‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஓராண்டு நிறைவு கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக தமிழகத்தின் மாநகரங்களில் நடத்தப்பட்டுவரும் வாசகர் திருவிழா கோவை, புதுச்சேரி, திருச்சியைத் தொடர்ந்து தஞ்சாவூர் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.
விழாவில் விவசாயிகள் சங்கத் தலைவர் எஸ்.ரங்கநாதன் பேசியபோது, “கல்லணை கட்டப்படாவிட்டால் டெல்டா விவசாயம் இருந்திருக்காது. இது மனிதனால் உருவாக்கப்பட்ட பாசனப் பகுதியாகும். கல்லணை குறித்து வியந்து வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பெண் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் (பிஹெச்.டி) பெற்றுள்ளார். ஆனால், இங்குள்ளவர்கள் அதுகுறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவில்லை.
டெல்டாவில் 2,000 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் நடந்து வருகிறது. தொடர்ந்து நெல் மட்டுமே விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. மாற்றுப்பயிர் சாகுபடி செய்யுமாறு கூறுகின்றனர். அது தவறு.
கோட்டையை பிடித்தான், கோட்டை விட்டான் என்ற வார்த்தைகள் தமிழில் உள்ளன. நெல் கோட்டை என்ற வார்த்தை விவசாயிகள் மத்தியில் பயன்படுத்தப்படும் ஒன்று. நெல் நட்டோம் என்ற வார்த்தை நட்டம் என்று பொருள் தருவதாய் உள்ளது. இதுபோல எதிர்மறை அர்த்தம் தரும் சொற்களுக்கு பொருத்தமான சொற்கள் கண்டறியப்படவேண்டும். சோழநாடு சோறுடைத்து என்பதை சோறு படைத்து எனக் கூறலாம்.
டெல்டாவில் 12 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் 4 லட்சம் ஏக்கர் கோயில் மானியமாகும். இதுகுறித்து ‘தி இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது” என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக