ஞாயிறு, 7 ஜூன், 2015

Maggi

கையடக்க வாக்மேனிலிருந்து அதிவேகப் புல்லட் ரயில்வரை உலகுக்கு ஜப்பான் அளித்த கொடைகள் ஏராளம். ஜப்பான் மக்களிடம் 2000-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. 20-ம் நூற்றாண்டில் ஜப்பான் கண்டுபிடித்த பொருட்களிலேயே சிறப்பான பொருள் ‘இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்'தான் என்று அந்தக் கருத்துக்கணிப்பில் பெரும்பாலானவர்கள் வாக்களித்திருந்தனர். ஜப்பான் மக்கள் மட்டுமல்ல, உலகைக் கவர்ந்த உடனடி உணவு வகைகளில் நூடுல்ஸுக்குத் தனியிடம் உண்டு.
ஜப்பானிலிருந்து இந்தியாவுக்கு
இரண்டாம் உலகப்போர் முடிந்த பிறகு ஜப்பானில் உணவுப் பற்றாக்குறை நிலவியது. அப்போது அவர்களுக்கு அந்நியமான பிரெட்டை சாப்பிட ஜப்பானிய மக்கள் வலியுறுத்தப்பட்டனர். அந்தக் காலகட்டத்தில் உடனடியாகத் தயாரிக்கக்கூடிய, சுவையான, சீக்கிரம் கெட்டுப்போகாத, அதற்கெல்லாம் மேலாக ஜப்பானிய மக்கள் பாரம்பரியத்திலிருந்து விலகாத உணவு ஒன்று தேவை என்று உணர்ந்தார் மோமோஃபுகு அண்டோ. அப்போது அவர் கண்டறிந்ததுதான் உடனடி நூடுல்ஸ். இப்படியாக ஜப்பானில் அறிமுகமாகி, உலகம் முழுவதும் அவசரத்துக்குக் கைகொடுக்கும் உணவாக உடனடி நூடுல்ஸ் மாறிவிட்டது.
‘இரண்டே நிமிடங்களில் சமைத்துவிடலாம்' என்ற அடையாளத்துடன் எளிதான மாலை சிற்றுண்டியாக நெஸ்லே நிறுவனம் ‘மேகி' என்ற உடனடி நூடுல்ஸை 1980-களில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாகக் குழந்தைகளை இலக்காகக்கொண்டு உடனடி நூடுல்ஸ் விளம்பரங்கள் மிகப் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டன. அமிதாப் பச்சன், மாதுரி தீட்சித், பிரீத்தி ஜிந்தா உள்ளிட்ட பாலிவுட் நடிகர்களும் சமீபகாலமாக இதை விளம்பரப்படுத்தினர்.
காரீயம், எம்.எஸ்.ஜி. ஆபத்து
இன்றுவரை அதிகபட்ச வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள நூடுல்ஸ் பிராண்டான மேகியின் டேஸ்ட் மேக்கரில் காரீயத்தின் அளவு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறியுள்ளார். காரீயம் நரம்பு மண்டலத்தையும் பாதிக்கக்கூடியது என்பதால், கற்றல் குறைபாடுகள், நடத்தை குறைபாடுகளை அது உருவாக்கலாம். மேலும் பல உடல்நலப் பிரச்சினைகளும் ஏற்படலாம்.
உடனடி நூடுல்ஸின் டேஸ்ட் மேக்கரில் காரீயம் மட்டுமல்லாமல் மோனோ சோடியம் குளூட்டமேட் (எம்.எஸ்.ஜி.) என்ற உப்பும் அதிகப்படியாக இருப்பது தெரியவந்துள்ளது. உணவுப்பொருட்கள் தரம் மற்றும் உணவு கூட்டுப்பொருட்கள் ஒழுங்குமுறைச் சட்டம் (2011)-ன்படி செறிவூட்டப்பட்ட உணவு வகைகளில் மோனோ சோடியம் குளூட்டமேட் சேர்க்கப்படக்கூடாது. அஜினோமோட்டோ என்ற வணிகப் பெயரிலும், இந்த மோனோ சோடியம் குளூட்டமேட் தனியாக விற்பனை செய்யப்படுகிறது.
வந்தது தடை
மேகி நூடுல்ஸில் காரீயம், எம்.எஸ்.ஜி. அளவுக்கு அதிகமாகக் கண்டறியப்பட்டுள்ளதால் உத்தரப் பிரதேசம், குஜராத், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ளது, டெல்லி, கேரள மாநிலங்களில் அரசு விற்பனை நிலையங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மேற்கு வங்க மாநிலங்களில் மேகி நூடுல்ஸை பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளன அம்மாநில அரசுகள்.
டெல்லியில் உள்ள அறிவியல், சுற்றுச்சூழல் மையம் (Centre for Science and Environment) 2012-ல் நடத்திய பரிசோதனையில், சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான மேகி நூடுல்ஸில் கூடுதலான உப்பு இருப்பது கண்டறியப்பட்டது. ஒரு பாக்கெட் நூடுல்ஸில் 3 கிராம் உப்பு இருக்கிறது. ஒரு நாள் முழுவதும் நமக்குத் தேவையான உப்பின் அளவே ஆறு கிராம்தான்.
“ஒரு பாக்கெட் நூடுல்ஸை ஒருவர் சாப்பிட்டால், முழு நாளும் சாப்பிடும் உணவில் சேர்க்கப்படும் உப்பைக் கண்காணிக்க வேண்டியிருக்கும். செறிவூட்டப்பட்ட உணவு வகைகளில் இருக்கும் அதிகபட்ச உப்பால் உடல் பருமன், நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். அவை தரும் சத்தில்லாத கலோரிகளும் உடலைப் பாதிக்கக்கூடியவை" என்கிறார் அறிவியல், சுற்றுச்சூழல் மையத்தின் திட்ட மேலாளர் அமித் குரானா.
இந்தியச் சந்தையில் விற்கப்படும் உடனடி நூடுல்ஸில் வைட்டமின் சத்துகள் உள்ளதாகவும் விளம்பரங்கள் வருகின்றன. சிறிதளவுகூட நார்ச்சத்து இல்லாத உணவால் மற்ற எந்தச் சத்தையும் தர முடியாது. 70 சதவீதம் மாவுச்சத்தைக் கொண்ட நூடுல்ஸை ஆரோக்கியமான உணவு என்று ஏற்றுக்கொள்ளமுடியாது என்கிறார் அமித்.
சாப்பிடுவதில் என்ன இருக்கிறது?
ஒரு டின்னிலோ, பாக்கெட்டிலோ, குப்பியிலோ அடைத்து விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட-செறிவூட்டப்பட்ட உணவில் கலந்திருக்கும் பொருட்கள் குறித்தும், அவற்றில் அடங்கியுள்ள சத்துகள் குறித்தும் லேபிளில் சரியான தகவல்களைத் தெரிவிக்க வேண்டியது அவசியம். அத்துடன் தவிர்க்கப்பட வேண்டிய உப்பு, கொழுப்பு போன்றவற்றை ஒரு வாடிக்கையாளர் தினசரி எவ்வளவு எடுத்துக்கொள்ளலாம் என்பது போன்ற பரிந்துரைகளும் லேபிளில் இருந்தாக வேண்டும்.
நாடு விடுதலை பெற்று 68 ஆண்டுகள் ஆகியும், தான் வாங்கும் ஒரு உணவுப் பொருளைப் பற்றி ஒரு வாடிக்கையாளர் முழுமையாகத் தெரிந்துகொண்டு தேர்வு செய்வதற்கான விதிமுறைகள் எதையும் அரசு வகுக்கவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது.
குழந்தைகளே இலக்கு
உடனடி நூடுல்ஸ் தொடங்கி அனைத்து உடனடி உணவு வகைகளுக்கான தொலைக்காட்சி விளம்பரங்களும் குழந்தைகளையே இலக்காகக் கொண்டிருக்கின்றன. தங்களுக்கு எது ஆரோக்கியமான உணவு என்பதை முடிவுசெய்யும் முதிர்ச்சியற்றவர்கள் குழந்தைகள். அவர்களை முதன்மை வாடிக்கையாளர்களாகக்கொண்டு செய்யப்படும் விளம்பரங்கள் சார்ந்து, அரசு சில கட்டுப்பாடுகளை விதிப்பது தற்போதைய அவசர, அவசியத் தேவை.
நாம் சாப்பிடும் உணவின் ஆரோக்கியம் தொடர்பாக அரசு மற்றும் உணவு நிறுவனங்களை மட்டுமே நம்பியிருப்பது இப்பிரச்சினைக்குத் தீர்வளிக்கப் போவது இல்லை. வண்ணமயமான விளம்பரங்களைப் பார்த்துப் பாக்கெட் பாக்கெட்டாகச் சமையலறையை நிறைக்கும் பெரியவர்களும் பெற்றோர்களும் இனிமேலாவது கவனமாக இருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறது உடனடி நூடுல்ஸ் சர்ச்சை.
மேகி தடை செய்யப்பட்டிருப்பதற்குக் காரணமாகக் கூறப்படும் மோனோ சோடியம் குளூட்டமேட் பற்றி பிரபல எழுத்தாளரும் மருத்துவருமான கு. சிவராமன் என்ன சொல்கிறார்? - படிக்க ‘மேகி' மட்டும்தான் குற்றவாளியா? - மருத்துவர் கு. சிவராமன்

------------------
மேகி தடை செய்யப்பட்டிருப்பதற்குக் காரணமாகக் கூறப்படும் மோனோ சோடியம் குளூட்டமேட் பற்றி பிரபல எழுத்தாளரும் மருத்துவருமான கு. சிவராமன் என்ன சொல்கிறார்?:
ஓர் உணவுப் பொருளில் சுவை என்பது இயல்பாக வரவேண்டும். இயற்கையாகச் சில உணவுப் பொருட் களைச் சேர்க்கும்போது உருவாகும் சுவையைத் தாண்டி கூடுதலாகச் சுவையூட்டுவதற்கு, மருத்துவ, உணவியல் அடிப்படையில் நமது பாரம்பரியத்தில் சுவைகள் கூட்டப்பட்டன. ஏலக்காய், வெல்லம், எலுமிச்சை போன்ற சுவையூட்டிகளின் குணமறிந்து சேர்க்கப்பட்டன.
அடிப்படையே தவறு
இந்தப் புரிதலும் அக்கறையும் தூக்கியெறியப்பட்ட உணவுப் பொருள் பெருவணிகத்தில், வலிந்து சுவையைக் கூட்டும்போது, எந்தப் பொருட்களின் அடிப்படையில் அந்தச் சுவை கூட்டப்பட்டது என்பதை அறிய முடிவதில்லை. இப்படி வலிந்து சுவையூட்டுவது அடிப்படையிலேயே தவறு என்கிறார்கள் உணவியல் வல்லுநர்கள். எம்.எஸ்.ஜி. என்று சுருக்கமாகவும், அஜினோமோட்டோ என்ற வணிகப் பெயரிலும் விற்பனையாகும் மோனோ சோடியம் குளூட்டமேட் என்ற செயற்கை சுவையூட்டியின் தயாரிப்பு முறை தெளிவற்றதாக இருக்கிறது. தாவரப் பொருட்களில் இருந்து குளூட்டமிக் அமிலம் கிடைப்பதாகக் கூறப்பட்டாலும், காப்புரிமை சம்பந்தப்பட்டிருப்பதால் அதன் தயாரிப்பு முறை ரகசியம் காக்கப்படுகிறது. அதில் என்னவெல்லாம் இருக்கிறது என்று தெரியாது.
அடிமைப்படுத்தும்
குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸ் உள்ளிட்ட உடனடி உணவுப் பொருட்களில் அமிலத்தன்மை வாய்ந்த இந்த உப்பு சேர்க்கப்படுகிறது. அதனால் வயிற்றுப் புண், அல்சர் போன்ற இரைப்பை சார்ந்த பிரச்சினைகளைச் சாதாரணமாக இது ஏற்படுத்தலாம். இந்த உப்பு ஒருவித அடிமைத்தன்மையை உருவாக்கக்கூடியது. இந்த உப்புச்சுவையை உணர்ந்தவர்களுக்கு, மற்ற உணவு வகைகளின் மீதான நாட்டம் குறையும். டாக்டர் பிளேலாக் எழுதி 1970-களில் வெளியான ‘தி டேஸ்ட் தட் கில்’ என்ற புத்தகத்தில், மோனோ சோடியம் குளூட்டமேட் மூளையின் ஹைப்போ தலாமஸ்வரை பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்றும், வயிற்றுவலியில் தொடங்கி அறிவாற்றலைச் சிதைப்பதுவரை பல்வேறு கோளாறுகளை உருவாக்கக்கூடியது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேகி மட்டுமல்ல
அதேநேரம் தடை செய்யப்பட்டுள்ள மேகி நூடுல்ஸில் மட்டுமல்ல, வேறு பல உடனடி நூடுல்ஸ் வகைகள், ஹோட்டல்-ரோட்டு கடைகளில் விற்கப்படும் சீன, தந்தூரி உணவு வகைகள், சிக்கன், பனீர், கடாய் உணவு வகைகளில் மோனோ சோடியம் குளூட்டமேட் சேர்க்கப்படுகிறது.
திருமண வீடுகள், விசேஷங்களுக்குச் சமைக்கும்போதும் சாம்பார், ரசத்தில்கூட இதைக் கலந்துவிடுகிறார்கள். பர்கர், ரொட்டி, கோழி வறுவல் உள்ளிட்ட பிரபலப் பன்னாட்டு ஹோட்டல் சங்கிலித்தொடர் கடைகளில் பரிமாறப்படும் உணவு வகைகளிலும் இது சேர்க்கப்படுகிறது. அதனால்தான் ஒருவித தனிச்சுவை கிடைக்கிறது.
மேகி நூடுல்ஸை தடை செய்வதில் காட்டும் அக்கறையை, மோனோ சோடியம் குளூட்டமேட் சேர்க்கப்பட்ட அனைத்து உணவு வகைகளைத் தடை செய்வதிலும் அரசு காட்டுமா என்பதுதான் தற்போதைய கேள்வி.
*****
கார்பைடு கற்களால் பழுக்க வைத்த மாம்பழங்கள், கெட்டுபோன இறைச்சி பார்சல்கள், சுகாதரமில்லாத சாலையோர உணவுகள் என நமது உடல் நல, ஆரோக்கியங்களோடு விளையாடும் வர்த்தக நடவடிக்கைகளை தினசரி பார்த்தே வருகிறோம். சுகாதாரத் துறை அதிகாரிகள் அவ்வப்போது இவற்றை கண்டுபிடித்து அழிப்பதும், மீண்டும் வழக்கமாக நடப்பதும் சகஜமாகிவிட்டது.
இது உள்ளூர் அளவிலான பிரச்சி னைகள். ஆனால் இந்த இடத்தில் மக்களின் நம்பிக்கை சார்ந்தவையாக இருக்கின்றன பெரு நிறுவனங்கள். பெரு நிறுவனங்கள் தயாரிக்கும் அனைத்து உணவுப்பொருட்களும் தரமானவையாக இருக்கும் என்கிற நம்பிக்கை மக்களிடம் ஆழமாகப் பதிந்துள்ளது.
சிறு வணிகர்கள், சிறு உற்பத்தி யாளர்கள் செய்யும் தவறுகள் உடனடியாக கண்ணுக்குத் தெரிவது போல பெரு நிறுவனங்களின் தவறுகள் தெரிவதில்லை. தொடர் கண்காணிப்பு மற்றும் பல அழுத்தங்களையும் தாண்டிதான் பெரிய நிறுவனங்களின் தவறுகள் தெரிய வருகின்றன, அந்த வகையில் சமீபத்தில் சிக்கலில் மாட்டியுள்ளது நெஸ்லே நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பான மேகி நூடுல்ஸ்.
மேகி நூடுல்ஸ் மசாலாவில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக ரசாயன உப்பு (மோனோசோடியம் க்ளூட்டமேட்) மற்றும் ஈயம் (லெட்) இருப்பதாக ஆய்வறிக்கை வெளிவர இந்தியாவின் பல மாநில அரசுகளும் மேகி நூடுல்சுக்கு தற்காலிக தடையும், தரப் பரிசோதனைக்கான பரிந்துரையும் செய்துள்ளன.
டெல்லி, தமிழ்நாடு, மத்திய பிரதேசம், கேரளா, குஜராத் மாநிலங்களிலும், நேபாளத்திலும் உடனடியாக தடை செய்யப்பட்டுள்ளது.
உணவுப் பொருட்களில் அனுமதிக் கப்பட்ட அளவைவிட அதிக ரசாயனம் கலந்திருப்பது சட்ட ரீதியாக குற்றம் என உணவுத்துறை அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். மேகி நூடுல்ஸை துரித உணவாக மட்டும் பார்க்காமல், குழந்தைகள் அதிகம் விரும்பி உண்ணும் பிராண்டாகவும் இருந்ததைக் கவனிக்க வேண்டும்.
குழந்தைகள் விரும்பும் உணவிலேயே ரசாயனம் என்கிறபோது, அந்த குழந்தையின் ஆரோக்கியம் சமச்சீரான வளர்ச்சி எல்லாவற்றுக்கும் யார் பெறுப்பேற்பது?
முன்னணி நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனமே இந்த தவறுகளை செய்கிற பட்சத்தில் இவர்களின் உணவுப்பொருட்கள் மீது எப்படி நம்பிக்கை வைப்பது? என்று கேள்வி எழுப்புகின்றனர் மக்கள்.
சாக்லேட்டில் புழு
2003 ஆம் ஆண்டு தீபாவளி சமயத்தில் கேட்பரீஸ் சாக்லேட் பாக்கெட்டில் புழுக்கள் இருப்பதாக மகாராஷ்டிர மாநில உணவுதுறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். தவறு நிகழ்ந்துள்ளதை ஒப்புக் கொண்டு 6 லட்சம் டெய்ரி மில்க் சாக்லேட் பாக்கெட்டுகளை நிறுவனம் திரும்ப பெற்றது.
நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்தது மகாராஷ்டிர அரசு. சில மாதங்களே டெய்ரி மில்க் சாக்லேட்டுகள் சந்தையில் கிடைக்கவில்லை. நிறுவனத்தில் உற்பத்தி ஆலையையோ அல்லது உற்பத்தி அனுமதியையோ ரத்து செய்யவில்லை. சில மாதங்களுக்கு பிறகு விற்பனைக்கு வந்துவிட்டது அந்த நிறுவனம்.
குளிர்பானங்களில் ரசாயனம்
ஏற்ெகனவே இந்தியாவில் முன்ன ணியில் உள்ள பெப்சி மற்றும் கோக் குளிர்பானங்களில் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் ஆசிட் மற்றும் ரசாயனங்கள் போன்றவை அதிகம் உள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. அனுமதிக்கப்பட்ட அளவைவிட 27 சதவீதம் அதிகமாக இந்த பானங்களில் ரசாயனம் இருக்கிறது என்றது அந்த அறிக்கை. இவற்றில் சேர்க்கப்பட்டிருக்கும் மூலக்கூறுகளை தொடர்ந்து சாப்பிட்டால் உயிருக்கு ஆபத்தாகக்கூட முடியலாம் என்றும் அந்த ஆய்வு சொன்னது. 2006-ல் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அதற்கு பிறகு அமைதியாகி விட்டது பிரச்சினை.
இது போன்று நுகர்வோரின் உயிரோடு விளையாடும் முன்னணி நிறுவனங்களின் நடவடிக்கைகள் குறித்து சென்னையில் உள்ள நுகர்வோர் அமைப்பினரிடம் பேசினோம்.
உணவுப் பொருள் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம் (2006) இந்தி யாவில் விற்பனையாகும் உணவுப் பொருட்களை தீவிரமாக கண்காணிக் கிறது. மக்களின் உடல்நலனுக்கு கேடாகும் எந்த உணவுகளையும் அனுமதிப்பதில்லை. உணவுப் பொருள் பாக்கெட்டுகளில் அந்த உணவு குறித்த, சேர்க்கப்பட்டுள்ள முழு விவரங்களையும் நுகர்வோர் தெரிந்து கொள்வதற்கு ஏற்ப அச்சிடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. ஆனால் எந்த நிறுவனங்களும் இதை ஒழுங்காகக் கடைபிடிப்பதில்லை.
பொதுமக்களைப் பொறுத்தவரை துரித உணவுகள் தீங்கு விளைவிப்பவை என்கிற புரிதல் இருந்தாலும், அவற் றை தவிர்க்க முடியாத உணவுப் பழக்கத்துக்கு ஆளாகின்றனர். இரண்டு நிமிட தயாரிப்பு என்றோ, குழந்தைகள் விரும்பி உண்கிறார்கள் என்றோ சமரசம் செய்து கொள்ளக்கூடாது. நமது உடல்நலம், ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வும் எச்சரிக்கையும் நமக்குத்தான் இருக்க வேண்டும்.
துரித உணவுகள் இந்திய உணவு பழக்கத்துக்கு ஏற்றத்தல்ல, பாரம்பரிய உணவுகளே சிறந்தது என்று பலரும் இந்த நேரத்தில் சொல்லி வருவதையும் கவனிக்க வேண்டும்.
இன்னொரு புறம் அரசும் இந்த விஷயத்தில் தீவிரம் காட்ட வேண்டும். விதிமுறைகளை மீறுகிற நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உற்பத்தி செய்யும் இடங்களில் தொடர்ச்சியாக தரப்பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றால் அதை அதிகாரிகள் செய்ய வேண்டும். பெருநிறுவனங்களுக்கு சாதகமாகக் செயல்படும் போக்கு இருக்கக்கூடாது.
இந்த விஷயத்தில் அரசு, நுகர்வோர் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் யாவருக்குமே கூட்டுப்பொறுப்பு இருக்கிறது. இதை உணர்ந்து செயல்படும்போது இது போன்ற சிக்கல்களை தவிர்க்க முடியும் என்கின்றனர்.
மற்றொரு சிக்கலில் நெஸ்லே
இதற்கிடையே நெஸ்லே நிறுவனத்தின் நான் ப்ரோ 3 பால் பவுடர் குறித்து இன்னொரு புகார் எழுந்துள்ளது. கோவையை சேர்ந்த ஓட்டுநர் ஒருவர் தனது குழந்தைக்கு வாங்கிய பால்பவுடரில் புழுக்கள் இருந்ததாக புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக நிறுவனத்திடம் புகார் அளித்ததுடன் கோவையிலுள்ள உணவு பகுப்பாய்வு கூடத்தில் சோதனை செய்துள்ளார்.
அந்த ஆய்வறிக்கையில் பால் பவுடரில் உயிருடன் 28 புழுக்களும், 22 சிறு வண்டுகளும் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 29 ஆம் தேதி தமிழ்நாடு உணவு பாதுகாப்பு, மருந்து கட்டுப்பாட்டு துறையில் புகார் அளித்துள்ளார்.
புகார் தொடர்பாக விசாரிக்க வந்த நிறுவனத்தின் அதிகாரிகள் பால் பவுடருக்கு பதிலாக வேறு பவுடர் டின்னை கொடுப்பதாகவும், புழுக்கள் உள்ள டின்னை திரும்ப பெறுவதாகவும் கூறியுள்ளனர். ஆய்வறிக்கை குறித்த தகவல்களுக்கு தகுந்த பதிலை சொல்லாமல் தங்களது தவறை மூடி மறைக்கவே முயற்சி செய்துள்ளனர். தற்போது இந்த பால் பவுடர் விவகாரம் விசாரணையில் உள்ளது.
தவறுகள் நேர்கிற பட்சத்தில் மட்டும் அரசு நடவடிக்கை எடுக்கிறது. சம்பந்தப்பட்ட (நெஸ்லே) நிறுவனமோ தாங்கள் தவறே செய்யவில்லை என்கிறது. நிறுவனங்கள் சமூக பொறுப்புக்கு (சிஎஸ்ஆர்) தனியாக கோடி கோடியாக கொட்டிக் கொடுக் கின்றன. சமூக பொறுப்பு என்பது தனியாக பணம் செலவு செய்வது மட்டுமல்ல, தரமான உணவுப்பொருட்களை தயார் செய்வதும் சமூக பொறுப்புதான் என்பதை நிறுவனங்கள் மறந்துவிடக் கூடாது
- ஆதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக