வியாழன், 8 மே, 2014

அண்ணா பல்கலைக்கழகம்

தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழகம் உள்பட 60 மையங்களில், பொறியியல் பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் விற்பனை தொடங்கி உள்ளது. கடந்த ஆண்டு 2,35,211 விண்ணப்பங்கள் விற்கப்பட்டன. ஆனால், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்தவர்கள் 1,90,850 பேர். அதாவது சுமார் 45,000 பேர் விண்ணப்பங்களை வாங்கியதுடன் சரி. பூர்த்தி செய்து சமர்ப்பித்தவர்களில் 1,84,930 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. கலந்தாய்வு மூலம் 1,26,485 பேருக்கு கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. இவ்வளவுக்கு பின்னர் பொறியியல் கல்லூரிகளில் 79,008 காலியிடங்கள் இருந்தன. இந்த ஆண்டில் பிளஸ் 2 பொது தேர்வை சுமார் 8.5 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர்.

வழக்கம்போல் இவர்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பங்களை வாங்குவார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால், எல்லோருமே விண்ணப்பங்களை சமர்ப்பிப்பார்களா என்பது சந்தேகமே. கல்வியை காசாக்கக் கூடாது என்று தமிழக அரசு கூறுகிறது. ஆனால், அண்ணா பல்கலைக்கழகம் விண்ணப்பத்தில் இருந்தே பொறியியல் கல்லூரி படிப்பை காசாக்குகிறது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களிடமே ரூ. 200 வசூலிக்கிறது. மற்ற பிரிவு மாணவர்களுக்கு ரூ. 500.
இணையதளத்தில் எவ்வளவோ வசதிகள் வந்துவிட்ட நிலையில், சரியான வழிகாட்டுதல்களுடன் விண்ணப்பத்தை இலவசமாக இணையத்தில் மட்டுமே பூர்த்தி செய்ய வேண்டும் என்று கூறினால், மாணவர்களுக்கு அதிகபட்சம் ரூ. 50ல் செலவு முடிந்துவிடும். இதுவும் வீட்டிலேயே இணையதளத்தை வைத்திருப்பவர்களுக்கு இவ்வளவு செலவு கூட வராது. இதனால் லட்சக்கணக்கான காகிதங்கள் வீணாக்கப்படுவதை தடுத்து சுற்றுச்சூழல் பாதிப்பையும் குறைக்க முடியும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக