இன்ஜினீயரிங் படிப்பு குறித்த பெருமிதம் இன்னும் தொடர்வது ஆச்சரியமாகவே இருக்கிறது. ஏனெனில் இப்போது இன்ஜினீயரிங் சீட் கிடைப்பது சிரமமில்லை. பள்ளிப்படிப்பு முடித்து ஒவ்வோர் ஆண்டும் வெளியேறும் மாணவர்களில் பெரும்பாலானோருக்கு மெடிக்கல் சீட் கிடைக்கிறதோ இல்லையோ, லட்சக்கணக்கில் காத்திருக்கின்றன பொறியியல் கல்லூரியில் இடங்கள். கடந்த ஆண்டு வரையிலும், தமிழகத்தில் பெரும்பான்மை மாணவர்களுக்கு விருப்பப் பாடம் ‘ஐ.டி., கம்ப்யூட்டர் டெக்னாலஜி’ தான்.
அதற்கு ஏற்றாற்போலவே, ‘கேம்பஸ் இண்டர்வியூ’ மூலம் வேலைவாய்ப்பு நிச்சயம் என்றபடி வெளியாகும் கல்லூரி விளம்பரங்களில் டாப் ‘ஐ.டி.’ நிறுவனங்கள் தவறாமல் இடம்பிடிக்கின்றன. இப்படியான கல்லூரிகளில் சேர்ந்து படித்து, ஒவ்வோர் ஆண்டும் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தியா முழுவதும் பொறியாளர்களாக வெளியேறுகின்றனர். இவர்களில் 53 சதவீதத்தினர்.
ஐ.டி. துறையில் சேர விருப்பம் தெரிவிப்பதாக, தேசிய வேலைவாய்ப்பு தகுதி படைத்தோர் குறித்த அறிக்கை (National Employability Report 2014) கூறுகிறது. இந்தியாவில் உள்ள 58,824 ஐ.டி. நிறுவனங்களில், தமிழ்நாட்டில் 7,074 நிறுவனங்கள் உள்ளன. (2011 மத்திய அரசுப் புள்ளிவிவரம்). இந்த நிறுவனங்களில், சில ஆயிரம் பேருக்குத்தான் வேலை கிடைக்கிறது. பல தடைகளைக் கடந்து ஐ.டி. துறை வேலை என்னும் கனவுக்கு ‘கால் லெட்டர்’ பெறும் இளைஞர்களின் நிலைமை அவர்கள் எதிர்பார்த்ததுபோல் பிரகாசமாகத்தான் இருக்கிறதா?
தொழில்நுட்பப் பூங்காவின் வானுயர்ந்த கட்டிடங்களில் பரபரப் பாக இயங்கும் ஐ.டி. நிறுவனங்களின் கதவு திறக்க, அந்தப் புதிய வரவுகள் உள்ளே நுழைகின்றன. பெரும் நிறுவனங்களில் இப்படி வந்து சேரும் நூற்றுக்கணக்கானவர்கள் உற்சாகத்துடன் வரவேற்கப்படுவார்கள்; வரிசையாக அமர்த்தப்படுவார்கள். பின்னர் அவர்களிடம் ஒப்பந்தப் படிவங்கள் அளிக்கப்படும்.
“நான்காம் பக்கத்தில் இடதுபுறம் கையெழுத்திடவும், 14-ம் பக்கத்தில் கீழே வலதுபுறத்தில் கையெழுத்திடவும்” என்ற குரலுக்குத் தக்க படிவங்களை நிரப்புவார்கள். என்ன ஏதேன்று படித்துப் பார்க்காமல் எப்படி, ஏன் கையெழுத்திடுகிறார்கள்? “ஒப்பந்தங்களைப் படித்துப் பார்க்க யாருக்கும் நேரமிருக்காது. அதனால் அப்படியே நிரப்பிவிடுவோம்” என்கிறார் பிரசன்னா. அதன் பிறகு புதிதாக வேலையில் சேர்ந்துள்ள அவர்கள் பயிற்சி பெறும் குழுவில் இணைக்கப்படுவார்கள்.
வாழ்வின் வண்ணங்கள்
“அப்றம் மச்சி... வேலைல சேர்ந்தாச்சு. இன்னிக்கு நீதான் ட்ரீட்”, “ப்ராஜக்ட்ல கலக்கிட்ட, ட்ரீட்”, “பைக் வாங்கிட்ட ட்ரீட்” என நண்பர்களின் அன்புக் கட்டளைகள் தொடர - ஒவ்வொரு வாரமும் எஃப். பி.ல ‘செல்ஃபி’, ‘க்ரூப்பி’னு லைக்ஸ் அள்ளும். கிளையண்டுக்கு ஏற்ற உடை, மதிய உணவுக்கு பீட்சா ஷாப், அவ்வப்போது காபி டே என ஐ.டி. வாழ்க்கையின் வண்ணங்கள் அனுதினமும் அழகழகாக மலர்வதாகத் தெரியும். “நினைத்ததை அப்பவே வாங்கிடு” என்று தூண்டிக்கொண்டேயிருக்கும் பாக்கெட்டில் துருத்திக்கொண்டி ருக்கும் கிரெடிட் கார்ட்.
இதையெல்லாம் தவிர்க்க முடியாதா என்ன? இதற்குப் பதில் போல், “எனக்கு வேற வேலை இருக்கு. அநாவசிய செலவெல்லாம் பிடிக்காதுன்னு சொல்லிட்டு தள்ளி இருக்க முடியாது. தனியா ஒதுக்கப்பட்ட மாதிரி தோணும். அவ்வப்போது ஃபுட் கூப்பன், அலுவலக வளாகத்திலயே கடைகள் என இந்தக் கலாசாரத்தை நிறுவனங்களே பரப்பவும் செய்றாங்க” என்று சொல்கிறார் சுகந்தி.
பயிற்சி முடிந்து புராஜக்ட் வேலைகளில் சேர்க்கப்படும் புதியவர்கள் ஏதாவது குழுவில் இணைக்கப்பட்டு, ஒரு பகுதி வேலையை மட்டும் முடிக்கும்படி அமர்த்தப்படுவார்கள். இதுவே சிறிய நிறுவனமாக இருந்தால் முழு வேலையையும் ஒருவரே முடிக்க நேரலாம். இரண்டிலும் வேலைப் பளு ஒன்றுதான்.
வருடத்துக்கு 15 நாட்கள் சி.எல். (தற்செயல் விடுப்பு) வழங்கப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், மேனேஜரைச் சந்தித்து விடுப்பு கேட்பது அத்தனை எளிதல்ல. “கேண்டீனில் சாப்பிடும் நேரம் தொடங்கி, பார்க்கிங்கில் கார் எடுப்பதுவரை ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் முதல் அறிமுகத்தை ஏற்படுத்த வேண்டும். டீம் லீடரையும், மற்ற மூத்தவர்களையும் தாண்டி மேனேஜர் கண்ணில் படுவதற்கான திறனை வளர்ப்பதும் ஐ.டி. துறையில் பிழைத்திருக்க அவசியமானது” என்கிறார் அருண். புதுமுகமாய் வருபவருக்கு இந்த சூட்சுமம் புரிபடவே பல மாதங்கள் ஆகிவிடும்.
வேலை நிரந்தரம், பதவி உயர்வு, வேலை நீக்கம் என ஒவ்வொரு முடிவுக்கும் எது அடிப்படை என்று புரிந்துகொள்வதும் அத்தனை எளிதல்ல. பல ஆண்டுகள் இந்தத் துறையில் பணியில் உள்ளோரைக் கேட்டாலும், சரியான பதில்களை அறிய முடிவதில்லை. இப்படித்தான் ஐ.டி. சூழலுக்குத் தக்கவாறு இளைஞர்கள் தயாரிக்கப்படுகின்றனர்.
**********************
எல்லாத் துறைகளிலும் புதுமுகங்களுக்குத் தொடக்கத்தில் சிக்கல் இருக்கும். ஆனால் ஐ.டி. துறையில் புதியவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ‘எக்ஸ்ட்ரா லார்ஜ்’ஆகவே இருக்கின்றன.
புது மாப்பிள்ளை மவுசாவது 15 நாட்கள் வரையில் தாங்கும், ஆனால் ஐ.டி.யிலோ வேலைக்குச் சேரும்வரைதான், அதுபற்றிய பிரமையெல்லாம். வணக்கம் சொல்லி வரவேற்கும்போது சிநேகமாகச் சிரிக்கும் ‘டீம் லீடர்’- அடுத்த நிமிடத்திலிருந்தே ஆர்டர்களால் சித்தம் கலங்கவைப்பார். தேர்ந்த திரைப்படங்களில்கூடக் காணக் கிடைக்காத இன்ஸ்டண்ட் ட்விஸ்டுகள் ஐ.டி. துறையில் சாதாரணம்.
ஒவ்வொரு அலுவலகத்திலும் தனியாகப் பயிற்சித் துறைகளைச் செயல்படுத்துகிறார்கள். “புதுசா வர்றவங்க எல்லாருக்கும் பயிற்சி வகுப்புகள கட்டாயம் நடத்துவாங்க. ‘காலேஜில் நீங்க, கறுப்பா பயங்கரமான விசயங்களப் பத்தி படிச்சிருப்பீங்க, ஆனா நாங்க சொல்லித்தரது பயங்கர கறுப்பு பத்தி’ங்கிற மாதிரி 2 மாதங்களுக்கு வகுப்பு நடத்துவார்கள்” என்று கிண்டலாக விளக்குகிறார் விஷ்ணு கார்த்தி. ஜாவா, டாட் நெட், விபி, ஒபன் சோர்ஸ் போன்றவை கல்லூரியில் படித்தவைதான். ஆனால், ஒவ்வொரு நிறுவனத்துக்கும் தனிப்பட்ட பேட்டர்ன் கடைப்பிடிக்கப்படும்.
தனியாக வகுப்புகள் எடுப்பது ஐ.டி. துறையின் சிறப்பம்சம். ஏன் இப்படிச் செய்கிறார்கள் ?
“ வேலை பார்க்கும்போது அப்பப்ப தெரிஞ்சுக்கிற பல விஷயங்கள ஒரு கிளாஸ்ல சொல்லித்தர்றதுக்குக் காரணம் இருக்கு. டிகிரி வாங்கிய அறிவெல்லாம் இதுக்குப் பத்தாதுங்கிறத ரொம்ப சைலண்டா சொல்றதுக்கும், ஐ.டி. ஃபீல்டுக்கு ஏத்தபடி புதுசா வந்தவங்களோட மனநிலையைப் பழக்குவதற்காவும் தான் கிளாஸ் நடக்குதுன்னு நினைக்கிறேன்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன்.
தொழில் நிறுவனங்களின் தேவைக்கும் மாணவருடைய திறனுக்கும் அதிக இடைவெளி இருக்கிறது என்ற வாதத்தை நாஸ்காம் என்ற ஐ.டி. நிறுவன உரிமையாளர்களின் அமைப்பு முன்வைக்கிறது. நாஸ்காம் அமைப்பின் தமிழ்நாடு, கேரள மண்டல இயக்குநர் கே. புருஷோத்தமன், “தமிழ்நாட்டுல வருஷத்துக்கு 30 ஆயிரம் பேர் ஐ.டி. ஐ.டி.லயும் சர்வீஸ் செக்டார்லயும் புதுசா வேலைக்கு வாறாங்க.
இதுல பாதிக்கும் மேற்பட்டவங்க கம்ப்யூட்டர், லேப் டாப்பெல்லாம் யூஸ்ஃபுல்லா பயன்படுத்துறாங்க. ஆனால், 30 சதவீதம் பேர்தான் தொழில் நிறுவனங்களின் இன்றைய தொழில்நுட்பத் தேவையை பூர்த்தி பண்றாங்க. பி.எச்.பி. உள்ளிட்ட புதிய கம்ப்யூட்டர் லாங்வேஜைப் படிச்சிருக்காங்க. லாங்க்வேஜ் ஸ்கில், வாடிக்கையாளர்களுடனான கம்யூனிகேஷன் இதுல எல்லாம் நம்மோட மாணவர்கள் ஆரம்ப நிலையில்தான் இருக்காங்க” என்கிறார்.
பயிற்சி முடிந்ததும் இதுதான் உங்கள் புராஜெக்ட், இதுதான் உங்கள் குழு என்று சொல்லும்போது ஒவ்வொரு புதிய ஊழியருக்கும் மனசுக்குள் பட்டாம்பூச்சி சிறகடிக்கத் தொடங்கும். ‘யு ஹாவ் பீன் அசைண்டு டு வொர்க் வித் மிஸ்டர் ரமேஷ் டீம், அஸ் எ ஜுனியர் சாஃப்ட்வேர் டெவலப்பர்’ என்று மின்னஞ்சலில் தேவ செய்தி வரும்போது, கால்கள் தரையில் இருக்காது.
அந்த டீமில் ஏற்கெனவே இருந்த சீனியர் ஒருவரை வீட்டுக்கு அனுப்பியதன் விளைவாக, அவருக்குக் கீழே இருந்தவர்களுக்குச் சங்கிலித் தொடராக புரமோஷன் கிடைத்தது. அங்கே பிடிக்கிற நெருப்பு அனுமார் வாலில் எரிந்ததைப் போல் நீண்டுகொண்டே போகும்.
ஆனால், இவ்வாறு குழுக்களில் அமர்த்தப்பட்ட பின்னர், ஒருவர் புதிய விஷயங்களை அறிந்துகொள்வதற்கும், கல்வியை மேம்படுத்திக்கொள்வதற்குமான வாய்ப்பு குறைவு. “நிறுவனம் எவ்வளவு பெருசோ அந்த அளவுக்கு நம்மோட திறமை கொறஞ்சுபோயிரும். ஒரு புராஜெக்ட்டோட ஒரு பகுதியை மட்டும் திறமையா செஞ்சு முடிக்கும் ஒருத்தரால முழுத் திட்டத்தையும் பத்திப் பெருசா தெரிஞ்சுக்க முடியாது. அதற்கான நேரமும் இருக்காது” என்கிறார் ஐ.டி. பணியாளர் செந்தில்.
ஐ.டி. பணியாளர்கள் வேலை, ரயில் முன்பதிவு இணையதளத்தில் ஒரு சிறு மாற்றத்தைச் செய்ய வேண்டியதாக இருக்கலாம். அல்லது ஒரு மென்பொருளைப் பற்றித் தகவல்கள் கூறி அதை மற்ற நிறுவனத்துக்கோ, தங்கள் நிறுவனத்துக்குள்ளேயோ விற்க வேண்டியிருக்கும். “இந்த வேலையைச் செய்வதற்கு பி.இ. முடிச்சிருக்க வேண்டியதில்ல. பேஸிக்கா கம்ப்யூட்டரப் பத்தி தெரிஞ்சிருக்கிற யாரு வேணும்னாலும் இதைச் செய்யலாம்.
அதனால்தான் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸோ ஐ.டி.யோ படிக்காதவங்களையும், பி.இ.மெக்கானிக்கல், எலக்டிரிக்கல்ன்னு ஐ.டி.க்குச் சம்பந்தமே இல்லாத படிப்பு படிச்சவங்களையும் வேலைக்கு எடுத்துக்கிறாங்க. இங்கே நம்மோட ஜாப்புக்குத் தேவையான டெக்னாலஜிய வேணும்னா கத்துக்கிடலாம். வேற பெரிய டெக்னாலஜி எதையும் கத்துக்கிட முடியாது” என்கிறார் ஐ.டி. பணியாளர்களின் அமைப்பான நாலேஜ் புரொபெஷனல் ஃபாரத்தைச் சேர்ந்த அருண்.
திறமையான மாணவர்கள் வேண்டுமென நிறுவனங்கள் கோரும், அதே நேரத்தில் வேலைச் சூழலோ மாணவர்களின் திறமையை மழுங்கடித்துவிடும். இந்த முரண்நகைதான் ஐ.டி.துறையின் உண்மை நிலை.
****************