செயல்பாடுகளில் எந்த பெரிய முன்னேற்றமும் இல்லை என்பதால் 22 சிறப்பு பொருளாதார மண்டலங்களின் (எஸ்இஇசட்) அனுமதியை மத்திய அரசு ரத்து செய்தது. இதில் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகத்தின் அனுமதியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வர்த்தகத் துறை செயலாளர் ராஜிவ் கெர் தலைமையிலான குழு இந்த முடிவினை எடுத்துள்ளது. இந்த 22 மண்டலங்களின் செயல் பாடுகளை ஆராய்ந்த பிறகே, இவற்றுக்கான அனுமதியை குழு ரத்து செய்ததாக வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதே சமயத்தில் இந்த சிறப்பு பொருளாதார மண்டலங்கள் எந்த விதமான வரிச்சலுகையும் பெறவில்லை என்ற சான்றிதழை சமர்பிக்க வேண்டும். ஒருவேளை வரிச்சலுகை பெற்றிருந்தால் அந்த தொகையை திருப்பி செலுத்த வேண்டும் என்று வர்த்தக அமைச்சகம் கூறியிருக்கிறது.
தமிழ்நாட்டில் பல துறையை சேர்ந்த உற்பத்தி மண்டலத்தை அமைக்க தமிழ்நாடு தொழில்மேம் பாட்டு கழகம் அனுமதி வாங்கி இருந்தது. அதேபோல ட்ரூ டெவலெப்பர் நிறுவனம் ஐடி துறை சார்ந்த மண்டலத்தை தமிழ்நாட்டில் அமைக்க அனுமதி வாங்கி இருந்தது. இந்த இரண்டு அனுமதியும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மொத்தம் ரத்து செய்யப்பட்ட 22 மண்டலங்களில் 19 மண்டலங்கள் ஐடி துறையை சேர்ந்தவையாகும்.
அதே சமயத்தில் 27 நிறுவனங் கள் தங்களது திட்டத்தை (எஸ்இஇசட்) செயல்படுத்த கால அவகாசம் கொடுக்கப்பட் டிருக்கிறது. கர்நாடக தொழில் மேம்பாட்டு கழகம், நவிமும்பை எஸ்இஇசட், வேதாந்தா அலுமினியம், கான்ட்லா துறைமுக பொறுப்பு கழகம், கல்ப் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களுக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
எஸ்இஇசட் மூலமாக 2005-06 ஆம் ஆண்டுகளில் ரூ.22,840 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடந்துள்ளது. 2013-14ஆம் நிதி ஆண்டில் எஸ்இஇசட் மூலமாக 4.94 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடந்துள்ளது.
எஸ்இஇசட்களுக்கு குறைந்த பட்ச மாற்று வரி (எம்ஏடி) மற்றும் டிவிடெண்ட் விநியோக வரி விதிக்கப்பட்டதால் எஸ்இஇசட் தன் பொலிவை இழந்து வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக