திங்கள், 8 ஜூன், 2015

பவானி - Story of a River

பவானியின் முக்கிய நீர் ஆதாரமான புல்வெளிக் காடுகளுக்கு, ஆங்கிலேயர் காலத்திலேயே ஆபத்து தொடங்கி விட்டது. மலைச் சரிவுகளிலும் வனங்களிலும் பல கி.மீ. தொலைவுக்கு அப்போது புல்வெளிக் காடுகள் பரந்து வளர்ந்திருந்தன. ஆங்கிலேயர்களுக்கு அதுபோன்ற காடுகள் புதியவை.
அவற்றின் இயற்கையான உயிர்ச் சூழலை புரிந்து கொள்ளாத அவர்கள், அவற்றை தேவையில்லாத நிலப் பரப்பு (Waste Land) என்று குறிப் பிட்டனர். மேலும், அவை கால்நடை மேய்ச்சலுக்காக உள்ளூர் மக்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் அவர்களிடையே ஒரு கருத்து இருந்தது. இதனால், புல்வெளிக் காடுகளை அழித்து பலன் தரும் (!) மரங்களை நடலாம் என்று அவர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி, நூற்றுக்கணக்கான சதுர கி.மீ. பரப்பளவில் புல்வெளிக் காடுகள் அழிக்கப்பட்டன. அங்கு ஆஸ்தி ரேலியாவை பூர்வீகமாகக் கொண்ட சீகை (வேட்டல்), கற்பூரம் (யூகலிப்டஸ்), ஐரோப்பியாவை பூர்வீகமாகக் கொண்ட பைன் ஆகிய மரங்கள் நடப்பட்டன. இவை தவிர ஆங்கிலேயர்களின் வீடுகளில் வளர்ப்பதற்காக கொண்டு வரப்பட்ட ஈப்பதோரியம், லேண்டினா கேமிரா உள்ளிட்ட அலங்கார மலர் தாவரங்களும் காடுகளில் பரவின. விதைப் பரவுதல் மூலம் விரைவாக காடு முழுவதும் ஆக்கிரமிக்கும் அவை, தாங்கள் வளரும் பகுதியில் பிற மரங்களையும் தாவரங்களையும் வளர அனுமதிக்காது. இதனால், நமது நாட்டு மரங்களும் தாவரங்களும் அழிந்து, வன உயிரினங்களின் உயிர் ஆதாரங்கள் பாதிக்கப்பட்டன.
நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் சமீப காலம் வரை நமது வனத் துறையும் இந்த பல்லுயிர் சீரழிவைப் புரிந்து கொள்ளாததுதான் சோகம். நமது வனத் துறை அந்த அந்நிய மரங்கள் நடும் திட்டத்தை தீவிரமாகச் செயல் படுத்தியது. தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் கடந்த 1988-ம் ஆண்டு மட்டும் சுமார் 11,000 ஹெக் டேரில் புல்வெளிக் காடுகள் அழிக்கப் பட்டு மேற்கண்ட அந்நிய மரங்கள் நடப்பட்டன. கடந்த 1990-களின் இறுதிவரை இந்த நிலை நீடித்தது. புல்வெளிக் காடுகளின் அழிப்பால் சுமார் 30 ஆண்டுகளில் பவானிக்கான நீர் வரத்து வெகுவாகக் குறைந்துபோனது.
அதன்பின்பே பல்வேறு ஆராய்ச்சி யாளர்கள் இந்த மரங்கள் மூலம் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதையும், புல்வெளிக் காடுகளின் அழிப்பால் ஆறு களின் நீர் ஆதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டிருப்பதையும் ஆய்வுகள் மூலம் சுட்டிக்காட்டினர். சுதாரித்துக் கொண்ட வனத் துறை, தமிழ்நாடு உயிர் பன்மை பாதுகாப்பு, பசுமையாக்கும் திட்டம் மற்றும் மலைப் பகுதி மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றின் மூலம் லட்சக் கணக்கான ரூபாய் செலவில் இந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஆனாலும், அவற்றை முழுமையாக அழிக்க இயலவில்லை. இதனால், இன்றுவரை இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண இயலாமல் தவிக்கிறது வனத் துறை.
பவானியில் மட்டுமே உயிர் வாழும் அரிய மீன்
நீலகிரியின் இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசங்களில் அவலாஞ் சியும் ஒன்று. ஆங்கிலத்தில் அவலாஞ்சி என்றால் பனிச் சரிவு என்று பொருள். 1840-களில் இங்கு அடிக்கடி நிலச் சரிவு ஏற்பட்டது. அதனால், ஆங்கிலேயர்கள் குளிர் பிரதேசமான இந்தப் பகுதிக்கு அவலாஞ்சி என்று பெயர் வைத்துவிட்டனர். அவலாஞ் சியின் பவானி ஆற்றுத் தண்ணீருக்கு ஒரு சிறப்பு இருக்கிறது.ஆங்கிலே யர்களுக்கு பிடித்த மீன் உணவுகளில் ஒன்று டிரவுட் (Trout) நன்னீர் மீன். அவை, இங்கிலாந்து மற்றும் ஐரோப் பாவின் பனி சூழ்ந்த குளிர் பிரதேச நீர்நிலைகளில் மட்டுமே உயிர் வாழ்கின்றன.
இங்கே ஆங்கிலேயர்கள் தங்கள் உணவுத் தேவைக்காக அந்த மீனை இமயமலை, சிம்லா, அவலாஞ்சி உள்ளிட்ட நீர்நிலைகளில் இனப் பெருக்கம் செய்ய முயற்சித்தனர். ஆனால், இமயம் உட்பட எங்கும் உயிர் பிழைக்காத அந்த மீன்கள் ஆச்சர்யமாக அவலாஞ்சியின் பவானியில் மட்டும் பெருகி வளர்ந்தன. பவானியின் பல்லுயிர் செறிவுத் தன்மைக்கு இது ஓர் உதாரணம். இன்றும் அவலாஞ்சியில் அந்த மீன் பண்ணை இருக்கிறது. அங்கு டிரவுட் இன மீன் குஞ்சுகள் இனப் பெருக்கம் செய்யப்பட்டு அவலாஞ்சி, எமரால்டு உள்ளிட்ட அணைகளில் விடப்படுகின்றன. ஆனால், இந்த மீன்கள் விற்பனைக்கு இல்லை.
படங்கள்: சுதா
மின் உற்பத்தியில் பவானியின் பங்கு
நீலகிரி மாவட்டத்தின் மின் தேவையை நிறைவு செய்வதில் பவானி ஆற்றின் பங்கு முக்கியமானது. இங்கு ஆண்டு முழுவதும் பவானி ஆற்றில் தண்ணீர் ஓடுவதால் மின் உற்பத்தியும் தடை இல்லாமல் நடைபெறுகிறது.
இந்த வனப் பகுதியில் மட்டும் பவானி ஆற்றின் குறுக்கே 15 சிறு அணைக் கட்டுகள் கட்டப்பட்டுள்ளன. நீலகிரி வனத்தில் உச்சியில் இருந்து கீழ் நோக்கிப் பாயும் பவானி ஆற்றின் நீரைப் பயன்படுத்தி இந்த அணைக் கட்டுகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
நீலகிரியின் கிழக்குப் பகுதியில் முக் குருத்தி, பைக்காரா, சண்டிநல்லா, கிளன் மோர்கன், கிளன்மோர்கன் ஃபோர்பே, மரவக்கண்டி, மோயாறு ஃபோர்பே ஆகிய ஏழு அணைக் கட்டுகள் கட்டப்பட்டுள்ளன. நீலகிரியின் மேற்குப் பகுதியில் மேல்பவானி, பார்சன் பள்ளத்தாக்கு, போர்த்திமண்டு, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா ஃபோர்பே, பேகும்பஹல்லா, பில்லூர் ஆகிய எட்டு அணைக் கட்டுகள் கட்டப்பட்டுள்ளன. மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த அணைக் கட்டுகளில் இருக்கும் நீர் இருப்பை வைத்து சராசரியாக 372.84 மில்லியன் யூனிட் மின்சாரம் (2015, ஜூன் 2 கணக்கின்படி) உற்பத்தி செய்ய முடியும்.
(பாய்வாள் பவானி)

***********

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF/article7297556.ece?homepage=trueஒரு நதியின் வாக்குமூலம்: துடிக்கிறாள் படியளக்கும் பவானி!

டி.எல். சஞ்சீவிகுமார்
COMMENT   ·   PRINT   ·   T+  
சோலைக் காடுகளும் புல்வெளிக் காடுகளும்
சோலைக் காடுகளும் புல்வெளிக் காடுகளும்
கங்கையோ காவிரியோ பவானியோ- ஓர் ஆறு என்றால் அதன் முழுப்பதம், ஆறு மட்டுமல்ல; அந்த ஆற்றில் வசிக்கும் உயிரினங்கள், ஆற்றை ஆதாரமாகக் கொண்டுள்ள வனங்கள், வன உயிரினங்கள், ஆற்றங்கரையோர மனிதச் சமூகங்கள் எல்லாம் சேர்ந்தவையே. ஓர் ஆறு பல்லுயிர் வளமையாக இருந்தால் மட்டுமே இவை எல்லாம் ஆரோக்கியமாக இருக்க முடியும்.
நீர் மின் திட்டங்களுக்காக ஆற்றில் பெரும் அணைகளைக் கட்டுவது, ஆற்றின் போக்கை திசை மாற்றுவது, தொழிற்சாலை ரசாயன, சாயக் கழிவுகள், நகராட்சிக் கழிவுகளை ஆற்றில் கலப்பது உள்ளிட்ட காரணங்களால், இன்று இந்தியாவில் பல ஆறுகள் இறந்துவிட்டன. உயிருள்ள ஆறுகள் (Perennial River) அருகிவிட்டன. பல இறந்து கொண்டிருக்கின்றன. ஆற்றங்கரையில் தோன்றிய மனித நாகரிகங்களான சிந்து சமவெளியின் ஹரப்பா, பண்டைய மொசபடோமிய சுமேரியர்கள், அமெரிக்காவின் மாயா, அனாசாஜி, வடஅமெரிக்காவின் ஹோகோகம் ஆகியவை ஆற்றின் அழிவையொட்டியே அழிந்தன என்பது வரலாறு. தமிழகத்தில் பவானியும் தாமிரபரணியும் மட்டுமே உயிருள்ள நதிகள் என்று பெருமையாகச் சொல்கிறார்கள். ஆனால், அது பழம் பெருமை. உண்மையில், அவற்றின் குரல்வளையை நசுக்கிக் கொண்டிருக்கிறோம். அவை, மூச்சுத் திணறி செத்துக் கொண்டிருக்கின்றன. இதேநிலை தொடர்ந்தால் இன்னும் பத்து ஆண்டுகளில் இரு ஆறுகளும் கூவத்தைப்போல, நொய்யலைப்போல இறந்து போகும். ஓர் ஆற்றின் அழிவு என்பது அதன் அழிவு மட்டுமல்ல; நமது அழிவும்தான்.
பவானி எப்படி இருக்கிறது? பவானியைக் காக்க என்ன செய்யலாம்? பிரச்சினைகள் என்ன? தீர்வுகள் என்ன? என்று அறிவதற்காக மேற்குத் தொடர்ச்சி மலை உச்சியில், பவானியின் நதிமூலம் தொடங்கி சமவெளியில் அது காவிரியில் கலக்கும் கூடுதுறை வரை நதியின் ஊடாக, நதிக்கரை வனங்கள் ஊடாக, நதிக்கரை மனித நாகரிக சமூகங்கள் ஊடாக ஊர்ந்திடும் குறும் பயணத் தொடர் இது. ஒரு நதியின் வாக்குமூலம்...
கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,700 மீட்டர் உயரம். நீலகிரி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு சரிவின் மீது ஏறிக் கொண்டிருக்கிறோம். ஊட்டி யிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலை வில் இருக்கும் அவலாஞ்சி வனம் அது.
கோடையிலும் பனி போர்த்தியிருக் கிறது வனம். நடுங்க வைக்கிறது குளிர். ஆங்காங்கே அடர்த்தியான சோலைக் காடுகள். இடையே ஆளுயர புல்வெளிக் காடுகள். உச்சியைப் பார்க்க முடியாத அளவுக்கு சுமார் 200 அடி உயரத்துக்கு ஓங்கி வளர்ந்திருக்கின்றன மரங்கள். லேசாக ஊடுருவும் சூரியனின் கதிர்கள் பட்டு அரிய வகைக் காளான்கள் நீலம், சிவப்பு என பல வண்ணங்களில் ஒளிர்கின்றன. நடக்கும்போது கால்களில் ஏறி சத்தமில்லாமல் ரத்தம் குடிக்கின்றன அட்டைகள். சத்தம் கேட்டு மிரண்டு ஓடுகின்றன கடமான்கள். தரைப் பொந்துகளிலிருந்து தலையை நீட்டி, உள்ளிழுத்துக் கொள்கின்றன காட்டுப் பன்றிகள்.
தூரத்து மலைச்சரிவில் செந்நாய் கூட்டம். தமிழகத்தில் அருகிவிட்ட நரிகளை இங்கே காணமுடிவது ஆச்சர் யமே. மிக அரிய உயிரினமான மர நாய் குடும்பத்தைச் சேர்ந்த இலிங்கன் (Nilgiri Marten) இங்கே வசிக்கின்றன. தவிர, யானைகள், புலிகள், சிறுத்தைகள், கழுதைப் புலிகள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே வசிக்கும் ஓரிட வாழ்விகளுக்கான புகலிடமாக இருக்கிறது அவலாஞ்சி வனம்.
தண்ணீர் பிரதேசம்!
மலைச் சரிவுகளில், பாறை இடுக்குகளில் தண்ணீர் கசிந்து கொண்டே இருக்கிறது. திரும்பிய பக்கம் எல்லாம் சிறு அருவிகள், சிற்றோடை கள் சலசலக்கின்றன. நடக்கும்போது பதியும் பாதக் குழியில் ஊற்றெடுக்கிறது தண்ணீர். பூமிக்குள் ஓடும் நீரோட்டம் அது. தண்ணீர் சூழ்ந்த பிரதேசத்தில் இருக்கிறோம் என்பதை உணர முடிகிறது. உலகின் மிகத் தூய்மையான, தரமான, சுவையான தண்ணீர் அது. கிட்டத்தட்ட பவானியின் நதிமூலத்தை அடைந்துவிட்டோம்.
இதேபோன்ற பல்லுயிர் வளமை நிறைந்த புவி அமைப்பில் மேற்குத் தொடர்ச்சி மலையின் நீலகிரி- முக்குருத்தி தொடங்கி அமைதிப் பள்ளத் தாக்கின் எல்லை வரை பவானியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகள் நீள்கின்றன. இந்தியாவில் மிகவும் அதிகமாக மழை பெய்யும் பகுதிகளில் இதுவும் ஒன்று. யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட இந்தியாவின் முதல் உயிர்க்கோள் காப்பகமான நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலமும் இங்கேதான் இருக்கிறது.
இங்கே பல இடங்களில் மனிதன் புக முடியாத- மலை உச்சியின் அடர் வனங்களில் பயணிக்கும் பவானி, ஊட்டி யிலிருந்து அவலாஞ்சிக்கு செல்லும் மலைப் பாதையில் ஓரிடத்தில் பாறை களுக்கு இடையே துள்ளி வெளியே வருகிறாள். அங்கே ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது. பவானியம்மன் கோயில். யார் கட்டியது? எப்போது கட்டப் பட்டது? என்பதற்கான தரவுகள் இல்லை. அவலாஞ்சி அல்லது மேல் பவானி அணையை கட்டியபோது பொறியாளர் ஒருவர் கோயிலைக் கட்டினார் என்கிறார்கள். அந்த வழியாகச் செல்பவர்கள் கோயிலில் வழியும் தண்ணீரை தொட்டுக் கும்பிட்டு அதையே தீர்த்தமாக குடிக்கிறார்கள், தலையில் தெளித்துக் கொள்கிறார்கள். சுமார் அரை கோடி மக்களுக்கு வாழ்வளிக்கும் பவானியின் மீது அவ்வளவு பக்தி மக்களுக்கு!
எப்படி உருவாகிறாள் பவானி?
உலகில் இருவகை மழைக் காடுகள் இருக்கின்றன. ஒன்று, வெப்ப மண்டல மழைக் காடுகள் (Temperate Rain Forest). மற்றொன்று, மித வெப்ப மண்டல மழைக் காடுகள் (Tropical Rain Forest). நிலநடுக்கோட்டுக்கு வடக்கே 23.50 கடக ரேகை வரை தெற்கே 23.50 மகர ரேகை வரை அமைந்துள்ள பகுதியே மித வெப்ப மண்டலம். நமது மேற்குத் தொடர்ச்சி மலைகள் அந்தப் பகுதியில்தான் அமைந்துள்ளன.
வட இந்தியாவில் பாயும் கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா எல்லாம் இமயமலையின் பனி உருகுவதால் உற்பத்தியாகின்றன. ஆனால், பவானி மட்டுமின்றி தென்னிந்தியாவின் அத்தனை நதிகளுக்கும் ஆதாரம் மித வெப்ப மண்டல மழைக் காடுகளில் இருக்கும் சோலைக் காடுகளும் புல்வெளிக் காடுகளும்தான். சொல்லப் போனால் தென்னிந்தியாவின் மொத்த உயிர் ஆதாரங்களும் இந்தக் காடுகளில்தான் அடங்கியிருக்கின்றன.
அவலாஞ்சி வனத்தில் நரி, காட்டுப் பன்றி மற்றும் கடமான்கள். | படம்: சுதா|
சோலைக் காடுகளும் புல்வெளிக் காடு களும் ஒன்றுக்கொன்று நெருக்க மான தொடர்புடையவை. பொதுவாக, சமவெளிப் பகுதிகளைவிட மலை உச்சிகளில் மழைப் பொழிவு பல மடங்கு அதிகம். திடீர் திடீரென்று காட்டு வெள்ளம் பெருக்கெடுக்கும். அதன் வேகம் நம் கற்பனைக்கு எட்டாதது. அந்த நேரங்களில் எல்லாம் மலை உச்சிகளிலிருந்து கட்டற்றுப் பாயும் வெள்ளத்தின் வேகத்தை மட்டுப்படுத்தி, சமவெளியைக் காக்கும் இயற்கை அரண்களாக விளங்குகின்றன புல்வெளிக் காடுகள்.
சோலைக் காடுகளின் தாவரங்கள், மரங்களின் வேர்ப்பகுதிகளில் உள்ள பிரத்தியேகமான கடற்பஞ்சு போன்ற அமைப்பு, நீரை உறிஞ்சி, தங்க ளுக்குள் தேக்கி வைத்துக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக கசிய விடு கின்றன. இயற்கையான சவ்வூடு பரவல் சுத்திகரிப்பு முறை இது. இவையே மலைச் சரிவுகளிலும் பாறை இடுக்குகளிலும் கசிகின்றன. ஆயிரக் கணக்கான நீர்க் கசிவுகள் ஒன்று சேர்ந்து நூற்றுக்கணக்கான சிற்றோடை களாகவும் அருவிகளாகவும் உருவெடுக்கின்றன. இவை எல்லாம் ஒன்று சேர்ந்து உருவாகிறது ஆறு. இப்படிதான் பவானியும் உருவாகிறாள்.

******************
தென்னிந்தியாவில் ஆற்றைக் காக்க நடைபெற்ற முதல் போராட்டம், 1963-ல் கேரளத்தின் சாலி ஆற்றங்கரையில் நடைபெற்றது.
கோழிக்கோடு மாவட்டம், வாழக்காடு பகுதியில் ஆற்றங்கரையோரம் அமைக்கப்பட்ட பிர்லா நிறுவனத்தின் ரேயான் நைலான் ஆலைக் கழிவுகளால் சாலியாறு கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மீன்கள் செத்தழிந்தன.
அப்துல் ரகுமான் என்பவர் தலைமையில் அப்பகுதி மீனவர் சமூக மக்கள், தொழிற்சாலைக்கு எதிராக பல ஆண்டுகளாகப் போராடினர். தொழிற் சாலைக் கழிவுகளால் அப்துல் ரகுமானுக்கு புற்றுநோய் ஏற்பட்டது. 1999, ஜனவரி 10-ம் தேதி போராட்டக் களத்திலேயே அவர் உயிரிழந்தார். அதன் பிறகு, மக்களின் போராட்டம் தீவிரமடைந்தது. இறுதியில் ஆலை மூடப்பட்டது.
முதல் முறையாக களங்கப்பட்ட பவானி
பவானியைக் காக்க மேட்டுப்பாளை யத்தில் நடைபெற்ற போராட்டம்தான், தமிழகத்தில் ஆற்றைக் காக்க நடைபெற்ற முதல் போராட்டம். சுமார் 10 ஆண்டுகள் தன்னெழுச்சியாக- உணர்வுப்பூர்வமாக மக்கள் நடத்திய போராட்டங்கள் அவை.
1960-ல் தொழில் வளர்ச்சி தொடங்கிய காலகட்டம். அப்போது, கோவை பகுதியில் பருத்தி நூலிழைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. கோவையில் அப்போதுதான் மில்கள் அதிகரித்துக் கொண்டிருந்தன. இதனால், பருத்தி நூலிழைத் தட்டுப்பாட்டை போக்க மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பவானி ஆற்றின் கரையில் ரேயான் செயற்கை பட்டு இழை உற்பத்திக்காக ‘சவுத் இந்தியா விஸ்கோஸ்’ என்ற பெயரில் சுமார் 300 ஏக்கரில் மிகப் பெரிய தொழிற்சாலை கட்டப்பட்டது. 1980-களில் இந்தத் தொழிற்சாலையை வட இந்தியாவைச் சேர்ந்த வேறொரு நிறுவனம் விலைக்கு வாங்கியது.
அவர்கள், உற்பத்தியை அதிகரிக்க அசுரத்தனமான- இயற்கைக்கு எதிரான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். இதனால், 1990-களில் ஆலையிலிருந்து ஏராளமான ரசாயனக் கழிவுநீர் பவானி ஆற்றில் கலந்தது. எத்தனையோ தசாப்தங்களாக சுத்தமான தண்ணீர் மட்டுமே ஓடிய பவானி, முதல் முறையாக களங்கப்பட்டது அப்போது
தான். அதன் படுகையில் விஷம் ஏறியது. மீன்கள் கொத்து கொத்தாக செத்து மிதந்தன. பவானி சாகர் அணை தண்ணீரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. நச்சுத்தன்மை வாய்ந்த தண்ணீரைக் குடித்த மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகினர்.
தொடங்கியது மக்கள் போராட்டம்
1992-ல் சிறுமுகையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சுதந்திரம், முதல் முறையாக இந்தச் சீர்கேட்டை எல்லாம் விளக்கி மக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தார். தொடர்ந்து, டி.டி.அரங்கசாமி தலைமையில் மேட்டுப்பாளையம் ‘பவானி நதி நீர் மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்புக் குழு’ என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு போராட்டங்கள் நடைபெற்றன. இந்தக் குழு, ஆலைக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தது. பசுமைப் போராளிகளான மருத்துவர் ஜீவானந்தம், சத்திய சுந்தரி, தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் ஜெயசந்திரன் உள்ளிட்டோர் போராட்டங்களை முன்னெடுக்க, அரசியல் பிரமுகர்கள் ரமணி, மு.கண் ணப்பன், கீதானந்தம், சுப்புலட்சுமி ஜெகதீசன், பி.எஸ்.ராமலிங்கம்,கே.சுப்பராயன், ஆர்.டி.மாரியப்பன் உள்ளிட்டோர் தொடர் போராட்டங்களில் கலந்து கொண்டனர்.
ஈரோட்டிலிருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிறுமுகை வரை சைக்கிள் பேரணி நடத்தி உண்ணாவிரதம் இருந்தனர். 1994-ல் விஸ்கோஸ் மற்றும் அந்தப் பகுதியிலிருந்த 3 சாய ஆலைகளுக்கு எதிராக நடந்த முழு அடைப்பு காரண மாக மேட்டுப்பாளையம், திருப்பூர், சத்தியமங்கலம் நகரங்கள் ஸ்தம்பித்தன.
இது, சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. மேட்டுப்பாளையம், அவினாசி, கோவை மேற்கு, கிணத்துக்கடவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர். தொடர்ந்து, “மாசுக் கட்டுப்பாடு வாரியச் சட்டப் பிரிவு 33 (அ) பிரிவின் கீழ் நடவடிக்கை எடுத்து, அந்தத் தொழிற்சாலைகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று அதன் தொழிலதிபர்களுக்கு அறிவுறுத்தப்படும். இனி அங்கு அந்தத் தொழிற்சாலைகள் இயங்காமல் இருக்க மாசுக் கட்டுப்பாடு வாரியம் நடவடிக்கை எடுக்கும்” என்று அப்போதைய தொழில் துறை அமைச்சர் பதில் அளித்தார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க அரசாணை
ஆனாலும், நடவடிக்கை எடுக்கப்படாததால் 1995, ஜூன் முதல் ஆகஸ்ட் வரை 50 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் நடைபெற்றது. ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
1996-ல் கோவை நகரம் அவினாசி சாலையில் மிகப் பெரிய போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தை ஒடுக்க போலீஸார் தடியடி நடத்தி கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். உச்சபட்ச மாக துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது. பத்திரிகையாளர்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஏராளமானோர் காயமடைந்தனர்.
தொடர் போராட்டங்களின் விளைவாக 8.5.1998 அன்று தமிழக அரசு ‘‘தமிழகத்தில் ஆற்றங்கரையிலிருந்து 5 கிலோமீட்டருக்குள் தொழிற்சாலை அமைக்கக் கூடாது” என்று தடை விதித்து வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் அரசாணையை (எண்: 127) வெளியிட்டது. தமிழகத்தில் இன்று ஓரளவேனும் ஆறுகள் தப்பிப் பிழைத்து இருக்கின்றன எனில், அதற்கு பவானிக்காக மக்கள் நடத்திய போராட்டங்களும், அதன் விளைவாக வெளியிடப்பட்ட அரசாணையும்தான் காரணம்.
அதைத் தொடர்ந்து, 1999-ம் ஆண்டு விஸ்கோஸ் ஆலை மூடப்பட்டது. ஆற்றைக் காக்க மக்கள் நடத்திய உணர்வுப்பூர்வ போராட்டம் வென்றது. ஆனால், அன்றைக்கு இருந்த உணர்வு இன்றைக்கும் மக்களிடம் இருக்கிறதா?
(பாய்வாள் பவானி)

(பாய்வாள் பவானி)

1 கருத்து: