் யாரும், இதுவரை எழுதப் படிக்கத் தெரியாமல் போனதில்லை. இதனாலேயே 'படிக்கத் தெரியாத மாணவர்களையும் படிக்கவைத்த பள்ளி!' என்று பிரதான சாலையில் ஃப்ளெக்ஸ் வைத்தோம். அந்த ஃப்ளெக்ஸைப் பார்த்து, ஆங்கில வழியில் கல்வி கற்ற பதினைந்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், எங்கள் பள்ளியில் சேர்ந்தனர்" என்கிறார்.
சென்னையில் வசிக்கும் அவரது சகோதரர் மற்றும் நண்பர்கள் அளிக்கும் நிதியின் மூலம் மாணவர்களுக்குத் தேவையான பொருட்களை, தொடர்ந்து 3 வருடங்களாக வாங்க முடிகிறது என்கிறார். 40 ஆயிரம் செலவில் 32 இன்ச் எல்ஈடி தொலைக்காட்சி, ஸ்பீக்கர், மைக் ஆகியவை பள்ளியில் பொருத்தப்பட்டிருக்கின்றன. களத்தூர் பள்ளி என்ற யுடியூப் சேனலில் பள்ளியின் ஆண்டுவிழா நடனங்கள், வகுப்பறை நிகழ்வுகள், கதை சொல்லுதல் உள்ளிட்டவை பதிவேற்றப்படுகின்றன. செய்தித்தாள்கள் வாசிக்கும் பழக்கத்தைத் தன் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்திய ஆசிரியர் குருமூர்த்தி, முக்கிய செய்திகளை வெட்டி, பள்ளியில் ஒட்டிவைக்கிறார். உலக நாடுகள் குறித்த செய்திகள் வரும்போது, அந்த நாடுகளை உலக வரைபடத்தில் காண்பிக்கச் சொல்லி உலக நாடுகளையும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார்.
அதுபோக, வருடம் முழுக்கவுள்ள சிறப்பு தினங்களைத் தொகுத்து அதைக் காணொலியாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் ஆசிரியர் குருமூர்த்தி. பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதமாக நல்ல உள்ளங்களின் உதவி கிடைத்தால் பள்ளியின் வகுப்பறைகளுக்கு டைல்ஸ் மாற்றி, தண்ணீர்த் தொட்டி அமைத்து, மாணவர்களுக்கு வட்டமேசைகள், நாற்காலி ஆகியவற்றை வாங்கிவிட முடியும் என்கிறார். வாங்கிவிடுவாரா?
| மாணவர்கள் மீதான அன்பாலும் அக்கறையாலும் அர்ப்பணிப்புடன் தனித்துவமாக கற்பிக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் நல் அடையாள அணிவகுப்புத் தொடர் இது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக