புதன், 15 ஏப்ரல், 2015

நிலம் கையகப்படுத்தும் சட்டம் & இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு

காற்றின் சுகந்தமோ, நீரின் பளபளப்போ நமக்கே சொந்தமில்லை. அப்படியிருக்க நம்மிடமிருந்து மற்றவர்கள் எப்படி அவற்றை வாங்க முடியும்? - செவ்விந்தியத் தலைவர் சீல்த்
எல்லாவற்றையும்விடப் பெரிய கேள்வி இது: நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைக் கொண்டுவரும் முன் மோடியும் அவருடைய சகாக்களும் இந்தியாவின் உணவுப் பாதுகாப்பைக் கணக்கில் எடுத்துக்கொண்டார்களா, இல்லையா? ஏனென்றால், உலகின் ஆறில் ஒரு பங்குக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட ஒரு நாடு தவிர்க்கவே முடியாத சவால் இது.
இன்றைக்கு 135 கோடியுடன் மக்கள்தொகையில் சீனா முதலிடத்தில் இருக்கலாம். அதற்கேற்ற நிலப்பரப்பும் அந்த நாட்டிடம் இருக்கிறது. கிட்டத்தட்ட 95.72 லட்சம் சதுர கி.மீ. நிலப்பரப்புடன் உலகில் மூன்றாவது இடத்தில் இருக்கும் நாடு அது. இந்தியாவின் நிலை என்ன? நாம் எட்டாவது இடத்தில் இருக்கிறோம், 31.66 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவுடன். சீனாவுடன் ஒப்பிட்டால், மூன்றில் ஒரு பங்கு. சரியாக அடுத்த 10 ஆண்டுகளில், 2025-ல் சீனாவைக் கடந்து, உலகிலேயே அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட நாடாக இந்தியா மாறும் என்கிறார்கள். இப்போதே உலகின் பட்டினி நாடுகளின் வரிசையில் முதல் வரிசையில்தான், இந்தியா இருக்கிறது. ஒவ்வொரு நாளும் குறைந்தது 23 கோடிப் பேர் இரவில் பட்டினி வயிறோடு தூங்கச் செல்கிறார்கள். குடிமக்களில் 21% பேர் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டவர்கள். அதாவது, உலகின் பட்டினி வயிறுக்காரர்களில் கிட்டத்தட்ட நான்கில் ஒருவர் இந்தியர். நம்முடைய ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 44% பேர் எடைக்குறைவால் பாதிக்கப்பட்டவர்கள். மிகச் சமீப சமூக வளர்ச்சிக் குறியீட்டுப் பட்டியலில்கூட 101-வது இடத்தில், அவமானகரமான சூழலில்தான் இருக்கிறோம் நாம். மேலும் மேலும் வளரும் மக்கள்தொகையின் உணவுத் தேவையை எப்படிச் சமாளிக்கப்போகிறோம்?
வேண்டா வெறுப்பாக விவசாயம்
சர்வதேச அளவில் உணவுப் பாதுகாப்பை ஆராயும் பல ஆய்வாளர்களும் இந்தியாவைப் பற்றிப் பேசும்போது கவலையோடு சுட்டிக்காட்டும் விஷயங்கள் இவை: முதலாவது, இந்தியாவின் நீர் தேவையும் தட்டுப்பாடும். இந்தியாவின் நீர் தேவை 2025-ல் 75,000 கோடி கன மீட்டரிலிருந்து 1.02 லட்சம் கோடி கன மீட்டராக உயரும். குறிப்பாக, பாசனத் தேவை 73,000 கோடி கன மீட்டராக உயரும். ஆனால், இந்தியாவின் நீராதாரங்களோ தொடர்ந்து கவலை அளிக்கும் வகையில் சூறையாடப்பட்டுவருகின்றன. இரண்டாவது, இந்தியாவின் உணவுக் களஞ்சியம் என்று நம்பப்படும் பகுதிகள் யாவும் அதன் உச்சபட்ச உற்பத்தி நிலையை எட்டிவிட்டன. அதீத ரசாயன உரங்கள் - பூச்சிக்கொல்லிகள் பயன்பாட்டால் மண் செத்துக்கொண்டிருக்கிறது. மூன்றாவது, இந்த உணவுத் தேவையை எதிர்கொள்ள எந்தச் சமூகம் பலமாக நிற்க வேண்டுமோ, அந்த விவசாயச் சமூகம் இந்தியாவில் மிகப் பலவீனமான நிலையில் இருக்கிறது; அச்சப்படத் தக்க வகையில், விரக்தியால் தொழிலிலிருந்து வேகமாக வெளியேறுகிறது. இந்திய விவசாயிகள் எந்த அளவுக்கு இப்போது தொழிலில் ஆர்வமாக இருக்கிறார்கள்? வளர்முக சமூகங்கள்குறித்த ஆய்வுக்கான மையத்தின் ஆய்வறிக்கை சொல்லும் தகவல்கள் இவை: “62% விவசாயிகள் விவசாயத்திலிருந்து வெளியேற விரும்புகிறார்கள், வேறு ஒரு பிழைப்புக்கான வாய்ப்பு கிடைத்தால். 37% விவசாயிகள் தங்கள் குழந்தைகள் விவசாயத்துக்கு வருவதை விரும்பவில்லை. 22% விவசாயிகள் விவசாயத்தையே விரும்பவில்லை.” வேறு வழியில்லாமல் செய்யும் பிழைப்பாக, வேண்டாவெறுப்பாகத் தொடரும் பிழைப்பாகவே பெரும்பாலானோருக்கு இன்றைக்கு விவசாயம் மாறிவிட்டது. இந்த ஆய்வை விடவும் நம்முடைய விவசாயிகளின் விரக்திக்கு கண்கூடான பெரிய ஆதாரம், கிராமங்களில் விவசாய வேலைகளுக்கு நிலவும் ஆள்பற்றாக்குறை.
அதிர வைக்கும் கணக்குகள்
எல்லாமே நாம் அலட்சியப்படுத்தும் மிகப் பெரிய அபாயங்கள். இன்னொரு அபாயத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். நிலத்தின் வீழ்ச்சி. விவசாயம் செய்யத்தக்க நிலப்பரப்பின் வீழ்ச்சி. ஆங்கிலேயர்கள் காலத்தில் நடந்த கதைகள் இருக்கட்டும், சுதந்திர இந்தியாவில் மட்டும் இதுவரை நிலம் கையகப்படுத்தலால், பறிபோயிருக்கும் நிலங்கள் / பறிகொடுத்தவர்கள் / தங்களுடைய வாழிடங்களைவிட்டு வெளியேற்றப்பவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? வால்டர் பெர்னாண்டஸ் ஆய்வு சொல்லும் தரவு இது. நிலமெடுப்பால் 1947 தொடங்கி 2004 வரையில் கிட்டத்தட்ட 6 கோடிப் பேர் தங்களுடைய வாழிடங்களைவிட்டு வெளியேற நேர்ந்திருக்கிறது. நம்முடைய அரசு அமைப்புகள் சார்ந்த கணக்குகளும்கூட அதிரவைப்பவை. 2009-ல் ஊரக வளர்ச்சி அமைச்சகம், ‘அரசின் வேளாண் உறவும் முற்றுப்பெறாத நிலச்சீர்திருத்த நடவடிக்கைகளும்’ என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றைத் தயாரித்தது. நிலங்களிலிருந்து இந்தியப் பழங்குடிகள் விலக்கப்பட்டதுதான் கொலம்பஸ் காலத்துக்குப் பிறகு நடைபெற்ற மிகப் பெரிய நிலப்பறிப்பு என்று சொன்னது இந்த அறிக்கை. 1991-ல் 40% ஆக இருந்த நிலமற்றோர் எண்ணிக்கை 2004-05-ல் 52% ஆக உயர்ந்துவிட்டதையும் அது சுட்டிக்காட்டியது. ஒருவேளை மோடி அரசு புதிய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை நிறைவேற்றி, அது நினைப்பதுபோலவே தனியார் நிறுவனங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டால், குறுகிய காலத்தில் மாபெரும் நிலப்பறிப்பை நிகழ்த்திய அரசாக இந்த அரசு மாறும். ஏனென்றால், நம் கற்பனைக்கெல்லாம் அப்பாற்பட்ட அளவுக்கு ஏற்கெனவே நிலம் கையகப்படுத்தலுக்காக நிறுவனங்கள் காத்திருக்கின்றன. பாஜக செய்தித்தொடர்பாளர் கிருஷ்ணசாகர் ராவ், நிலம் கையகப்படுத்தலுக்கு ஆதரவாக முன்வைக்கும் வாதங்களில் நான்கு லட்சம் வளர்ச்சித் திட்டங்கள் காத்திருப்பதாகச் சொல்கிறார்; அவற்றில் 75% திட்டங்கள் சமூகத் தாக்க அறிக்கை போன்ற வளர்ச்சிக்குத் தடையான விதிகளாலேயே தேங்கி நிற்பதாகச் சொல்கிறார். கூடவே, பிரதமர் மோடியும் அவருடைய அமைச்சர்களும் சொல்லும் / நம்பும் விஷயங்கள் யாவும் நடந்தால், இந்திய விவசாயத்தின் இதயத்தில் ஆழமாகக் குத்தப்படும் கத்தியாகவே நிலம் கையகப்படுத்தும் சட்டம் அமையும்.
வரலாற்றுத் தவறு
நம் எல்லோர் கண்ணுக்கும் தெரிந்த ஒரு துறை மட்டும் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு இது. மோடி அரசின் திட்டப்படி அவர்கள் மிகப் பெரிய வளர்ச்சியைத் தரக் கூடிய துறைகளில் ஒன்றாக நம்புவது ரியல் எஸ்டேட் துறை. ஏற்கெனவே, 2000-01-ல் இந்தியப் பொருளாதாரத்தில் 14.7% பங்களித்த ரியல் எஸ்டேட் துறை 2010-11-ல் 19% பங்களிக்கும் துறையாக உருவெடுத்திருக்கிறது. இப்போது புதிய அரசு கொடுக்கும் உத்வேகம், 2025-ல் உலகின் மூன்றாவது இடத்தில் இந்திய ரியல் எஸ்டேட் துறையை உட்காரவைக்கும் என்கிறார்கள். அதாவது, ஆண்டுக்கு 1.15 கோடி வீடுகளுடன். பேய்க்கு ஆயிரம் இரும்புப் பற்களைப் பொருத்திப் பார்ப்பதற்கு இணையாக இருக்கிறது இந்த மதிப்பீடு. இவ்வளவு வீடுகளுக்குமான இடம் எங்கே இருக்கிறது? இந்த வீடுகளைச் சுற்றி உருவாகும் குடியிருப்புப் பகுதிகளுக்கான இடம் எங்கே இருக்கிறது? இந்தக் கொடூரக் கனவுக்கு எவ்வளவு நிலங்களும் விவசாயிகளும் பலியாவார்கள்? நிலங்கள் பறிபோக, பறிபோக இந்திய விவசாயமும் உணவுப் பாதுகாப்பும் என்னவாகும்? அவர்கள் வேறு பதிலைச் சொல்வார்கள்: “இப்போது 11% பேருக்கு ரியல் எஸ்டேட் துறை வேலை அளிக்கிறது. இது மேலும் மேலும் பெருகும்.”
கிராமத்தில் விவசாய வேலையை விட்டுவிட்டு சித்தாள் வேலைக்கு வருவது வளர்ச்சியா? தெரியவில்லை. ஆனால், விவசாய நிலத்தை ஒரு வெறும் அலுவலகம்போல, தொழிற்சாலைபோல வெறும் வேலைக் களமாக மட்டுமே அணுகும் இந்த அரசாங்கத்தின் பார்வை நிச்சயம் வரலாற்றுத் தவறென்று கூற முடியும்.
(நிலம் விரியும்...)
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
*************
நிலத்தை ஒரு சரக்காகக் கருதித்தான் சுரண்டுகிறோம். அது நம் சமூகத்தின் ஓர் அங்கம் என்பதை உணர்ந்தால் அன்புடனும் மரியாதையுடனும் அதை அணுகுவோம். - ஆல்டோ லியோபால்ட்
வெற்றுப் பெருமிதம் பேசப் பொருள் தேடி அலையும் காலம் இது. அறிவியல் பெருமைக் காகப் புராணங்களைப் புரட்டும் காலம். “பண்டைய காலத்திலேயே நமக்கு மரபணுவியல் தெரியும்; பிளாஸ்டிக் சர்ஜரியெல்லாம் நம் முன்னோர்களுக்கு அப்போதே அத்துப்படி” என்று அதற்கான உதாரணங்களாக கர்ணனின் பிறப்பையும் பிள்ளையாரின் தலையையும் காரணமாகக் காட்டும் ஒரு பிரதமரின் காலம். இந்திய அறிவியல் மாநாட்டில், ‘புராதன விமானத் தொழில்நுட்பம்’ என்ற பெயரில், ‘வ்யாமானிக சாஸ்திரம்’ பற்றியும் கிரகங்களுக்கு இடையே பறக்க விடப்பட்ட விமானங்களை நாம் அப்போதே வைத்திருந்தோம் என்றும் ‘அறிவியல் கட்டுரை’ சமர்ப்பிக்கும் கேப்டன் போடாஸ்களின் காலம். ஆனால், இந்தியாவின் உண்மையான அறிவியல் பெருமைகளில் ஒன்று இங்கு பொருட்படுத்தப்படுவது இல்லை. அது, நம்முடைய ‘உறங்கும் ராட்சதன்’ பெருமை.
விவசாயம் எனும் விஞ்ஞானம்
நிலத்தில் களம் இறங்கும் ஒரு விவசாயி குறைந்தது 72 தொழில்நுட்பங்களை அவனுக்குத் தெரியாமலேயே தெரிந்துவைத்திருக்கிறான் என்று சொல்வார் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். விவசாயம் என்பது வெறும் தொழில் மட்டும் அல்ல; பெரும் விஞ்ஞானம். பல ஆயிரம் ஆண்டுகள் அனுபவத்தில் நம்முடைய முன்னோர்கள் அடைந்த வளர்ச்சியின் நீட்சியையே இன்றைக்கு நாம் அனுபவிக்கிறோம். சிந்து சமவெளி நாகரிகம், வெண்கல யுகம், ரிக் வேதம் என்று பல நூற்றாண்டுகளுக்கு முந்திப் பாய்ந்து செல்லக் கூடியது இந்திய விவசாயத்தின் வரலாறு. வெறும் புராணமோ, புரட்டோ அல்ல; சான்றுகள் இருக்கின்றன. 2500 வருடங் களுக்கு முந்தையதாகக் கருதப்படும் சம்ஸ்கிருத ஸ்லோகம் ஒன்று நிலத்தை 12 வகைகளாகப் பிரிக்கிறது. நமக்குத்தான் உறைக்கவில்லை. உலகம் உணர்ந்திருக்கிறது.
பிரிட்டன் எழுத்தாளரும் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளரும் ‘இந்த நிலம் நமக்கானது’ இயக்கத்தின் நிறுவனருமான ஜார்ஜ் மன்பியாட், ‘தி கார்டியன்’ பத்திரிகைக்குச் சமீபத்தில் எழுதிய கட்டுரையில் கி.மு.1500-ல் எழுதப்பட்ட ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகத்தைச் சுட்டிக்காட்டுகிறார்: ‘கைப்பிடியளவு உள்ள இந்த மண்ணில்தான் நம் உயிர்வாழ்க்கை அடங்கியிருக்கிறது. இதைக் கவனமாகக் காப்பாற்றிக்கொள்ளுங்கள், நம்முடைய உணவை, எரிபொருளை, நம்மைச் சூழ்ந்து நின்று இது பாதுகாக்கும்; இதைப் பராமரிக்காமல் உதாசீனப்படுத்தினால் அழிந்துவிடும் - அத்துடன் மனிதகுலமும்தான்.”
ஒரு விவசாயி தன்னுடைய பிள்ளைகளுக்கு இந்தத் தொழில் வேண்டாம் என்று நினைத்து விவசாயத்தைக் கைவிடும்போது, ஒரு ஆள் மட்டும் விவசாயத்தை விட்டுப் போவதில்லை. ஆயிரமாண்டு நீட்சி, பல தலைமுறைகள் கையளித்த நீட்சி அத்தோடு அறுபட்டுப்போகிறது. ஏன் இந்திய விவசாயத்தின் நுட்பங்களும் அதன் நீண்ட வரலாற்றுப் பெருமையும் நம்முடைய ஆட்சியாளர்களுக்கு உறைக்கவில்லை?
தூங்கும் ராட்சதன்
பிரதமர் நரேந்திர மோடி தேர்தலுக்கு முன் வளர்ச்சியைப் பற்றிப் பேசியபோதெல்லாம் விவசாயத்தைப் பற்றியும் நிறையப் பேசினார். ஆனால், இந்திய அரசியல்வாதிகள் விவசாயத்தைப் பற்றி எதாவது பேசினால், அது தேர்தல் மேடைகளுடன் அவர்களுக்கே மறந்துபோவது நம்முடைய விவசாயிகளின் சாபக்கேடுகளில் ஒன்று. இன்றைக்கு அவருடைய கட்சி, விவசாயிகளை எப்படி அணுகுகிறது என்பதற்கான உதாரணங்களில் ஒன்று இது. மகாராஷ்டிரத்தில், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையாக அரசு ரூ. 4,000 கோடியை ஒதுக்கியது. இப்படி ஒதுக்கப்பட்ட நிதி 26 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. காரணம் என்ன தெரியுமா? வங்கிக் கணக்கு இல்லை என்பது! இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மராத்வாடா, விதர்பா பகுதிகளிலிருந்தே இப்படி விநியோகிக்கப்படாத பணம் பெரும் அளவில் அரசுக்குத் திரும்பியிருக்கிறது. நம்முடைய அக்கறைகள், கரிசனங்களின் உண்மையான முகம் எப்படியெல்லாம் இருக்கிறது, பாருங்கள்!
ஆனால், இப்படியான நிவாரணங்கள், உதவிகள் அல்ல; காலங்காலமாகப் புறக்கணிக்கப்படும் தங்களது முக்கியமான 3 கோரிக்கைகள் கவனிக்கப்பட்டாலே போதும்; ‘தூங்கும் ராட்சதன்’ தட்டியெழுப்பப்படுவதுடன் இந்தியாவின் வளர்ச்சியும் விஸ்வரூபம் எடுக்கும் என்கிறார்கள் நம்முடைய விவசாயிகள். அவர்கள் குறிப்பிடும் 3 விஷயங்கள் அவர்களுடைய கோரிக்கைகள் மட்டும் அல்ல; இந்திய வேளாண்மை எதிர்கொள்ளும் பெரிய, முக்கியமான சவால்களும்கூட.
அந்த 3 சவால்கள்
1. இந்திய விளைநிலங்களில் 36% மட்டுமே சாகுபடிக்கான நீர் ஆதாரத்தைப் பெற்றிருக்கின்றன. இந்திய விவசாயத்தைக் காக்க இந்தப் பரப்பளவு உயர்த்தப்படுவது மிக அவசியம். ஆனால், தவறான கொள்கைகள் - அணுகுமுறைகளின் விளைவாக, உள்ள நீராதாரங்களையும் நாசமாக்குவதையே நம்முடைய அரசு தொடர்ந்து செய்துவருகிறது. தவிர, அதிகமாக நீர் விரயம் செய்யும் தொழிலாகவும் விவசாயத்தை மாற்றிவிட்டது. நம்மிடம் மிச்சமுள்ள நீராதாரத்தையேனும் பாதுகாத்துக்கொள்ள புதிய தேசிய நீர்க் கொள்கையை அரசு உருவாக்க வேண்டும். அதன் அடிப்படையில், எல்லா நதிகளையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். நீர்ப் பாதுகாப்பு, பகிர்வு இரண்டுமே மத்தியப் பாதுகாப்புப் படை வசம் ஒப்படைக்கப்பட வேண்டும். சூழலுக்கு உகந்த வகையில், புது ஆறுகள் (பெரும் கால்வாய்கள்) உருவாக்கப்பட வேண்டும். ஏரி - குளம் - குட்டைகள் மீட்டுருவாக்கப்படுவதுடன் விவசாயிகள் பங்கேற்புடன் நாடு முழுவதும் மழை நீர் சேகரிப்பு பாசனக் குட்டைகள் அமைக்கப்பட வேண்டும். நெல், கோதுமை, கரும்பு என அரசு இப்போது குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்தில் நேரடியாக / மறைமுகமாகப் பங்கேற்கும் பயிர்கள் மூன்றும் அதீதமான நீரைக் கோருபவை. அதிகமான விவசாயிகள் நெல் / கோதுமை / கரும்புச் சாகுபடியைத் தேர்ந்தெடுக்க அரசின் இந்த ஆதரவும் ஒரு காரணம். இதற்கு இணையாக குறைவான நீர்ப் பயன்பாட்டைக் கோரும் / மானாவாரிப் பயிர்களுக்கான தேவையை, சந்தையை அரசு உருவாக்க வேண்டும்.
2. ஒவ்வொரு ஆண்டும் இந்திய விவசாயிகளை நஷ்டத்தில் தள்ளுவது வெள்ளமும் வறட்சியும் மட்டும் அல்ல; தொழில்நுட்பமும்தான். ஒரு பஞ்சாப் விவசாயி 3.8 டன் விளைச்சல் எடுத்தால், பிஹார் விவசாயி கிட்டத்தட்ட அதில் பாதி அளவு 2.2 டன் மட்டுமே விளைச்சல் எடுக்கிறார். கரும்பு விளைச்சலில், கர்நாடக விவசாயி 79.5 டன் எடுத்தால், பஞ்சாப் விவசாயி 65.3 டன் மட்டுமே எடுக்கிறார். இங்கு என்ன நடக்கிறது என்று அந்த விவசாயிக்கும் தெரியாது, அங்கு என்ன நடக்கிறது என்று இந்த விவசாயிக்கும் தெரியாது. நம்மூரில் ஆலங்குடியைச் சேர்ந்த விவசாயி பெருமாள் 3.8 டன் விளைச்சல் எடுத்திருக்கிறார். தமிழ்நாட்டில் எத்தனை விவசாயிகளுக்கு இந்தத் தகவலும் அவர் கையாண்ட உத்தியும் தெரியும்?
மேற்கு வங்கத்தில் நல்ல விளைச்சலைக் கண்டும், விலை வீழ்ச்சியால் தலை மேல் கை வைத்து உட்கார்ந்திருக் கிறார்கள் உருளைக்கிழங்கு விவசாயிகள். காரணம், உணவு தானியங்களைப் பதம் கெடாமல் பாதுகாத்து வைக்கும் நவீனக் கிடங்குகள் போதிய அளவில் அங்கு இல்லாதது. அறுவடைக்குப் பின் ஒவ்வோர் ஆண்டும் இந்தியா வீணடிக்கும் தானியங்களின் அளவு மட்டும் 2 கோடி டன். நூற்றுக் கணக்கான பெரிய அளவிலான உணவுப் பூங்காக்களும் ஆயிரக் கணக்கான நவீனக் கிடங்குகளும் வேண்டும்.
இரு சின்ன உதாரணங்கள் இவை. தேவையையும் சூழலையும் முன்கூட்டித் திட்டமிட்டு உற்பத்தியில் விவசாயி களுக்கு அரசு வழிகாட்ட வேண்டும். மேலைநாடுகளின் சந்தைத் தேவையை அவர்கள் மேல் திணிப்பதை மட்டுமே ‘தொழில்நுட்ப ஆலோசனை’ என்று கருதாமல், உண்மையான தொழில்நுட்ப ஆலோசனையை விவசாயிகளுக்கு அளிக்க வேண்டும்.
3. ரேஷன் முறையிலான பங்கேற்பைத் தாண்டி, உற்பத்தி - கொள்முதல் - சந்தை - விநியோகத்தில், ஆக்கபூர்வமான சந்தைப்படுத்தலில் அரசின் பங்கேற்பு தேவை. உற்பத்தியில் ஈடுபடுவோருக்கு குறைவான வட்டியில் கடன் வழங்கப்பட வேண்டும். நாட்டின் மிகப் பெரிய தொழில், தொழில்மயமாக அணுகப்பட வேண்டும். விவசாயத்துக்கு என்று தனி நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்யப்பட வேண்டும்.
இவை எதுவுமே சாதிக்க முடியாத காரியங்கள் கிடையாது, விவசாயிகள் மீது அக்கறை கொண்ட ஒரு அரசுக்கு. அக்கறை என்றால், பெயரளவிலான அக்கறை அல்ல. நாடு முழுவதற்கும் வெண்மைப் புரட்சியைக் கொண்டுசெல்வதற்காக, குஜராத் விவசாயிகளின் வீட்டில் இரவில் தங்கி வெற்றி சூட்சமத்தைக் கற்றுக்கொண்டாரே பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி... அப்படியொரு அக்கறை!
(நிலம் விரியும்...)
- சமஸ்

தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
***************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக