திங்கள், 5 மே, 2014

பேட்டி : விஜயகுமார் ஐ.பி.எஸ்

ஆனால், இவ்வளவு கண்காணிப்பு அமைப்புகள் இருக்கும் சூழலிலும் இன்னமும் இந்தியக் காவல் துறை காலனியாதிக்க அணுகுமுறையோடுதானே மக்களை அணுகுகிறது?
நம்முடைய அடிப்படையிலேயே உள்ள பிரச்சினை இது. பிரிட்டிஷார் கொடுத்த கட்டமைப்பைக் கொண்டுதான் நம்முடைய எல்லாத் துறைகளும் கட்டப்பட்டன. ஏனைய துறைகளை எல்லாம் பிரிட்டனில் எப்படி அமைத்தார்களோ அதேபோல அமைத்த பிரிட்டிஷார், காவல் துறையை மட்டும் லண்டனில் ஒரு மாதிரியும் டெல்லியில் ஒரு மாதிரியும்தான் அமைத்தார்கள். சுதந்திரத்தின்போதே நாம் மாற்றம் கொண்டுவந்திருக்க வேண்டும். அது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நடக்கிறது. அப்புறம் நம்முடைய ஊடகங்களும் பொது அமைப்புகளும்கூட ஒரு காரணம் என்று சொல்வேன். சின்னச் சின்ன விஷயங்களை எல்லாம் பெரிதாக்கி, காவல் துறையின் பிம்பத்தை மோசமாக்கி விட்டார்கள். இவ்வளவு பரந்து விரிந்த நாட்டில், மொத்த மக்கள்தொகைக்கு இருக்கும் காவல் துறையினர் எத்தனை பேர், எல்லா இடங்களிலும் அவர்கள் இருப்பது சாத்தியம்தானா என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டு, ஒரு சங்கிலிப் பறிப்பைக்கூட ஒட்டுமொத்தக் காவல் துறையின் தோல்வியாக விமர்சிக்கும் சூழல் இங்கே நிலவுகிறது. ஒரு குற்றம் என்பது அது சம்பந்தப்பட்ட சமூகத்தின் பல்வேறு கட்டுமானங்களோடும் சம்பந்தப்பட்டது. அங்கே சரியில்லை என்றால், இங்கேயும் அது எதிரொலிக்கும். ஆனால், ஒட்டுமொத்தத்தையும் சேர்த்துச் சிந்திப்பதில்லை.
நம்முடைய காவல் துறையின் பெரிய பலம் என்ன? பெரிய பலவீனம் என்ன? அதன் மிகப் பெரிய தேவை என்ன?
ஐந்து லட்சம் பட்டதாரிகளிலிருந்து 150 பேர் காவல் துறை அதிகாரிகளாகத் தேர்ந்தெடுக்கப்படும் முறை உலகில் வேறு எங்கும் இல்லை. அவ்வளவு திறனும் அறிவும் நம்மிடம் இருக்கிறது. இது பலம். இந்தப் பலத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியாதது பலவீனம். தேவை எதுவென்றால், சீர்திருத்தம்.
எதைச் சீர்திருத்தம் என்று குறிப்பிடுகிறீர்கள்?
நம்முடைய காவல் துறை 19, 20, 21 இந்த மூன்று நூற்றாண்டு களுக்கும் இடையில் கிடந்து அல்லாடிக்கொண்டிருக்கிறது. ஒருபுறம் பெண்களை உயிரோடு கொளுத்தும் போன நூற்றாண்டுக் குற்றவாளிகளை எதிர்கொள்கிறோம்; இன்னொருபுறம், அடுத்த நூற்றாண்டின் சைபர் குற்றங்களை நிகழ்த்தும் குற்றவாளிகளையும் எதிர்கொள்கிறோம். ஆனால், அதற்கேற்ற நவீனக் கட்டமைப்பை நாம் பெற்றிருக்கிறோமா என்றால், இல்லை என்றே சொல்வேன். 1. தேர்தல் ஆணையம்போல, ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி இரண்டுக்கும் அப்பாற்பட்டுச் செயல்படும் சுதந்திரம் இருக்க வேண்டும். 2. ஆட்களை அதிகரிக்க வேண்டும். 3. காலத்துக்கேற்ப நவீனமயமாக்க வேண்டும். 4. காவல் துறையுடன் ஏனைய துறைகளுடனான செயல்பாடுகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்... இப்படி நிறைய வேண்டும்கள் இருக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக