சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள நோக்கியா செல்போன் தயாரிப்பு ஆலையில் உற்பத்தி நவம்பர் 1-ம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. நோக்கியா நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த ஆண்டு மார்ச் மாதம் 720 கோடி டாலருக்கு வாங்கியது. ஆனால் ஸ்ரீபெரும்புதூர் ஆலை மீது வரி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் இந்த ஆலையை மட்டும் மைக்ரோசாப்ட் கையகப்படுத்தவில்லை.
இருப்பினும் இந்த ஆலையிலிருந்து பொருள்களை உற்பத்தி செய்து அளிப்பதற்கான சேவை ஒப்பந்தம் செய்து கொண்டது. அந்த ஒப்பந்தத்தை நவம்பர் 1-ம் தேதி முதல் ரத்து செய்வதாக மைக்ரோசாப்ட் அறிவித்தது. இதையடுத்து உற்பத்தி நிறுத்தப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
உற்பத்தி நிறுத்தம் குறித்த அறிவிப்பை தொழிலாளர் ஆணைய மற்றும் பங்குதாரர்களுக்கு நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. உற்பத்தி நிறுத்தத்தால் ஊழியர்களுக்கு பெருமளவு பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் நடவடிக்கையில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அது தொடர்பான அறிவிப்பை விரைவில் வெளியிடப் போவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் இந்நிறுவனத்தில் மாதத்துக்கு 1.30 கோடி செல்போன்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இது தற்போது 40 லட்சமாகக் குறைந்துவிட்டது. ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா ஆலை 2006-ம் ஆண்டு உற்பத்தியைத் தொடங்கியது. இங்கிருந்து மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு செல்போன் ஏற்றுமதி செய்யப்பட்டது.
உள்நாட்டு தேவைக்காக ஆரம்பிக்கப்பட்டு இங்கிருந்து செல்போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதால் ரூ. 2,400 கோடியை அளிக்க வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியது. இதனிடையே நோக்கியா ஆலையை மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு மாற்றும் முன்பாக ரூ. 3,500 கோடியை காப்பீட்டுத் தொகையாக செலுத்த வேண்டும் என்று வரி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் மார்ச் மாதம் 14-ம் தேதி உத்தரவிட்டது.
இந்த நெருக்கடி காரணமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு செல்போன்களை தயாரித்து அளிப்பதற்கான சேவை ஒப்பந்தத்தை ஸ்ரீபெரும்புதூர் ஆலை செய்தது. இதனால் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. இப்போது ஒப்பந்தத்தை மைக்ரோசாப்ட் ரத்து செய்ததால் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக