ஜுன் 21 - உலக யோகா தினம்
ஜுன் 21 - உலக யோகா தினம்
மனிதன் முதலில் தனக்குள் ளும், பிறருடனும் இணக்க மாக இருத்தல் அவசியம். இதற்கடுத்தாற்போல மிக முக்கிய மாக, அவன் இறை வனோடு அதாவது இறைத் தன்மைகளுடன் இணக்கமாக இருக்கவேண்டியது அவசியம் என்பதை உணர்கிறான்.
அப்போதுதான், நாம் எங்கி ருந்து வந்தோமோ, யாரிடமிருந்து வந்தோமோ அவருக்கு உகந்தவ ராக இருக்க வேண்டியதுதான் தன் முழு வாழ்க்கையின் லட்சியம் என்பதை உணர ஆரம்பிக்கிறான். அப்போது அவனுக்கு 100 சதவீத ஆன்மிக வாழ்க்கை ஆரம்பமாகி றது.
சகுணக் கடவுளை (குணங்கள் கொண்ட கடவுள்கள்) ஏற்றுக் கொள்பவர்கள் தாங்கள் பகவானிடம் இருந்து பிரிந்திருப்பதை உணர்வார்கள். பக்தன், பக்தி யோகத் தின் மூலமாகவோ, கர்ம யோகத்தின் மூலமாகவோ பகவா னிடம் மீண்டும் சேரு வதையே தனது ஆன் மிகச் சாதனையாகச் செய்கிறான்.
பொதுநலம் கொண்ட செயல்கள், கடமைகள் இவற்றின் மூலம் ஒருவன் தனது தெய்வ நிலையைத் திரும்ப அடையும் மார்க்கம்தான் கர்ம யோகம்.
தனது இஷ்ட தெய்வத்திடம் தனது பக்தியையும் அன்பையும் நிஷ்டையையும் செலுத்தி, ஒருவன் தனது தெய்வ நிலையைத் திரும்பப் பெறுவது பக்தி யோகம்.
குணங்களைக் கடந்த நிர்க் குண பிரம்மனையோ, இயற் கையையோ பரம்பொருளாக ஏற்றுக்கொண்டவர்களும் மீண்டும் தங்களது மூலத்தை அடையத் துடிப்பார்கள். அவர்களுக்கான யோகங்களாக ஞான யோகமும், ராஜயோகமும் விளங்குகின்றன.
மனதை அடக்கி அதன்மூலம் ஒருவன் தனது உண்மையான நிலையை உணர்வது ராஜயோகம்.
ஞான யோகத்தின் மூலம் எது நிரந்தர உண்மை, எது தோன்றி உண்மைபோல் காட்டுவது என் பதைத் தனது விவேகத்தால் கண்டு ஆராய்ந்து நித்தியமான பரம் பொருளை அறிவாராய்ச்சியால் உணர்ந்து தெளிவு பெற முடியும்.
மேலே கூறியவை மனிதனின் மூலமான பிரபஞ்சத்தின் ஒரே மையமான இறை வனை அல்லது பரம் பொருளை நோக்கிச் செல்லும் வெவ்வேறு பாதைகள்.
இவற்றில் பக்தன் அல்லது ஆன்மிகச் சாதகன் தனக்கேற்ற மார்க்கத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அல்லது தகுதியான குருவருளால், தான் எந்த யோகத் துக்கு ஏற்றவன் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
யோகத்தின் பல நிலைகள்
ராஜயோகத்தில், பதஞ்சலி முனி வர் ‘அஷ்டாங்க யோகம்’ என்பதை விவரிக்கிறார். அந்த 8 யோகங்கள்:
1. யமம்:
அஹிம்சை, சத்தியம், திருடாமை, தானம் ஏற்காமை, பிரம்மச்சரியம் ஆகியவை யமத்தின் அங்கங்கள். இவை மனதை அதாவது சித்தத்தை தூய்மையாக்கும்.
2. நியமம்:
தவம், கல்வி, சந்தோ ஷம், திருப்தி, தூய்மை, பூஜை ஆகியவை நியமத்தின் அங்கங்கள்.
3. ஆசனம்:
உடலைத் தகுதியுடன் வைத்திருப்பது.
4. பிராணாயாமம்:
உடம்பில் உள்ள உயிர் சக்திகளை அடக்கி நெறிப்படுத்துவது. மூச்சுப் பயிற்சி என்பது இதன் ஓர் அங்கம். பிராணாயாமத்தில் மூச்சுப் பயிற்சி, அநேக ஆசனங்கள் செய்து உடலை அதிக காலம் நேர்த்தியாக, ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு ‘ஹட யோகம்’ என்று பெயர்.
5. பிரத்யாஹாரம்:
இந்திரியங்கள் புறப்பொருட்களுடன் தொடர்பு கொண்டு புறநாட்டம் கொள்வதை மனதின் சங்கல்பத்தால் கட்டுப்படுத்துவது.
6. தாரணை:
மனதை இதயக் கமலத்தில் அல்லது சஹஸ்ராரத் தில் நிறுத்துவது.
7. தியானம்:
மனதை ஓரிடத்தில் நிலைப்படுத்தி, மனதில் மற்ற எல்லா அலைகளையும் அடக்கி, ஓர் அலை மட்டும் தீச்சுடர்போல அசையாமல் இருக்கும் நிலை.
8. சமாதி:
மனம் முழுவதும் ஒரே அலையாக, ஒரே வடிவமாக ஆவதுதான் சமாதி நிலை.
யோகம் என்பது இவ்வளவு உயர்ந்த, ஆழமான விஷயம் என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
மூன்று முக்கிய நிலைகள்
யோகத்தில் 3 முக்கிய நிலைக ளும் பலன்களும் உள்ளன. அவை :
1. எனக்குள் நான் இணக்கத்துடன் இருப்பது ஆனந்தமான நிலை.
2. நான் பிறருடனும் இயற்கையு டனும் இணக்கத்துடன் விளங்கு வது நாம் ஆனந்தத்தைப் பெருக் கிக்கொள்ளும் நிலை.
3. தெய்வத்துடனும், தெய்வீகக் குணங்களுடனும் இணங்கி இருப் பதே நம் உண்மையான நிலை.
இவற்றை மனதில் கொண்டு, உலக யோகா தினத்தைக் கொண்டாட ஆசனங்கள், சூரிய நமஸ்காரம், மூச்சுப் பயிற்சிகளை ஒவ்வொன்றாக ஆரம்பிப்போம்.
********
********
ஜுன் 21 - உலக யோகா தினம்
சிகிச்சைக்கான யோகா என்பது என்ன? ‘ஹட யோகம்’ என்று யோகத்தில் ஒரு வகை உள்ளது. இதில் சிறிதளவு மாறுதல் செய்து பயன்படுத்துவதே யோகாசன சிகிச்சை. இப்படி சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவ அறிவும் தேவை. ஹட யோகத்தைச் சரியான முறையில் பயன்படுத்தி னால் பல்வேறு விதமான வலிகள், நோய்களுக்கும் நிவாரணம் கிடைக் கும். மருந்து, மாத்திரைகள் உட் கொள்வது, அறுவை சிகிச்சை போன்றவற்றைக்கூட தவிர்க்கலாம்.
யோகாசன சிகிச்சைக்கு 2 அம்சங்கள் முக்கியம். முதலாவது, அறிவியல்பூர்வமாக ஹட யோகத் தைப் பயன்படுத்த வேண்டும். அடுத்தது, வலி அல்லது நோய் உள்ளவர்கள் அதற்கு முழு தாக ஒத்துழைக்க வேண்டும்.
புகைபிடிப்பதால் நுரையீரல் கெட்டுப் போன நோயாளிக்கு வெறும் பிராணா யாமம் மட்டும் பலன் தந்துவிடுமா? முதலில் அவர் புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும். அதுபோலத்தான் வலி அல்லது நோய் உள்ளவர்கள் தங்க ளுக்கு அதை ஏற்படுத்தும் அம்சங்களை விலக்க வேண்டும்.
பல நோய்கள், வலிகளுக்குக் காரணம் நம் வாழ்க்கை முறைதான். கழுத்து வலி உள்ளவர்கள் சரியான உயரம் (கனம்) கொண்ட தலையணைகளைப் பயன்படுத்த வேண்டும். அதிக பாரம் தூக்கக் கூடாது. வேலை செய்யும்போது உட்காரும் விதம் முறையாக இருக்க வேண்டும். கூடவே சில யோகாசனங்களைச் சரியான முறையில் செய்தால் வலி நீங்கிவிடும்.
ஹட யோகத்தை முறையாகப் பயிலாமல், பயிற்சி செய்யா மல் மற்றவர்களுக்குக் கற்றுத் தருவதும், தானே பயன்படுத்து வதும் பலன் தராது.
யோகாசனங்களைத் தூய வடிவில் அதன் முழுமையான நிலையில் செய்வது தான் நல்லது. ஆனால் நோயாளிகளுக்கு இது பொருந்தாது. அவர்களுக்குச் சில மாறுதல்களைச் செய்ய வேண்டும். ஆசன நிலைகளின் கடுமைகளைக் குறைக்க வேண்டும். நோயாளிகள் ஆசனங் களைச் செய்யும்போது உடல் ஆடாமலும் சரிந்து விழாமலும் இருக்கத் தலை யணை போல சில சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும். இதில் பி.கே.எஸ்.ஐயங்கார் முன்னோடி. 1960-களில் அவர் இதைக் கையாண்டார். அவரைப் பின்பற்றி யோகாசனத்துக்கு உதவும் சிறு சாதனங்கள் பல புழக்கத்துக்கு வந்துள்ளன.
சாதனங்களின் பலன் என்ன?
1. வலியில் இருந்து நிவாரண மும், துல்லியமான சிகிச்சையும் கிடைக்கும்.
2. நம்மால் ஆசனங்களைச் செய்ய முடியும் என்ற தன்னம் பிக்கை நோயாளிக்கு ஏற்படும்.
3. போதிய பலனைத் தரும் அளவுக்கு, போதுமான நேரம் ஆசனத்தில் இருக்க உதவும்.
4. முதியவர்களால் ஆசனங் களைக் குறிப்பிட்ட நேரம்வரை தொடர்ந்து செய்ய முடியும்.
பாரம்பரிய யோகாசனம்
அப்படியானால் தூய அல்லது பாரம்பரிய யோகாசனம் என்பது என்ன? வலி இல்லாமல் வாழ் வதற்கான வழிமுறைதான் யோகா சனம். உடல் வலியில் இருந்து ஆன்மா விடுபட வேண்டும் என்ப தற்காக உருவானதுதான் ஹட யோகம். ஹட யோகத்தில் பல இருக்கலாம். ஆனால் நோயுற்ற வர்கள் பின்பற்ற வேண்டியது ஒரே வகையிலானதுதான். அது உடல் அமைப்புக்கும் உள்ளிருக் கும் உறுப்புகளுக்கும் ஊறு செய்யாதது. சரியான யோகாசன முறை எது என்று ஒலியலைச் சோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
யோகாசனம் என்பது பலரும் நினைப்பதுபோல இந்து மதம் சார்ந் தது அல்ல. அதற்கு எந்த மதமும் கிடையாது. எளிய பயிற்சிகள் மூலம் உடல், மனம், ஆன்மா ஆகிய மூன் றையும் கட்டுப்படுத்தி உள்ளிருக் கும் ‘படைத்தவருடன்’ தொடர்பை ஏற்படுத்துவதுதான் யோகா.
யோகாசனம் செய்யும்போது மந்திரங்களை உச்சரிப்பதற்கும் ஆசனத்துக்கும் தொடர்பு இல்லை. யோகாசனம் என்பது அமைதியை அனுபவிப்பது. யோகாசனம் செய்வ தால் உடல், மனம், ஆன்மா மூன்றும் அமைதியடைய வேண்டும். ஆசனங்களால் உடல் அமைதி யடையும். மூச்சுப் பயிற்சியானது மூளை, இதயம், சுவாச மண்டலத் துக்கு அமைதியைத் தரும். ஆசன மும் பிராணாயாமும் உடலுக்கும் உள்ளத்துக்கும் அமைதியையும் நிம்மதியையும் அளிக்கும்.
நமது உடல் நிலைக்கு ஏற்ப சரியான யோகாசனப் பயிற்சிகளைச் செய்துவந்தால் ஆரோக்கியம் உத்தரவாதம்.
(தமிழில்: சாரி)

டாக்டர் கிருஷ்ணா ராமன் தொடர்புக்கு: mediyoga@gmail.com
MBBS, FCCP , MD (AM) பட்டம் பெற்றவர். பி.கே.எஸ்.ஐயங்காரிடம் யோகாசனங்களைக் கற்றவர். யோகாசன சிகிச்சை முறையை அறிவியல்பூர்வமாக செய்துவரு கிறார். ‘கிருஷ்ண யோகம்’ என்ற அமைப்பின் மூலம் சிகிச்சை யோகாவை சென்னையில் பயிற்று விக்கிறார்.
- நாளையும் யோகம் வரும்..
*************************
*************************
அமைதியில் இருந்து அமைதியை நோக்கி..
நமது உடலை நமது மனமும் மூளையும்தான் கட்டுப்படுத்துகின்றன. அப்படியென்றால் மூளை யையும், மனதையும் கட்டுப்படுத்துவது எது? நிச்சயமாக உடல் அல்ல. மனதையும் மூளையையும் கட்டுப்படுத்துவது ஆன்மாவின் ஆசையே. ஆன் மாவின் ஆசை என்பது என்ன?
கண்களை மூடிக்கொண்டு, உங்கள் மூளைக் குள் என்ன நடக்கிறது என்பதைப் பாருங்கள். குழந்தைகள், குடும்பம், மனைவி, தொழில், உணர்ச்சிகள் என்று எக்கச்சக்கமான எண்ணங்கள் நெருக்கியடித்துக்கொண்டு ஓடுவதை உணர்வீர்கள்.
மனித வாழ்க்கையின், பௌதிக உலகின் எல்லைகளை நாம் தாண்ட முடியாமல் போவதற்கு இந்த எண்ணங்களும் ஆசைகளுமே காரணம். நமது உடலுக்குள்ளேயே அமைதியையும் மகிழ்ச்சி யையும் காண முடியாமல் போவதற்கும் அவையே காரணம். பௌதிக வடிவில் உள்ளவை எல்லாம் தற்காலிகமானவையே. இந்த ஆசைகளைத் துரத்திக் கொண்டு தினமும் ஓடுவதால்தான் துயரம் ஏற்படுகிறது.
பணம், குடும்பம், தொழில், உறவுகள் போன்றவற் றிலேயே நம் மனம் மூழ்கிக் கிடக்கும் என்றால் அவற்றைத் தாண்டி நம்மால் எதையும் யோசிக்க முடியாது. ஏனென்றால், ஒரு சமயத்தில் நம்மால் ஒன்றைப் பற்றித்தான் சிந்திக்க முடியும், ஒரு செயலைத்தான் செய்ய முடியும்.
ஆகவே, சிந்திக்கும்போது நமது சிந்தனை ஒரே ஒரு விஷயத்தின்மீதுதான் இருக்க வேண்டும். ஒரே ஒரு விஷயத்தின் மீது குறியாக இருந்தால் அதைச் சாதிக் கும்படிதான் நமது உடல் அமைப்பு கள் அமைந்திருக்கின்றன. ஒருமுகப் படுத்தல்தான் வெற்றிக்கான பாதை. அதுவே யோகம்!
நமது ஆசைகள் பிளவுறும்போதுதான் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. வாழ்க்கையில் என்ன செய்யப்போகிறோம் என்பது குறித்த புரிதல் இல்லாமல்தான் பலரும் வெற்றி அடைய முடியாமல் போகின்றனர்.
இந்த உலகத்தைப் பற்றி நம் மனதுக்குள் ஓடும் எண்ணங்கள்தான் நம்மை இந்த உலகத்தோடு பிணைக்கின்றன. மாயையான இந்த உலகத்தில் நாம் வாழ்வதற்கும் அதுதான் காரணம். அதனால்தான் அதைத் தாண்டி நம்மால் போக முடியவில்லை. கண்ணுக்குப் புலனாகக்கூடிய உலகத்தைத் தாண்டி நாம் செல்ல வேண்டும் என்றால் புத்தகங்களைப் படித்தால் மட்டும் போதாது. அவை எல்லாம் இன்னொருவரின் சிந்தனைகள், இன்னொருவரின் அனுபவங்கள். அவற்றை நம்பி நமது ஆன்மிகப் பயணத்தை மேற்கொள்ள முடியாது.
நமது மனதை அமைதிப்படுத்தினால் நம்மால் இந்த பௌதிக உலகத்தையும் தாண்டிச் செல்ல முடியும். மனது அமைதியானால், நம் எண்ணங்கள் எல்லாம் படைப்பின் திசை நோக்கிக் குவியும். அப்போது படைப்பின் ரகசியம் நமக்குப் புலனாவதுடன் மேம்பட்ட பரிமாணங்களை நோக்கியும் செல்லமுடியும்.
ஆதிப் பிரக்ஞை, வளர்ச்சியடைந்த பிரக்ஞை என்று அறிவியலில் சொல்வார்கள். மூளையின் கீழ்ப் பகுதியான முகுளம் (மெடுல்லா அப்லங்காட்டா) ஆதிப் பிரக்ஞை எனப்படுகிறது. அதுதான் அடிப்படை எண்ணங்கள், அடிப்படை சுவாசம் போன்றவற்றுக்குப் பொறுப்பு.
சுவாச முறைகளை பிராணாயாமங்கள் மூலம் மாற்றி அமைக்க வேண்டுமானால், மூளையின் மேல்நிலைப் பகுதிகளின் பங்கேற்பு அவசியம்.
அதனால்தான் அந்த சுவாச முறைகள் ‘மேம்பட்ட சுவாச முறைகள்’ எனப்படுகின்றன. மனதை நாம் அமைதிப்படுத்தினால், மூளையின் மேல்நிலைப் பகுதிகள் செயலூக்கம் பெறுகின்றன என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
அதுபோன்ற அமைதி நிலையில் நாம் இருக்கும்போது மேல்நிலைப் பகுதிகளின் மேல் நம் கவனம் குவியும், அதுவரை புலப்படாதது எல்லாம் புலப்படும். இந்தப் புலப்பாடுகள் நமக்குள்தான் இருக்கின்றன. பௌதிக உலகின் காரியங்களிலேயே மும்முரமாக இருப்பதால் புலனாகாமல் இருக்கின்றன.
யோகப் பயிற்சிகள் மூலம் மனதை அமைதி நிலைக்குக் கொண்டுசெல்லும்போது அந்த உயர்ந்த ஆற்றல்களை பெறுகிறோம்.
ரிஷிகள் அமைதி நிலையை அடைந்தபோதுதான் அவர்களுக்கு வேதங்கள் புலப்பட்டன. எனவே, அமைதி நிலை மூலமாக மூளையின் மேல்நிலைப் பகுதிகள் மீது கவனத்தைக் குவியுங்கள். அமைதி நிலையில் இருந்தே எல்லாம் தோன்றுகின்றன, மறுபடியும் அமைதி நிலை நோக்கிச் செல் கின்றன.
எதையாவது படைக்கவேண்டும் என்றால் அமைதிநிலைக்குச் செல்லுங்கள். ஒருமுகமான இந்த அமைதி நிலைதான் உங்களைப் பரிணமிக்கச் செய்வதுடன் படைப்பின் ஞானத்தை உங்களுக்கு வெளிப்படுத்தும். மற்றவை உபயோகமற்றவை, நம்மை நச்சுச் சுழலில் சிக்கவைப்பவை.
- சுருக்கமாகத் தமிழில்: ஆசை
(தியான் ஃபவுண்டேஷன் என்னும் அமைப்பை வழிநடத்திவரும் யோகி அஸ்வினி வேதங்களை ஆழமாகப் பயின்றவர். சனாதன் கிரியா என்னும் யோகப் பயிற்சியை உருவாக்கிப் பயிற்றுவித்துவருகிறார். தொடர்புக்கு: dhyan@dhyanfoundation.com )
*********************************************************************************************************************************************
ஒவ்வொரு நாளும் யோகா தேவை
யோகம் என்பது நம்மை நாமே பார்க்கக்கூடிய கண்ணாடி என்று எளி மைப்படுத்தலாம். ஆசனப் பயிற்சியாக இருந்தால் உடல் எப்படி இருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம். பிராணாயாமமாக இருந்தால் உள்ளுக்குள் இருக்கும் நிலையை அறியலாம். தியானப் பயிற்சியாக இருந்தால் மனநிலை பற்றித் தெரிந்துகொள்ளலாம்.
காலைநேரப் பயிற்சிக்கு எப்போதுமே தனித்தன்மையும் கூடுதல் பலன்களும் உண்டு. ஒரு முழு நாளுக்கான சுருதி அப்போதுதான் சேர்க்கப்படுகிறது என்று சொல்லலாம். காலையில் மனதில் விழும் முதல் எண்ணம், முதல் உணர்வுகூட அடுத்தடுத்த செயல்களில் பரவி, அன்றைய நாளுக்கான ஓர் அடித்தளம் ஏற்படுத்துவதில் பங்கு வகிக்கிறது.
யோகாவில் உடலுக்கு, மூச்சுக்கு, மனதுக்கு, வாழ்க்கை ஒழுக்கத்துக்கு, ஞானத்துக்கு என்று நிறைய பயிற்சிகள் விரவிக் கிடக்கின்றன. உடலை அசைக்காமல் பெரும் ஆனந்தத்தை அதிகாலையில் பெற முடியும். மூச்சின் சரியான பயிற்சியால் முழு மனமும் கைக்குள் இருக்கும். ஆசனங்களால் முழு உடலும் தயாராகி எதற்கும் ‘முடியும் முடியும்’ என்று சொல்லும்.
காலம், மனிதர்களுக்கு ஆண்டாண்டு காலமாய் வழங்கிவரும் ஆரோக்கிய சுரபிதான் ‘யோகா’. உள்ளே போகப்போக அதன் தூரம் இன்னும் நீள்கிறது; எல்லை விரிகிறது; அனுபவம் புதிதாகிறது. ஒரு நாளை உற்சாகமாக ஆரோக்கியமாக தொடங்கிவிட்டால், தொடரும் எண்ணங்களும், செயல்களும் அதன் தாக்கத்துக்கு உள்ளாகும். இதன்மூலம் வாழ்வில் ஆழமான மாற்றங்கள் நிகழும்.
காலையில் நேரம் இல்லை என்று கூறுபவர்கள் பயிற்சிகளை மாலையில் செய்யலாம்.
இயந்திரமாய்த் தொடங்கிய நாள், மனிதத்தன்மைகளை விட்டு தூரமாகப் போகும் சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு. அன்றைய நாளின் எண்ணங்களும், உணர்வுகளும் தூங்கும்போதும் தொடரும். எனவே, ஒரு நாளின் இறுதியில், சேர்ந்த சோர்வுகளை, மன அழுக்குகளை, உடல் உபாதைகளை நீக்கவும் யோகா உதவுகிறது. அதோடு, நல்ல தூக்கத்தையும் தருகிறது.
சரியான தூக்கம் இல்லாமல் இன்று பலர் உடல், மனநோய்களுக்கு ஆளாகி துன்பப்படுவது இயல்பாகி விட்டது. அதனால், மாலை நேர யோகப் பயிற்சியும் இன்றைய வாழ்க்கைக்கு முக்கியம். எந்த நிலையிலும் மனிதர்களின் வலியையும் பிரச்சினைகளையும் குறைத்து, அவர்களை ஆரோக்கியமானவர்களாக, நம்பிக்கை மிகுந்தவர்களாக மாற்றுகிறது யோகா.
தினமும் பலப் பல தகவல்கள், உணர்வுகள் நமக்குள் சென்று பாடாய்ப்படுத்துகின்றன. அதை மீறி, ஒவ்வொரு நாளும் நாம் நினைத்ததைச் செயல்படுத்த உடலையும், மனதையும் தயார் செய்ய வேண்டியுள்ளது. இல்லாவிட்டால், எல்லா திட்டங்களும் வெறும் எண்ண அளவிலேயே நின்றுவிடும்.
ஒருநாள் முழுவதும் உடலின் தவறான - அதீதமான பயன்பாட்டை யும், மன அழுத்தத்தையும் கொஞ்சமாவது குறைத்தால் இரவு நல்ல தூக்கம் வரும். அடுத்த நாள் பொழுது, உற்சாகமாக விடியும்.
மனதில் வேலை செய்யக்கூடிய ஒரு பயிற்சி முறைதான் யோகா. ஒருவருக்கு மனம் சரியாக இருந்து விட்டால், எதையும் சரிசெய்து கொள்ளலாம். அது சரியில்லை என்றால், எது இருந்தும் பயனில்லை. யோகப் பயணத்தில் மன அமைதி ஏற்படும்போதே, எண்ணக் கூட்டங்களின் துரத்தல்கள் குறையும், சுயத்தையும் சுற்றத்தையும் சரியாகப் பார்க்கத் தொடங்கலாம். எங்கும் பரவிக் கிடக்கும் கோபத் தணல் சற்றே குறையத் தொடங்கும்.
இதனால் பல விரயங்கள் தடுக்கப்படும். இதன் காரணமாக, பயிற்சி செய்பவர்கள் மனித இயல்புகளில் கூடுதலாய் இருக்க முடியும்.
யோகாவை இன்று உலகின் பல நாடுகள் மிக சிறப்பாகப் பயன்படுத்துகின்றன. அதன் எல்லை அங்கெல்லாம் தினம்தினம் பல நிலைகளில் விரிகிறது. மொழி, மதம், நாடு கடந்து, மனித இனத்தையே யோகா வளப்படுத்திக்கொண்டிருக்கிறது. நம்மை நாமே அறிந்துகொள்கிற, பார்த்துக்கொள்கிற ஒரு மகத்துவத்தை யோகா அளிக்கிறது.
உலக யோகா தினத்தின்போது மட்டும் யோகாவை நினைத்துவிட்டு போகாமல், வாழ்நாள் முழுவதும் நாம் அதற்கு உரிய இடம் தரும்போது, வாழ்வில் நமக்கு உரிய இடத்தை யோகா தரும்!

கட்டுரை ஆசிரியர்: ‘ஏயெம்’ யோகாசன ஆசிரியர்.
தொடர்புக்கு: amalaimail@gmail.com
******************
தொடர்புக்கு: amalaimail@gmail.com
******************
யோகக் கலையைப் பரப்பிய குருநாதர்கள் - 4
நவீன யோகாவின் தந்தை எனப் புகழப்படுபவர் திருமலை கிருஷ்ணமாச்சாரியா. ஹட யோகா எனப்படும் கலையை உலகம் முழுவதும் பரப்பியதில் இவருக்குப் பெரும் பங்கு உண்டு. எல்லாருக்கும் பொதுவானதாக யோகா இருந்தாலும் அதில் சில பயிற்சிகளை நபருக்கு நபர் வித்தியாசப்படுத்தி வழங்கியவர். யோக மகரந்தா, யோகாசங்கலு, யோக ராஷ்யா, யோகவள்ளி ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
நூறு ஆண்டுகள் வாழ்வாங்கு வாழ்ந்து யோகாவை உச்சத்தில் வைத்த கிருஷ்ணமாச்சாரியா, மைசூர் சித்ரதுர்காவில் பிறந்த வர். தந்தை திருமலை நிவாச தத்தாசார்யா. இவருக்கு ஆசனங் கள், பிராணாயாமம், வேதங்கள் போன்றவற்றில் முறையான பயிற்சியை அளித்தார். இமயமலையின் கயி லாய சிகரத்தில் வாழ்ந்துவந்த பிரம்மச்சாரியா என்னும் குருவிடம் 7 ஆண்டுகள் யோக சூத்திரம், பதஞ்சலி யோகம் போன்றவற் றைக் கற்றுத் தேர்ந்தார். குருவின் கட்டளைப்படி இல்லற வாழ்வைத் தொடங்கினார்.
ராஜ குரு
மைசூர் மகாராஜா 4-ம் கிருஷ்ண ராஜ வாடியார் தனது அன்னை யின் 60-ம் ஆண்டு நிறைவை வாரணாசியில் 1926-ல் கொண் டாடினார். அப்போது யோகக் கலையிலும் ஆயுர்வேத மருத் துவத்திலும் புகழோடு விளங்கிய கிருஷ்ணமாச்சாரியாவை சந்தித் தார். அவரது திறமையைக் கண்டு வியந்த மகாராஜா, அரச குடும்பத் தினருக்கும் யோகா பயிற்சி அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். குறுகிய காலத்திலேயே மைசூர் சமஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானானார் கிருஷ்ணமாச் சாரியா. மகாராஜாவின் வேண்டு கோளை ஏற்று, யோகக் கலையை நாடு முழுவதும் பரப்பினார்.
96 வயதிலும்..
96 வயதில் கீழே விழுந்ததில் அவரது இடுப்பு எலும்பு முறிந்து விட்டது. ஆனாலும், அவர் அறுவை சிகிச்சைக்கு சம்மதிக்கவில்லை. கட்டிலில் இருந்தபடியே சில ஆசனங்களைத் தொடர்ந்து செய்து, தமக்குத் தாமே சிகிச்சை செய்துகொண்டார். கோமாவில் நினைவை இழந்து மரணத்தைத் தழுவுவதற்கு முன்புவரை, மாண வர்களுக்கு யோகக் கலையை சொல்லிக்கொடுத்தார்.
பி.கே.எஸ்.ஐயங்கார்
கிருஷ்ணமாச்சாரியாவின் பேர் சொல்லும் சீடராக விளங்கிய பி.கே.எஸ்.ஐயங்கார் (பெல்லூர் கிருஷ்ணமாச்சார் சுந்தரராஜ ஐயங் கார்) இந்திய யோகக் கலையின் அருமையை உலகம் முழுவதும் வெளிப் படுத்தியவர். உலகின் பல பகுதிகளிலும் அவரது பெயரில் யோகா கற்பிக்கும் மையங்கள் உருவாகி, யோகக் கலையைப் பரப்பிவருகின்றன.

புனே யோகக் கலை பயிற்சி மையத்தில் 95 வயதில் உடலை வில்லாக வளைத்து யோகாசனம் செய்த பிகேஎஸ் ஐயங்கார்.
பிகேஎஸ் தன் பெற்றோருக்குப் பிறந்த 13 குழந்தைகளில் 11-வதாகப் பிறந்தார். குடும்பத்தை வறுமை வாட்டியது. அவரது ஊரில் கடும் நோய்த் தொற்று பரவியதால் சிறு வயதில் அவருக்கு ஆஸ்துமா, செரிமானக் கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன. கை, கால்கள் இயல்புக்கு மீறி மெலிந்திருந்தன.
அவருக்கு 5 வயதானபோது, குடும்பம் பெங்களூருவுக்குக் குடிபெயர்ந்தது. பிகேஎஸ் ஐயங்காரின் நெருங்கிய உறவின ரான கிருஷ்ணமாச்சாரியா, அப் போது மைசூர் சமஸ்தானத்தில் யோக குருவாக இருந்தார். அவர் பிகேஎஸ் ஐயங்காரை மைசூருக்கு அழைத்துச் சென்று யோகக் கலையை கற்றுக்கொடுத்தார். யோகம் பயிலும்போதே, பலவீன மான தன் உடல் பலமாவதை உணர்ந்தார்.
குருவின் ஆணைப்படி மகாராஷ்டிர மாநிலம் புனேவில் யோகக் கலைப் பயிற்சி மையத்தை 18 வயதில் தொடங்கினார். பதஞ்சலி யோக சூத்திரங்களுக்கான விளக் கங்கள், யோகக் கலையின் மேன்மை, யோகாசனத்தின் ஒளி, பிராணாயாமம் ஆகிய தலைப்பு களில் அவர் எழுதிய நூல்கள் சாமானிய மக்களிடமும் யோகக் கலையைக் கொண்டு சேர்த்தன.
எளிமையான பயிற்சி முறை
உடலை வருத்திக்கொள்ளும் பயிற்சியாக யோகா கருதப்பட்ட காலத்தில், அது எளிமையும் இனி மையும் கொண்ட அனுபவத்தைத் தரும் கலையே என்பதை அனைவ ருக்கும் புரியவைத்தார் பிகேஎஸ்.
தத்துவ மேதை ஜிட்டு கிருஷ்ண மூர்த்தி, ஜெயப்பிரகாஷ் நாராயண் உட்பட பல பிரபலங்களுக்கு யோகா பயிற்சி அளித்துள்ளார். பெல்ஜியம் ராணி எலிசபெத்துக்கு சிரசாசனம் கற்றுத் தந்தார். கிரிக்கெட் வீரர் சச்சின், இந்தி நடிகை கரினா கபூர் என மொத்தம் 4 தலைமுறைக்கு யோகா ஆசிரியராக இருந்த பெருமைக்கு உரியவர் பிகேஎஸ்.
விருதுகள், பெருமைகள்
பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷண் விருதுகளை பெற்றிருக் கிறார். 2004-ம் ஆண்டின் செல் வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியலில் பிகேஎஸ் ஐயங்கார் பெயரை பிரபல ‘டைம்’ இதழ் குறிப்பிட்டது. சீன அரசு அஞ்சல் தலை வெளியிட்டு கவுரவித்துள்ளது.
- நாளையும் யோகம் வரும்.
*******************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக