வெள்ளி, 26 ஜூன், 2015

Corporate Life in Tamil

வானுயர்ந்த கண்ணாடிக் கட்டிடம். அதன் குளிர் படர்ந்த அறைக்குள் தனியொரு கேபினில் வேலை. கை நிறைய சம்பளம். மனம் நிறைய நிம்மதி. மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவரும் மெக்டொனால்ட்ஸ் போகலாம். ‘காபி டே’வில் கோல்டு காபி அருந்தலாம்.
ஃபீனிக்ஸ் மாலில் பொழுது போக்கலாம். ‘வாட்ஸ் ஆப் டியூட்’ என நுனி நாக்கில் ஆங்கிலம் பேசிலாம். செல்பி எடுக்கலாம். இப்படி ஐடி துறை பற்றிய கனவுகள் நீள்கின்றன.
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை, பழைய மகாபலிபுரம் சாலை ஆகியவற்றில் பறக்கும் வால்வோ பேருந்துகளில் புஷ் பேக்கைச் சாய்த்து ஜஸ்டின் பைபரையோ, அனிருத்தையோ ஹெட் போன் வழியாக ரசித்தபடி சிட்டி செண்டர், ஸ்கை வாக் என மால்களில் உற்சாக வலம் வரலாம் என்பது ஐடி துறையில் நுழைய விரும்பும் ஒவ்வொருவரின் விருப்பமாகவே உள்ளது.
ஆனால், இந்த கனவுலகத்துக்கு ஏராளமான இருட்டுப் பக்கங்கள் உள்ளன. கண்ணாடிக் கட்டிடங்களுக்குள் கண்ணீர்க் கதைகளும் ஏராளம்.
உறவுச் சிக்கல், பணிச்சுமை, டி.எல். தொல்லை, மேனேஜர் மிரட்டல், கிளைண்ட் குடைச்சல், அப்ரைசல் குளறுபடி, எம்ப்ளாயீ பேராமீட்டர் என ஏகப்பட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஐடி ஊழியர்கள், உச்சகட்டமாக வேலையிழப்பையும் சந்திக்கிறார்கள்.
“எனது வேலையைக் காப்பாற்றிக் கொடுங்கள்” என்று சென்னை உயர் நீதி மன்றத்தின் நெடிய படிக்கட்டுகளை ஏறிய கர்ப்பிணி ரேகாவில் தொடங்கி மத்திய கைலாஷ் பக்கம் கண்களைக் கட்டி போராடிய ஊழியர்கள்வரை ஐடியின் வேறு முகத்தைச் சந்திப்பவர்கள் ஏராளம்.
வேலைக்குச் சேர்ந்த மூன்றாவது வருடத்தில் திருமணம். புறநகரில் டபுள் பெட்ரூம் வீடு. சின்னதாக ஒரு ஸ்விஃப்ட் கார் என வாழ்க்கையைத் தொடங்கிய கொஞ்ச நாளில், வேலையிழப்பை அறிவித்து வருகிற இ-மெயில் எத்தனை கொடூரமானது! ப்ரமோஷன், ஹைக் எனத் தொடர்ச்சியான சந்தோஷங்களை நட்சத்திர ஓட்டலில் பார்ட்டி வைத்துக் கொண்டாடியவர், மாநகரின் தூசி மண்டிய டாஸ்மாக்கில் வேலை இழந்த துக்கத்தோடு தொலைவதும் இங்கு சகஜம்.
ஒரு தேன்கூட்டில் நெருப்பு வைத்ததைப் போல், கொத்தாக 25 ஆயிரம், 15 ஆயிரம், 8 ஆயிரம் என்று ஊழியர்களை நிறுவனங்கள் வெளியேற்றுகின்றன.
இந்த ஊழியர்களுக்காகக் குரல் கொடுக்க வலுவான சங்கங்கள் கிடையாது. அவர்களின் வாழ்க்கையைக் காப்பாற்றுவதற்கான கொள்கை முடிவுகளை எடுக்க அரசுக்கும் மனம் இல்லை.
பன்னாட்டு நிறுவனங்களுக்கென்று பன்னாட்டு விதிமுறைகள் எதுவும் கிடையாது. ஏடிஎம் தேய்த்தெடுத்த முதல் மாத சம்பளத்தில் பெற்றோருக்குப் புதுத் துணி வாங்கிக் கொடுத்த ஈரப்பசை காய்வதற்குள், வாழ்க்கையை மீண்டும் பூஜ்யத்திலிருந்து ஆரம்பிக்கின்ற சாபம் ஐடியில் சாதாரணம். இப்படியாக ஐடி என்னும் கனவுலகின் இருட்டுப் பக்கங்கள் ஏராளம்.
அவர்களுக்கான தீர்வுகள் என்ன? அலுவலகத்தில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்ன? 15 ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஒருவரை, 15 வார்த்தையிலான மின்னஞ்சல் தூக்கியெறிவது எப்படி? பதில்களைத் தேடிப் பயணிப்போம்.
***************
ஓவியம் : முத்து
இன்ஜினீயரிங் படிப்பு குறித்த பெருமிதம் இன்னும் தொடர்வது ஆச்சரியமாகவே இருக்கிறது. ஏனெனில் இப்போது இன்ஜினீயரிங் சீட் கிடைப்பது சிரமமில்லை. பள்ளிப்படிப்பு முடித்து ஒவ்வோர் ஆண்டும் வெளியேறும் மாணவர்களில் பெரும்பாலானோருக்கு மெடிக்கல் சீட் கிடைக்கிறதோ இல்லையோ, லட்சக்கணக்கில் காத்திருக்கின்றன பொறியியல் கல்லூரியில் இடங்கள். கடந்த ஆண்டு வரையிலும், தமிழகத்தில் பெரும்பான்மை மாணவர்களுக்கு விருப்பப் பாடம் ‘ஐ.டி., கம்ப்யூட்டர் டெக்னாலஜி’ தான்.
அதற்கு ஏற்றாற்போலவே, ‘கேம்பஸ் இண்டர்வியூ’ மூலம் வேலைவாய்ப்பு நிச்சயம் என்றபடி வெளியாகும் கல்லூரி விளம்பரங்களில் டாப் ‘ஐ.டி.’ நிறுவனங்கள் தவறாமல் இடம்பிடிக்கின்றன. இப்படியான கல்லூரிகளில் சேர்ந்து படித்து, ஒவ்வோர் ஆண்டும் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தியா முழுவதும் பொறியாளர்களாக வெளியேறுகின்றனர். இவர்களில் 53 சதவீதத்தினர்.
ஐ.டி. துறையில் சேர விருப்பம் தெரிவிப்பதாக, தேசிய வேலைவாய்ப்பு தகுதி படைத்தோர் குறித்த அறிக்கை (National Employability Report 2014) கூறுகிறது. இந்தியாவில் உள்ள 58,824 ஐ.டி. நிறுவனங்களில், தமிழ்நாட்டில் 7,074 நிறுவனங்கள் உள்ளன. (2011 மத்திய அரசுப் புள்ளிவிவரம்). இந்த நிறுவனங்களில், சில ஆயிரம் பேருக்குத்தான் வேலை கிடைக்கிறது. பல தடைகளைக் கடந்து ஐ.டி. துறை வேலை என்னும் கனவுக்கு ‘கால் லெட்டர்’ பெறும் இளைஞர்களின் நிலைமை அவர்கள் எதிர்பார்த்ததுபோல் பிரகாசமாகத்தான் இருக்கிறதா?
தொழில்நுட்பப் பூங்காவின் வானுயர்ந்த கட்டிடங்களில் பரபரப் பாக இயங்கும் ஐ.டி. நிறுவனங்களின் கதவு திறக்க, அந்தப் புதிய வரவுகள் உள்ளே நுழைகின்றன. பெரும் நிறுவனங்களில் இப்படி வந்து சேரும் நூற்றுக்கணக்கானவர்கள் உற்சாகத்துடன் வரவேற்கப்படுவார்கள்; வரிசையாக அமர்த்தப்படுவார்கள். பின்னர் அவர்களிடம் ஒப்பந்தப் படிவங்கள் அளிக்கப்படும்.
“நான்காம் பக்கத்தில் இடதுபுறம் கையெழுத்திடவும், 14-ம் பக்கத்தில் கீழே வலதுபுறத்தில் கையெழுத்திடவும்” என்ற குரலுக்குத் தக்க படிவங்களை நிரப்புவார்கள். என்ன ஏதேன்று படித்துப் பார்க்காமல் எப்படி, ஏன் கையெழுத்திடுகிறார்கள்? “ஒப்பந்தங்களைப் படித்துப் பார்க்க யாருக்கும் நேரமிருக்காது. அதனால் அப்படியே நிரப்பிவிடுவோம்” என்கிறார் பிரசன்னா. அதன் பிறகு புதிதாக வேலையில் சேர்ந்துள்ள அவர்கள் பயிற்சி பெறும் குழுவில் இணைக்கப்படுவார்கள்.
வாழ்வின் வண்ணங்கள்
“அப்றம் மச்சி... வேலைல சேர்ந்தாச்சு. இன்னிக்கு நீதான் ட்ரீட்”, “ப்ராஜக்ட்ல கலக்கிட்ட, ட்ரீட்”, “பைக் வாங்கிட்ட ட்ரீட்” என நண்பர்களின் அன்புக் கட்டளைகள் தொடர - ஒவ்வொரு வாரமும் எஃப். பி.ல ‘செல்ஃபி’, ‘க்ரூப்பி’னு லைக்ஸ் அள்ளும். கிளையண்டுக்கு ஏற்ற உடை, மதிய உணவுக்கு பீட்சா ஷாப், அவ்வப்போது காபி டே என ஐ.டி. வாழ்க்கையின் வண்ணங்கள் அனுதினமும் அழகழகாக மலர்வதாகத் தெரியும். “நினைத்ததை அப்பவே வாங்கிடு” என்று தூண்டிக்கொண்டேயிருக்கும் பாக்கெட்டில் துருத்திக்கொண்டி ருக்கும் கிரெடிட் கார்ட்.
இதையெல்லாம் தவிர்க்க முடியாதா என்ன? இதற்குப் பதில் போல், “எனக்கு வேற வேலை இருக்கு. அநாவசிய செலவெல்லாம் பிடிக்காதுன்னு சொல்லிட்டு தள்ளி இருக்க முடியாது. தனியா ஒதுக்கப்பட்ட மாதிரி தோணும். அவ்வப்போது ஃபுட் கூப்பன், அலுவலக வளாகத்திலயே கடைகள் என இந்தக் கலாசாரத்தை நிறுவனங்களே பரப்பவும் செய்றாங்க” என்று சொல்கிறார் சுகந்தி.
பயிற்சி முடிந்து புராஜக்ட் வேலைகளில் சேர்க்கப்படும் புதியவர்கள் ஏதாவது குழுவில் இணைக்கப்பட்டு, ஒரு பகுதி வேலையை மட்டும் முடிக்கும்படி அமர்த்தப்படுவார்கள். இதுவே சிறிய நிறுவனமாக இருந்தால் முழு வேலையையும் ஒருவரே முடிக்க நேரலாம். இரண்டிலும் வேலைப் பளு ஒன்றுதான்.
வருடத்துக்கு 15 நாட்கள் சி.எல். (தற்செயல் விடுப்பு) வழங்கப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், மேனேஜரைச் சந்தித்து விடுப்பு கேட்பது அத்தனை எளிதல்ல. “கேண்டீனில் சாப்பிடும் நேரம் தொடங்கி, பார்க்கிங்கில் கார் எடுப்பதுவரை ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் முதல் அறிமுகத்தை ஏற்படுத்த வேண்டும். டீம் லீடரையும், மற்ற மூத்தவர்களையும் தாண்டி மேனேஜர் கண்ணில் படுவதற்கான திறனை வளர்ப்பதும் ஐ.டி. துறையில் பிழைத்திருக்க அவசியமானது” என்கிறார் அருண். புதுமுகமாய் வருபவருக்கு இந்த சூட்சுமம் புரிபடவே பல மாதங்கள் ஆகிவிடும்.
வேலை நிரந்தரம், பதவி உயர்வு, வேலை நீக்கம் என ஒவ்வொரு முடிவுக்கும் எது அடிப்படை என்று புரிந்துகொள்வதும் அத்தனை எளிதல்ல. பல ஆண்டுகள் இந்தத் துறையில் பணியில் உள்ளோரைக் கேட்டாலும், சரியான பதில்களை அறிய முடிவதில்லை. இப்படித்தான் ஐ.டி. சூழலுக்குத் தக்கவாறு இளைஞர்கள் தயாரிக்கப்படுகின்றனர்.
**********************
எல்லாத் துறைகளிலும் புதுமுகங்களுக்குத் தொடக்கத்தில் சிக்கல் இருக்கும். ஆனால் ஐ.டி. துறையில் புதியவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ‘எக்ஸ்ட்ரா லார்ஜ்’ஆகவே இருக்கின்றன.
புது மாப்பிள்ளை மவுசாவது 15 நாட்கள் வரையில் தாங்கும், ஆனால் ஐ.டி.யிலோ வேலைக்குச் சேரும்வரைதான், அதுபற்றிய பிரமையெல்லாம். வணக்கம் சொல்லி வரவேற்கும்போது சிநேகமாகச் சிரிக்கும் ‘டீம் லீடர்’- அடுத்த நிமிடத்திலிருந்தே ஆர்டர்களால் சித்தம் கலங்கவைப்பார். தேர்ந்த திரைப்படங்களில்கூடக் காணக் கிடைக்காத இன்ஸ்டண்ட் ட்விஸ்டுகள் ஐ.டி. துறையில் சாதாரணம்.
ஒவ்வொரு அலுவலகத்திலும் தனியாகப் பயிற்சித் துறைகளைச் செயல்படுத்துகிறார்கள். “புதுசா வர்றவங்க எல்லாருக்கும் பயிற்சி வகுப்புகள கட்டாயம் நடத்துவாங்க. ‘காலேஜில் நீங்க, கறுப்பா பயங்கரமான விசயங்களப் பத்தி படிச்சிருப்பீங்க, ஆனா நாங்க சொல்லித்தரது பயங்கர கறுப்பு பத்தி’ங்கிற மாதிரி 2 மாதங்களுக்கு வகுப்பு நடத்துவார்கள்” என்று கிண்டலாக விளக்குகிறார் விஷ்ணு கார்த்தி. ஜாவா, டாட் நெட், விபி, ஒபன் சோர்ஸ் போன்றவை கல்லூரியில் படித்தவைதான். ஆனால், ஒவ்வொரு நிறுவனத்துக்கும் தனிப்பட்ட பேட்டர்ன் கடைப்பிடிக்கப்படும்.
தனியாக வகுப்புகள் எடுப்பது ஐ.டி. துறையின் சிறப்பம்சம். ஏன் இப்படிச் செய்கிறார்கள் ?
“ வேலை பார்க்கும்போது அப்பப்ப தெரிஞ்சுக்கிற பல விஷயங்கள ஒரு கிளாஸ்ல சொல்லித்தர்றதுக்குக் காரணம் இருக்கு. டிகிரி வாங்கிய அறிவெல்லாம் இதுக்குப் பத்தாதுங்கிறத ரொம்ப சைலண்டா சொல்றதுக்கும், ஐ.டி. ஃபீல்டுக்கு ஏத்தபடி புதுசா வந்தவங்களோட மனநிலையைப் பழக்குவதற்காவும் தான் கிளாஸ் நடக்குதுன்னு நினைக்கிறேன்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன்.
தொழில் நிறுவனங்களின் தேவைக்கும் மாணவருடைய திறனுக்கும் அதிக இடைவெளி இருக்கிறது என்ற வாதத்தை நாஸ்காம் என்ற ஐ.டி. நிறுவன உரிமையாளர்களின் அமைப்பு முன்வைக்கிறது. நாஸ்காம் அமைப்பின் தமிழ்நாடு, கேரள மண்டல இயக்குநர் கே. புருஷோத்தமன், “தமிழ்நாட்டுல வருஷத்துக்கு 30 ஆயிரம் பேர் ஐ.டி. ஐ.டி.லயும் சர்வீஸ் செக்டார்லயும் புதுசா வேலைக்கு வாறாங்க.
இதுல பாதிக்கும் மேற்பட்டவங்க கம்ப்யூட்டர், லேப் டாப்பெல்லாம் யூஸ்ஃபுல்லா பயன்படுத்துறாங்க. ஆனால், 30 சதவீதம் பேர்தான் தொழில் நிறுவனங்களின் இன்றைய தொழில்நுட்பத் தேவையை பூர்த்தி பண்றாங்க. பி.எச்.பி. உள்ளிட்ட புதிய கம்ப்யூட்டர் லாங்வேஜைப் படிச்சிருக்காங்க. லாங்க்வேஜ் ஸ்கில், வாடிக்கையாளர்களுடனான கம்யூனிகேஷன் இதுல எல்லாம் நம்மோட மாணவர்கள் ஆரம்ப நிலையில்தான் இருக்காங்க” என்கிறார்.
பயிற்சி முடிந்ததும் இதுதான் உங்கள் புராஜெக்ட், இதுதான் உங்கள் குழு என்று சொல்லும்போது ஒவ்வொரு புதிய ஊழியருக்கும் மனசுக்குள் பட்டாம்பூச்சி சிறகடிக்கத் தொடங்கும். ‘யு ஹாவ் பீன் அசைண்டு டு வொர்க் வித் மிஸ்டர் ரமேஷ் டீம், அஸ் எ ஜுனியர் சாஃப்ட்வேர் டெவலப்பர்’ என்று மின்னஞ்சலில் தேவ செய்தி வரும்போது, கால்கள் தரையில் இருக்காது.
அந்த டீமில் ஏற்கெனவே இருந்த சீனியர் ஒருவரை வீட்டுக்கு அனுப்பியதன் விளைவாக, அவருக்குக் கீழே இருந்தவர்களுக்குச் சங்கிலித் தொடராக புரமோஷன் கிடைத்தது. அங்கே பிடிக்கிற நெருப்பு அனுமார் வாலில் எரிந்ததைப் போல் நீண்டுகொண்டே போகும்.
ஆனால், இவ்வாறு குழுக்களில் அமர்த்தப்பட்ட பின்னர், ஒருவர் புதிய விஷயங்களை அறிந்துகொள்வதற்கும், கல்வியை மேம்படுத்திக்கொள்வதற்குமான வாய்ப்பு குறைவு. “நிறுவனம் எவ்வளவு பெருசோ அந்த அளவுக்கு நம்மோட திறமை கொறஞ்சுபோயிரும். ஒரு புராஜெக்ட்டோட ஒரு பகுதியை மட்டும் திறமையா செஞ்சு முடிக்கும் ஒருத்தரால முழுத் திட்டத்தையும் பத்திப் பெருசா தெரிஞ்சுக்க முடியாது. அதற்கான நேரமும் இருக்காது” என்கிறார் ஐ.டி. பணியாளர் செந்தில்.
ஐ.டி. பணியாளர்கள் வேலை, ரயில் முன்பதிவு இணையதளத்தில் ஒரு சிறு மாற்றத்தைச் செய்ய வேண்டியதாக இருக்கலாம். அல்லது ஒரு மென்பொருளைப் பற்றித் தகவல்கள் கூறி அதை மற்ற நிறுவனத்துக்கோ, தங்கள் நிறுவனத்துக்குள்ளேயோ விற்க வேண்டியிருக்கும். “இந்த வேலையைச் செய்வதற்கு பி.இ. முடிச்சிருக்க வேண்டியதில்ல. பேஸிக்கா கம்ப்யூட்டரப் பத்தி தெரிஞ்சிருக்கிற யாரு வேணும்னாலும் இதைச் செய்யலாம்.
அதனால்தான் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸோ ஐ.டி.யோ படிக்காதவங்களையும், பி.இ.மெக்கானிக்கல், எலக்டிரிக்கல்ன்னு ஐ.டி.க்குச் சம்பந்தமே இல்லாத படிப்பு படிச்சவங்களையும் வேலைக்கு எடுத்துக்கிறாங்க. இங்கே நம்மோட ஜாப்புக்குத் தேவையான டெக்னாலஜிய வேணும்னா கத்துக்கிடலாம். வேற பெரிய டெக்னாலஜி எதையும் கத்துக்கிட முடியாது” என்கிறார் ஐ.டி. பணியாளர்களின் அமைப்பான நாலேஜ் புரொபெஷனல் ஃபாரத்தைச் சேர்ந்த அருண்.
திறமையான மாணவர்கள் வேண்டுமென நிறுவனங்கள் கோரும், அதே நேரத்தில் வேலைச் சூழலோ மாணவர்களின் திறமையை மழுங்கடித்துவிடும். இந்த முரண்நகைதான் ஐ.டி.துறையின் உண்மை நிலை.
****************

CONCESSION - SCHEME FOR SC & ST

ஆந்திராவின் குண்டூரில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த, பட்டியல் இனத்தவருக்கான துணைத் திட்டத்தை அமல்படுத்தும் நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார், அம்மாநில சமூக நலத்துறை அமைச்சர் கிஷோர் பாபு.
பட்டியல் இனத்தவர்களுக்கான துணைத் திட்டங்கள் சரியாகச் சென்றடையாத மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.
சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதில், பிற மாநிலங்களை ஒப்பிடும்போது, குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்திருக்கும் மாநிலம் தமிழகம். எனினும், பட்டியல் இனத்தவர்களுக்கான துணைத் திட்டங்கள் சரியாகச் சென்றடையாத மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகமும் இருக்கிறது எனும் தகவல் சற்று அதிர்ச்சி தருகிறது. அரசு வகுக்கும் பொதுத் திட்டங்களில் தலித் மற்றும் பழங்குடி மக்களின் வளர்ச்சிப் பயன்பாடுகள் விடுபட்டுப்போவதால் அதில் கூடுதல் கவனம் செலுத்தும் வகையில், 1979-ல் சிறப்பு உட்கூறுத் திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியது. அதன்படி, தனது நிதித் திட்டத்தில் இந்திய அளவில் 16% ஆகவும், மாநில அளவில் 19% தலித்துக்கான ஆகவும் துணைத் திட்ட நிதி ஒதுக்கீடு இருக்க வேண்டும். நடைமுறையில் அவ்வாறு இல்லாவிட்டாலும் தற்போது எஸ்.சி / எஸ்.டி. துணைத் திட்டமாக ஆண்டுக்கு சுமார் ரூ. 2,000 கோடிக்கு மேல் ஒதுக்கப்படுகிறது.
அதேசமயம், 35 ஆண்டுகள் கடந்த பின்னும், பின்தங்கிய மக்களின் பொருளாதார வளர்ச்சியில் இத்திட்டங்கள் தன்னிறைவை ஏற்படுத்திவிடவில்லை. ஒதுக்கப்படும் நிதி பயனாளிகளைச் சரிவரச் சென்றடைவதில்லை என்று இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை ஆண்டுதோறும் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி வருகிறது. சமூக - பொருளாதாரத்தில் பின்தங்கிய பட்டியல் இனத்தவரை ஒட்டுமொத்த மற்ற மக்க‌ளோடு, சமத்துவமாக ஒன்றிணைக்கும் சிறப்புக் கூறுகள் 70% பின்னடைவில் இருப்பதாக இந்திய அரசின் சமூக நீதித் துறை வெளியிட்டுள்ள 50-வது ஆண்டு அறிக்கை கூறுகிறது. இத்திட்டத்தைச் சரியாக நிறைவேற்றுவது சாத்தியமில்லையா எனும் கேள்விக்கு, ஆக்கபூர்வமான விடையை ஆந்திரா, கர்நாடகா மாநிலங்கள் தருகின்றன. பட்டியல் இனத்தவர்களுக்கான துணைத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான தனிச் சட்டத்தை அம்மாநிலங்கள் கொண்டுவந்திருக்கின்றன.
நீடிக்கும் சிக்கல்கள்
ஆனால், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இத்திட்டங்களை நிறைவேற்றுவதில் அத்தனை அக்கறை காட்டப்படுவதில்லை. திட்டக் குழுவின் நடைமுறைப்படி, திட்டங்கள் தேவைப்படும் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே அவற்றை உருவாக்குவதிலும் இன்றைக்குப் பங்கேற்றுள்ளனர். போராடிப் பெற்ற உரிமை அது. ஆனால், அந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தேக்கம் ஏற்படுவது பெருத்த ஏமாற்றம‌ளிக்கிறது.
நிலைமை இப்படியே தொடர்ந்தால் இந்திய அரசியல் அமைப்பு வழிகாட்டும் சமூக நீதி என்பது பொருளற்றதாகிவிடும். “இதை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் என்றால், அது ஏனைய நிதித் திட்ட நடைமுறைகளைப் போலத் தனிச் சட்டமாக்கப்பட வேண்டும்” என்கிறார் திட்டக் குழு உறுப்பினர் பால்சந்தர் முங்கேக்கர்.
பயிர்க் கடன், வீட்டு மனை வழங்குதல், ஊரக வளர்ச்சித் திட்டத்தில் வழங்கப்படும் தொகுப்பு வீடுகளுக்கு கான்கிரீட் தளம் அமைத்தல், பள்ளிகள் - விடுதிகளைத் தரம் உயர்த்துதல் ஆகிய திட்டங்களையும்
கடந்து, ஒரு மாநிலத்தின் பொதுத் திட்டத்தில் பட்டியல் இன மக்கள் வளர்ச்சியில் விடுபட்டுப்போன இடைவெளியை நிரப்புவது அவசியம். மேலும், அம்மக்களின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்படும் பின்னடைவையும் சரிசெய்ய வேண்டும். பட்டியல் இனத்தவரைப் பொருளாதாரரீதியாக முன்னேற்ற வேண்டும் என்பது துணைத் திட்டத்தின் கொள்கைகளில் ஒன்று. எனினும், சிறு தொழில், பெருந்தொழில், நடுத்தரத் தொழில் போன்ற பல்வேறு தொழில்களுக்காகப் பிறருக்கு ரூ. 3 கோடி அளவுக்கு நிதி வழங்கப்படும் நிலையில், பட்டியல் இனத்தவருக்கு ரூ. 50 லட்சம்தான் வழங்கப்படுகிறது. எனவே, தொழில்ரீதியான முன்னேற்றம் என்பது பட்டியல் இனத்தவரைப் பொறுத்தவரை நிறைவேறாத கனவாகவே இருக்கிறது.
திசைமாறும் நிதி
40% தலித் மக்கள் வசிக்கும் பகுதிகளில்தான் துணைத் திட்ட நிதியைப் பயன்படுத்த வேண்டும் என்பது நடைமுறை. ஆனால் 40% தலித் மக்கள் வசிக்காத பகுதிகளிலும் இந்த நிதி செலவழிக்கப்படுகிறது என்பதுதான் முரண். பல மாநிலங்களில் இந்நிலைதான். தாழ்த்தப்பட்ட / பழங்குடி பிரிவினருக்குள்ளேயே மிகவும் பின்தங்கியவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதி, நெடுஞ்சாலை, மின்சாரம், குடிநீர், விலையில்லாத் திட்டங்கள் போன்றவற்றுக்குச் செலவழிக்கப்படுவது அம்மக்களை அதிருப்தியில் ஆழ்த்துகிறது. நிதி வழங்குவதற்குக் காலம் தாழ்த்துவது, நிதியை மத்திய அரசுக்கே திருப்பி அனுப்புவது போன்ற அநியாயங்களும் நடக்கின்றன. சமூகரீதியான புறக்கணிப்புகளைச் சந்திக்கும் பட்டியல் இன மக்களின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் மத்திய அரசு கொண்டுவந்த இதுபோன்ற திட்டங்கள் இப்படி வீணடிக்கப்படுவது வேதனை தரும் விஷயம்.
ஒரு அரசுக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சியில் உண்மையிலேயே அக்கறை இருக்கிறது என்றால், அது அவர்களின் துணைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தீவிர‌ கவனம் செலுத்த‌ வேண்டும். குறிப்பாக தொழில், வேளாண்மை, விளையாட்டு, அறிவியல், கல்வி போன்றவற்றில் முன்னோடியாக விளங்கும் தமிழகம் இச்சட்டத்தைக் கொண்டுவருவதில் முனைப்பு காட்ட‌ வேண்டிய தருணம் இது.
ஆந்திரா - கர்நாடகாவின் அக்கறை
பட்டியல் இனத்தவருக்கான துணைத் திட்டங்களை நிறைவேற்றும் தனிச் சட்டத்தை, 2013-லேயே ஆந்திராவும் கர்நாடகாவும் கொண்டுவந்துவிட்டன. ‘தாழ்த்தப்பட்ட / பழங்குடியினருக்கான துணைத் திட்ட நிதி ஆதாரங் களைத் திட்டமிடுதல், ஒதுக்கீடு செய்தல் மற்றும் நடைமுறைப்படுத்துதல் சட்டம் - 2013’ எனும் பெயரில் இரு
மாநிலங்களும் இச்சட்டத்தை அறிமுகப்படுத்தின. இம்மக்களின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் சிறப்பான நடைமுறைகள் இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. பட்டியல் இன மக்கள் எதிர்நோக்கியுள்ள திட்டங்கள் அனைத்தும் அடுத்த 10 ஆண்டுகளில் முழுமையாக்கப்படும் என்றும் இச்சட்டம் உறுதியளிக்கிறது. ஏற்கெனவே உள்ள பொதுத் திட்டங்கள் அப்படியே செயல்படும் சூழலில், இந்தத் தனிச் சட்டத்தின்கீழ் பட்டியல் இன மக்களின் பொருளாதாரம், கல்வி, மனித வள மேம்பாடு, சமூக அந்தஸ்து, வாழ்வியல் பாதுகாப்பு ஆகியவற்றில் முழுக் கவனம் செலுத்தப்படும். திட்டங்களைக் காலம் தாழ்த்தாமல் முழுமையாகச் செயல்படுத்தும் துறைகளுக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் விருதுகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அடுத்த நிதியாண்டு வருவதற்குள் ஆறு மாதத்துக்கு முன்பாகவே துணைத் திட்டச் செயலாக்க வரைவு அறிக்கைஉருவாக்கப்படும். இத்திட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப் படுகிறதா என்பதைக் கண்காணிக்க முதலமைச்சர் தலைமை யில் உள்ள‌ குழுவில் சமூக நலத் துறை, பழங்குடியினர் நலத் துறை, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை, வருவாய்த் துறை,
கிராமப்புற வளர்ச்சி - ஊராட்சி அமைப்புகள், உயர்கல்வித் துறை ஆகியவற்றின் பிரதிநிதிகள் இருக்கிறார்கள். அந்தந்த தனித் தொகுதிகளின் சட்டமன்ற / நாடாளுமன்ற உறுப்பினர்களும் இக்குழுவில் இடம் பெறுவார்கள். மாவட்ட - ஊராட்சிகள் அளவிலும் இக்கண் காணிப்புக் குழுக்கள் செயல்படும். இக்குழு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடி இத்திட்டத்தின் செயல்பாடுகள், பயன்பாடுகள்குறித்து ஒளிவுமறைவின்றி மதிப்பீடு செய்யும்.
தற்போது சத்தீஸ்கர் மாநிலத்திலும் இச்சட்டத்தின் தேவை பேச்சளவில் வந்துவிட்டது. உண்மையில், எல்லா மாநிலங்களிலும் இதன் தேவை விவாதிக்கப்பட்டுவருகிறது. தமிழகத்தில் இடதுசாரிக் கட்சிகள் தொடர்ந்து இதற்காகக் குரல் எழுப்பிவருகின்றன. இந்தக் கோரிக்கை தேர்தல் அரசியலிலும் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. ‌2016 தேர்தலையொட்டி, தலித் வாக்குகளைக் கவரும் நோக்கில், தலித் கட்சிகள் உட்படப் பல கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் இக்கோரிக்கையைச் சேர்க்கத் தயாராகிவருகின்றன. இதை அதிமுக அரசும் கவனித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
சமூக வளர்ச்சியில் காணும் ஏற்றத்தாழ்வுகளைக் களையவும், பாகுபாடுகளை ஒழிக்கவும் தீண்டாமை ஒழிப்புச் சட்டமும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டமும் எவ்வாறு பயனளிக்கின்றனவோ அதுபோலப் பொருளாதார - அரசியல் வளர்ச்சியில் பட்டியல் இன மக்கள் முன்னேற்றம் அடைய இந்தச் சட்டம் அவசியம். அப்போதுதான் சமூகத்தில் அம்மக்களுக்கான உரிமைகள் காக்கப்படும்.
- அன்புசெல்வம், ஆய்வாளர், எழுத்தாளர்,

https://www.indiegogo.com/ - CROWD FUNDING WEBSITE


வியாழன், 25 ஜூன், 2015

மாசுபட்ட மிகவும் மோசமான நகரம் டெல்லி

குழந்தைகளை நோயில் வீழ்த்தும் அளவுக்கு மாசுபட்ட மிகவும் மோசமான நகரம் டெல்லி
என்னுடைய எட்டு வயது மகன் பிராம், மூச்சுவிட மிகவும் சிரமப்பட்டான். இன்ஹேலர் இல்லாமல் அவனால் ஒரு நிமிடம்கூடச் சுவாசிக்க முடியாது என்றாகிவிட்டது. டெல்லிக்கு நாங்கள் வந்து ஒன்பது மாதங்களான பிறகு, ஒரு நாள் இரவு இன்ஹேலர்கூட அவனுக்கு உதவவில்லை. மூச்சுத் திணறல் கடுமையாகியது. நாங்கள் பீதியில் ஆழ்ந்தோம். என் மனைவி உடனே ஒரு நண்பரிடம் ஆலோசனை கேட்டாள். சில மைல்கள் தள்ளி இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனைக்கு உடனே செல்லுமாறு நண்பர் கூறினார். அனைவரும் காரில் புறப்பட்டோம்.
இந்தியாவின் வாகனப் போக்குவரத்து உலகிலேயே மிகவும் ஆபத்தானது. சிக்னல் விளக்குகள் எல்லாம் அலங்காரத்துக்காகத்தான். ஓட்டுநர்கள் தங்கள் விருப்பப்படிதான் போவார்கள். புதுடெல்லியில் இரவில் சாலைகள் முழுக்க லாரிகளின் ஆதிக்கம்தான். மயிர்க்கூச்செரிய வைக்கும் பயணம் அது. மருத்துவமனையில் நுழைந்ததுமே டாக்டர்கள் ஸ்டெராய்ட்களை உள்செலுத்தினார்கள். அதன் பிறகு, மேல் சிகிச்சைக்கு 1,000 டாலர்களை (சுமார் ரூ. 63,000) கொடுத்தால்தான் ஆயிற்று என்று பிடிவாதம் பிடித்தார்கள். எப்படியோ ஒரு வாரம் கழித்து உடல் தேறி பிராம் வீடு திரும்பினான்.
உண்மையில், மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் என்னைத் தெற்காசிய நிருபராக ‘நியூயார்க் டைம்ஸ்’ நிர்வாகம் அறிவித்தபோது நானும் என் மனைவியும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தோம். இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சுற்றிப் பார்க்கலாம் என்ற அத்தனை ஆசையாக இருந்தது அப்போது. காசு போடாவிட்டால் நகர மறுக்கும் பிச்சைக்காரர்கள், 120 டிகிரி வரை அடிக்கும் வெயில் என்று நண்பர்கள் வாயிலாகக் கேள்விப்பட்ட எல்லாவற்றுக்கும் தயாராக இருந்தோம். ஆனால், குழந்தைகளை நோயில் வீழ்த்தும் அளவுக்கு மாசுபட்ட நகரமாக டெல்லி இருக்கும் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. டெல்லிக்கு ஆபத்து என்பது நிலம், நீர், காற்று, உணவு, ஈக்கள் என்று எல்லாவற்றாலும் வருகிறது என்பதைப் பிறகுதான் புரிந்துகொண்டோம். இவையனைத்தும் ஆண்டுதோறும் லட்சக் கணக்கான இந்தியர்களைக் கொல்கின்றன. உலகிலேயே மிகவும் மோசமான சுகாதாரம் நிலவும் நகரங்களில் ஒன்று டெல்லி. டெல்லி மாநகரின் சுமார் 44 லட்சம் குழந்தைகளில் சரிபாதிப் பேருக்கு நச்சுக் காற்று காரணமாக, கடுமையான நுரையீரல் நோய்கள் வருகின்றன என்று பின்னர் அறிந்துகொண்டேன்.
தலைநகரின் தலைவிதி
மக்கள் தொகை அதிகமுள்ள, மிகப் பெரிய மாநகரங்களில் மோசமானது டெல்லிதான். உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கைப்படி, பெய்ஜிங் நகரத்தைவிட டெல்லி நகரக் காற்று இரண்டு மடங்கு அசுத்தப்பட்டிருக்கிறது. உலகில் மாசு அதிகமாக உள்ள 25 நகரங்களில் ஒன்று டெல்லி. பி.எம். 2.5 என்ற துகள்தான் காற்று மாசடைவதற்கு முக்கியக் காரணம். அது மிகவும் மாசுபட்ட நகரமான பெய்ஜிங்கிலேயே 500 என்ற கணக்கில்தான் இருக்கிறது. ஆனால், டெல்லியிலோ 1,000 (இரண்டு மடங்கு) என்ற அளவில் இருக்கிறது. என்னுடன் பழகிய அமெரிக்க நண்பர்களில் கணிசமானவர்கள் தங்களுடைய குழந்தைகளை டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகப் பள்ளியிலிருந்து விலக்கிக்கொண்டுவிட்டனர். அடுத்த ஆண்டு இந்தப் பள்ளிக்கூடத்தில் சரிபாதிக்கும் மேல் காலியிடமாகத்தான் இருக்கும்.
காற்று மாசுபட்ட நகரில் வாழும் குழந்தைகளின் நுரையீரல் நிரந்தரமாகவே பாதிப்புக்குள்ளாகிறது. பாதிப்பு குறைவான நகரங்களுக்கு அவர்கள் குடிமாறினாலும் முதலில் ஏற்பட்ட பாதிப்பு அகல மறுக்கிறது. நுரையீரல் முழுச் செயல்பாட்டை இழந்தவர்களுக்கு விரைவில் மரணம் ஏற்படுகிறது. ஊனமடையவும் வாய்ப்பு அதிகம். ரத்த அழுத்தமும் ரத்தத்தில் வேண்டாத கொழுப்புச் சத்தின் அளவும்கூட அதிகரிக்கிறது. நுரையீரல் பாதிப்புக்குள்ளாகிய குழந்தைகள் அதிக நாட்களுக்கு வாழ்வது கடினம். காற்று மாசடைவதால் குழந்தைகளின் அறிவுத்திறன் குறைகிறது. மூளை வளர்ச்சிக் குறைவு, வலிப்பு நோய், நீரிழிவு போன்றவை ஏற்படுகின்றன. குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் பாதிக்கப்படுகின்றனர். டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால்கூட கர்நாடகத்துக்குச் சென்று இயற்கை சிகிச்சை செய்துகொண்டார்.
சாக்கடை நீர்க் குளியல்!
டெல்லியின் மாசுக்குக் காற்று மட்டும் காரணம் அல்ல. சுமார் 60 கோடி இந்தியர்கள் திறந்த வெளியில்தான் மலம் கழிக்கிறார்கள். இந்தக் கழிவுகளில் பெரும்பாலானவை எந்த விதச் சுத்திகரிப்பும் இல்லாமல் அப்படியே ஆற்றிலும் வாய்க்கால்களிலும் கலக்கின்றன. இது எங்கள் குடியிருப்புக்குள்ளேயே வரும் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. நாங்கள் குடிவந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு, பக்கத்து வீட்டுக்காரர் அவருடைய வீட்டுக் குழாயில் சாக்கடைத் தண்ணீர் வருவதாகக் கூச்சல் போட்டார். அந்தத் துர்நாற்றம் வீடு வீடாகப் பரவியது. வீட்டுக் கழிவுநீர்க் குழாய் அடைத்துக்கொண்டபோது வீட்டைக் கட்டியவர் குழாய்களைத் திறந்துபார்த்து அடைப்பை நீக்கியிருக்கிறார். அப்போது கழிவுநீர் குட்டையாகத் தேங்கி, அப்படியே ஊறிக் குடிநீர் குழாயில் சேர்ந்து வீடுகளுக்கு வரத் தொடங்கிவிட்டது பின்னர் தெரியவந்தது. அந்த நேரம் பார்த்து நான் குளித்துக்கொண்டிருந்தேன். உடல் முழுக்கத் துர்வாடை. உடனே, குளிப்பதை நிறுத்திவிட்டு துண்டால் உடலைத் துவட்டிக்கொண்டு வெளியேறினேன்.
அலட்டிக்கொள்ளாத இந்தியர்கள்
ஆண்டின் பெரும்பாலான நாட்களில் யமுனை நதி ஓடாது. சாக்கடை நீர் தேங்கியபடியே இருக்கும். அத்துடன் திடக் கழிவுகளும் சேர்ந்து மிதக்கும். இறந்துபோன தெரு நாய்கள், குரங்குகள், பூனைகள், கால்நடைகளின் எச்சங்களும் யமுனையில்தான் தூக்கி வீசப்படும். இந்தக் கழிவுகளை ஈக்களும் கொசுக்களும் இதர பூச்சிகளும் மொய்த்துக்கொண்டேயிருக்கும். போதாததற்கு மனிதக் கழிவுகளும் அப்படியே நேரடியாக இதில் கலக்கவிடப்படும். இதில் மேயும் பூச்சிகள் அப்படியே மனிதர்களையும், வீட்டில் சமைத்து மூடாமல் வைக்கும் உணவுகளையும் மொய்க்கும். டெல்லி மாநகரின் பெரும்பாலான பகுதிகளுக்குக் குழாயில் வரும் நீரே துர்நாற்றம் அடிக்கும். இந்தியாவில் குழந்தைகளின் வளர்ச்சிக் குறைவுக்குக் காரணமே பொதுச் சுகாதாரமின்மைதான். இந்தச் சுகாதார நிலைகளையெல்லாம் வரிசைப்படுத்திப் பார்த்தால், இந்தியா மிகவும் மோசமான நிலையில் இருப்பது புரியும். ஆனால், மக்கள் இதைப் பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் அன்றாட வாழ்க்கையை நடத்துகிறார்கள்.
ஒரு நாள் பிற்பகல் எங்களுடைய குடியிருப்பின் ஒரு பகுதியில் பழைய குப்பைகளுடன் ரப்பர், தார், பிளாஸ்டிக் போன்றவற்றைப் போட்டு யாரோ எரிக்கத் தொடங்கினார்கள். நச்சுத்தன்மையுள்ள அந்தக் கனமான காற்று அப்படியே படர்ந்து எல்லா வீடுகளுக்குள்ளும் பரவியது. தனது சிநேகிதியுடன் நடைப் பயிற்சியில் இருந்த என் மனைவிக்கு மூச்சடைப்பு ஏற்பட்டது. கண்களில் எரிச்சல் ஏற்பட்டு நீர் சுரந்தது. நெஞ்சு வறண்டு கடும் இருமல் தொடங்கியது. அவர்கள் வேகமாக வீட்டுக்குள் வந்து கதவை உள்பக்கமாகத் தாளிட்டுக்கொண்டார்கள். அப்போது பிராமுக்கு மீண்டும் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
பிராமை நோயாளியாக்கிய டெல்லி
அடுத்த ஐந்து நாட்களுக்கு பிராம் வீட்டிலேயே படுத்திருந்தான். என் மனைவி ஸ்டெராய்டு மருந்துகளைக் கொடுத்துவந்தாள். தன்னுடைய அண்ணன், நண்பர்களைவிட தான் பூஞ்சையாக இருக்கிறோமே என்று பிராம் வருத்தப்பட்டான். டெல்லிக்கு வருவதற்கு முன்னால் அமெரிக்காவில் அவனுக்கு ஓரிரு முறை மூச்சுத் திணறல் லேசாக இருந்தது. போகப்போகச் சரியாகிவிடும் என்று அமெரிக்க டாக்டர்கள் கூறினர். ஆனால், டெல்லிக்கு வந்த பிறகு அவன் முழு ஆஸ்துமா நோயாளியாகிவிட்டான். அமெரிக்காவிலேயே தங்கியிருந்தால் ஆஸ்துமா அவனுக்கு வந்திருக்குமா? டெல்லியில் கால்பந்து, ஹாக்கி விளையாடும் மைதானங்களின் பக்கவாட்டில் நடந்து போனால் ஏராளமான இன்ஹேலர்களைப் பார்ப்பீர்கள். குழந்தைகள் ஏதும் அறியாதவர்கள், நல்லது செய்வோம் என்று அவர்கள் நம்மைத்தான் நம்பியிருக்கிறார்கள். சுகாதாரக் கேடான ஊர்களில் அவர்கள் வாழுமாறு செய்வது நம் அனைவருடைய தவறு. சிறு வயதில் ஏற்படும் சாதாரண பாதிப்பு அவர்களுடைய எதிர்கால வாழ்க்கையையே பறித்துவிடும். நாங்கள் மீண்டும் வாஷிங்டன் திரும்புகிறோம். இதைச் சொன்னவுடன் இரு மகன்களுக்கும் எல்லையில்லாத மகிழ்ச்சி. மூத்த மகன் ஏடென் தனக்கு ஒரு சைக்கிளும் ஸ்கேட்டிங் பலகையும் வாங்கித் தர வேண்டும் என்று இப்போதே கேட்டுவிட்டான். வாஷிங்டன் போனால், என்னுடைய ஆஸ்துமாவும் போய்விடும் என்று உற்சாகமாகக் கூவினான் பிராம்.
-கார்டினர் ஹாரிஸ்,
நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் தெற்காசிய நிருபராக டெல்லியில் மூன்று ஆண்டுகள் பணியாற்றியவர்.
சுருக்கமாகத் தமிழில்: சாரி

நெருக்கடி நிலையில் 40 ஆண்டுகள்: கருப்பு நினைவுகள்

நெருக்கடி நிலையில் 40 ஆண்டுகள்: கருப்பு நினைவுகள்

1974 அக்டோபரில் பாட்னா தலைமைச் செயலகத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபடும் ஜெயப்பிரகாஷ் நாராயண்.
நெருக்கடி நிலைப் பிரகடனத்துக்கு முன்னதாகவே இந்திராவின் சர்வாதிகாரம் இந்தியாவைப் பீடிக்கத் தொடங்கிவிட்டது. வங்கதேசப் போருக்குப் பின் துர்கையாக காங்கிரஸாரால் முன்னிறுத்தப்பட்ட இந்திரா காந்தி, உண்மையாகவே தன்னை அப்படித்தான் கருதிக்கொண்டார். கட்சியிலும் ஆட்சியிலும் முழு அதிகாரத்தையும் தன் பிடிக்குள் கொண்டுவந்த இந்திரா, ஒருகட்டத்தில் நாட்டின் அரசமைப்புகளையும் தன் விரல் நுனி அசைவுக்குக் கொண்டுவரும் காய்களை நகர்த்தினார்.
நிர்வாகத்திலும் நீதித் துறையிலும் ஆளும் கட்சிக்கு - குறிப்பாக பிரதமருக்கு, ஆதரவாகச் செயல்படும் எண்ணம் உள்ளவர்களே பதவியில் இருக்க முடியும் என்பது அறிவிக்கப்படாத கொள்கையாகவே மாறியது. பிரதமரின் செயலகத்தில் முதன்மைச் செயலராக இருந்த பி.என். ஹக்சர் இதை வெளிப்படையாகவே அறிவித்தார். முன்னதாக, கோலக்நாத் வழக்கில் உச்ச நீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியது. அரசியல் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகள் உட்பட எதையும் பாதிக்கும் வகையில் அரசியல் சட்டங்களைத் திருத்தும் உரிமை நாடாளுமன்றத்துக்குக் கிடையாது என்பதே அது. இந்தத் தீர்ப்பைச் செல்லாததாக்கும் வகையில் 1971-ல் நாடாளுமன்றம் மூலம் 24-வது சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியது அரசு. இந்திரா அரசு செல்லவிருக்கும் பாதையை இதுவே தெள்ளத்தெளிவாகக் காட்டிவிட்டது என்று சொல்லலாம்.
அதிபர் இந்திரா
சீக்கிரமே இந்திராவின் மன ஓட்டத்தை அவருடைய நெருங்கிய சகாக்கள் வி.சி. சுக்லா, பிரணாப் முகர்ஜி, ஓம் மேத்தா, எஸ்.எஸ். ராய், பன்சிலால் போன்றோர் கட்சிக்குள் விதைத்தனர். விளைவு, “எதிர்க் கட்சிகளின் அக்கப்போர் அரசியலால் நிர்வாகத்தைச் செம்மையாகக் கவனிக்க முடிவதில்லை, பிரிட்டிஷ் நாடாளுமன்றப் பாணியை ஒட்டிய நிர்வாக முறைக்குப் பதிலாக, சுயமாகச் சட்டம் இயற்றிக்கொள்ளக்கூடிய (அமெரிக்க) அதிபர் பாணி அரசியல் முறைக்கு மாற வேண்டும்” என்று முன்னணி காங்கிரஸார் பலரும் பேச ஆரம்பித்தனர். எதிர்க் கட்சிகள், எதிர்க் குரல் என்றாலே எரிச்சலடைய ஆரம்பித்தார் இந்திரா. அப்போதுதான் அது நடந்தது.
சின்ஹாவின் அதிர்ச்சி வைத்தியம்
உத்தரப் பிரதேசத்தில் ராய் பரேலி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான இந்திரா காந்தியை எதிர்த்து சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராஜ் நாராயண் 1971-ல் போட்டியிட்டுத் தோற்றார். ஆனால், தேர்தலின்போது அதிகார துஷ்பிரயோகம் நடந்ததாகவும் வாக்காளர்களுக்குப் பணம் தரப்பட்டதாகவும் வழக்கு தொடுத்தார். அலாகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஜக்மோகன் லால் சின்ஹா 1975 ஜூன் 12-ல் அளித்த அதிரடியான தீர்ப்பில், இந்திரா காந்தியின் தேர்தல் செல்லாது என்று அறிவித்தார்.
6 ஆண்டுகளுக்கு எந்தத் தேர்தலிலும் அவர் போட்டியிடத் தடையும் விதித்தார். லஞ்சப் புகாரை நிரூபிக்க ஆதாரம் இல்லை என்ற அவர், அரசு அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்ட குற்றச்சாட்டை ஏற்றார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் இந்திரா காந்தி. நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் மனுவை விசாரித்தார். “ஒரு பிரதமராக நீடிக்க இந்திராவுக்குத் தடை இல்லை என்றாலும், அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்குரிய உரிமைகள், சலுகைகளைப் பெற முடியாது. நாடாளுமன்றத்தில் தீர்மானங்கள் மீது வாக்களிக்கும் உரிமையும் அவருக்கு இல்லை” என்றார்.
துஷ்பிரயோக வெற்றி
எதிர்க் கட்சிகள் இதை ஏற்கவில்லை. அதிகார துஷ்பிரயோகத்தால் தேர்தலில் வென்றவர் என்ற குற்றச்சாட்டு நீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்திரா காந்தி பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுப் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற முழக்கத்துடன் போராட்டத்தில் இறங்கின. டெல்லியில் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பேசிய ஜெயப்பிரகாஷ் நாராயண், ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட வேண்டும் என்று மக்களுக்கு அழைப்பு விடுத்தார். ஆட்சியாளர்களின் தவறான, சட்டத்துக்குப் புறம்பான ஆணைகளை போலீஸ் அதிகாரிகள் ஏற்காமல் நிராகரிக்க வேண்டும் என்றார்.
இந்திராவுக்கு ஏற்பட்ட நெருக்கடி
தனக்கு ஏற்பட்ட நெருக்கடியை நாட்டுக்கு ஏற்பட்ட நெருக்கடியாக மாற்றினார் இந்திரா. உள்நாட்டுக் கலகத்துக்கு எதிர்க் கட்சிகள் திட்டமிட்டிருக்கின்றன; நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என்று கூறி, மத்திய அமைச்சரவையைக்கூட ஆலோசனைக்கு அழைக்காமல், தானாகவே ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, அப்போதைய குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அஹம்மதுவுக்கு அனுப்பினார். அதை ஏற்று 1975 ஜூன் 24-ல் நெருக்கடி நிலை நிலவுவதாக அவசரச் சட்டம் மூலம் அறிவிப்பை வெளியிட்டார் பக்ருதீன் அலி அஹம்மது.
அமலுக்கு வந்தது நெருக்கடி நிலை
அன்றிரவே நாட்டின் முக்கியமான அனைத்துப் பத்திரிகை அலுவலகங்களின் மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன. எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் நாடு முழுக்கக் கைது செய்யப்பட்டு, இரவோடு இரவாகச் சிறைகளில் அடைக்கப்பட்டனர். அரசை எதிர்க்கும் அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அனைத்துத் தேர்தல்களும் நிறுத்திவைக்கப்பட்டன. மேற்கு வங்க முதல்வர் சித்தார்த்த சங்கர் ராய், நெருக்கடி நிலை கொண்டுவருவதற்கான வாய்ப்பை அரசியல் சட்டம் வழங்குவதை இந்திரா காந்திக்குக் கடிதம் வாயிலாகத் தெரிவித்து ஆலோசனை வழங்கினார். இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தி உள்ளிட்டோர் பதவி ஏதுமில்லாமலேயே அதிகாரங்களைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டனர்.
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இந்த நெருக்கடி நிலை அமல் நீட்டிக்கப்பட்டு வந்தது.
வானொலி, பத்திரிகைகளில் செய்திகள் தணிக்கை செய்யப்பட்டன. கைதானவர்களுக்கு அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. அவர்களுடைய குடும்பத்தினருக்கும் தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் (மிசா) கைதுகளுக்குப் பயன்படுத்தப்பட்டது. பொதுக்கூட்டங்கள், போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அரங்குகளில் கூட்டம் நடத்த போலீஸ் அனுமதி தேவை என்று வலியுறுத்தப்பட்டது. திரைப்படங்கள், நாடகங்கள்கூட அரசியல் கருத்துகளுக்காகத் தடைக்கு உள்ளாயின. எழுத்துரிமை, பேச்சுரிமை, கருத்துரிமைகள் ஒடுக்கப்பட்டன.
நிர்வாகச் சீர்திருத்தம்
இதற்கிடையே விவசாயத்திலும் தொழில்துறையிலும் உற்பத்தி பெருக 20 அம்சத் திட்டம் வகுக்கப்பட்டு, நாடு முழுக்க விளம்பரப்படுத்தப்பட்டது. அரசு ஊழியர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு அலுவலகங்களுக்கு வர வேண்டும். ரயில், விமானம் போன்றவை காலதாமதமின்றி ஓட வேண்டும் என்றெல்லாம் கூறப்பட்டு, அது வானொலிகள் மூலம் பிரச்சாரமாகவும் மேற்கொள்ளப்பட்டது. அரசியல் சட்டத்தின் 352-வது பிரிவின் கீழ், இந்திரா காந்தி அதிக அதிகாரங்களைப் பெற்று நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இந்தியாவில் இடதுசாரிகளும் வலதுசாரிகளும் ஒரே நேரத்தில் தாக்குதலுக்குள்ளாகி தலைமறைவு வாழ்க்கையில் அரசியலில் ஈடுபட்டது நெருக்கடி நிலையின்போதுதான். ஆர்எஸ்எஸ், ஜமாத்-இ-இஸ்லமி இரண்டும் தடைசெய்யப்பட்டன. ஜெயப்பிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய், விஜயராஜே சிந்தியா, சரண் சிங், ஆசார்ய கிருபளானி, அடல் பிஹாரி வாஜ்பாய், எல்.கே. அத்வானி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், சத்யேந்திர நாராயண் சின்ஹா உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டனர். தேசிய அளவில் நெருக்கடி நிலைக்கு அதிக விலை கொடுத்த கட்சிகளில் ஒன்றானது திமுக. மு.கருணாநிதி தலைமையிலான அரசு கலைக்கப்பட்டது. தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டார். நெருக்கடி நிலை அமலில் இருந்தாலும், கைதுசெய்யப்படும் ஒருவர் தனது கைதை எதிர்த்து வழக்கு தொடர உரிமை உண்டு என்று ஒன்பது உயர் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கின. ஆனால், இந்திரா காந்தியின் ஆதரவாளராக அறியப்பட்ட ஏ.என். ராய் தலைமையிலான உச்ச நீதிமன்றமோ அவற்றையெல்லாம் நிராகரித்தது. நெருக்கடி நிலைக் காலத்தில் கைது செய்யப்படுகிறவருக்கு அதற்கான காரணத்தைக் கூற வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிவிட்டது.
ரத்த சாட்சியம் ராஜன்
கேரளத்தில் கோழிக்கோடு பிராந்தியப் பொறியியல் கல்லூரி மாணவர் பி. ராஜன் என்பவர் நெருக்கடி நிலைக் காலத்தில் கைதுசெய்யப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, போலீஸ் காவலிலேயே இறந்தார். அது நாடு முழுக்கப் பேசப்பட்டது. நெருக்கடி நிலை நீங்கிய பிறகும்கூட அவருடைய வழக்கும் விசாரணைகளும் பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்தன. கடைசிவரை அவருடைய உடல் கிடைக்கவே இல்லை.
கொடூரமான குடும்பக் கட்டுப்பாடு
மக்கள்தொகைப் பெருக்கத்தைத் தடுக்க குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்ற இலக்கை எட்ட அதிகாரிகள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். வீடில்லாததால் வீதிகளில் படுத்திருந்தவர்கள், நள்ளிரவில் பஸ், ரயில்களைத் தவறவிட்டதால் பொது இடங்களில் தூங்கியவர்கள், ஏழைகள், சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று அப்பாவிகள் பலர் வலுக்கட்டாயமாகக் கருத்தடை அறுவைச் சிகிச்சைக்கு ஆளாக்கப்பட்டனர். டெல்லியில் துருக்மான் கேட் என்ற பகுதியில் அங்கீகாரம் இல்லாமல் குடிசையில் வாழ்ந்த மக்கள் முன்னறிவிப்புகூடத் தரப்படாமல் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். குடிசை வீடுகளை புல்டோசர்கள் தகர்த்துத் தரைமட்டமாக்கின. இதில் சிலர் பலியானதாகவும் கூறப்பட்டது. கருத்தடையை இந்தியில் ‘நஸ்பந்தி’ என்று அழைப்பார்கள். அப்போது வட இந்திய மக்களிடையே ஒரு கோஷம் மிகவும் பிரபலம்: ‘நஸ் பந்திகே தீன் தலால் - இந்திரா, சஞ்சய், பன்சிலால்’.
20 அம்சத் திட்டம் என்பது ஆரம்பத்தில் நல்ல பெயருடன் தொடங்கி, பிறகு மரியாதையை இழந்தது. அதிகாரிகள் மெத்தனம் காட்டினர். கடைசியில், அதைக் கேலி செய்யும் கோஷங்கள் பிரபலமாயின. ‘பிராப்ளம்ஸ் ஆர் பிளன்டி, பாயிண்ட்ஸ் ஆர் டுவென்டி, ரிசல்ட்ஸ் ஆர் எம்ப்டி’ என்பது இடதுசாரி மாணவர் இயக்கங்களால் பிரபலமானது.
இந்தியாவில் நெருக்கடி நிலை அமலில் இருந்த 21 மாதங்களில் 1,40,000 பேர் கைது செய்யப்பட்டதாக ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்தது. ஆனால், உண்மையான எண்ணிக்கை இதைவிடவும் அதிகமாக இருந்திருக்கக் கூடும்.
தேர்தலை அறிவித்தார் இந்திரா
மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகளின் அறிக்கைகளை நம்பி, 1977 ஜனவரி 18-ம் தேதி மக்களவைக்குப் பொதுத் தேர்தலை அறிவித்த இந்திரா காந்தி, எதிர்க் கட்சித் தலைவர்களை விடுதலை செய்தார். நெருக்கடி நிலையை மார்ச் 23-ல் நீக்கினார். அதற்குப் பிறகு ஸ்தாபன காங்கிரஸ், ஜனசங்கம், சோஷலிஸ்ட்டுகள், பாரதிய லோகதளம் ஆகிய நான்கு பெரிய எதிர்க் கட்சிகள் ஒரே அரசியல் கட்சியாக (ஜனதா) உருவெடுத்தன. “இந்தத் தேர்தல் ஜனநாயகமா, சர்வாதிகாரமா எது தேவை என்பதைத் தேர்வு செய்வதற்கான கடைசித் தேர்தல்” என்றே எதிர்க் கட்சிகள் பிரச்சாரம் செய்தன. வட இந்தியாவில் ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. இனியொரு முறை நெருக்கடி நிலையை மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறாமல் கொண்டுவர முடியாதபடிக்கு அரசியல் சட்டம் திருத்தப்பட்டது.
ஷா கமிஷன்
நெருக்கடி நிலையைக் கொண்டுவந்தவர்கள் யார், ஏன் என்பதை ஆராய நீதிபதி ஷா தலைமையில் விசாரணைக் கமிஷன் கொண்டுவரப்பட்டது. வாய்மொழி உத்தரவுகளை அதிகாரிகள் அமல்படுத்தக் கூடாது என்ற முக்கியப் பரிந்துரையை அது செய்தது. ஜனதா கட்சியின் தலைவர்களுக்கிடையிலான பதவிப் போட்டி காரணமாக அந்தக் கட்சி பிளவுபட்டது, ஆட்சியும் பறிபோனது. அடுத்த மக்களவைப் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. இந்திரா காந்தியே மீண்டும் பிரதமரானார்.
நெருக்கடி நிலை ஆட்சியை மீண்டும் நினைவுகூர சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே.அத்வானி, அப்படிப்பட்ட நிலை மீண்டும் ஏற்படுவதற்கான காரணிகள் இப்போதும் நிலவுகின்றன என்று பூடகமாக எச்சரித்திருக்கிறார். அவர் அதை விவரிக்கா விட்டாலும் இந்திரா காந்தி காலத்தைப் போலவே பிரதமர் அலுவலகம் என்பது அதிகாரக் குவி மையமாக இருப்பதைக் காண முடிகிறது. நாம் நெருக்கடியிலிருந்து நிரந்தரமாக மீண்டோமா இல்லையா என்பதைக் காலம்தான் கூற முடியும்!
Keywords: ஷா கமிஷன்இந்திரா காந்திநெருக்கடி நிலைஜெயப்பிரகாஷ் நாராயணன்பத்திரிகை சுதந்திரம்

***********
நெருக்கடி நிலைப் பிரகடனம்: 40 ஆண்டுகள் நிறைவு- ஜூன் 26
புகழ்பெற்ற இந்தித் திரைப்பட இயக்குநரான குல்சார் 1975-ல் சர்ச்சைக்குரிய திரைப்படமொன்றை வெளியிட்டார். சூறாவளி என்னும் பொருள்படும் ‘ஆந்தி’ என்ற அந்தத் திரைப்படம்தான் இந்திய ஜனநாயகத்தின் கருப்பு அத்தியாயமாக வர்ணிக்கப்படும், 1975-77ஆண்டுகளில் அமலில் இருந்த 21 மாத கால நெருக்கடிநிலைக் காலத்தில் தடைசெய்யப்பட்ட முதல் திரைப்படம். நாயகன்- சஞ்சீவ் குமார், நாயகி- சுசித்ரா சென்.
கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து சென்றுவிட்ட கணவனும், நாட்டின் புகழ்பெற்ற அரசியல்வாதியாக இருக்கும் மனைவியும் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்திக்க நேரும்போது என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
‘ஆந்தி’ நேரடியான அரசியல் திரைப்படமல்ல. எனினும் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியைச் சீண்டும்படியான காட்சியமைப்புகள் அந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்ததாகவும், நாயகியாக நடித்த சுசித்ரா சென்னின் ஒப்பனையும் நடை உடை பாவனைகளும் இந்திரா காந்தியைப் போல இருந்ததாகவும் கருத்துகள் உருவாயின. தென்னிந்தியாவில் இப்படம் திரையிடப்பட்டபோது உங்கள் பிரதமரைத் திரையில் காணுங்கள் என்றுகூட விளம்பரம் செய்தார்கள்.
முதல் தடை
படம் வெளியாகி 20 வாரங்கள் சக்கைப் போடு போட்ட பிறகே இது பிரதமரின் கவனத்துக்குச் சென்றது. அப்படம் தடை செய்யப்பட வேண்டிய ஒன்றா என்று தனது ஆலோசகர்களிடம் கேட்டபோது, அதற்கு அவசியமில்லை என்றே அவர்கள் சொன்னார்கள். எனினும் நெருக்கடிநிலைக் காலத்தில் அரசியல் காரணங்களுக்காகத் தடை செய்யப்பட்ட முதல் படம் என்ற பெருமை அதற்குத்தான் கிடைத்தது. 1977-ல் ஜனதா அரசு பொறுப்பேற்ற பிறகு இந்தப் படத்தின் மீதான தடை நீக்கப்பட்டு நாடு முழுவதும் திரையிடப்பட்டது.
1977-ல் வெளிவந்த ‘கிஸ்ஸா குர்ஸி கா’ என்ற திரைப்படம் நெருக்கடி நிலையை விமர்சித்ததற்காகத் தடை செய்யப்பட்ட மற்றொரு இந்தித் திரைப்படம். இதன் இயக்குநர் அம்ரித் நஹாதா அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர். படத்தின் அரசியல் பகடிகள் காங்கிரஸுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தின. சஞ்சய் காந்தியின் தலைமையில் ஒன்றுதிரண்ட காங்கிரஸ் தொண்டர்கள் இப்படம் திரையிடப்பட்ட திரையரங்குகளை அடித்து நொறுக்கினார்கள். படத்தின் பல பிரதிகளைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள். படத்தின் இயக்குநர் தனது திரைப்படத்தைப் பாதுகாப்பதற்காக உச்ச நீதிமன்றத்தின் உதவியை நாடினார். நீதிபதிகளுக்குத் திரையிட்டுக் காட்டுவதற்காகப் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த பிரதி சஞ்சய் காந்தியின் கார்த் தொழிற்சாலையில் வைத்து எரிக்கப்பட்டது. நெருக்கடி நிலை முடிவுக்கு வந்த பிறகு இந்தச் செயலில் ஈடுபட்டவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டது. அவர்களில் யாரும் தொழில்முறை குண்டர்கள் அல்ல. சஞ்சய் காந்தி தவிர, இந்திராவின் செயலாளர் ஆர்.கே. தவன், அவரது செய்தி ஒலி/ஒளிபரப்பு அமைச்சர் வி.சி. சுக்லா ஆகிய மூவரும் அப்போது இந்திய அரசியலின் நம்பிக்கை நட்சத்திரங்களாகக் கருதப்பட்டவர்கள்.
மவுனத்தின் பின்னணி
பிரபல பாலிவுட் நடிகரான சத்ருகன் சின்ஹாவின் எல்லாத் திரைப்படங்களுக்குமே நெருக்கடிநிலைக் கால இந்திரா அரசு ஏதாவதொரு வகையில் தொந்தரவு கொடுத்தது. இந்திராவின் எதேச்சாதிகாரப் போக்குக்கு எதிராகப் போராடிக்கொண்டிருந்த ஜெயப்பிரகாஷ் நாராயணின் தீவிர ஆதரவாளராக சத்ருகன் இருந்ததுதான் காரணம். இந்திராவுக்கு ஆதரவாக இல்லாததால் பின்னணிப் பாடகர் கிஷோர் குமாரின் பாடல்களை ஒலிபரப்புவதை அகில இந்திய வானொலி நிறுத்திக்கொண்டது.
நெருக்கடி நிலையை எதிர்த்து 1975-ல் தனிக்கட்சி ஒன்றை உருவாக்கிய தேவ் ஆனந்த், ஐ.எஸ். ஜோகர் ஆகிய இருவரும் பல தொல்லைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. நெருக்கடி நிலைக்கு ஆதரவாகச் செயல்பட நிர்ப்பந்திக்கப்பட்டதால் 1975-க்கும் 1977-க்கும் இடைப்பட்ட காலத்தில் பல இந்தித் திரைப்பட இயக்குநர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடினார்கள்.
நமது ஜனநாயகத்தை ஒரே ஆணையின் மூலம் வெறும் கற்பனையாக மாற்றிய, சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மிக முக்கியமான அரசியல் நிகழ்வாகக் கருதப்படும் நெருக்கடி நிலையைப் பற்றி இந்திய சினிமா ஏன் பேசவில்லை என்ற கேள்வியை இந்தப் பின்னணியில்தான் புரிந்துகொள்ள முடியும்.
1977 தேர்தலில் தோல்வியடைந்த பிறகும் இந்திரா அதிகாரம் மிக்க அரசியல் தலைவர்களில் ஒருவராகவே இருந்தார். மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்புகளை முற்றாக இழந்துவிடாத ஒரு கட்சியின் செயல்பாடுகளை விமர்சிப்பதன் ஆபத்தைப் புரிந்துகொண்ட இந்திய சினிமா நெருக்கடி நிலைக் காலம் பற்றி இன்று வரையிலும் மவுனம் சாதித்தே வருகிறது. 2004-ல் ஜெயப்பிரகாஷ் நாராயண் பற்றிய ஒரு திரைப்படத்தை தூர்தர்ஷனில் ஒளிபரப்புவதற்கு அப்போதைய காங்கிரஸ் அரசு மறுத்ததை நாம் நினைவுகூர வேண்டும்.
முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு
முப்பதாண்டுகளுக்குப் பிறகு 2005-ல் சுதிர் மிஸ்ராவின் இயக்கத்தில் வெளிவந்த ‘ஹசாரோன் குவாய்ஷேய்ன் அய்ஸி’ என்ற இந்தித் திரைப்படம் நெருக்கடி நிலையின் சமூக- பொருளாதார- அரசியல் அடிப்படைகளை விரிவாக ஆராய்ந்த திரைப்படமாகக் கருதப்படுகிறது. 1989-ல் மலையாளத்தில் ஷாஜி எம். காரூன் இயக்கத்தில் வெளிவந்த ‘பிறவி’ என்னும் படமும் நெருக்கடி நிலை பற்றிய முக்கியமான திரைப்படமே.
கருணாகரன் தலைமையிலான அப்போதைய கேரள காங்கிரஸ் அரசு, நெருக்கடி நிலைக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டது. மாணவர்களில் பலர் கடத்தப்பட்டனர். அவர்களில் ஒருவர் பொறியியல் மாணவரான ராஜன்.
ராஜனின் தந்தை ஈச்சர வாரியார் தனது மகனை மீட்கப் போராடினார். ராஜன், போலீசாரால் கடத்தப்பட்டுச் சித்திரவதைக்குள்ளாக்கிக் கொல்லப்பட்ட விஷயம் நெருக்கடி நிலை முடிவுக்கு வந்த பிறகு அம்பலமானது. இந்தப் பின்னணியில் உருவான மிகச் சிறந்த திரைப்படம்தான் ‘பிறவி’. பல விருதுகளைப் பெற்ற இந்தப் படம் நெருக்கடி நிலையின் அத்துமீறல்களை வலுவான கலை மொழியில் அம்பலப்படுத்தியது.
தமிழில் நெருக்கடி நிலை காலகட்டத்தைப் பற்றி மறைமுகமாகக்கூட எந்தவொரு திரைப்படமும் வெளிவந்ததாக நினைவில்லை. தனது திரைப்படங்களில் இந்திரா காந்தியைத் தொடர்ந்து கிண்டல் செய்துவந்த சோ, ‘முகம்மது பின் துக்ளக்’ என்னும் திரைப்படத்தை எடுத்தார். நெருக்கடி நிலைக்கு முன்பே பலமுறை மேடையேற்றப்பட்ட நாடகம் அது. இந்திராவின் எதேச்சாதிகார அரசியலைக் கிண்டல் செய்த அந்தத் திரைப்படம் ஒரு நகைச்சுவைப் படம் என்பதற்கு அப்பால் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
ஒரு சாட்சியம்
2012-ல் கோவாவில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட வந்தனா குப்தாவின் ஆவணப்படம் நெருக்கடி நிலை பற்றிய முற்றுப்பெறாத விவாதங்களுக்கான ஒரு சாட்சியம். 1971 - 1977 வரை சிறையில் இருந்த நக்ஸலைட் இயக்கத்தைச் சேர்ந்த பிரபாத் குமார் சௌத்ரி, பத்திரிகையாளரும் மனித உரிமைச் செயல்பாட்டாளருமான ஜான் தயாள், வரலாற்றாய்வாளர் உமா சக்ரவர்த்தி, தெரு நாடக நடிகர் அவிஜித் தத் ஆகியோரின் நெருக்கடி நிலை அனுபவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த ஆவணப்படம், வரலாறு என்பது சாக மறுக்கும் ஒரு பிசாசு என்பதை நெருக்கடி நிலை பற்றிய நினைவுகள் கிட்டத்தட்ட மறைந்தொழிந்துவிட்ட ஒரு தலைமுறைக்குச் சொல்கிறது.
தொடர்புக்கு: devibharathi.n@gmail.com

நெருக்கடி நிலையின் 40 ஆண்டுகள்: நெருப்பாற்று நாயகர்கள்

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-40-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7353539.ece?homepage=true&theme=true

வரலாற்றின் அலமாரியிலிருந்து ஒரு கட்டுரை...
நெருக்கடி நிலையின் 25-வது ஆண்டு நினைவு தினம் தொடர்பாகக் கூட்டங்களை நடத்தப்போவதாக பாஜக அறிவித்திருப்பது அபத்தமானது. 1975-77 நெருக்கடி நிலை காலகட்டத்தில் நெருக்கடி நிலைக்கு எதிரான போராட்டத்தின்போது பாஜக / ஆர்எஸ்எஸ் தலைவர்களில் பெரும்பாலானோர் துரோகம் இழைத்தனர். ஆர்எஸ்எஸ் அமைப்பின் அப்போதைய தலைவர் பாளாசாகேப் தேவரஸ், புணேயின் எரவாடா சிறையில் இருந்து இந்திரா காந்திக்குப் பல மன்னிப்புக் கடிதங்களை எழுதினார் என்பது மகாராஷ்டிர சட்டப்பேரவை நிகழ்ச்சிகளின் ஆவணங்களில் பதிவாகியிருக்கிறது. போராட்டத்திலிருந்து ஆர்எஸ்எஸ் விலகிக்கொள்வதாகவும், இந்திரா காந்தியின் 20 அம்சத் திட்டத்துக்காகப் பணிபுரியத் தயாராக இருப்பதாகவும் அந்தக் கடிதங்களில் அவர் குறிப்பிட்டார்.
ஆனால், அவர் எழுதிய எந்தக் கடிதத்துக்கும் இந்திரா காந்தி பதில் எழுதவில்லை. அடல் பிஹாரி வாஜ்பாயும் இந்திரா காந்திக்கு மன்னிப்புக் கடிதம் எழுதினார். அதை இந்திரா ஏற்றுக் கொண்டார். உண்மையில், 20 மாதங்கள் அமலில் இருந்த நெருக்கடி நிலையின்போது பெரும்பாலான சமயங்களில் பரோலில் வெளியில் வந்தார் வாஜ்பாய். அரசுக்கு எதிரான எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கப்போவதில்லை என்று எழுத்துபூர்வமாக இந்திரா காந்திக்கு அவர் உறுதியளித்திருந்தார். நல்ல விதமாக நடந்துகொள்வதாக உறுதியளித்ததன் பேரில் சிறையில் இருந்து வெளியே வந்த ஜன சங்க உறுப்பினர்கள்பற்றி அகாலி தலைவர் சுர்ஜித் சிங் பர்னாலா எழுதிய புத்தகம் பிரமாதமாக விவரித்திருக்கிறது.
ஆர்எஸ்எஸ் தந்த அதிர்ச்சி
நம்மில் பலர் அவரவர் வழிகளில் நெருக்கடி நிலையை மிகக் கடுமையாக எதிர்த்தோம். அத்தனை பெருமையும் முதலில் மொரார்ஜி தேசாய்க்கும் ஜெயப்பிரகாஷ் நாராயணுக்கும்தான் செல்ல வேண்டும். 78 வயதான மொரார்ஜி தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சண்டிகர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது ஜெயப்பிரகாஷ் நாராயணின் இரண்டு சிறுநீரகங்களும் மர்மமான முறையில் செயலிழந்த பின்னர், ஜஸ்லோக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்தியா ஒட்டுமொத்தமாக நெருக்கடி நிலைக்குப் பணிந்ததையும், ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் மாற்றத்தையும் அறிந்த அவர் அதிர்ந்துபோனார். எனினும் அவர் பின்வாங்கவில்லை. தலைமறைவாக இருந்த எனக்கு 1975 ஆகஸ்ட் மாதம் ஒரு செய்தியை அனுப்பினார். வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று, நெருக்கடி நிலைக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யுமாறு என்னைக் கேட்டுக்கொண்டிருந்தார்.
மொரார்ஜியோ மிகவும் உறுதியாகவும் நம்பிக்கையுடனும் இருந்தார். நல்ல விதமாக நடந்துகொள்வதாக உறுதியளித்தால் மொரார்ஜியைப் பரோலில் வெளிவிடத் தயார் என்று இந்திரா காந்தி கூறியனுப்பினார். ‘வெளியில் வந்தவுடன் உடனடியாக மீண்டும் போராட்டத்தைத் தொடங்குவேன்’ என்று மொரார்ஜி சொல்லியனுப்பினார். இதைக் கேட்டு அழுத அவரது மருமகள் பத்மா, அவரது வயதைக் கருத்தில்கொண்டு அரசின் நிபந்தனையை ஏற்றுக்கொள்ளுமாறு கெஞ்சினார். ஆனால், அதைவிடச் சாவதே மேல் என்று கூறினார் மொரார்ஜி.
ஆர்எஸ்எஸ்ஸின் எல்லாத் தலைவர்களும் பணிந்து விடவில்லை என்பதையும் நான் சொல்லியே ஆக வேண்டும். மாதவ்ராவ் மூளே, தத்தோபந்த் டெங்கடி மற்றும் மோரோபந்த் பிங்ளே போன்றோர் விதிவிலக்குகள். மூளேவுக்கு என்னை மிகவும் பிடிக்கும். நான் வெளிநாட்டில் இருந்தபோதும், இந்தியாவில் தலைமறைவாக இருந்தபோதும் என்னை முழுமையாக ஆதரித்தார். ஆனால், 1976 நவம்பரில், மீண்டும் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்லுமாறு கலங்கிய கண்களுடன் என்னிடம் கூறினார். நெருக்கடி நிலைக்கு முழுமையாகப் பணிந்துவிடுவது தொடர்பாகத் தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் கையெழுத்திட 1977 ஜனவரி இறுதியில் ஆர்எஸ்எஸ் முடிவுசெய்திருப்பதாக என்னிடம் அவர் கூறினார்.
போராட்டத்தைப் பற்றி விசாரித்தேன். 42-வது சட்டத் திருத்தத்துக்கு அனைவரும் ஒப்புக்கொண்டதாகவும், நாம் இதுவரை அறிந்திருந்த ஜனநாயகம் முடிவுக்கு வந்துவிட்டது என்றும் மூளே தெரிவித்தார். ஆர்எஸ்எஸ்ஸைப் பொறுத்தவரை ஜனநாயகம் முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனால், எல்லோருக்கும் அப்படி அல்ல. சில வாரங்களில் மக்களவைக்கான பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்த முடிவை இந்திரா காந்தி எடுப்பதற்கு என்ன காரணம் என்று யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், இதன் விளைவாக, சரணடையும் ஆவணத்தில் கையெழுத்திடும் அவசியம், அதிர்ஷ்டவசமாக ஆர்எஸ்எஸ்ஸுக்கு ஏற்படவில்லை.
அழுத்தம் தந்த ஜிம் கார்ட்டர்
மக்களவைத் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிடவும் நெருக்கடி நிலையை விலக்கிக்கொள்ளவும் ஒருங்கமைக்கப்படாத சக்திகளின் கூட்டு இந்திரா காந்தியை நிர்ப்பந்தித்தது. வெளிநாடுகளில் எனது பிரச்சாரம் மற்றும் அமெரிக்காவின் அறிவுஜீவிகளிடம் எனக்கு இருந்த தொடர்பின் மூலம் அமெரிக்காவின் அதிகாரமட்டத்தின் கவனத்தை, குறிப்பாக புதிதாகப் பதவியேற்ற அதிபர் ஜிம் கார்ட்டரின் கவனத்தை ஈர்க்க முடிந்தது. பதவிப் பிரமாணம் ஏற்பதற்கு முன்னரே, மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இந்திய அரசுக்கு அழுத்தம் தரத் தொடங்கினார் ஜிம் கார்ட்டர். அது இந்திரா காந்தியை அசைத்துப் பார்த்தது.
இந்த விஷயத்தில் அதிகம் பேசப்படாத இன்னொரு நாயகன், தத்துவ ஞானி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி. நெருக்கடி நிலையை விலக்கிக்கொள்ளுமாறு இந்திரா காந்தியை அவர் தூண்டினார். நெருக்கடி நிலையை அமல்படுத்தியது தவறு என்று தனது அந்தராத்மா கூறுவதை இந்திரா காந்தி ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
காஞ்சி மடத்தின் நிராகரிப்பு
இந்திரா காந்திக்கு அதிக வலி ஏற்படுத்தியது, காஞ்சி மடத்தின் பரமாச்சாரியார்  சந்திரசேகர சரஸ்வதியிடம் ஆசி வேண்டிச் சென்றிருந்ததுபோது ஏற்பட்ட அனுபவம்தான். 90 நிமிடங்களுக்கு இந்திரா காந்தியைப் பார்க்கவே மறுத்துவிட்ட அவர், அதன் மூலம் நெருக்கடி நிலையை முற்றிலுமாகத் தான் நிராகரித்ததை இந்திரா காந்திக்கு உணர்த்தினார்.
மொரார்ஜி போராட்டத்தைக் கைவிட மறுத்துவிட்டார். நெருக்கடி நிலையின் மூலம் கொஞ்சமாவது நல்ல விஷயங்கள் நடந்தன என்று ஒரு மரியாதைக்காக ஒப்புக்கொள்ளுமாறு இந்திரா காந்தியின் தூதர்கள் கெஞ்சியதையும் அவர் நிராகரித்துவிட்டார்.
இந்திரா காந்தி தேர்தலை அறிவித்தபோது, வன்முறை வழியில் தோல்வியடைந்தவர்கள் தேர்தலைப் புறக்கணிக்க விரும்பினார்கள். ஜனநாயகம் தொடர்பான பிரச்சினைகளால் படிப்பறிவில்லாத பொதுமக்கள் வருத்தமடைந்திருக்க மாட்டார்கள் என்றும் இப்படியான சூழலில் எதிர்க் கட்சிகளுக்கு வாய்ப்பே இல்லை என்றும் அவர்கள் கருதினார்கள். இதன் மூலம் தேர்தல் முடிவுகள் நெருக்கடி நிலையை ஆதரிப்பதாகவே அமையும் என்றும் நம்பினார்கள். ஆனால், மொரார்ஜி தேசாயும் சரண் சிங்கும் அப்படி நினைக்கவில்லை. மக்கள்மீது அவர்கள் பெரிய அளவில் நம்பிக்கை வைத்திருந்தார்கள்.
இந்தியச் சமூகத்தின் பன்முகத் தன்மைதான் மக்களைச் சர்வாதிகாரத்துக்கு எதிராகப் புரட்சி செய்ய வைத்தது. முற்றிலும் வேறுபட்ட பிரிவினரை ஒன்றுக்கொன்று ஈர்க்கும் அம்சம்தான் இந்தியாவை ஒரு ஜனநாயகச் சமூகமாக வைத்திருக்கிறது. சமூகத்தின் இந்தக் கலவையான இயல்பு இருக்கும்வரை இந்திய ஜனநாயகம் உயிர்த்திருக்கும் என்பதுதான் நெருக்கடி நிலையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். இந்தியச் சமூகத்தின் ஒற்றைப்படைத்தன்மையை ஒரு அளவுக்கு மேல் வலியுறுத்துவது ஜனநாயகத்துக்கு ஆபத்தாகிவிடும்.
கன்னாவை நினவிருக்கிறதா?
நெருக்கடி நிலையின்போது அதை எதிர்த்துப் போராடக்கூடிய இடத்தில் இருந்த குறிப்பிடத் தக்க மனிதர்கள் அதற்கு எதிராகப் போராடவில்லை. இன்று மக்கள் சுதந்திரத்தைப் பாதுகாக்க ஜெயப்பிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய் போன்ற தலைவர்கள் நம்மிடையே இல்லை. அடிப்படை உரிமைகளை நீதித் துறை வாயிலாக நசுக்குவதற்குப் பதிலாக, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவிக்கான வாய்ப்பை இழக்கவே விரும்பினார் ஹெச்.ஆர். கன்னா. யாருக்கேனும் அவரை நினைவிருக்கிறதா?
1975-77 காலகட்டத்தைவிட இன்று நெருக்கடி நிலையை எதிர்கொள்ள முடியாத அளவுக்கு நாம் பலவீனமாக இருக்கிறோம். முதல் காரணம், சுதந்திரப் போராட்டத்தின் சாதி வேறுபாடற்ற தலைவர்கள் இப்போது நம்மிடையே இல்லை. அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் இடத்தில் பாசிஸ நிறுவனம் இருக்கிறது என்பது மற்றொரு காரணம். இந்த நிறுவனம் பல லும்பன் அமைப்புகளை உருவாக்கியிருக்கிறது. இந்த அமைப்புகள், மதத் தூதர்களைக் கொல்லவும் தயங்காதவை.
இன்று மெல்ல இயங்கும் நெருக்கடி நிலையால் அமைப்புகள் பாதிக்கப்பட்டிருப்பதற்கான எல்லா வித அறிகுறிகளும் தென்படுகின்றன. நெருக்கடி நிலைக்கு எதிரான போராட்டத்தைக் கொண்டாட பாஜக முடிவுசெய்திருப்பது ஏன் அபத்தமானது என்பதற்கான முக்கியமான காரணம் இது. அரசியல் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவருவதைவிட, அதை மாற்றியமைக்கத்தான் பாஜக திட்டமிடுகிறது. வரலாற்றை மாற்றி எழுதும் வேலைகளை அக்கட்சி தொடங்கிவிட்டது. பாஜக-வின் கிளை அமைப்புகளான விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தள் போன்றவை சமூகத்தின் சிறுபான்மையினர் மீது பயங்கரமான வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கின்றன.
ஆக, 25 ஆண்டுகள் கழித்தும் நாம் ஜனநாயகத்தை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதுடன் அந்தச் சவாலைப் புறக்கணித்துவிடவும் முடியாது. அது இன்று மறைமுகமாக முற்றுகையிடப்பட்டிருக்கிறது. ‘நிலையான கண்காணிப்பே விடுதலைக்குக் கொடுக்கும் விலை’ என்று அமெரிக்கப் புரட்சியாளர் பேட்ரிக் ஹென்றி கூறியிருக்கிறார். எனவே, நம்மில் யாரெல்லாம் எதிர்த்து நிற்க முடியுமோ அவர்கள் அதை இப்போதே செய்ய வேண்டும். இதுதான் நெருக்கடி நிலையின் பாடம்.
அடல் பிஹாரி வாஜ்பாயும் இந்திரா காந்திக்கு மன்னிப்புக் கடிதம் எழுதினார். அதை இந்திரா ஏற்றுக் கொண்டார். உண்மையில், 20 மாதங்கள் அமலில் இருந்த நெருக்கடி நிலையின்போது பெரும்பாலான சமயங்களில் பரோலில் வெளியில் வந்தார் வாஜ்பாய். அரசுக்கு எதிரான எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கப்போவதில்லை என்று எழுத்துபூர்வமாக இந்திரா காந்திக்கு அவர் உறுதியளித்திருந்தார்.
தமிழில் சுருக்கமாக: வெ. சந்திரமோகன்
2000-ல் நெருக்கடி நிலையின் 25-வது ஆண்டு நிறைவடைந்தபோது, பாஜக-வின் நிலைப்பாட்டை விமர்சனம் செய்து 13.06.2000-ல் ‘தி இந்து’ (ஆங்கிலம்) நாளிதழில் சுப்பிரமணியன் சுவாமி எழுதிய கட்டுரை.
************************************************************************************************************************
இந்திய ஜனநாயகத்தின் அத்தனைக் கதவுகளும் இழுத்து மூடப்பட்ட காலம் அது. நெருக்கடி நிலைப் பிரகடனத்தை காங்கிரஸ் அல்லாத அத்தனை பேரும் எதிர்த்தனர் என்பதுதான் பொதுவான நம்பிக்கை. ஆனால், வரலாறு அதை மறுக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு அப்பாலும் பலர் நெருக்கடி நிலையை வெளிப்படையாக ஆதரித்தனர். அதற்கு அவர்கள் முன்வைத்த காரணங்களும் விளக்கங்களும் விநோதமானவை; அதிர்ச்சி தருபவை.
வினோபா பாவே
காந்திய வழியை உயிர் மூச்சாகப் பின்பற்றி சர்வோதயா இயக்கத்தை முன்னெடுத்தவர் வினோபா பாவே. இந்தியாவின் கிராமங்கள்தோறும் நடைப் பயணமாகவே சென்று 42 லட்சம் ஏக்கர் நிலத்தை நிலவுடைமையா ளர்களிடமிருந்து பெற்று ஏழை, எளிய மக்களிடம் ஒப்படைத்தவர். அத்தகைய வினோபா, நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டபோது அரசு பிறப்பிக்கும் சட்டத்தைப் பின்பற்றுவது மக்களின் கடமை என்றார். மக்கள் தங்கள் வேலையைக் காலதாமதமின்றி, சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு ஒழுங்காகச் செய்வதற்கு இந்தச் சட்டம் வழிகோலுகிறது என்றார். இது ஒழுக்கத்துக்கான காலகட்டம் என்றும் பெயர் சூட்டினார். புலி யாரையாவது சும்மா விடுமா? ஒருநாள் வினோபாவின் ஆசிரமக் கதவுகளும் சோதனை என்ற பெயரில் தட்டப்பட்டன. ‘சர்க்காரின் துறவி’க்கு நெருக்கடி நிலை என்றால் என்ன என்பது அந்தத் தருணத்தில்தான் தெரியவந்தது!
அன்னை தெரசா
அன்பு மற்றும் சேவையின் மூலம் உலகை வென்ற அன்னை தெரசா அராஜகத்தை, அடக்குமுறையை எப்படி ஏற்க முடியும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், நெருக்கடி நிலை அமலில் இருந்தபோது அவர் இவ்வாறு கூறினார். “நெருக்கடி நிலையில்தான் நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன. தொழிற்சாலைகளில் எந்த வேலை நிறுத்தமும் நடக்கவில்லை. அலுவலகங்களில் ஊழியர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு வேலைக்கு வருவது கட்டாயமாக்கப் பட்டிருக்கிறது. மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்” என்றார் அன்னை!
ஸ்ரீபாத் அம்ரித் டாங்கே
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை ‘இந்திரா கம்யூனிஸ்ட் கட்சி’ என அழைக்கும் அளவுக்கு நெருக்கடி நிலைக்குத் தீவிரமாக ஆதரவு தெரிவித்தவர் அக்கட்சியின் ஸ்தாபக உறுப்பினரான பாத் அம்ரித் டாங்கே. இந்தியத் தொழிற்சங்க இயக்கத்தின் முன்னோடியும் சுதந்திரப் போராட்ட வீரருமான டாங்கே, வலதுசாரிகளை முறியடிக்கும் விதமாக இந்திரா காந்தியின் நெருக்கடி நிலைச் செயல்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு தந்தார். தோழர்கள் எதைச் செய்தாலும் அதில் ஒரு சிந்தாந்தப் பின்னணி இருக்கும் பாருங்கள்!
எம்ஜிஆர்
கருணாநிதி ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர இந்திரா காந்தியுடன் நெருக்கத்தை உண்டாக்கிக்கொள்ள இந்தச் சூழலை எம்ஜிஆர் கச்சிதமாகப் பயன் படுத்திக்கொண்டார். டெல்லிக்கு நேரடியாகச் சென்று இந்திரா காந்தியைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு முன் ‘அனைத்திந்திய’எனும் வார்த்தை சேர்க்கப்பட்டது இந்தக் காலகட்டத்தில்தான்.
பால் தாக்கரே
காங்கிரஸ் கட்சிக்கு நேர் எதிரான தரப்பைச் சேர்ந்தவர் பால் தாக்கரே என்பதால், அவர் நெருக்கடி நிலையை வன்மையாகக் கண்டித் திருப்பார் எனப் பலர் நினைக்கக் கூடும். ஆனால், அவர் என்ன செய்தார் தெரியுமா? இந்திரா காந்தியின் மகனான சஞ்சய் காந்திக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் நெருக்கடி நிலைப் பிரகடனத்தை முழு மனதுடன் வரவேற்பதாகத் தெரிவித்தார்!
குஷ்வந்த் சிங்
பஞ்சாபைச் சேர்ந்த புகழ்பெற்ற பத்திரிகையாளர், முதுபெரும் நாவலாசிரியர் மற்றும் நையாண்டி எழுத்துகளால் அனைவரையும் கவர்ந்தவர் குஷ்வந்த் சிங். இவர் வெளிப் படையாக நெருக்கடி நிலை ஆதரவாளர். வினோபா பாவே முன்வைத்த அதே காரணங் களுக்காகத் தானும் நெருக்கடி நிலையை ஆதரிப்பதாகத் தெரிவித்தார் குஷ்வந்த் சிங்!
எம்.எஃப்.ஹுசைன்
பின்னாளில் இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் இல்லை என்று சொல்லி நாட்டைவிட்டு வெளியேறி உலகப் புகழ்பெற்ற இந்த ஓவியர், நெருக்கடி நிலையின் ஆதரவாளர். புலி மேல் அமர்ந்து தீய சக்திகளை அழிக்க சீறிப்பாயும் துர்கா தேவியைப் போல அக்காலகட்டத்தில் இந்திரா காந்தியை வரைந்தார் எம்.எஃப் ஹுசைன்.
தொடர்புக்கு: susithra.m@thehindutamil.co.in
******************************************
நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட ஜூன் 25, 1975 அன்று தமிழகத்தில் இருந்த நிலை வேறு; திராவிட முன்னேற்றக் கழகம் மீது வன்மம் கொண்டு இந்திரா காந்தியின் தலைமையிலான மத்திய அரசால் 1976 ஜனவரி 31 அன்று திமுக ஆட்சி கலைக்கப்பட்ட பின் தமிழகத்தில் இருந்த நிலை வேறு. உண்மையில் தமிழகத்தில் நெருக்கடி நிலை திமுக ஆட்சி கலைக்கப்பட்ட பின்தான் தொடங்கியது என்றுகூடச் சொல்லலாம்.
ஏனென்றால், வெளி மாநிலங்களிலிருந்து அடைக்கலம் தேடி வந்தவர்களுக்கும் முகாம் தந்த களமாகத் தமிழகம் இருந்தது. மத்திய அரசால் தேடப்பட்ட பல தலைவர்கள் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் பாதுகாப்பாக இருந்தனர். சஞ்சீவ ரெட்டி ஒருமுறை, ‘‘என்னுடைய சொந்த ஊரான அனந்தப்பூரில் நெருக்கடி நிலையை எதிர்த்துக் கூட்டம் நடத்த முயற்சித்தும் முடியவில்லை. சென்னையில் சுதந்திரமாக நடத்த முடிந்தது. அதற்குக் காரணம், தமிழகத்தில் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி இருந்ததுதான்” என்று சொன்னது ஒரு சான்று. சஞ்சீவ ரெட்டி, ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்ற பல தலைவர்கள் அந்நாட்களில் தமிழகத்தில் தங்கியிருந்தார்கள். இந்திரா காந்தியின் வார்த்தைகளிலேயே சொல்வது என்றால், “இந்தியாவில் இரண்டு தீவுகள். ஒன்று, திமுக தலைமையில் ஆட்சி நடக்கும் தமிழ்நாடு. மற்றொன்று, ஸ்தாபன காங்கிரஸ் தலைமையில் நடக்கும் குஜராத்.” அப்படித்தான் இருந்தது தமிழகம். ஆனால், ஆட்சி கலைக்கப்பட்டதும் எல்லாம் மாறியது.
திமுகவின் முன்னணித் தலைவர்கள் முரசொலிமாறன், மு.க.ஸ்டாலின், வைகோ, துரைமுருகன், ஆற்காடு வீராசாமி என்று பலரும் கைது செய்யப்பட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மிசா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தக் காலகட்டத்தில் மூன்று அதிகாரிகளின் செயல்பாடுகள் வரலாற்றில் மறக்க முடியாதது.
ஆர்.வி.சுப்ரமணியம்
ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக 17 ஆண்டுகள் (1954 1971) இருந்தவர் மோகன்லால் சுகாதியா. ராஜஸ்தான் மாநிலத்தின் பல சீர்திருத்தங்களுக்கும் காரணமானவர். 1976-ல் தமிழகத்தில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டபோது தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டவர். அன்றைக்கு மோகன்லால் சுகாதியா ஆளுநராகச் செயல்பட்டபோது அவருக்கு ஆலோசகர்களாக ஆர்.வி.சுப்பிரமணியம் மற்றும் தவே ஆகிய இரண்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டார்கள்.
இவர்களில் ஆர்.வி.சுப்ரமணியம் கேரளாவில் பிறந்த தமிழர். 1947-ல் முதல் ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவில் இடம்பெற்றிருந்தவர். திருச்சி ஜோசப் கல்லூரியில் பட்டம் பெற்றவர். டெல்லியில் பணிபுரிந்தாலும் தமிழகத்தையும் தமிழ் மக்களையும் நன்கு அறிந்தவர். நெருக்கடி நிலைக் காலங்களில் மக்கள் தரப்பிலிருந்து வைக்கப்படும் நியாயமான கோரிக்கைகளைச் செவிகொடுத்துக் கேட்டுக்கொண்டவர். தமிழ்நாட்டு நலன் சார்ந்த முறையீடுகளை ஏற்றுக்கொண்டு பலருக்கு உதவியும் செய்தார். மக்கள் நலவிரும்பியாகத் திகழ்ந்தார். திமுக ஆட்சி கலைக்கப்பட்டபோது, கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் சோ.அழகிரிசாமியுடன் கோவில்பட்டி விருந்தினர் விடுதியில் ஆர்.வி. சுப்ரமணியத்தைச் சந்தித்து விவசாயிகள் மீது தொடுக்கப்பட்ட கடுமையான ஜப்தி நடவடிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்திருந்தேன்.
அப்போதைய ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தின் ஆட்சியாளராக இருந்த நாராயணனை அழைத்த அவர், விவசாயிகளுக்கு எந்தவிதப் பிரச்சினையும் ஏற்படக் கூடாது என்று கூறி நடவடிக்கையை முடுக்கிவிட்டார். அந்தக் காலகட்டத்தில் நெல்லை மாவட்டம் முழுக்க வறட்சி நிலவியது. அப்போதுதான் மக்காச்சோளம் பயிர்செய்யப்படத் தொடங்கியது. உணவு தானியங்கள் இல்லாமல் மக்காச்சோளத்தை மக்கள் உணவாக உட்கொள்ளத் தொடங்கினார்கள். இந்த விஷயங்களையெல்லாம் எடுத்துச் சொன்னதும் விவசாயிகளின் உடமைகளையோ, அவர்கள் வீட்டு நிலைக் கதவுகளையோ பறிமுதல் செய்யும் ஜப்தி நடவடிக்கைகளை கைவிடச் செய்தார் ஆர்.வி.சுப்ரமணியம்.
காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரைக்கும் கோட்டையில் அவரைச் சந்தித்து மனுக்கள் வழங்க முடிந்தது. அவரது மேஜைக்குச் சென்ற மனுக்கள் அவ்வப்போது பைசல் செய்யப்பட்டன. திமுக அரசின் மீது அவருக்கு எந்தவித வன்மமும் இருந்ததாகத் தெரியவில்லை. இவருக்கு நேர் எதிரானவர்கள் மற்ற இருவரும்; அதாவது, தவேவும் வித்யாசாகரும்.
தவே
தவே போன்ற ஆலோசகரை யாரும் எளிதில் நெருங்குவது என்பதே முடியாத காரியமாக இருந்தது. கடையநல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.சுப்பையா முதலியாரோடு குற்றாலம் பராசக்தி கல்லூரியில் நடந்த நிகழ்வில் தவேயைச் சந்திக்க முயன்று, நதிநீர் இணைப்பு சம்பந்தமாகவும், பாசன வசதிகளுக்காகக் குளங்களைத் தூர்வாரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மனு வழங்கினோம். அந்த மனுவைக்கூட திரும்பிப் பார்க்காமல், “என்ன விஷயம்?” என்று கேட்டுவிட்டு கண்ணியமற்ற முறையில் எங்களை நடத்தினார் தவே. திமுக-வைச் சேர்ந்த அத்தனை பேரையும் கைது செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் மிகவும் முரட்டுத்தனமாக நடந்துகொண்டார்.மத்திய இணை அமைச்சராக இருந்த ஓம் மேத்தாவுக்கு வேண்டப்பட்டவர் தவே.
அவர் ஒருபோதும் மக்களைச் சந்தித்ததோ அவர்களின் குறைகளைக் காது கொடுத்துக் கேட்டதோ இல்லை. ஒன்று, சுற்றுப்பயணத்தில் இருப்பார். அல்லது மோகன்லால் சுகாதியாவோடு ஆளுநர் மாளிகையில் இருப்பார்.
வித்யாசாகர்
நெருக்கடி நிலையில் மிகக் கடுமையாக நடந்துகொண்ட சிறையதிகாரி வித்யாசாகர். மிசா கைதிகள் எவ்வளவு படித்தவர்களாக இருந்தாலும் அவர்களை மிரட்டுவது, அடித்து உதைப்பது, துன்புறுத்துவது என்று காட்டுமிராண்டித் தனமாக நடந்து கொண்டார். அதில் ஒரு இன்பத்தைக் கண்டார் எனலாம். சென்னை மத்தியச் சிறையில் அன்றைக்குச் சிறைக்காவல் அதிகாரியாக அவர்தான் இருந்தார். முரசொலி மாறன், ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி போன்றோரைக் கடுமை யாகத் தாக்கிக் கொடுமைப்படுத்தியதும், அதன் விளைவாக சிட்டிபாபு உயிரிழந்ததும் வேதனையான செய்திகள். இவற்றை முழுமையாக சிட்டிபாபு தன்னுடைய சிறை டைரிக் குறிப்பில் எழுதியுள்ளார். நெருக்கடி நிலையின்போது மதுரைச் சிறையில் திமுக-வைச் சேர்ந்த சாத்தூர் பாலகிருஷ்ணனும் போலீஸ் வன்முறை காரணமாக உயிரிழந்தார்.
ஆளுநரின் ஆலோசகர்களாக இருந்த ஆர்.வி.சுப்பிர மணியம், தவே ஆகியோருடன் சிறைத்துறை வித்யாசாகரும் நெருக்கடி காலத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டார். இந்த மூவரில் ஆர்.வி. சுப்ரமணியம் மட்டுமே மக்கள் நலம் சார்ந்து நடுநிலையாளராக விளங்கினார்.
- கே.எஸ்.இராதாகிருஷ்ணன்,
தொடர்புக்கு : rkkurunji@gmail.com
**************************
1975 ஜூன் 25-26-ல் பிறப்பிக்கப்பட்ட நெருக்கடி நிலையின் 40-வது ஆண்டு நிகழ்ச்சியையொட்டி இந்தக் கேள்வி என்னைக் குடைகிறது: எந்த அளவுக்கு ஜனநாயகம் இன்றைக்குப் பாதுகாப்பாக இருக்கிறது?
ரேபரேலி மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்வு பெற்றது செல்லாது என்று அலாகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து, பதவி வகிப்பது சரியா என்று இந்திரா காந்தியைக் கேட்டார்கள் என்ற ஒரே காரணத்துக்காக, நாடெங்கும் ஆயிரக் கணக்கான அரசியல் தொண்டர்களும் எதிர்க் கட்சித் தலைவர்களும் கைதுசெய்யப்பட்டு விசார ணையே இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டார்கள். போலீஸ்காரர்களின் துணையோடு ஆயிரக் கணக்கான ஆண்கள் சஞ்சய் காந்தியாலும் அவருடைய அடியாட்களாலும் கட்டாய கருத்தடைச் சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
பிரதமர் பதவி வகித்த இந்திரா காந்தியும், அரசின் எந்தப் பதவியிலும் இல்லாத அவருடைய மகன் சஞ்சய் காந்தியும் சஞ்சயின் சிறு ஆதரவாளர்கள் கும்பலும் நாட்டின் முழு நிர்வாகத்தையும் அதிகாரத்தையும் தங்களுடைய கைகளில் எடுத்துக்கொண்டவுடன் நாடு முழுக்க அச்சம் பரவியது. “இந்திய அரசியல் சட்டம் அளிக்கும் அனைத்து அடிப்படை உரிமைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகின்றன” என்ற அரசின் நெருக்கடி நிலை அறிவிப்பு வெளியானபோது, அறிவுஜீவிகளில் பெரும்பாலான வர்களும் பொதுக்கருத்துகளை உருவாக்கும் இடங்களில் இருந்தவர்களும் எதிர்ப்பு ஏதும் இல்லாமல் ஏற்றுக்கொண்டனர். அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதை எதிர்த்து உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் செல்ல உரிமை இல்லை என்ற அரசின் அறிவிப்பு பல அரசியல் கட்சிகளுக்கு எந்தவிதக் கவலையையும் ஏற்படுத்தவில்லை.
அன்றைய ஆட்சியாளர்களின் ஜனநாயக விரோதச் செயலுக்கு உச்ச நீதிமன்றம் சட்டபூர்வ அங்கீகாரம் அளித் ததுதான் வெட்கப்பட வேண்டிய செயலாக இருந்தது. 1976-ல் நடந்த ‘ஏ.டி.எம்., ஜபல்பூர்’ வழக்கில் ‘அரசின் முடிவு சரியே’ என்று நான்கு நீதிபதிகள் ஆதரித்தனர். நீதிபதி எச்.ஆர். கன்னா மட்டுமே அந்த அறிவிப்பு, சட்டப்படியான ஆட்சி என்ற கோட்பாட்டுக்கு எந்த அளவுக்கு ஊறு செய்யும் என்று உணர்ந்து, மாற்றுத் தீர்ப்பை வெளியிட்டார். அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப்பட்டால் அதன் விளைவு எவ்வளவு மோசமாக இருக்கும் என்று அவர் மட்டுமே தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்தார். ஆனால், பெரும்பாலான நீதிபதிகள் ஆதரித்ததால், அடிப்படை உரிமைகள் பறிப்பு செல்லாது என்று 9 உயர் நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புகள் தள்ளுபடியாயின.
‘அரசியல் சட்டம் அளிக்கும் அடிப்படை உரிமைகளைத் தற்காலிகமாக மறுக்கும் அளவுக்கு உள்நாட்டுப் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது’ என்ற அரசின் கூற்றை உச்ச நீதி மன்றத்தின் நான்கு நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.
போர்க்காலத்தில் நாட்டு மக்கள் மீது அரசின் கட்டுப்பாடு முழுமையாக இருக்க வேண்டும் என்று இரண்டாவது உலகப் போரின்போது பிரபுக்கள் அவை அளித்த தீர்ப்பையே அவர்கள் முன்னுதாரணமாகக் கொண்டனர். பெரும்பான்மை நீதிபதிகள் தங்களுடைய தீர்ப்புக்கு ஆதரவாகப் பற்றி நின்ற நிலையை, பிரிட்டிஷ்காரர்களே பின்னாளில் தூக்கி எறிந்துவிட்டனர். அந்த வழக்கிலும் மாற்றுத் தீர்ப்பு அளித்த அட்கின் பிரபு, தன்னுடைய சகோதர நீதிபதிகள், (அரசியல்) நிர்வாகிகளைவிடத் தங்களை அதிகபட்ச நிர்வாகிகளாகக் கருதிவிட்டனர் என்று மனம் வெதும்பிக் கூறினார். ‘உள்துறை அமைச்சகத்தின் நாற்காலிக்கு அடியில் சிக்கிக்கொண்ட சுண்டெலி போல நீதித் துறை ஆகிவிட்டது’ என்று லண்டன் உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்டேபிள் வேடிக்கையாகக் குறிப் பிட்டார்.
1976-க்கு முன்னால் பிரிட்டிஷ் நீதிமன்றங்களே நிராகரித்த ஒரு நிலையை இந்திய உச்ச நீதிமன்றம் பின்பற்றி, நெருக்கடி நிலையை நியாயப்படுத்தியது மிகுந்த ஏமாற்றத்தையே தந்தது. ஒரு தலைமுறையையே கொந்தளிக்கவைத்த விஷயங்கள் இவையெல்லாம்.
ஆனால், இவை குறித்தெல்லாம் இன்றைய இந்தியர்களில் எவரேனும் இப்போது கவலைப்படுகிறார்களா? பேச்சு சுதந்திரத்தையும் அரசுக்கு எதிராகக் கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்தையும், அரசை விமர்சிக்கும் சுதந்திரத்தையும் நெரிக்கும் அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்க இன்றைக்குத் தயாராக இருப்போர் எத்தனை பேர்? அட, 26.06.1975 தொடங்கி 23.03.1977 வரையிலான 21 இருண்ட மாதங்களில் இந்தியாவில் என்ன நடந்தது என்பதைப் பதிவுசெய்யாமல் இன்னமும் ஏன் நம்முடைய வரலாற்றுப் புத்தகங்கள் மவுனம் சாதிக்கின்றன?
மாறியது என்ன?
நெருக்கடி நிலை காலத்துக்குப் பிறகு, இங்கே ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? பெரிதாக எதுவும் மாறிவிடவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சட்டப் பேரவைகளுக்கும் மக்களவைக்கும் தேர்தல் நடப்பது மட்டுமே இங்கு ஜனநாயக நடவடிக்கையாக இருக்கிறது. தேர்தலிலும்கூடப் பண பலம், அடியாள் பலம், சாதிகளின் ஆதிக்கம், மதவாதம், ஆதிக்க சக்திகளின் செல்வாக்கு ஆகியவையே முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தியா அடைந்துள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்களால் செயற்கைக் கோள்களைப் பறக்கவிட முடிகிறது, கோடிக் கணக்கான மக்களின் வறுமையை, பசியை, தாகத்தை, சுகாதாரமற்ற வாழ்க்கையைப் போக்க முடியவில்லை.
ஊழல் பேர்வழிகளான அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் ஆகியோருடைய துணையோடு பெருந்தொழில் நிறுவனங்கள் இந்தியாவின் இயற்கை வளங்களைச் சூறையாடுகின்றன. அவர்களைத் தேச பக்தர்கள் என்று அழைக்கின்றனர். இப்படி இயற்கை வளங்களைச் சூறையாடாதீர்கள் என்று தடுக்கும் சமுதாயத் தலைவர்களை, சமூக ஆர்வலர்களை, சுற்றுச்சூழல் ஆர்வலர்களை அடித்து நொறுக்கி, கைது செய்து சிறையில் அடைத்து துரோகிகள் என்று பட்டம் சூட்டுகின்றனர். வளர்ந்து வரும் பெரும்பான்மையினவாதமும், வகுப்புவாதமும் இந்திய ஜனநாயகத்துக்கு இதுவரை இருந்திராத அச்சுறுத்தல்களை ஏற்படுத்திவருகின்றன.
சூட்-பூட் கி சர்க்கார்
இன்றைக்கு மோடி அரசு மீது முன்வைக்கப்படும் சூட்-பூட் கி சர்க்கார் என்ற அடைமொழி எல்லாப் பெரிய அரசியல் கட்சிகளுக்குமே பொருந்தும். பெருந்தொழில் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில்தான் நாட்டின் பொருளாதாரமும் வணிகமும் இருக்கின்றன. எல்லா மாநில அரசுகளுமே மக்களுடைய எதிர்ப்பைக் கொடூரமாக ஒடுக்க ஆள்தூக்கிச் சட்டங்களை இயற்றி வைத்துள்ளன. காங்கிரஸ், பாஜக, திமுக, அஇஅதிமுக, சமாஜ்வாதி, தெலுங்கு தேசம், தெலங்கானா ராஷ்டிர சமிதி என்று எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதுதான் நிலைமை. தேசவிரோதச் செயல் தடுப்பு, தேசப் பாதுகாப்பு போன்ற சட்டங்களைப் பயன்படுத்த அவை தயங்குவதில்லை. விவசாயிகள், பழங்குடிகள், மாணவர்கள், மகளிர் என்று எந்த அமைப்பினர் கிளர்ச்சி செய்தாலும் கடுமையாக ஒடுக்கப்படுகின்றன. வட கிழக்கு மாநிலங்கள், காஷ்மீர் மட்டுமின்றி பெரும்பாலான மாநிலங்கள் இப்போது போலீஸ் சர்க்கார்களாக மாறிவிட்டன.
படித்தவர்களின் அலட்சியம்
ஜனநாயகம் ஆபத்துக்குள்ளாகியிருக்கிறது. நகர்ப்புற படித்த மக்களும் சொந்தத் தொழில் செய்வோரும் இதுகுறித்து கொஞ்சமும் கவலைப்படவில்லை. இந்தி யாவின் கிராமங்களிலும் நகர்ப்புறங்களிலும் வசிக்கும் கோடிக் கணக்கான இந்தியர்கள் கோபத்தில் கொதித்துக்கொண் டிருக்கிறார்கள். புதிய சுரங்க அகழ்வுகள், அணை கட்டும் திட்டங்கள், வன அழிப்பு, தாது மணல் உள்ளிட்ட இயற்கை வளங்கள் சூறையாடல் தொடர்பாக நாட்டின் பல பகுதிகளிலும் அன்றாடம் லட்சக் கணக்கான சிறு சிறு மோதல்கள் நடந்துவருகின்றன. செய்தி ஊடகங்கள் அவை அனைத்தையும் மக்களுக்குத் தெரிவிப்பதில்லை. வளர்ச்சி என்பது கவுரவம், ஜனநாயகம் ஆகியவற்றுடன் ஏற்படும்வரை போராட்டம் தொடரும் என்று மக்கள் அறிவித்துள்ளனர்.
நெருக்கடி நிலை அமலில் இருந்தபோது டெல்லி திஹார் சிறையிலிருந்த ஜெயப்பிரகாஷ் நாராயண், ஆசார்ய கிருபளானி போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள், மக்களுடைய நலன்களையும் உரிமைகளையும் காப்பதற்கு ஏற்படுத்தியது தான் ‘சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கம்’(பி.யு.சி.எல்.). ஜனநாயகத்துக்கு விரோதமான சக்திகளும், ஆளும் கட்சியின் அதிகார வட்டத்துக்குள் இருக்கும் எடுபிடிகளும் மக்களுடைய அடிப்படை உரிமைகளை நசுக்கிவிடக் கூடாது என்பதற்காகத் தோற்றுவிக்கப்பட்டதுதான் இந்த இயக்கம்.
நெருக்கடி நிலை காலத்தில் அடக்குமுறைகளுக்கு ஆளான ஆயிரக் கணக்கான மக்களை பி.யு.சி.எல். இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறது. அறிவிக்கப்படாத இரண்டாவது நெருக்கடி நிலை ஏற்பட்டுவிடாமல் தடுக்கும் கடமை பி.யு.சி.எல்லுக்கும் இதைப் போன்ற சகோதர அமைப்புகளுக்கும் இருக்கிறது. நம்முடைய ஜனநாயக உரிமைகளை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் சுதந்திரம், சமத்துவம், சமூக நீதி ஆகியவை எல்லோருக்கும் கிட்டும் வகையிலும் எல்லா ஜனநாயக ஆதரவு சக்திகளும் இணைந்து செயல்பட வேண்டும்.
பல்சாக் தன்னுடைய நாவல் ஒன்றில் குறிப்பிட்டிருப்பார், “நீதித் துறையை அவநம்பிக்கையோடு பார்ப்பதில் தொடங்கு கிறது ஒரு சமூகத்தின் முடிவு; இப்போதைய அமைப்புகளின் மாதிரியை உடையுங்கள், வேறு அடிப்படையில் அதைப் புதிதாக உருவாக்குங்கள். ஆனால், அதை நம்புவதை மட்டும் கைவிட்டுவிடாதீர்கள்” என்று. எந்த ஒரு சமூகத்திலும் நீதித் துறை ஆற்ற வேண்டிய முக்கியப் பங்கை இது எடுத்துக்காட்டுகிறது.
இன்றைய இந்தியாவில் அரசியல் சட்டம் தனக்களித்த கடமையிலிருந்து இந்திய நீதித் துறை நழுவுவதாகவே தோன்றுகிறது.
- வி. சுரேஷ், பி.யு.சி.எல். தேசியப் பொதுச் செயலாளர்,

*************
இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவித்தபோது எனக்கு 25 வயது. என் வயதொத்தவர்கள் அந்தக் கொடுமைகளை நேரில் பார்த்தவர்கள். அதன் ஊடாக அரசியல் உணர்வு பெற்றவர்கள். அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப்படும்போது வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை 21 மாத காலம் அனுபவித்தவர்கள். எங்களின் உருவாக்கத்தில் நிச்சயம் இந்த அனுபவம் ஒரு முக்கியப் பங்கு வகித்தது.
“ஏ.டி.எம் ஜபல்பூர் எதிர் சுக்லா” எனும் வழக்கு இன்னும் நினைவிலிருந்து அழியவில்லை. தலைமை நீதிபதி ஏ.என் ரே, பி.என். பகவதி, எச்.ஆர்.கன்னா, ஒய்.வி. சந்திரசூட், எம்.எச்.பெக் ஆகிய ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சட்ட அமர்வு ஒன்றின் முன், “நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டால் ஒரு குடிமகன் அரசியல் சட்டம் வழங்கும் எந்த உரிமையையும் கோர இயலாது” என அரசுத் தரப்பில் கூறப்பட்டது. “உயிர் வாழும் உரிமைகூடக் கிடையாதா?” என நீதியரசர் எச்.ஆர்.கன்னா இடைமறித்தபோது, அட்டர்னி ஜெனரல் நிரேன் டே, “ஆம், உயிர்வாழும் உரிமையும்கூடத்தான்” என இறுகிய குரலில் பதிலளித்ததையும், அதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யும் உரிமை குடிமக்களுக்குக் கிடையாது என ஆணையிட்டதையும் இப்போது நினைத்தாலும் உடல் பதறுகிறது.
பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள். வேறென்ன சொல்வது? எத்தனை குழந்தைகள் பெற்றுக் கொள்வது, எங்கே குடிசைகளை அமைத்துக்கொள்வது என அனைத்து உரிமைகளிலும் அரசு கைவைத்தது. அரசில் எந்தப் பொறுப்பும் வகிக்காத இந்திராவின் இளைய மகன் சஞ்சயின் நேரடி மேற்பார்வையில் எளிய மக்களுக்குக் கட்டாயக் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. குடிசைகள் இடிக்கப்பட்டு ஏராளமானோர் விரட்டப்பட்டனர்.
அந்த 21 மாத காலத்தில் இந்தியாவில் இரட்டை நெருக்கடி நிலைகள் செயல்பட்டன என்பதைப் பலரும் மறந்திருப்பார்கள். ஏற்கெனவே, 1971 டிசம்பர் 3-லிருந்து இங்கு இந்திய பாக். யுத்தத்தை முன்னிட்டு ‘வெளிநாட்டு ஆக்ரமிப்பு' எனக் காரணம் காட்டி அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலை அமலில் இருந்தபோதே ‘உள்நாட்டு அமைதியின்மை' எனக் காரணம் சொல்லி ஜூன் 25, 1975-ல் இந்த நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது.
ஹிட்லரின் முழக்கங்கள் எந்தத் தயக்கமும் இன்றி இங்கே மறு அரங்கேற்றம் செய்யப்பட்டன. இங்கே கோயபல்ஸுகள் இல்லை. ஆனால், டி.கே. பரூவாக்கள் இருந்தனர். அவர்கள் “இந்திராவே இந்தியா; இந்தியாவே இந்திரா!” என முழக்கமிட்டனர். பத்திரிகைகள் கடும் தணிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்டன. ஜெயப்பிரகாசரின் நெருங்கிய நண் பரும் இந்திராவைக் கடுமையாக எதிர்த்துவந்தவருமான ராம்நாத் கோயங்காவின் இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்தத் தணிக்கையைக் கண்டித்து, 1975 ஜூன் 28-ம் தேதி இதழின் தலையங்கத்துக்கான இடத்தை வெற்றிடமாக விட்டிருந்தது.
பழிவாங்கிய ‘நாய்கள்’
இத்தனை கொடுமைகள் அரங்கேறியபோதும், முக்கியத் தலைவர்கள் உட்பட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டபோதும் பெரிய அளவில் எதிர்ப்பு இல்லை என்பது குறித்து, “ஒரு நாய் கூடக் குரைக்கவில்லை” என அத்தனை எகத்தாளமாகக் கூறினார் இந்திரா. ஆனால், அந்தக் குரைக்காத நாய்கள்தான் 1977 மார்ச்சில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அவரைக் கடித்துக் குதறின. வானளாவிய அதிகாரம் எனக் கொக்கரித்தவர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார்.
நெருக்கடி நிலைக் கால அனுபவத்தின் ஊடாக அடிப்படை உரிமைகள், அரசியல் சட்டத்தின் ஆட்சி முதலான பிரக்ஞை களை மக்கள் பெற்றனர். பல துறைகளிலும் இதன் தாக்கங்கள் வெளிப்பட்டன. இலக்கியத் துறையில் ஏற்பட்ட ஒன்று இங்கே குறிப்பிடத் தக்கது.
‘மணிக்கொடி’ காலந்தொட்டு இங்கே சிற்றிதழ்கள் நவீன இலக்கிய வளர்ச்சிக்கு எத்தனையோ பங்களிப்புகளைச் செய்திருந்தபோதும், அரசியலை அவை தீண்டத் தகாததாகவே விலக்கி வைத்திருந்தன. அந்த வரிசையில் 70-களின் மத்தியில் வந்துகொண்டிருந்த ஒரு சிற்றிதழ்தான் ‘பிரக்ஞை'. அதுவும் அரசியல் பேசினால் இலக்கியத் தரம் தாழ்ந்துவிடும் என்கிற நிலையுடன் வெளிவந்துகொண்டிருந்தபோதுதான் நெருக்கடி நிலை அறிவிப்பு வந்தது. தொடர்ந்த மனித உரிமை மீறல்கள் ‘பிரக்ஞை' ஆசிரியர் குழுவுக்குள் ஒரு விவாதத்தை ஏற்படுத்தின. இத்தனை உரிமை மீறல்களுக்கு மத்தியில் நாம் தூய இலக்கியம் பேசிக்கொண்டிருக்க இயலுமா என்பதுதான் கேள்வி. விவாதம் முடிந்து சில மாத இடைவெளிக்குப் பின் இதழ் வந்தபோது அதன் அட்டைப் படத்தில் மாஓ இடம்பெற்றிருந்தார்.
புதிய தத்துவங்கள்
தொடர்ந்து சிறுபத்திரிகைகளின் மத்தியில் ‘படிகள்', ‘பரிமாணம்', ‘இலக்கிய வெளிவட்டம்', ‘மார்க்சீயம் இன்று', ‘நிகழ்', ‘நிறப்பிரிகை' என அரசியலைப் புறக்கணிக்காத, புதிய தத்துவங்களைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய போக்கு ஒன்று உருவானது.
1977 மார்ச் 21 அன்று நெருக்கடி நிலை நீக்கப்பட்டு மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா கட்சி ஆட்சி தொடங்கியபோது நாங்கள் அடைந்த மகிழ்ச்சி சொல்லி மாளாது. அடுத்த சிலமாதங்களில் பிரதமர் மொரார்ஜி தஞ்சை வந்தார். ராஜப்பா நகரில் உள்ள போலீஸ் கிரவுன்டில் பொதுக் கூட்டம். மொழிபெயர்ப்பதற்கு குமரி அனந்தன்.
அப்போது நான் ஒரு இளம் கல்லூரி ஆசிரியன். விடுமுறை எடுத்துக்கொண்டு ஒரு மணி நேரம் முன்னதாகவே முதல் வரிசையில் காத்திருந்தேன்.
குண்டு துளைக்காத கண்ணாடிகள் எல்லாம் பொருத்தப் படாத எளிய மேடை. பெரிய போலீஸ் பாதுகாப்புக் கெடுபிடிகள் ஏதும் இல்லை. மேடையிலிருந்து சுமார் 30 அடி தூரத்தில் ஒரு கயிறு மட்டும் கட்டப்பட்டு அதற்கு அப்பால் நாங்கள் உட்கார்ந்திருந்தோம்.
மேடை ஏறிய மொரார்ஜி, அதிகாரி ஒருவரைக் கூப்பிட்டு அந்தக் கயிற்றைக் காட்டி ஏதோ சொன்னார். அடுத்த நிமிடம் அந்தக் கயிறும் அவிழ்க்கப்பட்டது. மொரார்ஜி எங்களை நோக்கி அருகே வருமாறு சைகை செய்தார். திபுதிபுவென ஓடி மேடை அருகே அமர்ந்துகொண்டோம். மொரார்ஜி ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினார். அனந்தன் அதை அழகு தமிழில் மொழிபெயர்த்தார்.
- அ.மார்க்ஸ், எழுத்தாளர், மனித உரிமைச் செயல்பாட்டாளர்

தொடர்புக்கு : professormarx@gmail.com