ஞாயிறு, 5 அக்டோபர், 2014

காந்தி

நாடே இப்போது குடிநோயாளியாகிவிட்டது. மதுவிலக்கால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்கிற வாதம் சரியல்ல. மக்களுக்குப் பழக்கமாகிவிட்டது என்பதற்காக தீய செயல்களைச் செய்ய நாம் அனுமதிப்பதில்லை. திருடர்கள் தொடர்ந்து திருட நாம் அனுமதிப்பதில்லை. மது வருவாயிலிருந்து கிடைக்கும் பணத்தில்தான் இந்நாட்டுக் குழந்தைகள் படிக்கிறார்கள் என்பது இந்த நாட்டுக்கே அவமானம்.
அரசுக்கு வருமானம் போய்விடுமே என்று அரசு கவலைப்பட்டுத் தயக்கம் காட்டினால், இந்த நாட்டில் மதுவிலக்கு என்பது எப்போதுமே சாத்தியம் இல்லாமல் போய்விடும். குடி என்பது பழக்கமல்ல, நோய். அதைக் குடிநோயாகத்தான் பார்க்க வேண்டும். புரட்சி என்றால் ஆயுதமேந்தித்தான் செய்ய வேண்டும் என்பதல்ல. அறிவில், சிந்தனையில் புரட்சி ஏற்பட வேண்டும். உடலையும் மனதையும் பாதிக்கும் குடிக்கு எதிராக மக்களிடையே புரட்சி எழ வேண்டும்.”
கிட்டத்தட்ட 75 ஆண்டுகளுக்கு முன் காந்தி எழுதியவற்றின் சாரத்தைத்தான் மேலே பார்த்தீர்கள். சூழலில் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டுமென்றால், ஒட்டு மொத்தச் சமூகமும் கைகோக்க வேண்டும். அந்த மாற்றத்தை நோக்கி நீட்டப்பட்ட கைகளுள் ஒன்றுதான் இந்தத் தொடர்.
தமிழகத்துக்கு இது இருண்ட காலம்! மிகைப்படுத்தவில்லை. சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு, பூட்டியிருக்கும் கடைக்கு முன்பாக யாரும் காத்திருந்து குடித்ததில்லை என்பதையும் இன்று அதிகாலையிலேயே அல்லாடுகிறார்களே என்பதையும் யோசித்துப்பாருங்கள்!
தமிழக மக்கள்தொகையான ஏழு கோடி குடிநோயால் பாதிக்கப்பட்ட வர்கள் சுமார் ஒரு கோடிப் பேர் என்கிறது புள்ளிவிவரம். ஆனால், குடிநோயாளிகள் அந்த ஒரு கோடிப் பேர் மட்டும்தானா? குடிநோய் என்பது குடும்ப நோய், சமூக நோய். குடிநோயாளிகளின் எண்ணிக்கையைக் குடிநோயாளிகளை மட்டும் கொண்டு கணக்கிடக் கூடாது. குடிநோயாளிகளால் பாதிக்கப்படும் நபர்களையும் சேர்த்தே கணக்கிட வேண்டும். ஒரு நபர் குடிப்பதால், அவர் மட்டும் பாதிக்கப்படுவது இல்லை; அவரது பெற்றோர், மனைவி, குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர் - மனரீதியாக, உடல்ரீதியாக, பொருளாதாரரீதியாக, சமூகரீதியாக.
என்ன நடக்கிறது இங்கே?
யார் காரணம் இதற்கெல்லாம்?
மதுவின் பிடியிலிருந்து நம் தமிழகத்தை மீட்க என்ன செய்யப்போகிறோம் நாம்?
இந்தக் கேள்விகளுக்கு விடைகளைத் தேடும் பயணம் இது!
*****************
நம் சமூகத்தில் மட்டுமல்ல, இந்திய மொழிகள் அனைத்திலும் (ஆங்கிலம் உட்பட) காந்தியும் காந்தியமும் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் குறிப்பிடத்தக்கது. நம் சமூகத்தின்மீது பெய்த அன்பின் பெருமழை என்றே சொல்ல வேண்டும் காந்தியை. அந்த மழையின் ஈரம் சமூகத்தின் ஆழத்தில் இன்னும் தங்கியிருப்பதைப் போலவே மொழியிலும் ஒட்டிக்கொண்டிருக்கிறது. நீங்காத ஈரம் அது!
மொழியில் காந்தி ஏற்படுத்திய தாக்கத்தை ‘காந்தி’ என்ற சொல்லிலிருந்தே ஆரம்பிக்கலாம். எத்தனையோ பெயர்கள் இருந்தாலும் வெகு சில பெயர் களையே சொற்கள்போல மக்கள் பாவிக்கிறார்கள். உண்மை பேசுபவரை ‘நீ பெரிய அரிச்சந்திரன்’, கொடை கொடுப்பவரை ‘கொடுக்குறதிலே கர்ணன்’ என்றெல்லாம் சொல்வதுண்டு. இவை பெரும்பாலும் எரிச்சலான தொனியில் சொல்லப்படுபவை. உண்மைக்கு அரிச்சந்திரன்தான் என்றிருந்த நிலையை ‘காந்தி’ என்ற பெருநிகழ்வு பெருமளவில் மாற்றியிருப்பது அதிசயமே! ‘ஆமாம், வந்துட்டாரு காந்தி’ என்று பலரும் கேலி செய்வதுண்டு.
அடுத்தது, ‘மகாத்மா’ என்ற சொல். ‘மகாத்மா’ என்ற சொல் (தமிழகத்தைப் பொறுத்தவரை) பெரும்பாலும் படித்தவர்களால்தான் பயன்படுத்தப்பட்டது. சாதாரண மக்கள் காந்தி மகான், காந்தி முனிவர் என்றெல்லாம் சொல்லியிருக் கிறார்கள். படித்தவர்கள் சில சமயம் வாஞ்சையாக ‘கிழவர்’ என்று குறிப்பிடுவதும் உண்டு. ஆனால், எல்லாவற்றையும்விட வாஞ்சையானது, அலாதியானது ‘காந்தி தாத்தா’தான். ஏனெனில், மகாத்மாக்கள், மகான்களைவிட நாம் எல்லோரும் அதிகம் நெருங்குவது நம் தாத்தாக்களிடம்தானே!
காந்திக் கணக்கை விட்டுவிட முடியுமா? கால முறையில் இந்தச் சொல்லுக்குப் பல்வேறு அர்த்தங்கள் உண்டு. தனது ஆசிரமத்துக்கு வரும் நிதிகளுக்கெல்லாம் காந்தி துல்லியமாகக் கணக்கு வைத்திருப்பார். எனவே, துல்லியமாகக் கணக்கு வைத்திருப்பதையும் முன்பு ‘காந்திக் கணக்கு’ என்ற சொல் குறித்தது. அந்தக் காலத்தில், காந்தியப் போராட்டங்களில் கலந்து கொள்ளப்போகும் தொண்டர்கள் உணவு விடுதிகளில் சாப்பிட்டுவிட்டு, ‘காந்திக் கணக்கு’ என்று சொல்லிவிட்டுச் செல்வார்கள். தேசத்துக்காகப் போராடுபவர்களுக்கு ‘காந்திக் கணக்கு’ ஒரு சலுகையாகவே அப்போது பார்க்கப்பட்டது.
தற்போதும், கட்டணங்களையோ விலையையோ கடனையோ கொடுக்காமல் தப்பிப்பவர்கள் ‘காந்திக் கணக்கு’ என்று சொல்லிவிட்டுச் செல்வதுண்டு. முன்பு, சேவைக்கான சலுகையாக இருந்தது, இன்று ஏமாற்றுபவர்களின் வாசகமாக ஆகியிருக்கிறது. நம் கடன்கள், தவறு எல்லா வற்றையும் நம் தாத்தாவிடம்தானே போய்க் கொட்டுகிறோம் என்று காந்தியிடம் அன்பாக நாம் எடுத்துக்கொள்ளும் சலுகை போன்றும் இது அமைகிறது. ஒரு விதத்தில், ‘எல்லாவற்றையும் அந்தக் கடவுள் பார்த்துக்கொள்வார்’ என்று சொல்வோமல்லவா, அதேபோல் காந்திக்கும் ஓர் இடத்தை நாம் கொடுத் திருப்பதன் அடையாளமாகவும் கொள்ளலாம்.
காந்தி, காந்தியம் தொடர்பான சொற்கள் மூன்று விதத்தில் இருக்கின்றன. முதல் வகை, காந்தியால் உருவாக்கப்பட்டவை (எ-டு) சத்தியாக்கிரகம். இரண்டாவது வகை, ஏற்கெனவே இருந்த சொற்களுக்கு காந்தி கொடுத்த பொருள் (எ-டு) சத்தியம், அகிம்சை. மூன்றாவது, காந்தியையும் காந்தியத்தையும் ஒட்டி பிறர் உருவாக்கும் சொற்கள் (எ-டு) மகாத்மா, காந்தி குல்லாய்.
காந்தி, காந்தியம் தொடர்பான முக்கியமான சொற்களுள் சில:
அகிம்சை, ஆலயப் பிரவேசம், ஒத்துழையாமை, கதர், காந்திகிராமம், காந்தி குல்லாய், காதி, கிராம ராஜ்யம், கைத்தறி, சத்தியசோதனை, சத்தியாக்கிரகம், சத்தியம், பிரம்மச்சரியம், பஞ்சாயத்ராஜ், ராட்டை.
- ஆசை, 
தொடர்புக்கு: asaithambi@thehindutamil.co.in
*************************
உண்மைக்கே உரிய அபாரமான வசீகரத்தினால் கோடிக் கணக்கானவர்களை ஈர்த்தவர் காந்தி.
நீங்கள் ஏன் மகாத்மா என்று அழைக்கப்படுகிறீர்கள் என்ற கேள்விக்கு காந்தி சொன்னார்: “மகாத்மா என்ற பட்டம் என்னைப் பலமுறை கடுமையான மனவலிக்குத் தள்ளியிருக்கிறது. எனக்கு இந்த உலகத்திடம் சொல்ல புதியதாக ஏதும் இல்லை. உண்மையும் அகிம்சையும் புராதனமான மலைகளைப் போன்றவை. என்னால் முடிந்தவரை நான் அவ்விரண்டையும் என் சொந்த வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த முயன்றேன் என்று மட்டுமே சொல்ல முடியும்.
ஆனால், நான் அந்தச் சோதனைகள் மூலம் அடைந்த அனுபவங்களை விளக்குவதற்கு எப்போதுமே தயாராக இருப்பேன். அதன் மூலம் நான் அரசியலில் செயல்படுவதற்கான வலிமையை அடைந்தேன். ஏராளமான மனிதர்கள் என்னை மதிப்பதாகச் சொல்கிறார்கள். ஏனென்றால், நான் வேறு எவரையும்விட அவர்களைப் புரிந்துகொண்டிருக்கிறேன்.”
ஒரு தேசமே அவரது காலில் விழுந்து கிடந்தது. அவர் காலில் தொட்டு வணங்கியவர்களால் அவர் பாதங்கள் புண்ணாக ஆயின. அவரைக் கேட்டுப் புரிந்துகொண்டு அல்ல; அவரைக் கண்டு உள்வாங்கியே கோடிக் கணக் கானவர்கள் அவர் பின்னால் சென்றார்கள். அவர் சொல்வது சரி என்று புரிந்துகொண்டதனால் அல்ல, அவர் சரியானவர் என்று புரிந்துகொண்டதனால்!
அரசியல் புகட்டியவர்
அந்த மாபெரும் விந்தையை என்றாவது எண்ணிப்பார்த்திருக்கிறீர்களா? ஒரு தொன்மையான தேசம். குறைந்தது இருபது நூற்றாண்டுகளாக நிலப்பிரபுத்துவம் விளங்கிய பகுதி. முக்கால் பங்குக்குமேல் நிலத்தில் மன்னராட்சி அப்போதும் நிலவிய மண்.
அங்கே வெறும் பதினைந்து வருடங்களுக்குள் ஒரு தனிமனிதர் மொத்த சமூகத்தையே ஜனநாயக அரசியலுக்குக் கொண்டுவருகிறார்! காந்தியின் காங்கிரஸ்தான் இந்திய வரலாற்றிலேயே அதிகமான பெண்களை அரசியலுக்குக் கொண்டுவந்த இயக்கம் தெரியுமா? அதனுடன் ஒப்பிடும்போது கம்யூனிஸ்ட் இயக்கத்திலும் திராவிட இயக்கத்திலுமெல்லாம் பெண்களின் பங்கேற்பு என்பது அநேகமாக எதுவுமே இல்லை.
காந்தியை நம்பி லட்சக் கணக்கில் எளிய, நடுத்தரவர்க்க மக்கள் அலையலையாகச் சிறைக்குச் சென்றார்கள். லட்சக் கணக்கான பெண்கள் சிறைக்குச் சென்றார்கள். வீட்டை விட்டு வெளியே செல்வதே பெரும் பாவம் என விலக்கப்பட்டவர்களாக நூற்றாண்டுகளாக வாழ்ந்த பெண்கள்! அவர் சொன்னார் என்று அப்பட்டமான சாதிவெறிப் பின்னணியில் பிறந்து வளர்ந்த லட்சக் கணக்கானவர்கள் தாழ்த்தப்பட்டவர்களின் சேரிகளுக்குச் சென்று வாழ்ந்தார்கள். அவர்கள் கழிவறைகளைச் சுத்தம் செய்ய வந்தார்கள்.
இந்தியாவின் முதல் மக்களியக்கம் காந்தியின் ஒத்துழையாமைப் போராட்டமே. அந்த அலைமூலம்தான் நிலப்பிரபுத்துவ மனநிலையில் அரசியலின்றி பல்லாயிரம் வருடங்களாக வாழ்ந்திருந்த இந்திய சமூகம் அரசியல் மயமாக்கப்பட்டது.
என்னை ஆய்வுசெய்து பார்!
அந்த அரசியல் எழுச்சியை உருவாக்கியது எது? இன்று தகவல்தொழில்நுட்ப அலையில்கூட இந்தியாவை முழுக்கத் தொடர்புகொள்வது பெரும் சவாலாக இருக்கிறது. அன்றைய இந்தியாவில் அச்சு ஊடகங்கள் மிகமிகக் குறைவு. வானொலி இன்னும் பரவலாக ஆகவில்லை. ஆயிரக் கணக்கான ஊர்களில் மின்சாரம் இல்லை, ஆகவே ஒலிபெருக்கி இல்லை. எப்படி காந்தி இந்த தேசத்துடன் பேசி அதைக் கருத்தியல்ரீதியாக ஒருங்கிணைத்தார்?
அவர் தன்னையே தன் செய்தியாக ஆக்கிக்கொண்டார். தன் வாழ்க்கையே தன் செய்தி என்று கூற ஒரு தலைவனுக்கு அபாரமான மனத்தைரியம் தேவை. என் தனி வாழ்க்கையில் ரகசியங்கள் இல்லை என்று அறிவிக்க, ‘என்னை ஆய்வுசெய்து பார்’ என வரலாற்றின் முன்பு வந்து நிற்க, தன் நேர்மைமேல் ஆணித்தரமான நம்பிக்கை தேவை. எல்லையற்ற ஆன்ம வல்லமை தேவை.
இந்திய அரசியலின் நூறு வருட வரலாற்றில் ஒரே ஒரு மனிதனைத் தவிர, எவருமே அப்படிச் சொல்ல முடியாது. சந்தேகமிருந்தால் நீங்கள் நம்பும் எந்த ஒரு தலைவனுடைய அந்தரங்க வாழ்க்கையையும் காந்தியின் அந்தரங்க வாழ்க்கை ஆராயப்பட்டதுபோலத் தோண்டித்துருவிப்பாருங்கள். அவரது ஆன்மா கதறும்!
தன்னையே செய்தியாக்கியவர்
தன்னைத்தான் காந்தி இந்தியா முழுக்கக் கொண்டு சென்றார். நூற்றுக் கணக்கான ரயில் நிலையங் களில் மூன்றாம் வகுப்புப் பெட்டியின் வாசலில் விரதத்தால் மெலிந்த, கரிய உடலுடன் வந்து நின்று, தன் கருணைமிக்க கண்களில் நகைச்சுவை ஒளிரும் சிரிப்புடன் மக்களை நோக்கிக் கும்பிட்டார். அதுவே, இந்தியா முழுக்கச் சென்று சேர்ந்த செய்தி. அதுவே இந்த நாட்டை ஒன்றாகத் திரட்டி ஜனநாயக அரசியலுக்குக் கொண்டுவந்த கருத்தியல் பேரலை. அந்த இடத்தை அவருக்கு அளித்தது அவரது மகாத்மா என்ற அடைமொழி.
எண்ணிப்பார்த்திருக்கிறீர்களா? தான் வாழ்ந்த காலகட்டத்தில் காந்தி எத்தனை லட்சம் பேரை ஆழமாகப் பாதித்திருக்கிறார் என்று? அவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் அளவிலேயே ஒருவகை மகாத்மாக்கள் என்று தெரியுமா உங்களுக்கு? சிலர் அவரிடம் ஒருசில சொற்களே பேசியிருக்கிறார்கள், லாரி பேக்கர்போல. சிலர் அவரைப் பார்த்தார்கள் அவ்வளவுதான், வைக்கம் முகமது பஷீர்போல.
அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கை தரிசனத்தையே அது மாற்றியமைத்திருக்கிறது. எத்தனை சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள்! அவர் வாழ்ந்த காலத்தின் மகத்தான மனங்களில் அவரது அழுத்தமான பாதிப்பில்லாதவர்கள் அநேகமாக எவருமே இல்லை. ஐன்ஸ்டைன் முதல் சார்லி சாப்ளின் வரை.
அத்தனை பேரையும் ஒரு குஜராத்தி பனியா கோவணம்கட்டி வேடம் போட்டு ஏமாற்றினார் என்றும், நீங்கள் அதிபுத்திசாலியானதனால் ‘உண்மை’யை உணர்ந்துகொண்டீர்கள் என்றும் எண்ணினீர்கள் என்றால் நாம் என்ன பேசுவது. நான் உங்களை ஒரு மகாத்மா என்று நம்ப வேண்டும். அல்லது உங்களை நம்பவைத்தவரை அதிமகாத்மா என்று நம்ப வேண்டும். மன்னிக்கவும், அதைவிட காந்தியை நம்புவதற்கே அதிகமான ஆதாரங்கள் இருக்கின்றன.
நான் காந்தியை மகாத்மா என்ற சொல்லால் சொல்வ தில்லை. ஒரு மனிதரை நாம் அறிய முயலும்போது அவருக்கு அடைமொழிகள் போடுவதென்பது முன்முடிவு களை நிறுவி அவரை நம்மிடமிருந்து மறைத்துவிடும் என்பதனால்தான் அது. ஆனாலும், “பாழ்பட்டு நின்றதா மோர் பாரத தேசம் தன்னை வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா நீ வாழ்க வாழ்க” என என் மொழியின் நவகவிஞனுடன் சேர்ந்து கூத்தாடுவதற்கு எனக்குத் தயக்கமில்லை.
- ஜெயமோகன் எழுதி, தமிழினி பதிப்பகம் வெளியிட்ட ‘இன்றைய காந்தி’ நூலிலிருந்து சில பகுதிகள். 
தொடர்புக்கு: jeyamohan.writer@gmail.com
*******************
காந்தியின் பரிசோதனைக்கூடமாக இருந்த சத்தியத்தின் வரலாறு…
நன்றியின் அடையாளமாக உப்பும், மானத்தின் குறியீடாக ஆடையைத் தரும் ராட்டையும், மனசாட்சியின் பிரதி பலிப்பாகச் சத்தியமும் விடுதலைக் கால இந்தியரின் மூன்று போராட்ட ஆயுதங்கள். அக உணர்வைத் தூண்டும் தன்மை கொண்ட அவை இந்தியர்களிடம் எழுச்சியை உருவாக்கின. காந்தி இந்த எழுச்சியை வெற்றியாக மாற்றினார், இந்தியாவின் தந்தையானார்.
விடுதலை அடைந்த இந்தியாவில் உப்பும் ராட்டையும் பல மாற்றங்கள் பெற்றன. வைரம்போல மின்னும் கல் உப்பு உடைந்து தூளாகி, இன்று அயோடின் கலந்து ஆரோக்கியத்தின் அடிப்படையாகிவிட்டது. பெருநிறுவனங் களும் அரசாங்கமுமே அதன் விற்பனையில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டன. ராட்டைகள் பெரும் தொழிற்சாலைகளில் ராட்சச வடிவம் எடுத்துத் துணிகளை நெய்துதள்ளுகின்றன. தெருவுக்கு நான்கு பிரம்மாண்ட துணிக் கடைகள்.
இப்படி முன்னிரண்டும் கால ஓட்டத்தில் மிதமிஞ்சிப் பெருகச் சத்தியத்துக்கு மட்டும் சோதனை. சத்தியத்தின் இருப்பு முன்னெப்போதைக் காட்டிலும் இப்போது அருகிவிட்டது. புராண அரிச்சந்திரனின் பிறந்த நாள் உறுதியாகத் தெரியாத நிலையில், கண்கண்ட அரிச்சந்திரனான காந்தியின் பிறந்த நாளில் சத்தியத்துக்கும் நமக்குமான பண்பாட்டு உறவைக் கொஞ்சம் அசை போடலாம்! இதை சத்தியாக் கிரகத்திலிருந்தே தொடங்கலாம்.
சத்தியாக்கிரகத்தின் தோற்றம்
சத்தியத்துக்கும் காந்திக்குமான உறவு, அவரது வாழ்நாள் முழுவதும் நீடித்தது. சத்தியத்தைப் போராட்ட உத்தியாக மாற்றியதோடு, தன் ஆன்ம ஈடேற்றத்துக்கும் காந்தி பயன்படுத்திக்கொண்டார். சத்தியாக்கிரகம் என்ற சொல்லைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே அந்தத் தத்துவம் அவருக்குத் தோன்றிவிட்டது. அதை இன்னதென்று அழைப்பது என அவருக்கு முடிவாகவில்லை. பாஸிவ் ரெஸிஸ்டென்ஸ் (Passive resistance) என்று முதலில் சொல்லிப்பார்த்திருக்கிறார்.
‘சாத்வீக எதிர்ப்பு’ என்ற பொருள் தரும் அது, பலவீனங்களின் ஆயுதமாகவும், பகைமைக்கு இடம் தருவதாகவும், பின்னர் பலாத்காரமாக மாறிவிடவும் வாய்ப்புண்டு என்று காந்தி உணர்ந்தார். அதற்கொரு சொல் தேடினார். ‘இந்தியன் ஒப்பீனியன்’ பத்திரிகை மூலம் போட்டியைக்கூட அறிவித்தார். மகன்லால், சதாக்கிரகம் (சத்+ஆக்கிரகம்) என்ற சொல்லைப் பரிந்துரைத்துப் பரிசு வென்றார். இந்தச் சொல்லை மேலும் தெளிவாக்கி, சத்தியாக்கிரகம் என்று காந்தி மாற்றினார். வாழ்நாள் முழுவதும் அதையே பயன்படுத்தினார். இதை சத்திய சோதனையில் விவரித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக