செவ்வாய், 14 ஏப்ரல், 2015

டாக்டர் அம்பேத்கர்: எல்லோருக்குமான தலைவர்

இந்திய அரசியல் சாசனத்தை மக்களுக்காக முன்மொழியும்போது மிக முக்கியமான ஒரு கேள்வியை டாக்டர் அம்பேத்கர் எழுப்பினார்: “அரசியலைப் பொறுத்தவரை ‘ஒரு மனிதர் ஒரு ஓட்டு ஒரே மதிப்பு’ என்ற தத்துவத்தை நாம் அங்கீகரிக்கவிருக்கிறோம். அதே நேரத்தில் நமது சமூக, பொருளாதார வாழ்வில் ‘ஒரு மனிதர் ஒரே மதிப்பு’ என்ற தத்துவத்தைப் புறக்கணிப்பதைத் தொடரப்போகிறோம்.
இப்படிப்பட்ட முரண்பாடுகளின் வாழ்க்கையை இன்னும் எவ்வளவு காலம்தான் நாம் தொடரப்போகிறோம்?” அன்றைக்கு, அதாவது 65 ஆண்டுகளுக்கு முன்னால், அம்பேத்கர் எழுப்பிய கேள்வி இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையான கேள்வியாக இன்றும் நிற்கிறது.
இந்தியாவில் சமூக ஜனநாயகம் கிடைக்காமல் அரசியல் ஜனநாயகம் உயிர்ப்போடு இருக்காது என்பதைத் தனது வாழ்க்கையின் செய்தியாக வெளிப்படுத்திய அவர், சாதியை அழித்தொழிப்பதை ஜனநாயகத்தின் அடிப்படைத் தேவையாகத் தனது கருத்துகளின் மூலம் வலியுறுத்தினார். அவரது கருத்துகள் தோற்றத்தில் தீவிரமானதாக இருந்தாலும், அவற்றின் உள்ளடக்கம் மனிதர்களின் மனதில் உள்ள அறத்தைத் தட்டி எழுப்பும் ஆழமான ஆன்மிக உணர்ச்சியைக் கொண்டிருப்பவை.
உண்மையில், சகோதரத்துவத்தால் பிணைக்கப்பட்ட ஒரு இந்திய சமூகத்தையே அவர் கனவு கண்டார். இந்த சகோதரத்துவத்தின் நீட்சியாகவே சமத்துவத்தையும் அம்பேத்கர் கண்டார். அதன் விளைவாகத்தான் இந்து மதச் சட்டத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ள அம்பேத்கர் முயற்சித்தார். அதன் மூலம் இந்து சமூகத்தில் பெண் களுக்குச் சம உரிமையை நிலைநாட்ட முயன்றார். எனினும் இந்து அமைப்புகள், இந்துத்துவவாதிகளின் எதிர்ப்பால் அந்தச் சட்டத்தைக் கொண்டுவர முடியாமல் போனது.
அம்பேத்கருக்கு நேரு எவ்வளவோ உறுதுணையாக இருந்தும் கடைசியில் நேருவாலும் ஒன்றும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் ஏற்பட்ட கோபத்தில் அம்பேத்கர் சட்டத் துறை அமைச்சர் பொறுப்பையே ராஜிநாமா செய்தார் என்றால், ஒடுக்கப்பட்ட இன மக்களைப் போலவே இந்து மதப் பெண்களின் உரிமைக்கும் அவர் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் என்பது புலனாகும்.
நல்லவேளை, அம்பேத்கர் உருவாக்கிய இந்து மதச் சீர்திருத்தச் சட்டத்தின் பெரும் பகுதியை அவரது வாழ்நாளுக்குள்ளாகவே கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றி அம்பேத்கரின் கனவை நனவாக்கினார் நேரு. அம்பேத்கர்தான் அந்தச் சீர்திருத்தத்தின் தலைமகன் என்பதையும் நேரு மறக்காமல் குறிப்பிட்டார்.
தன் வாழ்நாள் முழுவதும் இந்து மதத்தை எதிர்த்த அம்பேத்கர் அதன் சீர்திருத்தங்களில் பெருமளவு பங்காற்றினார் என்பதுதான் அவர் மகத்தான ஜனநாயகவாதி என்பதன் அடையாளம்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர் அவர். வாழ்நாளுக்குப் பிறகும், ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாள மாக மாறி, இன்னும் போராட்டம் நிகழ்த்திக்கொண்டிருப்பவர் அம்பேத்கர். இதனால்தான், அந்த மக்களின் ஈடிணையற்ற தலைவராக அவர் இருக்கிறார். அதே காரணத்துக்காகத்தான் அவர் எல்லோருக்குமான தலைவராகிறார். கருப்பின மக்களுக்காகப் போராடினாலும் நெல்சன் மண்டேலாவை எல்லா மக்களும் தங்களுக்கான தலைவராக ஏற்றுக்கொள்வது எதனால்? சமூகத்தின் ஏற்றத்தாழ்வை அகற்றுவதற்கும் சமத்துவத்தை நிறுவுவதற்கும் எந்த மனிதர் பாடுபடுகிறாரோ அந்த மனிதரே உலகம் முழுமைக்குமான தலைவராகிறார்.
ஏனெனில், சமூகநீதியின் திசை நோக்கி ஒரு சமூகத்தை அவர் விழிக்க வைப்பதே அந்தச் சமூகத்தைப் பல மடங்கு மேம்படுத்துகிறது. சமத்துவத்தையும் சமூகநீதியையும் நோக்கி நம் சமூகம் சில அடிகளையாவது எடுத்துவைத்திருக்கிறது என்றால், அதற்கு அம்பேத்கரும் முக்கியமான காரணமல்லவா! இதற்காகவே, அம்பேத்கருக்கு நாம் காலமெல்லாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
அம்பேத்கர் நம் எல்லோருக்குமான தலைவர். நாம் அனைவரும் இதை உணரும் காலத்தில்தான் சமூகநீதியின் உச்சத்தில் நாம் இருப்போம்!
********************************

இன்று அம்பேத்கரின் 125-வது பிறந்த நாள்

அம்பேத்கர் தனது மக்களுக்காக மட்டுமின்றி, எல்லாத் தரப்பு மக்களுக்காகவும் சிந்தித்தார்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே தன் வாழ்நாள் முழுவதையும் செலவழித்த அம்பேத்கர், அரசியல் நிர்ணய சபைக்கு எதிராகவே முதலில் இருந்தார். கிரிப்ஸ் தலைமையில் 1942-ல் வந்த குழுவிடம் “எங்கள் கைகள், கால்களைக் கட்டி சாதி இந்துக்களிடம் ஒப்படைத்துவிட்டீர்கள்” என்று முறையிட்ட அவர், இந்திய விடுதலை உறுதியானதும் தனது நாட்டுக்கும் தனது மக்களுக்கும் மிகச் சிறந்த அரசியல் அமைப்புச் சட்டம் தேவை என்பதை உடனடியாக உணர்ந்தார்.
எதிர்த்தரப்பில் இருப்பதாலேயே எல்லாவற்றையும் எதிர்க்கக் கூடாது என்ற கொள்கையில் திடமாக இருந்த அவர், நமது அரசியல் அமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவராக இருந்தார் என்பது நாம் எல்லோரும் நன்கு அறிந்ததே. வரைவுக் குழுவில் பல புகழ் பெற்ற சட்ட வல்லுநர்கள் இருந்தாலும் அவர்கள் அனைவரும் அம்பேத்கரின் மீது பெருமதிப்பு வைத்திருந்தார்கள்.
நிறைவேறாத கனவு
அவர் நினைத்ததெல்லாம் நடைபெறவில்லை என்பது உண்மை. ஆனால், அம்பேத்கர் தனது மக்களுக்காக மட்டுமின்றி, எல்லாத் தரப்பு மக்களுக்காகவும் சிந்தித்தார். அவர் அரசியல் நிர்ணய சபைக்கு விரிவான அடிப்படை உரிமைகள் அடங்கிய பட்டியல் ஒன்றை அளித்தார். அந்தப் பட்டியலுடன் ஒரு சமுதாயத் திட்டமும் இருந்தது. அந்தத் திட்டம் எல்லா முக்கியமான தொழில்களும் அரசுடைமையாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியதோடு, நாட்டின் நிலங்கள் அனைத்தையும் அரசு எடுத்துக்கொண்டு, விவசாயத்தையும் அரசுத் தொழிலாக மாற்ற வேண்டும் என்றது.
எல்லா இந்தியர்களுக்கும் கட்டாயக் காப்புரிமை இருக்க வேண்டும் என்பதையும் அது சொன்னது. பல தடவைகள் அவரது திட்டத்தின் மீது விவாதங்கள் நடந்தன. ஆனால், அது நிறைவேறாத கனவாகவே முடிந்தது. இது போன்று பல தடைகளை அவர் சந்தித்தாலும், அரசியல் சட்டத்தின் பல முக்கியமான பிரிவுகள் அவரது திறமையான வாதங்களினாலேயே சட்டங்களாக மாறின.
அடிப்படை உரிமைகள்
நமக்குப் பல அடிப்படை உரிமைகள் இருக்கலாம். அவற்றை எவ்வாறு பாதுகாப்பது? அரசுக்கோ அரசு சார்ந்த நிறுவனங்களுக்கோ அவை செய்ய வேண்டிய காரியங்களை எழுத்து மூலம் செய்யச் சொல்லி உத்தரவு பிறப்பிக்கும் உரிமை நீதிமன்றங்களுக்கு இருக்கிறது. நமக்கு நன்றாகத் தெரிந்த ரிட் மனுக்களின் மீது நீதிமன்றங்கள் நாள்தோறும் ஆணை பிறப்பிக்கும் உரிமையை நமது அரசியல் அமைப்புச் சட்டத்துக்குள் கொண்டுவர வேண்டும் என்று வாதிட்டவர்களில் முதன்மையானவர் அம்பேத்கர்.
நீதிமன்றங்களுக்குத் தரப்பட்ட இந்த உரிமையே, இந்தியர்கள் இன்று சுதந்திரமாக இயங்கிக்கொண்டிருப்பதற்கு அடிப்படைக் காரணம் என்று பல அரசியல் சட்ட வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
ஆனால், அம்பேத்கர் அடிப்படை உரிமைகளுக்கு வரையறை இருக்கக் கூடாது என்று கருதவில்லை. அரசு நெருக்கடிக் காலங்களில் இந்த உரிமைகளைத் தற்காலிகமாகத் திரும்பப் பெறலாம் என்ற சட்டத்தையும் அவர்தான் முன்னின்று கொண்டுவந்தார். இதே போன்று நாட்டு நலனுக்காக மக்களைக் கட்டாயப் பணி செய்யுமாறு (ராணுவப் பயிற்சி உள்ளிட்ட) ஆணை பிறப்பிக்கும் உரிமையை அரசுக்கு அளிக்கவும் அவர் முன்வந்தார். மக்களுக்கு ஆயுதம் வைத்துக்கொள்ளும் உரிமையை அளிக்க வேண்டுமா என்பதுபற்றி பலத்த விவாதங்கள் நடந்தன. சிலர் இதுபற்றி முடிவு செய்யும் உரிமையை மாநிலங்களுக்கு விட்டுவிட வேண்டும் என்றனர்.
அம்பேத்கர் சொன்னார், “ஒரு மாநிலம் மறு மாநிலத்துக்கு எதிராக மக்களை ஆயுதம் திரட்டச் செய்தால் என்ன செய்வது? நாடு முழுவதும் இதுபற்றி ஒரே சட்டம் இருக்க வேண்டும்.” அமெரிக்காவில் சில மாநிலங்களில் இருப்பதைப் போன்று இந்தியாவிலும் ஆயுதம் வைத்துக்கொள்ளும் சட்டம் இருந்திருந்தால், வன்முறை எந்த அளவுக்கு வளர்ந்திருக்கும் என்பதை விளக்க வேண்டியதில்லை.
இந்திய ஒருமைப்பாடு
இந்தியா ஒரு வலுவான நாடாக உருப்பெற வேண்டுமானால், அதிலிருந்து பிரிந்து போகும் உரிமையை மாநிலங்களுக்கு அளிக்கக் கூடாது என்பதில் அம்பேத்கர் உறுதியாக இருந்தார். “ இந்தக் கூட்டமைப்பு (ஃபெடரேஷன்), மாநிலங்களெல்லாம் சேர்ந்து கூட்டமைப்பு அமைக்க வேண்டும் என்று ஒப்புதல் அளித்ததால் ஏற்பட்டதல்ல. எனவே, மாநிலங் களுக்குப் பிரிந்து போகும் உரிமை கிடையாது” என்று தனது உரையில் அவர் தெளிவாகக் குறிப்பிட்டார்.
ஒருமைப்பாட்டின் மீது அவருக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கையை, மற்றொரு சமயத்தில் ‘தேவைப்பட்டால், இந்தியா ஒற்றையாட்சி அரசாகக்கூட (யூனிட்டரி ஸ்டேட்) மாறலாம்” என்று அவர் குறிப்பிட்ட திலிருந்து அறியலாம்.
மற்றொரு தருணத்தில் முஸ்லிம் உறுப்பினர் ஒருவர், விகிதாச்சார முறைப்படி பிரதிநிதித்துவம் வேண்டும், இல்லையென்றால் நடைபெறப்போவது பெரும் பான்மையினரின் அடக்குமுறை என்று வாதிட்டபோது, அம்பேத்கர் அது அரசைப் பலவீனப்படுத்திவிடும் என்றார். “இந்தியாவுக்குத் தேவை சட்டம் - ஒழுங்கை அமல்படுத்தும் ஒரு நிலையான அரசு” என்று அவர் சொன்னபோது, உறுப்பினர்கள் பலத்த ஆரவாரத்தோடு உடன்பட்டனர். ஆனால், சிறுபான்மையினரின் உரிமையைக் காப்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
சிறுபான்மையினரின் உரிமையைப் பறிப்பது என்பது ஜனநாயகத்திலிருந்து சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்லும் அழிவுப்பாதை என்று கருதிய அவர், அரசியல் சட்டத்தில் சிறுபான்மையினரின் உரிமைகளைச் சொல்லும் உறுப்புகளுக்கு (ஆர்ட்டிக்கில்ஸ்) முழு ஆதரவு அளித்தார்.
வலுவான மத்திய ஆட்சியை நம்பியதால், அவர் மாநிலங்களின் அதிகாரங்களைக் குறைக்க நினைத்தார் என்று பொருள் கொள்ளக் கூடாது. அதனுடைய எல்லைக்குள் சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்கவும் நல்லாட்சி அளிக்கவும் மாநிலத்துக்கு இறையாண்மை இருக்கிறது என்று அவர் சொன்னார். மத்திய அரசு, மாநில அரசு விவகாரங்களில் தலையிடுவது ‘மோசமான ஆக்கிரமிப்பு’ என்று குறிப்பிடவும் அவர் தயங்கவில்லை.
ஆட்சிமொழி
அரசியல் சட்ட நிர்ணய சபையில் இந்தி வெறியர்கள் பலர் இருந்தார்கள். இந்தியை உடனே தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும், அதுவே அரசு மொழியாக இயங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். அதை எதிர்த்தவர்களும் பலர் இருந்ததால் விவாதங்கள் மிகவும் சூடாக இருந்தன. சூட்டைத் தணித்தவர்களில் முக்கியமானவர் அம்பேத்கர். ஆட்சிமொழி இந்தியாக இருக்கும். ஆனால், முதல் 15 வருடங்கள் ஆங்கிலமும் தொடர்ந்து இயங்கும். நாடாளுமன்றம் விரும்பினால், ஆங்கிலம் மேலும் இயங்கலாம் என்ற அரசியல் சட்டம் அவரது வழிகாட்டலில் உருவானது.
குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்
நாடாளுமன்றம் துவங்குவதற்கு முன்னால் குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்த வேண்டும் என்று பரிந்துரை செய்ததே அம்பேத்கர்தான். அதுவே, பின்னால் அரசியல் சட்டமாக மலர்ந்தது. ஆனால், அவர் குடியரசுத் தலைவருக்கு அளவற்ற அதிகாரங்களைத் தர விரும்பவில்லை. பிரதமர் மற்றும் அமைச்சர்களின் அறிவுரைகளை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொள்ள மறுத்தால், அவரைப் பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு இருக்கிறது என்பதில் ஐயம் இல்லை என்று அவர் சொல்லியிருக்கிறார். எனவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான் இந்த நாட்டை உண்மையாக ஆள்பவர்கள் என்ற கொள்கையில் உறுதியாக இருந்தவர் அவர்.
மாற்ற முடியாத அரசியல் சட்டமா?
இந்திய அரசியல் சட்டம் மிகவும் இறுக்கமானது, விரிவாக எழுதப்பட்டதால் மாற்றங்கள் செய்யக் கூடிய சாத்தியங்களை வெகுவாகக் குறைத்துவிடுகிறது என்ற குற்றச்சாட்டை ஜென்னிங்க்ஸ் போன்ற அரசியல் சட்ட வல்லுநர்கள் முன்வைத்திருக்கிறார்கள். ஆனால், “விரிவாக எழுதப்படாவிட்டால் அதை மிக எளிதாக அரசினால் உள்ளறுப்புச் செய்ய முடியும்” என்று அம்பேத்கர் சொன்னார். அரசியல் சட்டத்தைத் திருத்துவதையும் எளிதாக்க அவர் விரும்பவில்லை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வரப்போகும் நாடாளுமன்றத்துக்கு அந்த உரிமையை அளிக்க வேண்டும் என்று நேரு விரும்பினார் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். ஆனால், அம்பேத்கர் சொன்னார் “அரசியல் அமைப்புச் சட்டம் ஓர் அடிப்படை ஆவணம். அதை நாடாளுமன்றம் பெரும்பான்மை பலத்தை மட்டும் வைத்துக்கொண்டு திருத்த முடிந்தால் ஏற்படப்போவது பெரும் குழப்பம்.” இவ்வளவு தெளிவாக எழுதப்பட்ட பிறகும் இதுவரை நடைபெற்றிருக்கும் உள்ளறுப்பு வேலைகளை நாம் கவனித்தால் அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வையின் மகத்துவம் நமக்கு விளங்கும்.
அம்பேத்கர் தலித் மக்களுக்கு மட்டுமின்றி, இந்திய மக்கள் அனைவருக்கும் ஒரு வழிகாட்டி என்பது எல்லா மக்களுக்கும், குறிப்பாக இளைஞர்களுக்குத் தெரிய வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் பாரதியின் வாக்கில் சொல்வதானால் அம்பேத்கரின் “எண்ணம் எலாம் நெய்யாக எம் உயிரின் உள் வளர்ந்த வண்ண விளக்கு.” அது ஒளி விட்டு எரியும் வரை அவர் புகழும் குன்றாது.
- பி.ஏ. கிருஷ்ணன், 
‘புலிநகக்கொன்றை’, ‘கலங்கிய நதி’ ஆகிய நாவல்களின் ஆசிரியர், 
தொடர்புக்கு: tigerclaw@gmail.com
********************************************
ஜனவரி 26, 1950 அன்று முரண்பாடுகள் நிறைந்த ஒரு வாழ்க்கையில் நாம் அடியெடுத்து வைக்கப்போகிறோம். அரசியலில் சமத்துவமும் சமூக, பொருளாதார வாழ்வில் சமத்துவமின்மையையும் ஒருங்கே அடையவிருக்கிறோம். அரசியலைப் பொறுத்த வரை ‘ஒரு மனிதர் ஒரு ஓட்டு ஒரே மதிப்பு’ என்ற தத்துவத்தை நாம் அங்கீகரிக்கவிருக்கிறோம்.
அதே நேரத்தில் நமது சமூக, பொருளாதாரக் கட்டமைப்பின் காரணமாக நமது சமூக, பொருளாதார வாழ்வில் ‘ஒரு மனிதர் ஒரே மதிப்பு’ என்ற தத்துவத்தைப் புறக்கணிப்பதைத் தொடரப்போகிறோம். இப்படிப்பட்ட முரண்பாடுகளின் வாழ்க்கையை இன்னும் எவ்வளவு காலம்தான் நாம் தொடரப்போகிறோம்? நமது சமூக, பொருளாதார வாழ்வில் இன்னும் எவ்வளவு காலம்தான் சமத்துவத்தை நாம் புறக்கணிக்கப்போகிறோம்? இப்படியே நாம் வெகு காலமாக அதைச் செய்தால் கடைசியில் நமது அரசியல் ஜனநாயகத்தைப் படுகுழியில்தான் போய்த் தள்ளிவிடுவோம்.
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்த முரண்பாட்டை நாம் அகற்ற வேண்டும். இல்லையென்றால், சமத்துவமின்மையால் பாதிக்கப்படும் மக்களெல்லாம் அரசியல் ஜனநாயகம் என்னும் கட்டமைப்பை, அதாவது நாமெல்லாம் அரும்பாடுபட்டு உருவாக்கிய அந்தக் கட்டமைப்பை, தகர்த்தெறிந்துவிடக் கூடும்.
ஒரே தேசமா?
அடுத்ததாக நாம் விரும்புவது, சகோதரத்துவம் என்ற தத்துவம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதே. சகோதரத் துவம் என்றால் என்ன? எல்லா இந்தியர்களும் சகோதரர்களே என்ற உணர்வு. அதாவது, இந்தியர்கள் ஓரினத்தவராக இருப்பார்கள் எனில். இந்தத் தத்துவம்தான் சமூக வாழ்க்கைக்கு ஒற்றுமையும் ஒருமைப்பாடும் தருகிறது. எனினும் அடைவதற்கு மிகவும் கடினமானது அது. அது எவ்வளவு கடினமானது என்பதற்கு ஜேம்ஸ் பிரைஸின் நூலிலிருந்து ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்.
“சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க புராட்டஸ்டண்டு திருச்சபை ஒன்று தனது பிரார்த்தனைகளை மறுபார்வையிட்டுக் கொண்டிருந்தது. பிரார்த்தனை வாசகங்களில் எல்லா மக்களுக்குமான பிரார்த்தனை வாசகத்தைச் சேர்க்க வேண்டும் என்று விரும்பினார்கள். ‘ஓ தேவனே, எமது தேசத்தை ஆசிர்வதியும்!’ என்ற வாசகத்தை ஒரு குருமார் பரிந்துரைத்தார்.
இந்த வாசகத்தைச் சட்டென்று ஏற்றுக்கொண்டார்கள். அடுத்த நாள் இந்த வாசகம் மறுபரிசீலனைக்கு முன்வைக்கப்பட்டபோது ‘தேசத்தை’ என்ற சொல்லுக்குச் சாதாரண மக்களிடமிருந்து நிறைய எதிர்ப்புகள் எழுந்தன. தேசிய ஒருமைப்பாடு என்பதை அந்தச் சொல் மிகவும் குறுக்குவதாகக் கருதினார்கள். எனவே, அந்தப் பிரயோகம் தவிர்க்கப் பட்டது, அதற்குப் பதிலாக ‘ஓ தேவனே, ஐக்கிய (அமெரிக்க) மாகாணங்களை ஆசிர்வதியும்’ என்ற வாசகம் இறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.”
அந்தச் சமயத்தில் அமெரிக்க மக்களிடையே மிகவும் குறைவாகவே ஒருமைப்பாடு நிலவியது. அமெரிக்க மக்களே தங்களை ஒரே தேசமாக நினைக்காதபோது, இந்தியர்கள் தங்களை ஒரே தேசத்தினராக நினைப்பது எவ்வளவு கடினமாக இருக்கும்! ‘இந்திய மக்கள்’ என்ற பிரயோகத்தை அரசியல் பார்வை கொண்ட இந்தியர்கள் பலர் வெறுத்த நாட்கள் இப்போது என் நினைவுக்கு வருகின்றன. அந்தப் பிரயோகத்தைவிட ‘இந்திய தேசம்’ என்ற பிரயோகத்தை அவர்கள் விரும்பினார்கள். நாமெல்லாம் ஒரே தேசத்தினர் என்று நம்புவதன் மூலம் பெரும் மாயையையே நாம் போஷிக்கிறோம் என்று நான் நம்புகிறேன்.
ஆயிரக் கணக்கான சாதிகளாகப் பிளவுண்டு கிடக்கும் மக்கள் எப்படி ஒரே தேசமாக ஆவார்கள்? தேசம் என்ற சொல்லின் சமூகவியல்ரீதியிலான அர்த்தத்திலும் உளவியல்ரீதியிலான அர்த்தத்திலும் நாம் இன்னும் ஒரு தேசமாக உருவெடுக்கவில்லை என்பதை எவ்வளவு சீக்கிரம் உணர்கிறோமோ அவ்வளவுக்கு நமக்கு நல்லது. அப்போதுதான் ஒரே தேசமாக நாம் உருவாவதன் அவசியத்தை உணர்வதுடன் அந்த இலக்கை அடைவதற்கான வழிமுறைகளைப் பற்றியும் தீவிரமாக நாம் சிந்திப்போம்.
இந்த இலக்கை அடைவது மிகவும் கடினமாக இருக்கும், அமெரிக்காவை விடவும். அமெரிக்காவில் சாதிப் பிரச்சினை என்பதே இல்லை. இந்தியாவிலோ சாதிகள் இருக்கின்றன. சாதிகள் என்பவை தேசத்துக்கு எதிரானவை. சமூக வாழ்வில் அவையெல்லாம் பிளவை ஏற்படுத்துகின்றன என்பதே அதற்கு முதற்காரணம். அது மட்டுமல்லாமல், அந்த சாதிகளுக்கிடையே பொறாமையையும் ஆழ்ந்த வெறுப்பையும் உருவாக்குவதாலும் சாதிகள் தேசத்துக்கு எதிரானவையாக இருக்கின்றன.
உண்மையிலேயே ஒரு தேசமாக நாம் உருவெடுக்க விரும்பினால் இந்த முட்டுக்கட்டைகளையெல்லாம் நாம் தாண்டிவந்தாக வேண்டும். ஏனென்றால், தேசம் என்ற ஒன்று இருந்தால் தான் சகோதரத்துவம் என்பது நிதர்சனமாகும். சகோதரத்துவம் என்பது இல்லையென்றால் சமத்துவம், சுதந்திரம் என்பதெல்லாம் வெறும் மேற்பூச்சுக்களைப் போலவே ஆகிவிடும்.
ஆற்ற வேண்டிய பணிகள்
நாம் ஆற்ற வேண்டிய பணிகளைக் குறித்த என் சிந்தனைகள் இவைதான். இந்தச் சிந்தனைகள் சிலருக்கு உவப்பாக இல்லாமல் போகலாம். ஆனால், அரசியல் அதிகாரம் என்பது நீண்ட காலமாக ஒருசிலரின் ஏகபோகமாக இருந்தது என்றும், மக்களில் பலர் சுமை சுமக்கும் விலங்குகள் போல மட்டுமல்ல, இரையாகும் விலங்குகள் போலவும் நடத்தப்பட்டார்கள் என்றும் சொன்னால் அதை யாரேனும் மறுக்க முடியுமா? இந்த ஏகபோகம்தான், மேலான வாழ்வுக்கான சாத்தியங்களை அந்த மக்களிடமிருந்து பறித்தது.
அது மட்டுமல்ல, வாழ்க்கை என்பதன் சாரம் எதுவோ அதையும் அவர்களிட மிருந்து உறிஞ்சியெடுத்துவிட்டது. நசுக்கப்பட்ட இந்த மக்களெல்லாம் காலம்காலமாக மற்றவர்களால் ஆளப் படுவதில் களைத்துப்போய்விட்டார்கள், தாங்களே ஆள்வதற்கு அவர்கள் துடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
எது நல்லது?
நசுக்கப்பட்ட இந்த மக்களிடையே ஏற்பட்டிருக்கும் இந்த உணர்வு வர்க்கப் போராட்டமாகவோ வர்க்கப் போராகவோ மாறிவிட அனுமதிக்கக் கூடாது. அது நாடாளுமன்றத்திலும் பெரும் பிளவை ஏற்படுத்திவிடும். அதுவே ஊழி முடிவாகவும் ஆகிவிடும். பிளவுண்ட மக்கள் மன்றம் என்பது வெகு நாட்கள் நீடிக்க முடியாது. எனவே, அந்த மக்களின் லட்சியங்கள் சீக்கிரம் நிறைவேற்றப்படுவதென்பது குறிப்பிட்ட அந்த சிலருக்கும் நல்லது; தேசத்துக்கும் நல்லது; நாம் சுதந்திரத்தைப் பேணுவதற்கும் அதன் ஜனநாயகக் கட்டமைப்பைத் தொடர்வதற்கும் நல்லது. வாழ்க்கையின் அனைத்துத் தளங்களிலும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் நிறுவுவதன் மூலமே இதைச் சாதிக்க முடியும். அதனால்தான் இதற்கு நான் அவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறேன்.
அவைக்கு இதற்கு மேலும் களைப்பூட்ட நான் விரும்ப வில்லை. சுதந்திரம் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான் என்பதில் சந்தேகமேயில்லை. என்ன பிரச்சினை என்றாலும் ஆங்கிலேயரின் மீது பழிபோடும் வாய்ப்பை சுதந்திரத்தின் மூலம் நாம் இழந்துவிட்டோம். இனிமேல் என்ன பிரச்சினை என்றாலும், அதற்கு நம்மையன்றி வேறு யாரும் பொறுப்பல்ல.
எப்போது என்ன நடக்கும் என்றே தெரியாத அபாயம் இப்போது நிலவுகிறது. காலம் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. நமது மக்கள் புதுப்புதுச் சிந்தாந்தங்களால் உந்தப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசின் மீது அவர்களுக்கு நம்பிக்கை குறைந்துவருகிறது. மக்களுக்கான அரசை அமைக்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால், அந்த அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களே நடத்தும் அரசாக இருப்பதில் அவர்களுக்கு ஈடுபாடு ஏதும் இல்லை.
‘மக்களால், மக்களே, மக்களுக்காக நடத்தும் அரசு’ என்ற தத்துவத்தை உறுதிப்படுத்தும் அரசியல் அமைப்பை நாம் பாதுகாக்க விரும்பினால், நமது பாதையில் குறுக்கே கிடக்கும் தீமைகளை அடையாளம் காண்பதை நாம் தாமதப்படுத்தக் கூடாது, அவற்றை அகற்றுவதில் நாம் பலவீனமாக இருந்துவிடக் கூடாது. ஏனென்றால், அந்தத் தீமைகள்தான் மக்களால் நடத்தப்படும் அரசைவிட, மக்களுக்காக நடத்தப்படும் அரசை நாட வைத்துவிடும். எனவே, நாட்டுக்குப் பணியாற்றுவதற்கு அந்தத் தீமைகளை அகற்றுவதே வழி!
- டிசம்பர் 25, 1949-ல் அரசியல் சட்ட நிர்ணய சபையில் அம்பேத்கர் ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகள்.
தமிழில்: ஆசை
*****************
வாழ்க்கை முறை
ஜனநாயகம் என்பது வெறுமனே ஒரு ஆட்சி முறை மட்டுமல்ல. அடிப்படையில் அது ஒரு கூட்டு வாழ்க்கைக்கான வழிமுறை. அனைத்துக் கருத்துப் பரிமாற்ற அனுபவங்களுக்குமான வழிமுறை. சக மனிதர்கள் மீது நாம் காட்ட வேண்டிய மதிப்புக்கும் மரியாதைக்குமான அடிப்படை அணுகுமுறை ஜனநாயகம்தான்.
ஆவணம் அல்ல; ஆன்மா!
அரசியல் அமைப்புச் சட்டம் என்பது வெறுமனே வழக்கறிஞர்கள் சேர்ந்து உருவாக்கிய ஆவணம் அல்ல; அது வாழ்க்கைக்கான வாகனம். அதன் ஆன்மா என்பது எப்போதுமே இந்த யுகத்தின் ஆன்மாதான்.
அக மேம்பாடு
கடலோடு சேரும் நீர்த் துளி தனது அடையாளத்தை இழக்கும். ஆனால், மனிதன் தான் வாழும் சமூகத்தின் அங்கமாக இருப்பதால் தனது அடையாளத்தை இழப்ப தில்லை. மனிதனுடைய வாழ்க்கை என்பது சுதந்திரமானது. அவன் பிறந்தது சமூகத்தின் மேம்பாட்டுக்காக மட்டுமல்ல, அவனது அக மேம்பாட்டுக்காகவும்தான்.
முன்நிபந்தனை
மனம், ஆத்மா ஆகியவற்றின் விடுதலைதான் அரசியல்ரீதியாக மக்கள் வலுவடைவதற்கு அவசியமான முன்நிபந்தனை.
உயிர்ப்பின் அடையாளம்
சுதந்திரமான சிந்தனைதான் உண்மையான விடுதலை. ஒருவன் அகவிடுதலை அடைய வில்லை என்றால், உயிருடன் இருந்தாலும் அவன் பிணம் மாதிரிதான்.
பெண்கள்தான் அளவுகோல்
ஒரு சமூகத்தின் பெண்கள் எந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறார்கள் என்பதைக் கொண்டே அந்தச் சமூகம் எந்த அளவு முன்னேறியிருக்கிறது என்பதை அளவிடுவேன்.
எந்த மதம்
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றைப் போதிக்கும் மதத்தையே நான் விரும்புகிறேன்… மதம் என்பது மனிதனுக்காகத்தான். மதத்துக்காக மனிதன் அல்ல!
விசித்திர முரண்
இன்றைய இந்தியர்களை இரண்டு மாறுபட்ட சித்தாந்தங்கள் ஆட்கொண்டிருக் கின்றன. அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகவுரையில் கூறப்பட்டிருக்கும் அரசியல் லட்சியமானது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை உறுதிசெய்கிறது. ஆனால், அவர்களுடைய மதத்தில் வேர்கொண்ட அவர்களின் சமூக நெறிகளோ மேற்கண்ட மூன்றையும் மறுக்கிறது.
ஆட்சிக் கோட்பாடு
சமத்துவம் என்பது ஒரு கற்பனையாக இருக்கலாம், ஆனாலும் அதை ஒரு ஆட்சிக் கோட்பாடாக நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.
தனிமனித வழிபாடு
மதத்தைப் பொறுத்தவரை பக்தி என்பது ஆத்ம ஈடேற்றத்துக்கான பாதையாக இருக்கலாம். ஆனால், அரசியலைப் பொறுத்தவரை, பக்தியோ தனிமனித வழிபாடோ சீரழிவுக்கான பாதையாகி, கடைசியில் சர்வாதிகாரத்துக்கு வழிவகுத்துவிடும்.
இயந்திரங்களும் நவீன நாகரிகமும்
விலங்கைப் போல் மனிதன் வாழ்வதிலிருந்து அவனை விடுவிக்க இயந்திரங்களும் நவீன சமூகமும் மிகவும் அத்தியாவசியமானவை. அது மட்டுமல்லாமல், இயன்ற அளவுக்கு அவனுக்கு ஓய்வு நேரத்தையும் கலாச்சார வாழ்க்கையையும் தருவதற்கு அவை அவசியம். ‘இயந்திரங்கள், மேலும் இயந்திரங்கள்; நாகரிகம், மேலும் நவீன நாகரிகம்’ என்பதே ஜனநாயகச் சமூகத்தின் தாரக மந்திரமாக இருக்க வேண்டும்.
முதலும் முடிவுமாக இந்தியரே!
இந்தியர் என்ற அடிப்படையில் நாம் அனைவரும் காட்ட வேண்டிய பற்றுக்கு நமது மதப்பற்று, கலாச்சாரப் பற்று, மொழிப்பற்று போன்ற எந்தப் பற்றாலும் துளிகூடப் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது. முதலும் முடிவுமாக நாம் எல்லோரும் இந்தியர்களாகவே இருக்க வேண்டும், வேறு எதுவாகவும் அல்ல!
- தொகுப்பு: ஆசை
********************************************
இப்போதாவது விழித்துக்கொள்வோம்!
டாக்டர் அம்பேத்கரின் நிலைமையில் நான் இருந்திருந்தால், அடக்கவே முடியாத கோபம் கொண்டவனாகத்தான் இருந்திருப்பேன். அவர் இடத்தில் நான் இருந்திருந்தால் அஹிம்சை மீது நம்பிக்கை உள்ளவனாக இருந்திருக்க மாட்டேன்.
டாக்டர் அம்பேத்கர் என்ன செய்தாலும் அதை நாம் பணிவுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர் நம்மைச் செருப்பால் அடித்தாலும் நாம் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்… அவரும் அவரது மக்களும் இந்து மதத்தின் மீது நம்பிக்கை இழந்து வேறு மதத்துக்கு மாறினாலும் அதை நமது பிராயச்சித்தம் என்றே நாம் கருத வேண்டும். நமக்கு இத்தகைய தண்டனை வேண்டியதுதான். இப்போதாவது நாம் விழித்துக்கொண்டு, நமது பாவங்களிலிருந்து நம்மைச் சுத்திகரித்துக்கொள்ள வேண்டும்.
- காந்தி
கலகத்தின் அடையாளம்
இந்து சமூகத்தின் அடக்குமுறை களுக்கு எதிரான கலகத்தின் அடையாளமாக அம்பேத்கர் என்றென்றும் நினைவுகூரப்படுவார். மேலும், இந்து மத சட்டத் திருத்தம் தொடர்பாக அவர் காட்டிய அக்கறைக்காகவும் சந்தித்த பிரச்சினைகளுக்காகவும் அவர் நினைவுகூரப்படுவார். அச்சட்டத் திருத்தம் அம்பேத்கர் உருவாக்கியதைப் போல மொத்தமாக இல்லையென்றாலும், பகுதி பகுதியாக மேற்கொள்ளப்பட்டதை அவர் பார்த்தார் என்பதில் எனக்கு மகிழ்ச்சி.
ஜவாஹர்லால் நேரு
மாபெரும் நஷ்டம்
இந்தியாவின் சிறந்த அறிஞர்களில் முன்னணியிலுள்ள அறிஞரும் ஏராளமான விஷயங்களைக் கற்றுத் தேர்ந்த கலாநிதியுமான அம்பேத்கர் அவர்கள் முடிவெய்தி விட்டார் என்ற செய்தி கேட்டவுடன் திடுக்கிட்டுப் பதறிவிட்டேன்.
உண்மையில் சொல்ல வேண்டுமானால், டாக்டர் அம்பேத்கருடைய மறைவு என்னும் ஒரு குறைபாடானது, எந்தவிதத்திலும் சரிசெய்ய முடியாத ஒரு மாபெரும் நஷ்டமேயாகும். அவர் சிறப்பாக, தாழ்த்தப்பட்ட சமுதாயத்துக்குத் தலைவர் என்று சொல்லப்பட்டாலும், பகுத்தறிவுக்கு எடுத்துக்காட்டாகவுள்ள ஒரு பேரறிஞராக விளங்கினார். எப்படிப்பட்டவரும் எடுத்துச் சொல்லப் பயப்படும்படியான புரட்சிகரமான விஷயங்களை எல்லாம் வெகு சாதாரணத் தன்மையில் எடுத்துச் சொல்லும்படியான வீரராகவும் விளங்கினார்.
- தந்தை பெரியார், அம்பேத்கர் மறைவையொட்டி
நம்பிக்கையும் நிம்மதியும்
என்னைப் பொறுத்த வரையில், டாக்டர் அம்பேத்கர் இந்திய அரசியலில் மிகப் பெரிய மனிதர்... இந்த உண்மை, இந்து மதத்தில் சாதி முறை என்றேனும் ஒரு நாள் தகர்க்கப்படும் என்ற நம்பிக்கையையும் நிம்மதியையும் எனக்குக் கொடுத்திருக்கிறது.
- ராம் மனோகர் லோஹியா.
வளமான எதிர்காலத்தின் சூரியன்!
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அம்பேத்கர் செய்தது என்ன? அம்மக்களின் கடந்த கால வாழ்க்கை இருட்டில் இருந்தது. வரலாற்றில் முதன்முறையாக, கடந்த 25 நூற்றாண்டு வரலாற்றில் அவர்களுடைய சிறப்பான எதிர்காலத்துக்கான சூரியன் அம்மக்களின் அடிவானத்தில் உதித்திருக்கிறது.
தாழ்த்தப்பட்ட மக்களின் மண்ணின் மைந்தரான அம்பேத்கர், அம்மக்களின் சமூக உரிமைகள், அரசியல் உரிமைகள் மற்றும் விடுதலை தொடர்பாக உலக அளவிலான கவனக்குவிப்பை ஏற்படுத்தினார். தீண்டாமையைச் சமகாலத்தின் தீவிரமான பிரச்சினை என்பதை உணர்த்திய அவர், சர்வதேச அளவில் இப்பிரச்சினையைக் கொண்டுசென்றார். அந்த மக்களுக்கு அவர்களின் ஆன்மாவை அளித்த அவர், தங்கள் பிரச்சினைகளுக்காகக் குரல் எழுப்பவும், நீதி, சமத்துவம், மற்றும் விடுதலைக்காகப் போராடவும் அவர்களுக்கு உத்வேகம் அளித்தார்.
- தனஞ்செய் கீர், அம்பேத்கர் சுயசரிதையை எழுதியவர்...
உயர்ந்த கல்வி
இந்திய வரலாற்றிலேயே உயர்ந்த கல்விப் பின்புலம் கொண்ட பொருளாதார அறிஞர் அம்பேத்கர்.
- நரேந்திர ஜாதவ், பொருளாதார நிபுணர்.
எனக்கு வழிகாட்டி!
எனது பொருளாதார அறிவின் தந்தை அம்பேத்கர்தான். இந்தியாவில் மிகவும் சர்ச்சைக்குரிய ஆளுமையாக அவர் கருதப்பட்டார். ஆனால் உண்மை அதுவல்ல. பொருளாதாரத் துறைக்கு அவர் ஆற்றியிருக்கும் பங்கு மகத்தானது; என்றென்றும் நினைவில் நிற்கக் கூடியது.
- அமர்த்திய சென், பொருளாதாரத்துக்காக நோபல் பரிசு பெற்றவர்.

முதன்மை ஆசிரியர்!
மனித உரிமைக்காகக் குரல் கொடுத்த மகத்தான மனிதர் அம்பேத்கர். இந்திய அரசியல் சட்டத்தின் முதன்மை ஆசிரியர் அவர்.
- அமெரிக்க அதிபர் ஒபாமா, 2010-ல் இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது…
************************
அம்பேத்கர் நூல்கள்
அம்பேத்கரின் படைப்புகள் ஆங்கிலத்தில் 18 தொகுதிகளாக மகாராஷ்டிர அரசால் வெளியிடப் பட்டுள்ளன. மத்திய அரசு அமைத்துள்ள அம்பேத்கர் பவுண்டேஷன் அவரது படைப்புகளை இந்தி, மலையாளம், தமிழ், உருது, பெங்காலி, பஞ்சாபி, ஒரியா, தெலுங்கு, குஜராத்தி ஆகிய 9 மொழிகளில் இதுவரை மொழியாக்கம் செய்துவருகிறது என்று மத்திய அரசு கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆங்கிலத்தின் 18 தொகுதிகள் மற்ற மொழிகளில் 40 தொகுதிகளாக ஆக்கப்பட்டுள்ளன.
தமிழிலும் 38 தொகுதிகள் வரை வெளியாகியுள்ளன. மற்ற மொழிகளில் ஒருசில தொகுதிகள் மட்டுமே வெளியாகியுள்ளன. ஆங்கில மொழியில் வெளியான படைப்புகள் போக மராத்தி மொழியிலும் பல படைப்புகள் இன்னும் மொழிபெயர்க்கப்படாமல் இருக்கின்றன என்கிறார் வரலாற்று ஆய்வாளர் வ.கீதா.
அவரது படைப்புகளிலேயே இன்னமும் பரபரப்பாக விவாதிக்கப்படுவதாக ‘சாதி அழித்தொழிப்பு’ எனும் நூல் உள்ளது. இந்தப் புத்தகத்துக்குத் தமிழில் ஓரிரு மொழிபெயர்ப்புகள் வெளியாகியிருக்கின்றன. ‘புத்தரும் தம்மமும்’ எனும் அம்பேத்கரின் நூலைப் பேராசிரியர் பெரியார்தாசன் தமிழாக்கம் செய்துள்ளார்.
தனஞ்செய்கீர் எழுதிய ‘அம்பேத்கர்: லைஃப் அண்டு மிஷன்’ என்ற புத்தகம் அம்பேத்கரின் ஒப்புதலோடு வெளியான அவரது வாழ்க்கை வரலாறு. கம்யூனிச இயக்கத் தலைவரான ஏ.எஸ்.கே. ஐயங்கார் என்பவர் எழுதிய ‘டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட இன மக்களின் பிரச்சினைகளும்’ எனும் நூலை எதிர் வெளியீடு பதிப்பித்துள்ளது. ‘அம்பேத்கரின் வழித்தடத்தில் வரலாற்று நினைவுகள்’ எனும் நூலை அம்பேத்கருக்குச் செயலாளராக இருந்த பகவான்தாஸ் எழுதியுள்ளார். அதனை இந்திரா காந்தி அலங்காரம் மொழியாக்கம் செய்துள்ளார்.
பிற...
மத்திய அரசின் சார்பாக எடுக்கப்பட்ட ‘டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கர்’ திரைப்படத்தில் நடிகர் மம்முட்டி அம்பேத்கர் வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்துக்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. அது தமிழிலும் வெளியிடப்பட்டது.
அம்பேத்கரின் வாழ்க்கையை ஒட்டியும் தலித் மக்கள் அனுபவித்துவரும் கொடுமைகளைப் பற்றியும் ஆனந்த பட்வர்தன் எடுத்த மிக முக்கியமான ஆவணப்படம்தான் ‘ஜெய் பீம் காம்ரேடு’.
அம்பேத்கரின் படைப்புகளையும் அம்பேத்கர் தொடர்பான விவாதங்களையும் அறிந்துகொள்ள விரும்புவோர் கீழ்க்கண்ட சுட்டிகளைப் பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக