இந்திய ஆங்கில இலக்கியத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த ஆர்.கே.நாராயணின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...
• ராசிபுரம் கிருஷ்ணசாமி நாராயண், சென்னை புரசைவாக்கத்தில் பிறந்தவர். அப்பா பள்ளி ஆசிரியர். அவர் வேலை பார்த்து வந்த பள்ளியிலே நாராயண் படித்தார். இளம் பிராயத்தில் பெரும்பாலும் பாட்டியிடமே வளர்ந்தார்.
• கல்லூரி இளங்கலை நுழைவுத் தேர்வில் இருமுறை தோல்வி. அதில் ஒரு முறை ஆங்கிலத்தில் என்பதுதான் ஆச்சரியம். ஆசிரியர் வேலை சலித்துப்போக அப்போது பேனாவுடன் அமர்ந்தவரிடம் உருவானதுதான் ‘மால்குடி டேஸ்’.
• கோவையில் சகோதரியின் வீட்டிலிருந்தபோது கிணற்றில் தண்ணீர் எடுக்க வந்த ராஜம் மீது காதல் கொண்டார். முதலில் அவரது தந்தையை நட்பு பிடித்தவர், பின்பு ராஜத்தை திருமணம் செய்து கொண்டார்.
• ‘தி இந்து’விலும் ஆனந்த விகடனில் இருந்து வெளிவந்த ‘The merry’ இதழிலும் எழுதி வந்தார். அவரின் முதல் கதை வேர்க்கடலை உண்ண பாக்கெட் மணி இல்லாமல் அலையும் சிறுவனைப் பற்றியது. அக்கதைக்கு அவர் பெற்ற சன்மானம் 10 ரூபாய்.
• வருமானம் பெரிதாக இல்லாமல் இருந்த சூழலில் அவரின் ‘ஸ்வாமி அண்ட் ஃப்ரண்ட்ஸ்’ நாவல் ஆக்ஸ்போர்டில் படித்துக்கொண்டிருந்த அவரின் நண்பன் கிட்டு பூர்ணாவின் மூலம் பிரபல எழுத்தாளர் கிரஹாம் க்ரீன் வசம் போனது. அவர் அதை ஹாமிஷ் ஹாமில்டன் பதிப்பகத்தில் வெளியிட செய்தார். எளிமையான ஆங்கில நடை, சமூகத்தின் மீதான இயல்பான பார்வை இவையே அவரது எழுத்து நடை. “ஆர்.கே-வின் மால்குடி நகரில் எந்த நிகழ்வும் அர்த்தமில்லாமல் நிகழாது. அங்கே எந்தத் துயரத்துக்கும் விடிவு இல்லாமல் போகாது” என்பார் அமிதவ் கோஷ்.
• வீணை வாசிப்பில் ஆர்வம் கொண்டவர். மகாபாரதம், ராமாயணம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் சுருக்கமாக எழுதியிருக்கிறார். அவரின் அமெரிக்க அனுபவங்களை ‘My Dateless Diary' என்றும், நினைவலைகளை ‘My Days' என்றும் பதிவு செய்துள்ளார்.
• ‘மால்குடி டேஸ்’ கதைகள் ஷங்கர் நாக் என்பவரால் தொலைக்காட்சி தொடர் ஆக்கப்பட்டது. தேவ் ஆனந்தின் நவ்கேதன் தயாரிப்பு நிறுவனம் ‘தி கைட்’ நாவலை ஹிந்தியில் படமாக எடுத்தது.
• அவரை ஆங்கில அறிவுலகுக்கு அறிமுகப்படுத்திய கிரஹாம் க்ரீன் இப்படி அவரின் எழுத்தைப்பற்றிச் சொன்னார்: “அவரின் படைப்புகள் அவரின் சொந்த பிராந்திய அனுபவத்தில் இருந்து வருபவை. அதனால் அவர் ஆங்கிலத்தில் எழுதினாலும் அது அமைதியான,தெளிவாக அமைந்தது. அந்த ஆங்கில நடை தமிழோடு மிகவும் நெருக்கமானது!”
• கார்ட்டூனிஸ்ட் லக்ஷ்மண் இவரது இளைய சகோதரர். இருவருக்கும் 18 வருடங்கள் இடைவெளி. ராஜ்ய சபா எம்.பி.யாகவும் இருந்திருக்கும் நாராயண் எல்லோரையும் சமமாக நடத்தும் பண்பு கொண்டவர். அவரது எழுத்துப் பயணமும் அரை நூற்றாண்டைக் கடந்தது!
***********************
***********************
ஆர்.கே. நாராயணனை நினைவுகூர்ந்தது (‘தி இந்து’ அக்டோபர்-9) மனநிறைவைத் தந்தது. அவரது கதைகள் யதார்த்தமாகவும் எளிமையாவும் இருக்கும். மொழிநடை அலங்காரமில்லாது படிப்பவரை ஈர்க்கும் சக்திவாய்ந்தது. அவர் ராஜ்யசபாவில் ஆற்றிய உரை பற்றிக் குறிப்பிட்டிருக்கலாம்.
அவ்வுரையில் பிஞ்சுக் குழந்தைகள் மிகவும் சுமையான புத்தக மூட்டையைப் பள்ளிக்குச் சுமந்து செல்லும் நிலையினின்று விடுவிக்கப்பட வேண்டும் என்று உணர்ச்சிகரமாக வேண்டுகோள் விடுத்தார். அதன் விளைவாக, பேரா. யஷ்பால் தலைமையில் அமைக்கப்பட்ட குழு ‘சுமையின்றிக் கற்றல்' என்ற தனது அறிக்கையில் குழந்தைகளின் மீது திணிக்கப்படும் பல்வேறு சுமைகளையும் அடையாளங்காட்டி, பள்ளிய முறைகளில் மாற்றங்களைக் கொண்டுவர சீரிய பரிந்துரைகளை அளித்தது. 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை. மேலும் கூடுதலாகவே குழந்தைகள் சுமக்கின்றனர்.
அவருடைய ஒரு கதையை தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் தனது பாடநூல் ஒன்றில் சேர்த்தது. தன்னிடம் அனுமதி பெறவில்லை என்று அவர் எழுதிய கடிதத்துக்கு, பாடநூல் நிறுவனம் ‘ஆண்டுக்கு 10 லட்சம் வீதம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் உங்களை அரைக் கோடி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு நீங்கள்தான் நன்றி தெரிவிக்க வேண்டும்' என்ற தோரணையில் பதிலெழுதினர். உடனே அவர் வழக்கு தொடர்ந்தார். பாடநூல் நிறுவனத்தார் அவரைச் சந்தித்து சமாதானப்படுத்தும்படி என்னைக் கேட்டுக்கொண்டனர். கோவையில் மகளுடன் தங்கியிருந்த அவரைச் சந்தித்தபோது தன் சீற்றத்தை வெளிப்படுத்தினார். ஒரு கதாசிரியனிடம் அனுமதி பெற வேண்டும் என்று புரிந்துகொண்டால் போதும் என்று சொல்லி, வழக்கில் ஆர்வம் இல்லை என்று தெரிவித்தார்.
********************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக