வியாழன், 25 ஜூன், 2015

நெருக்கடி நிலையின் 40 ஆண்டுகள்: நெருப்பாற்று நாயகர்கள்

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-40-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7353539.ece?homepage=true&theme=true

வரலாற்றின் அலமாரியிலிருந்து ஒரு கட்டுரை...
நெருக்கடி நிலையின் 25-வது ஆண்டு நினைவு தினம் தொடர்பாகக் கூட்டங்களை நடத்தப்போவதாக பாஜக அறிவித்திருப்பது அபத்தமானது. 1975-77 நெருக்கடி நிலை காலகட்டத்தில் நெருக்கடி நிலைக்கு எதிரான போராட்டத்தின்போது பாஜக / ஆர்எஸ்எஸ் தலைவர்களில் பெரும்பாலானோர் துரோகம் இழைத்தனர். ஆர்எஸ்எஸ் அமைப்பின் அப்போதைய தலைவர் பாளாசாகேப் தேவரஸ், புணேயின் எரவாடா சிறையில் இருந்து இந்திரா காந்திக்குப் பல மன்னிப்புக் கடிதங்களை எழுதினார் என்பது மகாராஷ்டிர சட்டப்பேரவை நிகழ்ச்சிகளின் ஆவணங்களில் பதிவாகியிருக்கிறது. போராட்டத்திலிருந்து ஆர்எஸ்எஸ் விலகிக்கொள்வதாகவும், இந்திரா காந்தியின் 20 அம்சத் திட்டத்துக்காகப் பணிபுரியத் தயாராக இருப்பதாகவும் அந்தக் கடிதங்களில் அவர் குறிப்பிட்டார்.
ஆனால், அவர் எழுதிய எந்தக் கடிதத்துக்கும் இந்திரா காந்தி பதில் எழுதவில்லை. அடல் பிஹாரி வாஜ்பாயும் இந்திரா காந்திக்கு மன்னிப்புக் கடிதம் எழுதினார். அதை இந்திரா ஏற்றுக் கொண்டார். உண்மையில், 20 மாதங்கள் அமலில் இருந்த நெருக்கடி நிலையின்போது பெரும்பாலான சமயங்களில் பரோலில் வெளியில் வந்தார் வாஜ்பாய். அரசுக்கு எதிரான எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கப்போவதில்லை என்று எழுத்துபூர்வமாக இந்திரா காந்திக்கு அவர் உறுதியளித்திருந்தார். நல்ல விதமாக நடந்துகொள்வதாக உறுதியளித்ததன் பேரில் சிறையில் இருந்து வெளியே வந்த ஜன சங்க உறுப்பினர்கள்பற்றி அகாலி தலைவர் சுர்ஜித் சிங் பர்னாலா எழுதிய புத்தகம் பிரமாதமாக விவரித்திருக்கிறது.
ஆர்எஸ்எஸ் தந்த அதிர்ச்சி
நம்மில் பலர் அவரவர் வழிகளில் நெருக்கடி நிலையை மிகக் கடுமையாக எதிர்த்தோம். அத்தனை பெருமையும் முதலில் மொரார்ஜி தேசாய்க்கும் ஜெயப்பிரகாஷ் நாராயணுக்கும்தான் செல்ல வேண்டும். 78 வயதான மொரார்ஜி தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சண்டிகர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது ஜெயப்பிரகாஷ் நாராயணின் இரண்டு சிறுநீரகங்களும் மர்மமான முறையில் செயலிழந்த பின்னர், ஜஸ்லோக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்தியா ஒட்டுமொத்தமாக நெருக்கடி நிலைக்குப் பணிந்ததையும், ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் மாற்றத்தையும் அறிந்த அவர் அதிர்ந்துபோனார். எனினும் அவர் பின்வாங்கவில்லை. தலைமறைவாக இருந்த எனக்கு 1975 ஆகஸ்ட் மாதம் ஒரு செய்தியை அனுப்பினார். வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று, நெருக்கடி நிலைக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யுமாறு என்னைக் கேட்டுக்கொண்டிருந்தார்.
மொரார்ஜியோ மிகவும் உறுதியாகவும் நம்பிக்கையுடனும் இருந்தார். நல்ல விதமாக நடந்துகொள்வதாக உறுதியளித்தால் மொரார்ஜியைப் பரோலில் வெளிவிடத் தயார் என்று இந்திரா காந்தி கூறியனுப்பினார். ‘வெளியில் வந்தவுடன் உடனடியாக மீண்டும் போராட்டத்தைத் தொடங்குவேன்’ என்று மொரார்ஜி சொல்லியனுப்பினார். இதைக் கேட்டு அழுத அவரது மருமகள் பத்மா, அவரது வயதைக் கருத்தில்கொண்டு அரசின் நிபந்தனையை ஏற்றுக்கொள்ளுமாறு கெஞ்சினார். ஆனால், அதைவிடச் சாவதே மேல் என்று கூறினார் மொரார்ஜி.
ஆர்எஸ்எஸ்ஸின் எல்லாத் தலைவர்களும் பணிந்து விடவில்லை என்பதையும் நான் சொல்லியே ஆக வேண்டும். மாதவ்ராவ் மூளே, தத்தோபந்த் டெங்கடி மற்றும் மோரோபந்த் பிங்ளே போன்றோர் விதிவிலக்குகள். மூளேவுக்கு என்னை மிகவும் பிடிக்கும். நான் வெளிநாட்டில் இருந்தபோதும், இந்தியாவில் தலைமறைவாக இருந்தபோதும் என்னை முழுமையாக ஆதரித்தார். ஆனால், 1976 நவம்பரில், மீண்டும் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்லுமாறு கலங்கிய கண்களுடன் என்னிடம் கூறினார். நெருக்கடி நிலைக்கு முழுமையாகப் பணிந்துவிடுவது தொடர்பாகத் தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் கையெழுத்திட 1977 ஜனவரி இறுதியில் ஆர்எஸ்எஸ் முடிவுசெய்திருப்பதாக என்னிடம் அவர் கூறினார்.
போராட்டத்தைப் பற்றி விசாரித்தேன். 42-வது சட்டத் திருத்தத்துக்கு அனைவரும் ஒப்புக்கொண்டதாகவும், நாம் இதுவரை அறிந்திருந்த ஜனநாயகம் முடிவுக்கு வந்துவிட்டது என்றும் மூளே தெரிவித்தார். ஆர்எஸ்எஸ்ஸைப் பொறுத்தவரை ஜனநாயகம் முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனால், எல்லோருக்கும் அப்படி அல்ல. சில வாரங்களில் மக்களவைக்கான பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்த முடிவை இந்திரா காந்தி எடுப்பதற்கு என்ன காரணம் என்று யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், இதன் விளைவாக, சரணடையும் ஆவணத்தில் கையெழுத்திடும் அவசியம், அதிர்ஷ்டவசமாக ஆர்எஸ்எஸ்ஸுக்கு ஏற்படவில்லை.
அழுத்தம் தந்த ஜிம் கார்ட்டர்
மக்களவைத் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிடவும் நெருக்கடி நிலையை விலக்கிக்கொள்ளவும் ஒருங்கமைக்கப்படாத சக்திகளின் கூட்டு இந்திரா காந்தியை நிர்ப்பந்தித்தது. வெளிநாடுகளில் எனது பிரச்சாரம் மற்றும் அமெரிக்காவின் அறிவுஜீவிகளிடம் எனக்கு இருந்த தொடர்பின் மூலம் அமெரிக்காவின் அதிகாரமட்டத்தின் கவனத்தை, குறிப்பாக புதிதாகப் பதவியேற்ற அதிபர் ஜிம் கார்ட்டரின் கவனத்தை ஈர்க்க முடிந்தது. பதவிப் பிரமாணம் ஏற்பதற்கு முன்னரே, மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இந்திய அரசுக்கு அழுத்தம் தரத் தொடங்கினார் ஜிம் கார்ட்டர். அது இந்திரா காந்தியை அசைத்துப் பார்த்தது.
இந்த விஷயத்தில் அதிகம் பேசப்படாத இன்னொரு நாயகன், தத்துவ ஞானி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி. நெருக்கடி நிலையை விலக்கிக்கொள்ளுமாறு இந்திரா காந்தியை அவர் தூண்டினார். நெருக்கடி நிலையை அமல்படுத்தியது தவறு என்று தனது அந்தராத்மா கூறுவதை இந்திரா காந்தி ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
காஞ்சி மடத்தின் நிராகரிப்பு
இந்திரா காந்திக்கு அதிக வலி ஏற்படுத்தியது, காஞ்சி மடத்தின் பரமாச்சாரியார்  சந்திரசேகர சரஸ்வதியிடம் ஆசி வேண்டிச் சென்றிருந்ததுபோது ஏற்பட்ட அனுபவம்தான். 90 நிமிடங்களுக்கு இந்திரா காந்தியைப் பார்க்கவே மறுத்துவிட்ட அவர், அதன் மூலம் நெருக்கடி நிலையை முற்றிலுமாகத் தான் நிராகரித்ததை இந்திரா காந்திக்கு உணர்த்தினார்.
மொரார்ஜி போராட்டத்தைக் கைவிட மறுத்துவிட்டார். நெருக்கடி நிலையின் மூலம் கொஞ்சமாவது நல்ல விஷயங்கள் நடந்தன என்று ஒரு மரியாதைக்காக ஒப்புக்கொள்ளுமாறு இந்திரா காந்தியின் தூதர்கள் கெஞ்சியதையும் அவர் நிராகரித்துவிட்டார்.
இந்திரா காந்தி தேர்தலை அறிவித்தபோது, வன்முறை வழியில் தோல்வியடைந்தவர்கள் தேர்தலைப் புறக்கணிக்க விரும்பினார்கள். ஜனநாயகம் தொடர்பான பிரச்சினைகளால் படிப்பறிவில்லாத பொதுமக்கள் வருத்தமடைந்திருக்க மாட்டார்கள் என்றும் இப்படியான சூழலில் எதிர்க் கட்சிகளுக்கு வாய்ப்பே இல்லை என்றும் அவர்கள் கருதினார்கள். இதன் மூலம் தேர்தல் முடிவுகள் நெருக்கடி நிலையை ஆதரிப்பதாகவே அமையும் என்றும் நம்பினார்கள். ஆனால், மொரார்ஜி தேசாயும் சரண் சிங்கும் அப்படி நினைக்கவில்லை. மக்கள்மீது அவர்கள் பெரிய அளவில் நம்பிக்கை வைத்திருந்தார்கள்.
இந்தியச் சமூகத்தின் பன்முகத் தன்மைதான் மக்களைச் சர்வாதிகாரத்துக்கு எதிராகப் புரட்சி செய்ய வைத்தது. முற்றிலும் வேறுபட்ட பிரிவினரை ஒன்றுக்கொன்று ஈர்க்கும் அம்சம்தான் இந்தியாவை ஒரு ஜனநாயகச் சமூகமாக வைத்திருக்கிறது. சமூகத்தின் இந்தக் கலவையான இயல்பு இருக்கும்வரை இந்திய ஜனநாயகம் உயிர்த்திருக்கும் என்பதுதான் நெருக்கடி நிலையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். இந்தியச் சமூகத்தின் ஒற்றைப்படைத்தன்மையை ஒரு அளவுக்கு மேல் வலியுறுத்துவது ஜனநாயகத்துக்கு ஆபத்தாகிவிடும்.
கன்னாவை நினவிருக்கிறதா?
நெருக்கடி நிலையின்போது அதை எதிர்த்துப் போராடக்கூடிய இடத்தில் இருந்த குறிப்பிடத் தக்க மனிதர்கள் அதற்கு எதிராகப் போராடவில்லை. இன்று மக்கள் சுதந்திரத்தைப் பாதுகாக்க ஜெயப்பிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய் போன்ற தலைவர்கள் நம்மிடையே இல்லை. அடிப்படை உரிமைகளை நீதித் துறை வாயிலாக நசுக்குவதற்குப் பதிலாக, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவிக்கான வாய்ப்பை இழக்கவே விரும்பினார் ஹெச்.ஆர். கன்னா. யாருக்கேனும் அவரை நினைவிருக்கிறதா?
1975-77 காலகட்டத்தைவிட இன்று நெருக்கடி நிலையை எதிர்கொள்ள முடியாத அளவுக்கு நாம் பலவீனமாக இருக்கிறோம். முதல் காரணம், சுதந்திரப் போராட்டத்தின் சாதி வேறுபாடற்ற தலைவர்கள் இப்போது நம்மிடையே இல்லை. அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் இடத்தில் பாசிஸ நிறுவனம் இருக்கிறது என்பது மற்றொரு காரணம். இந்த நிறுவனம் பல லும்பன் அமைப்புகளை உருவாக்கியிருக்கிறது. இந்த அமைப்புகள், மதத் தூதர்களைக் கொல்லவும் தயங்காதவை.
இன்று மெல்ல இயங்கும் நெருக்கடி நிலையால் அமைப்புகள் பாதிக்கப்பட்டிருப்பதற்கான எல்லா வித அறிகுறிகளும் தென்படுகின்றன. நெருக்கடி நிலைக்கு எதிரான போராட்டத்தைக் கொண்டாட பாஜக முடிவுசெய்திருப்பது ஏன் அபத்தமானது என்பதற்கான முக்கியமான காரணம் இது. அரசியல் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவருவதைவிட, அதை மாற்றியமைக்கத்தான் பாஜக திட்டமிடுகிறது. வரலாற்றை மாற்றி எழுதும் வேலைகளை அக்கட்சி தொடங்கிவிட்டது. பாஜக-வின் கிளை அமைப்புகளான விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தள் போன்றவை சமூகத்தின் சிறுபான்மையினர் மீது பயங்கரமான வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கின்றன.
ஆக, 25 ஆண்டுகள் கழித்தும் நாம் ஜனநாயகத்தை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதுடன் அந்தச் சவாலைப் புறக்கணித்துவிடவும் முடியாது. அது இன்று மறைமுகமாக முற்றுகையிடப்பட்டிருக்கிறது. ‘நிலையான கண்காணிப்பே விடுதலைக்குக் கொடுக்கும் விலை’ என்று அமெரிக்கப் புரட்சியாளர் பேட்ரிக் ஹென்றி கூறியிருக்கிறார். எனவே, நம்மில் யாரெல்லாம் எதிர்த்து நிற்க முடியுமோ அவர்கள் அதை இப்போதே செய்ய வேண்டும். இதுதான் நெருக்கடி நிலையின் பாடம்.
அடல் பிஹாரி வாஜ்பாயும் இந்திரா காந்திக்கு மன்னிப்புக் கடிதம் எழுதினார். அதை இந்திரா ஏற்றுக் கொண்டார். உண்மையில், 20 மாதங்கள் அமலில் இருந்த நெருக்கடி நிலையின்போது பெரும்பாலான சமயங்களில் பரோலில் வெளியில் வந்தார் வாஜ்பாய். அரசுக்கு எதிரான எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கப்போவதில்லை என்று எழுத்துபூர்வமாக இந்திரா காந்திக்கு அவர் உறுதியளித்திருந்தார்.
தமிழில் சுருக்கமாக: வெ. சந்திரமோகன்
2000-ல் நெருக்கடி நிலையின் 25-வது ஆண்டு நிறைவடைந்தபோது, பாஜக-வின் நிலைப்பாட்டை விமர்சனம் செய்து 13.06.2000-ல் ‘தி இந்து’ (ஆங்கிலம்) நாளிதழில் சுப்பிரமணியன் சுவாமி எழுதிய கட்டுரை.
************************************************************************************************************************
இந்திய ஜனநாயகத்தின் அத்தனைக் கதவுகளும் இழுத்து மூடப்பட்ட காலம் அது. நெருக்கடி நிலைப் பிரகடனத்தை காங்கிரஸ் அல்லாத அத்தனை பேரும் எதிர்த்தனர் என்பதுதான் பொதுவான நம்பிக்கை. ஆனால், வரலாறு அதை மறுக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு அப்பாலும் பலர் நெருக்கடி நிலையை வெளிப்படையாக ஆதரித்தனர். அதற்கு அவர்கள் முன்வைத்த காரணங்களும் விளக்கங்களும் விநோதமானவை; அதிர்ச்சி தருபவை.
வினோபா பாவே
காந்திய வழியை உயிர் மூச்சாகப் பின்பற்றி சர்வோதயா இயக்கத்தை முன்னெடுத்தவர் வினோபா பாவே. இந்தியாவின் கிராமங்கள்தோறும் நடைப் பயணமாகவே சென்று 42 லட்சம் ஏக்கர் நிலத்தை நிலவுடைமையா ளர்களிடமிருந்து பெற்று ஏழை, எளிய மக்களிடம் ஒப்படைத்தவர். அத்தகைய வினோபா, நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டபோது அரசு பிறப்பிக்கும் சட்டத்தைப் பின்பற்றுவது மக்களின் கடமை என்றார். மக்கள் தங்கள் வேலையைக் காலதாமதமின்றி, சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு ஒழுங்காகச் செய்வதற்கு இந்தச் சட்டம் வழிகோலுகிறது என்றார். இது ஒழுக்கத்துக்கான காலகட்டம் என்றும் பெயர் சூட்டினார். புலி யாரையாவது சும்மா விடுமா? ஒருநாள் வினோபாவின் ஆசிரமக் கதவுகளும் சோதனை என்ற பெயரில் தட்டப்பட்டன. ‘சர்க்காரின் துறவி’க்கு நெருக்கடி நிலை என்றால் என்ன என்பது அந்தத் தருணத்தில்தான் தெரியவந்தது!
அன்னை தெரசா
அன்பு மற்றும் சேவையின் மூலம் உலகை வென்ற அன்னை தெரசா அராஜகத்தை, அடக்குமுறையை எப்படி ஏற்க முடியும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், நெருக்கடி நிலை அமலில் இருந்தபோது அவர் இவ்வாறு கூறினார். “நெருக்கடி நிலையில்தான் நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன. தொழிற்சாலைகளில் எந்த வேலை நிறுத்தமும் நடக்கவில்லை. அலுவலகங்களில் ஊழியர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு வேலைக்கு வருவது கட்டாயமாக்கப் பட்டிருக்கிறது. மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்” என்றார் அன்னை!
ஸ்ரீபாத் அம்ரித் டாங்கே
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை ‘இந்திரா கம்யூனிஸ்ட் கட்சி’ என அழைக்கும் அளவுக்கு நெருக்கடி நிலைக்குத் தீவிரமாக ஆதரவு தெரிவித்தவர் அக்கட்சியின் ஸ்தாபக உறுப்பினரான பாத் அம்ரித் டாங்கே. இந்தியத் தொழிற்சங்க இயக்கத்தின் முன்னோடியும் சுதந்திரப் போராட்ட வீரருமான டாங்கே, வலதுசாரிகளை முறியடிக்கும் விதமாக இந்திரா காந்தியின் நெருக்கடி நிலைச் செயல்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு தந்தார். தோழர்கள் எதைச் செய்தாலும் அதில் ஒரு சிந்தாந்தப் பின்னணி இருக்கும் பாருங்கள்!
எம்ஜிஆர்
கருணாநிதி ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர இந்திரா காந்தியுடன் நெருக்கத்தை உண்டாக்கிக்கொள்ள இந்தச் சூழலை எம்ஜிஆர் கச்சிதமாகப் பயன் படுத்திக்கொண்டார். டெல்லிக்கு நேரடியாகச் சென்று இந்திரா காந்தியைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு முன் ‘அனைத்திந்திய’எனும் வார்த்தை சேர்க்கப்பட்டது இந்தக் காலகட்டத்தில்தான்.
பால் தாக்கரே
காங்கிரஸ் கட்சிக்கு நேர் எதிரான தரப்பைச் சேர்ந்தவர் பால் தாக்கரே என்பதால், அவர் நெருக்கடி நிலையை வன்மையாகக் கண்டித் திருப்பார் எனப் பலர் நினைக்கக் கூடும். ஆனால், அவர் என்ன செய்தார் தெரியுமா? இந்திரா காந்தியின் மகனான சஞ்சய் காந்திக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் நெருக்கடி நிலைப் பிரகடனத்தை முழு மனதுடன் வரவேற்பதாகத் தெரிவித்தார்!
குஷ்வந்த் சிங்
பஞ்சாபைச் சேர்ந்த புகழ்பெற்ற பத்திரிகையாளர், முதுபெரும் நாவலாசிரியர் மற்றும் நையாண்டி எழுத்துகளால் அனைவரையும் கவர்ந்தவர் குஷ்வந்த் சிங். இவர் வெளிப் படையாக நெருக்கடி நிலை ஆதரவாளர். வினோபா பாவே முன்வைத்த அதே காரணங் களுக்காகத் தானும் நெருக்கடி நிலையை ஆதரிப்பதாகத் தெரிவித்தார் குஷ்வந்த் சிங்!
எம்.எஃப்.ஹுசைன்
பின்னாளில் இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் இல்லை என்று சொல்லி நாட்டைவிட்டு வெளியேறி உலகப் புகழ்பெற்ற இந்த ஓவியர், நெருக்கடி நிலையின் ஆதரவாளர். புலி மேல் அமர்ந்து தீய சக்திகளை அழிக்க சீறிப்பாயும் துர்கா தேவியைப் போல அக்காலகட்டத்தில் இந்திரா காந்தியை வரைந்தார் எம்.எஃப் ஹுசைன்.
தொடர்புக்கு: susithra.m@thehindutamil.co.in
******************************************
நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட ஜூன் 25, 1975 அன்று தமிழகத்தில் இருந்த நிலை வேறு; திராவிட முன்னேற்றக் கழகம் மீது வன்மம் கொண்டு இந்திரா காந்தியின் தலைமையிலான மத்திய அரசால் 1976 ஜனவரி 31 அன்று திமுக ஆட்சி கலைக்கப்பட்ட பின் தமிழகத்தில் இருந்த நிலை வேறு. உண்மையில் தமிழகத்தில் நெருக்கடி நிலை திமுக ஆட்சி கலைக்கப்பட்ட பின்தான் தொடங்கியது என்றுகூடச் சொல்லலாம்.
ஏனென்றால், வெளி மாநிலங்களிலிருந்து அடைக்கலம் தேடி வந்தவர்களுக்கும் முகாம் தந்த களமாகத் தமிழகம் இருந்தது. மத்திய அரசால் தேடப்பட்ட பல தலைவர்கள் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் பாதுகாப்பாக இருந்தனர். சஞ்சீவ ரெட்டி ஒருமுறை, ‘‘என்னுடைய சொந்த ஊரான அனந்தப்பூரில் நெருக்கடி நிலையை எதிர்த்துக் கூட்டம் நடத்த முயற்சித்தும் முடியவில்லை. சென்னையில் சுதந்திரமாக நடத்த முடிந்தது. அதற்குக் காரணம், தமிழகத்தில் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி இருந்ததுதான்” என்று சொன்னது ஒரு சான்று. சஞ்சீவ ரெட்டி, ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்ற பல தலைவர்கள் அந்நாட்களில் தமிழகத்தில் தங்கியிருந்தார்கள். இந்திரா காந்தியின் வார்த்தைகளிலேயே சொல்வது என்றால், “இந்தியாவில் இரண்டு தீவுகள். ஒன்று, திமுக தலைமையில் ஆட்சி நடக்கும் தமிழ்நாடு. மற்றொன்று, ஸ்தாபன காங்கிரஸ் தலைமையில் நடக்கும் குஜராத்.” அப்படித்தான் இருந்தது தமிழகம். ஆனால், ஆட்சி கலைக்கப்பட்டதும் எல்லாம் மாறியது.
திமுகவின் முன்னணித் தலைவர்கள் முரசொலிமாறன், மு.க.ஸ்டாலின், வைகோ, துரைமுருகன், ஆற்காடு வீராசாமி என்று பலரும் கைது செய்யப்பட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மிசா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தக் காலகட்டத்தில் மூன்று அதிகாரிகளின் செயல்பாடுகள் வரலாற்றில் மறக்க முடியாதது.
ஆர்.வி.சுப்ரமணியம்
ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக 17 ஆண்டுகள் (1954 1971) இருந்தவர் மோகன்லால் சுகாதியா. ராஜஸ்தான் மாநிலத்தின் பல சீர்திருத்தங்களுக்கும் காரணமானவர். 1976-ல் தமிழகத்தில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டபோது தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டவர். அன்றைக்கு மோகன்லால் சுகாதியா ஆளுநராகச் செயல்பட்டபோது அவருக்கு ஆலோசகர்களாக ஆர்.வி.சுப்பிரமணியம் மற்றும் தவே ஆகிய இரண்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டார்கள்.
இவர்களில் ஆர்.வி.சுப்ரமணியம் கேரளாவில் பிறந்த தமிழர். 1947-ல் முதல் ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவில் இடம்பெற்றிருந்தவர். திருச்சி ஜோசப் கல்லூரியில் பட்டம் பெற்றவர். டெல்லியில் பணிபுரிந்தாலும் தமிழகத்தையும் தமிழ் மக்களையும் நன்கு அறிந்தவர். நெருக்கடி நிலைக் காலங்களில் மக்கள் தரப்பிலிருந்து வைக்கப்படும் நியாயமான கோரிக்கைகளைச் செவிகொடுத்துக் கேட்டுக்கொண்டவர். தமிழ்நாட்டு நலன் சார்ந்த முறையீடுகளை ஏற்றுக்கொண்டு பலருக்கு உதவியும் செய்தார். மக்கள் நலவிரும்பியாகத் திகழ்ந்தார். திமுக ஆட்சி கலைக்கப்பட்டபோது, கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் சோ.அழகிரிசாமியுடன் கோவில்பட்டி விருந்தினர் விடுதியில் ஆர்.வி. சுப்ரமணியத்தைச் சந்தித்து விவசாயிகள் மீது தொடுக்கப்பட்ட கடுமையான ஜப்தி நடவடிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்திருந்தேன்.
அப்போதைய ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தின் ஆட்சியாளராக இருந்த நாராயணனை அழைத்த அவர், விவசாயிகளுக்கு எந்தவிதப் பிரச்சினையும் ஏற்படக் கூடாது என்று கூறி நடவடிக்கையை முடுக்கிவிட்டார். அந்தக் காலகட்டத்தில் நெல்லை மாவட்டம் முழுக்க வறட்சி நிலவியது. அப்போதுதான் மக்காச்சோளம் பயிர்செய்யப்படத் தொடங்கியது. உணவு தானியங்கள் இல்லாமல் மக்காச்சோளத்தை மக்கள் உணவாக உட்கொள்ளத் தொடங்கினார்கள். இந்த விஷயங்களையெல்லாம் எடுத்துச் சொன்னதும் விவசாயிகளின் உடமைகளையோ, அவர்கள் வீட்டு நிலைக் கதவுகளையோ பறிமுதல் செய்யும் ஜப்தி நடவடிக்கைகளை கைவிடச் செய்தார் ஆர்.வி.சுப்ரமணியம்.
காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரைக்கும் கோட்டையில் அவரைச் சந்தித்து மனுக்கள் வழங்க முடிந்தது. அவரது மேஜைக்குச் சென்ற மனுக்கள் அவ்வப்போது பைசல் செய்யப்பட்டன. திமுக அரசின் மீது அவருக்கு எந்தவித வன்மமும் இருந்ததாகத் தெரியவில்லை. இவருக்கு நேர் எதிரானவர்கள் மற்ற இருவரும்; அதாவது, தவேவும் வித்யாசாகரும்.
தவே
தவே போன்ற ஆலோசகரை யாரும் எளிதில் நெருங்குவது என்பதே முடியாத காரியமாக இருந்தது. கடையநல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.சுப்பையா முதலியாரோடு குற்றாலம் பராசக்தி கல்லூரியில் நடந்த நிகழ்வில் தவேயைச் சந்திக்க முயன்று, நதிநீர் இணைப்பு சம்பந்தமாகவும், பாசன வசதிகளுக்காகக் குளங்களைத் தூர்வாரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மனு வழங்கினோம். அந்த மனுவைக்கூட திரும்பிப் பார்க்காமல், “என்ன விஷயம்?” என்று கேட்டுவிட்டு கண்ணியமற்ற முறையில் எங்களை நடத்தினார் தவே. திமுக-வைச் சேர்ந்த அத்தனை பேரையும் கைது செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் மிகவும் முரட்டுத்தனமாக நடந்துகொண்டார்.மத்திய இணை அமைச்சராக இருந்த ஓம் மேத்தாவுக்கு வேண்டப்பட்டவர் தவே.
அவர் ஒருபோதும் மக்களைச் சந்தித்ததோ அவர்களின் குறைகளைக் காது கொடுத்துக் கேட்டதோ இல்லை. ஒன்று, சுற்றுப்பயணத்தில் இருப்பார். அல்லது மோகன்லால் சுகாதியாவோடு ஆளுநர் மாளிகையில் இருப்பார்.
வித்யாசாகர்
நெருக்கடி நிலையில் மிகக் கடுமையாக நடந்துகொண்ட சிறையதிகாரி வித்யாசாகர். மிசா கைதிகள் எவ்வளவு படித்தவர்களாக இருந்தாலும் அவர்களை மிரட்டுவது, அடித்து உதைப்பது, துன்புறுத்துவது என்று காட்டுமிராண்டித் தனமாக நடந்து கொண்டார். அதில் ஒரு இன்பத்தைக் கண்டார் எனலாம். சென்னை மத்தியச் சிறையில் அன்றைக்குச் சிறைக்காவல் அதிகாரியாக அவர்தான் இருந்தார். முரசொலி மாறன், ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி போன்றோரைக் கடுமை யாகத் தாக்கிக் கொடுமைப்படுத்தியதும், அதன் விளைவாக சிட்டிபாபு உயிரிழந்ததும் வேதனையான செய்திகள். இவற்றை முழுமையாக சிட்டிபாபு தன்னுடைய சிறை டைரிக் குறிப்பில் எழுதியுள்ளார். நெருக்கடி நிலையின்போது மதுரைச் சிறையில் திமுக-வைச் சேர்ந்த சாத்தூர் பாலகிருஷ்ணனும் போலீஸ் வன்முறை காரணமாக உயிரிழந்தார்.
ஆளுநரின் ஆலோசகர்களாக இருந்த ஆர்.வி.சுப்பிர மணியம், தவே ஆகியோருடன் சிறைத்துறை வித்யாசாகரும் நெருக்கடி காலத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டார். இந்த மூவரில் ஆர்.வி. சுப்ரமணியம் மட்டுமே மக்கள் நலம் சார்ந்து நடுநிலையாளராக விளங்கினார்.
- கே.எஸ்.இராதாகிருஷ்ணன்,
தொடர்புக்கு : rkkurunji@gmail.com
**************************
1975 ஜூன் 25-26-ல் பிறப்பிக்கப்பட்ட நெருக்கடி நிலையின் 40-வது ஆண்டு நிகழ்ச்சியையொட்டி இந்தக் கேள்வி என்னைக் குடைகிறது: எந்த அளவுக்கு ஜனநாயகம் இன்றைக்குப் பாதுகாப்பாக இருக்கிறது?
ரேபரேலி மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்வு பெற்றது செல்லாது என்று அலாகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து, பதவி வகிப்பது சரியா என்று இந்திரா காந்தியைக் கேட்டார்கள் என்ற ஒரே காரணத்துக்காக, நாடெங்கும் ஆயிரக் கணக்கான அரசியல் தொண்டர்களும் எதிர்க் கட்சித் தலைவர்களும் கைதுசெய்யப்பட்டு விசார ணையே இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டார்கள். போலீஸ்காரர்களின் துணையோடு ஆயிரக் கணக்கான ஆண்கள் சஞ்சய் காந்தியாலும் அவருடைய அடியாட்களாலும் கட்டாய கருத்தடைச் சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
பிரதமர் பதவி வகித்த இந்திரா காந்தியும், அரசின் எந்தப் பதவியிலும் இல்லாத அவருடைய மகன் சஞ்சய் காந்தியும் சஞ்சயின் சிறு ஆதரவாளர்கள் கும்பலும் நாட்டின் முழு நிர்வாகத்தையும் அதிகாரத்தையும் தங்களுடைய கைகளில் எடுத்துக்கொண்டவுடன் நாடு முழுக்க அச்சம் பரவியது. “இந்திய அரசியல் சட்டம் அளிக்கும் அனைத்து அடிப்படை உரிமைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகின்றன” என்ற அரசின் நெருக்கடி நிலை அறிவிப்பு வெளியானபோது, அறிவுஜீவிகளில் பெரும்பாலான வர்களும் பொதுக்கருத்துகளை உருவாக்கும் இடங்களில் இருந்தவர்களும் எதிர்ப்பு ஏதும் இல்லாமல் ஏற்றுக்கொண்டனர். அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதை எதிர்த்து உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் செல்ல உரிமை இல்லை என்ற அரசின் அறிவிப்பு பல அரசியல் கட்சிகளுக்கு எந்தவிதக் கவலையையும் ஏற்படுத்தவில்லை.
அன்றைய ஆட்சியாளர்களின் ஜனநாயக விரோதச் செயலுக்கு உச்ச நீதிமன்றம் சட்டபூர்வ அங்கீகாரம் அளித் ததுதான் வெட்கப்பட வேண்டிய செயலாக இருந்தது. 1976-ல் நடந்த ‘ஏ.டி.எம்., ஜபல்பூர்’ வழக்கில் ‘அரசின் முடிவு சரியே’ என்று நான்கு நீதிபதிகள் ஆதரித்தனர். நீதிபதி எச்.ஆர். கன்னா மட்டுமே அந்த அறிவிப்பு, சட்டப்படியான ஆட்சி என்ற கோட்பாட்டுக்கு எந்த அளவுக்கு ஊறு செய்யும் என்று உணர்ந்து, மாற்றுத் தீர்ப்பை வெளியிட்டார். அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப்பட்டால் அதன் விளைவு எவ்வளவு மோசமாக இருக்கும் என்று அவர் மட்டுமே தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்தார். ஆனால், பெரும்பாலான நீதிபதிகள் ஆதரித்ததால், அடிப்படை உரிமைகள் பறிப்பு செல்லாது என்று 9 உயர் நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புகள் தள்ளுபடியாயின.
‘அரசியல் சட்டம் அளிக்கும் அடிப்படை உரிமைகளைத் தற்காலிகமாக மறுக்கும் அளவுக்கு உள்நாட்டுப் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது’ என்ற அரசின் கூற்றை உச்ச நீதி மன்றத்தின் நான்கு நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.
போர்க்காலத்தில் நாட்டு மக்கள் மீது அரசின் கட்டுப்பாடு முழுமையாக இருக்க வேண்டும் என்று இரண்டாவது உலகப் போரின்போது பிரபுக்கள் அவை அளித்த தீர்ப்பையே அவர்கள் முன்னுதாரணமாகக் கொண்டனர். பெரும்பான்மை நீதிபதிகள் தங்களுடைய தீர்ப்புக்கு ஆதரவாகப் பற்றி நின்ற நிலையை, பிரிட்டிஷ்காரர்களே பின்னாளில் தூக்கி எறிந்துவிட்டனர். அந்த வழக்கிலும் மாற்றுத் தீர்ப்பு அளித்த அட்கின் பிரபு, தன்னுடைய சகோதர நீதிபதிகள், (அரசியல்) நிர்வாகிகளைவிடத் தங்களை அதிகபட்ச நிர்வாகிகளாகக் கருதிவிட்டனர் என்று மனம் வெதும்பிக் கூறினார். ‘உள்துறை அமைச்சகத்தின் நாற்காலிக்கு அடியில் சிக்கிக்கொண்ட சுண்டெலி போல நீதித் துறை ஆகிவிட்டது’ என்று லண்டன் உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்டேபிள் வேடிக்கையாகக் குறிப் பிட்டார்.
1976-க்கு முன்னால் பிரிட்டிஷ் நீதிமன்றங்களே நிராகரித்த ஒரு நிலையை இந்திய உச்ச நீதிமன்றம் பின்பற்றி, நெருக்கடி நிலையை நியாயப்படுத்தியது மிகுந்த ஏமாற்றத்தையே தந்தது. ஒரு தலைமுறையையே கொந்தளிக்கவைத்த விஷயங்கள் இவையெல்லாம்.
ஆனால், இவை குறித்தெல்லாம் இன்றைய இந்தியர்களில் எவரேனும் இப்போது கவலைப்படுகிறார்களா? பேச்சு சுதந்திரத்தையும் அரசுக்கு எதிராகக் கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்தையும், அரசை விமர்சிக்கும் சுதந்திரத்தையும் நெரிக்கும் அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்க இன்றைக்குத் தயாராக இருப்போர் எத்தனை பேர்? அட, 26.06.1975 தொடங்கி 23.03.1977 வரையிலான 21 இருண்ட மாதங்களில் இந்தியாவில் என்ன நடந்தது என்பதைப் பதிவுசெய்யாமல் இன்னமும் ஏன் நம்முடைய வரலாற்றுப் புத்தகங்கள் மவுனம் சாதிக்கின்றன?
மாறியது என்ன?
நெருக்கடி நிலை காலத்துக்குப் பிறகு, இங்கே ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? பெரிதாக எதுவும் மாறிவிடவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சட்டப் பேரவைகளுக்கும் மக்களவைக்கும் தேர்தல் நடப்பது மட்டுமே இங்கு ஜனநாயக நடவடிக்கையாக இருக்கிறது. தேர்தலிலும்கூடப் பண பலம், அடியாள் பலம், சாதிகளின் ஆதிக்கம், மதவாதம், ஆதிக்க சக்திகளின் செல்வாக்கு ஆகியவையே முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தியா அடைந்துள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்களால் செயற்கைக் கோள்களைப் பறக்கவிட முடிகிறது, கோடிக் கணக்கான மக்களின் வறுமையை, பசியை, தாகத்தை, சுகாதாரமற்ற வாழ்க்கையைப் போக்க முடியவில்லை.
ஊழல் பேர்வழிகளான அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் ஆகியோருடைய துணையோடு பெருந்தொழில் நிறுவனங்கள் இந்தியாவின் இயற்கை வளங்களைச் சூறையாடுகின்றன. அவர்களைத் தேச பக்தர்கள் என்று அழைக்கின்றனர். இப்படி இயற்கை வளங்களைச் சூறையாடாதீர்கள் என்று தடுக்கும் சமுதாயத் தலைவர்களை, சமூக ஆர்வலர்களை, சுற்றுச்சூழல் ஆர்வலர்களை அடித்து நொறுக்கி, கைது செய்து சிறையில் அடைத்து துரோகிகள் என்று பட்டம் சூட்டுகின்றனர். வளர்ந்து வரும் பெரும்பான்மையினவாதமும், வகுப்புவாதமும் இந்திய ஜனநாயகத்துக்கு இதுவரை இருந்திராத அச்சுறுத்தல்களை ஏற்படுத்திவருகின்றன.
சூட்-பூட் கி சர்க்கார்
இன்றைக்கு மோடி அரசு மீது முன்வைக்கப்படும் சூட்-பூட் கி சர்க்கார் என்ற அடைமொழி எல்லாப் பெரிய அரசியல் கட்சிகளுக்குமே பொருந்தும். பெருந்தொழில் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில்தான் நாட்டின் பொருளாதாரமும் வணிகமும் இருக்கின்றன. எல்லா மாநில அரசுகளுமே மக்களுடைய எதிர்ப்பைக் கொடூரமாக ஒடுக்க ஆள்தூக்கிச் சட்டங்களை இயற்றி வைத்துள்ளன. காங்கிரஸ், பாஜக, திமுக, அஇஅதிமுக, சமாஜ்வாதி, தெலுங்கு தேசம், தெலங்கானா ராஷ்டிர சமிதி என்று எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதுதான் நிலைமை. தேசவிரோதச் செயல் தடுப்பு, தேசப் பாதுகாப்பு போன்ற சட்டங்களைப் பயன்படுத்த அவை தயங்குவதில்லை. விவசாயிகள், பழங்குடிகள், மாணவர்கள், மகளிர் என்று எந்த அமைப்பினர் கிளர்ச்சி செய்தாலும் கடுமையாக ஒடுக்கப்படுகின்றன. வட கிழக்கு மாநிலங்கள், காஷ்மீர் மட்டுமின்றி பெரும்பாலான மாநிலங்கள் இப்போது போலீஸ் சர்க்கார்களாக மாறிவிட்டன.
படித்தவர்களின் அலட்சியம்
ஜனநாயகம் ஆபத்துக்குள்ளாகியிருக்கிறது. நகர்ப்புற படித்த மக்களும் சொந்தத் தொழில் செய்வோரும் இதுகுறித்து கொஞ்சமும் கவலைப்படவில்லை. இந்தி யாவின் கிராமங்களிலும் நகர்ப்புறங்களிலும் வசிக்கும் கோடிக் கணக்கான இந்தியர்கள் கோபத்தில் கொதித்துக்கொண் டிருக்கிறார்கள். புதிய சுரங்க அகழ்வுகள், அணை கட்டும் திட்டங்கள், வன அழிப்பு, தாது மணல் உள்ளிட்ட இயற்கை வளங்கள் சூறையாடல் தொடர்பாக நாட்டின் பல பகுதிகளிலும் அன்றாடம் லட்சக் கணக்கான சிறு சிறு மோதல்கள் நடந்துவருகின்றன. செய்தி ஊடகங்கள் அவை அனைத்தையும் மக்களுக்குத் தெரிவிப்பதில்லை. வளர்ச்சி என்பது கவுரவம், ஜனநாயகம் ஆகியவற்றுடன் ஏற்படும்வரை போராட்டம் தொடரும் என்று மக்கள் அறிவித்துள்ளனர்.
நெருக்கடி நிலை அமலில் இருந்தபோது டெல்லி திஹார் சிறையிலிருந்த ஜெயப்பிரகாஷ் நாராயண், ஆசார்ய கிருபளானி போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள், மக்களுடைய நலன்களையும் உரிமைகளையும் காப்பதற்கு ஏற்படுத்தியது தான் ‘சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கம்’(பி.யு.சி.எல்.). ஜனநாயகத்துக்கு விரோதமான சக்திகளும், ஆளும் கட்சியின் அதிகார வட்டத்துக்குள் இருக்கும் எடுபிடிகளும் மக்களுடைய அடிப்படை உரிமைகளை நசுக்கிவிடக் கூடாது என்பதற்காகத் தோற்றுவிக்கப்பட்டதுதான் இந்த இயக்கம்.
நெருக்கடி நிலை காலத்தில் அடக்குமுறைகளுக்கு ஆளான ஆயிரக் கணக்கான மக்களை பி.யு.சி.எல். இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறது. அறிவிக்கப்படாத இரண்டாவது நெருக்கடி நிலை ஏற்பட்டுவிடாமல் தடுக்கும் கடமை பி.யு.சி.எல்லுக்கும் இதைப் போன்ற சகோதர அமைப்புகளுக்கும் இருக்கிறது. நம்முடைய ஜனநாயக உரிமைகளை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் சுதந்திரம், சமத்துவம், சமூக நீதி ஆகியவை எல்லோருக்கும் கிட்டும் வகையிலும் எல்லா ஜனநாயக ஆதரவு சக்திகளும் இணைந்து செயல்பட வேண்டும்.
பல்சாக் தன்னுடைய நாவல் ஒன்றில் குறிப்பிட்டிருப்பார், “நீதித் துறையை அவநம்பிக்கையோடு பார்ப்பதில் தொடங்கு கிறது ஒரு சமூகத்தின் முடிவு; இப்போதைய அமைப்புகளின் மாதிரியை உடையுங்கள், வேறு அடிப்படையில் அதைப் புதிதாக உருவாக்குங்கள். ஆனால், அதை நம்புவதை மட்டும் கைவிட்டுவிடாதீர்கள்” என்று. எந்த ஒரு சமூகத்திலும் நீதித் துறை ஆற்ற வேண்டிய முக்கியப் பங்கை இது எடுத்துக்காட்டுகிறது.
இன்றைய இந்தியாவில் அரசியல் சட்டம் தனக்களித்த கடமையிலிருந்து இந்திய நீதித் துறை நழுவுவதாகவே தோன்றுகிறது.
- வி. சுரேஷ், பி.யு.சி.எல். தேசியப் பொதுச் செயலாளர்,

*************
இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவித்தபோது எனக்கு 25 வயது. என் வயதொத்தவர்கள் அந்தக் கொடுமைகளை நேரில் பார்த்தவர்கள். அதன் ஊடாக அரசியல் உணர்வு பெற்றவர்கள். அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப்படும்போது வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை 21 மாத காலம் அனுபவித்தவர்கள். எங்களின் உருவாக்கத்தில் நிச்சயம் இந்த அனுபவம் ஒரு முக்கியப் பங்கு வகித்தது.
“ஏ.டி.எம் ஜபல்பூர் எதிர் சுக்லா” எனும் வழக்கு இன்னும் நினைவிலிருந்து அழியவில்லை. தலைமை நீதிபதி ஏ.என் ரே, பி.என். பகவதி, எச்.ஆர்.கன்னா, ஒய்.வி. சந்திரசூட், எம்.எச்.பெக் ஆகிய ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சட்ட அமர்வு ஒன்றின் முன், “நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டால் ஒரு குடிமகன் அரசியல் சட்டம் வழங்கும் எந்த உரிமையையும் கோர இயலாது” என அரசுத் தரப்பில் கூறப்பட்டது. “உயிர் வாழும் உரிமைகூடக் கிடையாதா?” என நீதியரசர் எச்.ஆர்.கன்னா இடைமறித்தபோது, அட்டர்னி ஜெனரல் நிரேன் டே, “ஆம், உயிர்வாழும் உரிமையும்கூடத்தான்” என இறுகிய குரலில் பதிலளித்ததையும், அதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யும் உரிமை குடிமக்களுக்குக் கிடையாது என ஆணையிட்டதையும் இப்போது நினைத்தாலும் உடல் பதறுகிறது.
பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள். வேறென்ன சொல்வது? எத்தனை குழந்தைகள் பெற்றுக் கொள்வது, எங்கே குடிசைகளை அமைத்துக்கொள்வது என அனைத்து உரிமைகளிலும் அரசு கைவைத்தது. அரசில் எந்தப் பொறுப்பும் வகிக்காத இந்திராவின் இளைய மகன் சஞ்சயின் நேரடி மேற்பார்வையில் எளிய மக்களுக்குக் கட்டாயக் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. குடிசைகள் இடிக்கப்பட்டு ஏராளமானோர் விரட்டப்பட்டனர்.
அந்த 21 மாத காலத்தில் இந்தியாவில் இரட்டை நெருக்கடி நிலைகள் செயல்பட்டன என்பதைப் பலரும் மறந்திருப்பார்கள். ஏற்கெனவே, 1971 டிசம்பர் 3-லிருந்து இங்கு இந்திய பாக். யுத்தத்தை முன்னிட்டு ‘வெளிநாட்டு ஆக்ரமிப்பு' எனக் காரணம் காட்டி அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலை அமலில் இருந்தபோதே ‘உள்நாட்டு அமைதியின்மை' எனக் காரணம் சொல்லி ஜூன் 25, 1975-ல் இந்த நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது.
ஹிட்லரின் முழக்கங்கள் எந்தத் தயக்கமும் இன்றி இங்கே மறு அரங்கேற்றம் செய்யப்பட்டன. இங்கே கோயபல்ஸுகள் இல்லை. ஆனால், டி.கே. பரூவாக்கள் இருந்தனர். அவர்கள் “இந்திராவே இந்தியா; இந்தியாவே இந்திரா!” என முழக்கமிட்டனர். பத்திரிகைகள் கடும் தணிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்டன. ஜெயப்பிரகாசரின் நெருங்கிய நண் பரும் இந்திராவைக் கடுமையாக எதிர்த்துவந்தவருமான ராம்நாத் கோயங்காவின் இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்தத் தணிக்கையைக் கண்டித்து, 1975 ஜூன் 28-ம் தேதி இதழின் தலையங்கத்துக்கான இடத்தை வெற்றிடமாக விட்டிருந்தது.
பழிவாங்கிய ‘நாய்கள்’
இத்தனை கொடுமைகள் அரங்கேறியபோதும், முக்கியத் தலைவர்கள் உட்பட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டபோதும் பெரிய அளவில் எதிர்ப்பு இல்லை என்பது குறித்து, “ஒரு நாய் கூடக் குரைக்கவில்லை” என அத்தனை எகத்தாளமாகக் கூறினார் இந்திரா. ஆனால், அந்தக் குரைக்காத நாய்கள்தான் 1977 மார்ச்சில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அவரைக் கடித்துக் குதறின. வானளாவிய அதிகாரம் எனக் கொக்கரித்தவர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார்.
நெருக்கடி நிலைக் கால அனுபவத்தின் ஊடாக அடிப்படை உரிமைகள், அரசியல் சட்டத்தின் ஆட்சி முதலான பிரக்ஞை களை மக்கள் பெற்றனர். பல துறைகளிலும் இதன் தாக்கங்கள் வெளிப்பட்டன. இலக்கியத் துறையில் ஏற்பட்ட ஒன்று இங்கே குறிப்பிடத் தக்கது.
‘மணிக்கொடி’ காலந்தொட்டு இங்கே சிற்றிதழ்கள் நவீன இலக்கிய வளர்ச்சிக்கு எத்தனையோ பங்களிப்புகளைச் செய்திருந்தபோதும், அரசியலை அவை தீண்டத் தகாததாகவே விலக்கி வைத்திருந்தன. அந்த வரிசையில் 70-களின் மத்தியில் வந்துகொண்டிருந்த ஒரு சிற்றிதழ்தான் ‘பிரக்ஞை'. அதுவும் அரசியல் பேசினால் இலக்கியத் தரம் தாழ்ந்துவிடும் என்கிற நிலையுடன் வெளிவந்துகொண்டிருந்தபோதுதான் நெருக்கடி நிலை அறிவிப்பு வந்தது. தொடர்ந்த மனித உரிமை மீறல்கள் ‘பிரக்ஞை' ஆசிரியர் குழுவுக்குள் ஒரு விவாதத்தை ஏற்படுத்தின. இத்தனை உரிமை மீறல்களுக்கு மத்தியில் நாம் தூய இலக்கியம் பேசிக்கொண்டிருக்க இயலுமா என்பதுதான் கேள்வி. விவாதம் முடிந்து சில மாத இடைவெளிக்குப் பின் இதழ் வந்தபோது அதன் அட்டைப் படத்தில் மாஓ இடம்பெற்றிருந்தார்.
புதிய தத்துவங்கள்
தொடர்ந்து சிறுபத்திரிகைகளின் மத்தியில் ‘படிகள்', ‘பரிமாணம்', ‘இலக்கிய வெளிவட்டம்', ‘மார்க்சீயம் இன்று', ‘நிகழ்', ‘நிறப்பிரிகை' என அரசியலைப் புறக்கணிக்காத, புதிய தத்துவங்களைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய போக்கு ஒன்று உருவானது.
1977 மார்ச் 21 அன்று நெருக்கடி நிலை நீக்கப்பட்டு மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா கட்சி ஆட்சி தொடங்கியபோது நாங்கள் அடைந்த மகிழ்ச்சி சொல்லி மாளாது. அடுத்த சிலமாதங்களில் பிரதமர் மொரார்ஜி தஞ்சை வந்தார். ராஜப்பா நகரில் உள்ள போலீஸ் கிரவுன்டில் பொதுக் கூட்டம். மொழிபெயர்ப்பதற்கு குமரி அனந்தன்.
அப்போது நான் ஒரு இளம் கல்லூரி ஆசிரியன். விடுமுறை எடுத்துக்கொண்டு ஒரு மணி நேரம் முன்னதாகவே முதல் வரிசையில் காத்திருந்தேன்.
குண்டு துளைக்காத கண்ணாடிகள் எல்லாம் பொருத்தப் படாத எளிய மேடை. பெரிய போலீஸ் பாதுகாப்புக் கெடுபிடிகள் ஏதும் இல்லை. மேடையிலிருந்து சுமார் 30 அடி தூரத்தில் ஒரு கயிறு மட்டும் கட்டப்பட்டு அதற்கு அப்பால் நாங்கள் உட்கார்ந்திருந்தோம்.
மேடை ஏறிய மொரார்ஜி, அதிகாரி ஒருவரைக் கூப்பிட்டு அந்தக் கயிற்றைக் காட்டி ஏதோ சொன்னார். அடுத்த நிமிடம் அந்தக் கயிறும் அவிழ்க்கப்பட்டது. மொரார்ஜி எங்களை நோக்கி அருகே வருமாறு சைகை செய்தார். திபுதிபுவென ஓடி மேடை அருகே அமர்ந்துகொண்டோம். மொரார்ஜி ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினார். அனந்தன் அதை அழகு தமிழில் மொழிபெயர்த்தார்.
- அ.மார்க்ஸ், எழுத்தாளர், மனித உரிமைச் செயல்பாட்டாளர்

தொடர்புக்கு : professormarx@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக