ஞாயிறு, 19 அக்டோபர், 2014

டீசல் விலை

நீண்ட காலத்துக்குப் பிறகு, டீசல் விலை கணிசமாகக் குறைந்திருக்கும் செய்தி முகத்தில் புன்னகையை உருவாக்கிக் கொண்டிருக்கும்போதே, முதுகில் வலியே தெரியாமல் மயக்க மருந்து தடவிய கத்தியைச் செருகியிருக்கிறது மோடி அரசு.
சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலியத்தின் விலை சரிந்துவிட்ட நிலையில், லிட்டருக்கு ரூ. 3-க்கு மேல் குறைத்து, அந்த மகிழ்ச்சியில் நுகர்வோர் ஆழ்ந்திருக்கும்போதே, டீசல் விலைக் கட்டுப்பாட்டு மீதான தன்னுடைய அதிகாரத்தைக் கைவிட்டிருக்கிறது.
அதாவது, பெட்ரோல் விலையைப் போலவே இனி, டீசல் விலை நிர்ணயத்திலும் அரசு தலையிடாது. அதாவது, அரசு மானியம் தராது; எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிப்பதே விலை.
மன்மோகன் சிங் அரசு தொடங்கிய ‘சீர்திருத்தம்’ மோடி அரசிலும் தொடர்கிறது. மழை பெய்யும்போது வீட்டுச் சாக்கடையைத் திறந்து வீதியில் விடும் சாமர்த்தியம்தான் இது. அமெரிக்கப் பயணத்தின்போது, ‘பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள்’ தொய்வில்லாமல் தொடரும் என்று மோடி வாக்குறுதி அளித்ததன் தொடர்ச்சியாக இதையெல்லாம் பார்க்கலாம்.
இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், மானியங்களுக்கான மொத்த செலவு ரூ. 2,46,000 கோடி என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. அதில் பெட்ரோலியப் பொருட்களுக்கான மானியம் மட்டும் ரூ.63,500 கோடி. பெட்ரோல், டீசல் விலைக் கட்டுப்பாடு நீக்கத்தால் அரசின் இந்த மானியச் செலவு கணிசமாகக் குறையும்; நிதிப் பற்றாக்குறையும் கணிசமாகக் குறையும் என்று சொல்கின்றன நிதித் துறை வட்டாரங்கள்.
தன்னுடைய பெட்ரோலியத் தேவையில் ஏறத்தாழ 80% அளவுக்கு இறக்குமதியை நம்பியிருக்கும் ஒரு நாடு, தன்னுடைய மானியத்தில் பெரும் பகுதியை பெட்ரோலியப் பொருட்களுக்காக அளிக்கும் ஒரு நாடு இது தொடர்பாகச் சீர்திருத்தங்களை யோசிப்பது அவசியமானது. ஆனால், சீர்திருத்தம் என்பது மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். ஒரு எஸ்யுவி ஆடம்பர காரில் செல்லும் பணக்காரருக்கும் பொதுமக்களையும் அத்தியாவசியப் பொருட்களையும் ஏற்றிச்செல்லும் பேருந்து - லாரிகளுக்கும் ஒரே விலையில் பெட்ரோல் - டீசல் என்பது எப்படி நியாயமாக இருக்க முடியும்?
அதிக அளவு பெட்ரோல் தேவைப்படும் வெளிநாட்டு அதிவேக மோட்டார் சைக்கிளில் தன்னுடைய பந்தாவுக்காகச் சுற்றும் ஒரு இளைஞர், நாட்டின் எண்ணெய் தேவைச் சுமையை மேலும் அதிகரிக்கிறார். நகரத்திலிருந்து எல்லாப் பொருட்களையும் அள்ளித் திணித்துக்கொண்டு மொபெட்டில் கிராமம் நோக்கிப் பயணிக்கும் ஒரு விவசாயி அந்தச் சுமையை ஏன் பகிர்ந்துகொள்ள வேண்டும்? இந்த மாதிரி கேள்விகளிலிருந்து ஒரு மக்கள் நல அரசு எப்படித் தப்பித்துக்கொள்ள முடியும்?
மானியம் என்பது பிச்சை அல்ல; தன்னுடைய கொள்கைகளால் மெலிந்த மக்களுக்கு ஓர் அரசு தரக்கூடிய ஆதரவு. ஒருவகையில் அதை இழப்பீடு என்றும்கூடச் சொல்லலாம். அடுத்த இலக்கு என்ன? உலக வர்த்தக நிறுவனம் வலியுறுத்தும் உணவு மானியச் செலவுக் குறைப்பா?
காங்கிரஸின் தொடர் வீழ்ச்சியைக் கொண்டாடும் மோடி அரசும் பாஜகவும், காங்கிரஸை இந்த அளவுக்கு மக்கள் வெறுப்பதற்கு அது முன்னெடுத்த இப்படியான ‘சீர்திருத்தக் கொள்கைகள்’தான் காரணம் என்பதை உணர வேண்டும்.
*************************** 
The 2014-15 Budget had projected a subsidy burden of Rs.2,46,000 crore, of which petroleum subsidy accounted for Rs.63,500 crore. Thanks to falling oil prices in the last few months and deregulation of diesel now, the petroleum subsidy is expected to be substantially lower than the budgeted level, thus easing the burden on the fisc.
*************************
2009 ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கி இரு மாதங்களுக்கு முன்பு வரை மொத்தம் 31 முறை ரூ. 30.10 அளவுக்கு டீசல் விலை உயர்த்தப்பட்டது. இதனாலும், கடந்த சில மாதங்களாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்ததாலும் டீசல் விற்பனையில் ஏற்பட்ட இழப்பு நீங்கி லாபம் கொட்டத் தொடங்கியது. அதன்பயனாகத் தான் டீசல் விலையை 70 மாதங்களில் முதன்முறையாக மத்திய அரசு குறைத்துள்ளது.
அதேவேளையில், டீசலுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தையும் மத்திய அரசு படிப்படியாக குறைத்து விட்டது. 2011ஆம் ஆண்டு மே மாதத்தில் ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.18 மானியம் வழங்கப்பட்டுவந்தது. இந்த மானியம் இப்போது முழுமையாக ரத்து செய்யப்பட்டு விட்டது. இனியும் டீசலுக்கு மானியம் வழங்கக்கூடாது என்று நினைத்ததால் தான் டீசல் மீதான விலைக்கட்டுப்பாட்டை தளர்த்திய மத்திய அரசு, விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களிடமே ஒப்படைத்திருக்கிறது. இதன்மூலம் டீசல் விலையை கட்டுக்குள் வைத்திருப்பதற்கான பொறுப்பை தட்டிக் கழித்திருக்கிறது.
டீசல் விலை உச்சத்தில் இருக்கும்போது விலைக் கட்டுப்பாட்டைத் தளர்த்தினால் மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழும் என்பதால், சரியான நேரத்திற்கு காத்திருந்து உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ள நேரத்தில் இத்தகைய நடவடிக்கையை மத்திய அரசு எடுத்திருக்கிறது. இது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கலாம்; ஆனால், நிச்சயமாக மக்கள் நலனுக்கு உகந்த முடிவல்ல.
டீசல் மீதான விலைக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதால் உடனடியாக பாதிப்பு ஏற்படாமல் போகலாம். ஆனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கும் பட்சத்தில் அதனால் ஏற்படும் பாதிப்புகள் மிகவும் அதிகமாக இருக்கும். உதாரணமாக 2008 ஆம் ஆண்டில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிக அதிகபட்சமாக ஒரு பீப்பாய் 147 டாலர் என்ற அளவை எட்டியது.
இப்போது மீண்டும் கச்சா எண்ணெய் விலை அந்த அளவுக்கு உயர்ந்தால், இந்தியாவில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.26 வரை அதிகரிக்கும். அவ்வாறு உயர்ந்தால் பாசனத் தேவைக்காக டீசலை நம்பியிருக்கும் விவசாயிகளும், விசைப்படகுகளுக்காக டீசலை நம்பியுள்ள மீனவர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் விண்ணைத் தொடும் அளவுக்கு அதிகரிக்கும். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களை மிக மோசமாக பாதிக்கும்.
எனவே, டீசல் விலையை சந்தை நிலவரத்திற்கு ஏற்றவகையில் உயர்த்திக் கொள்வதற்கு எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இந்த அதிகாரத்தை மத்திய அரசு அதன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க வேண்டும். உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், மக்கள் நலன் கருதி உள்நாட்டில் டீசல் விலையை உயர்த்தாமல் தவிர்க்க வேண்டும்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
வைகோ வலியுறுத்தல்
இந்த விவகாரம் தொடர்பாக மதிமுக பொதுச் செயலர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், "டீசல் விலை அதிகரிக்கும்போது, அதன் தொடர் விளைவாக பண வீக்க விகிதம் உயர்வதும், விலை வாசி ஏறுவதும் மக்கள் மீது சுமையை ஏற்றுகிறது. எனவே மத்திய அரசு, மக்கள் நலன் கருதி டீசல் விலை மீதான கட்டுப்பாட்டை நீக்கும் முடிவை கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நடைமுறைப்படுத்திய ‘உங்கள் பணம் உங்கள் கையில்’ திட்டத்தை, பாரதிய ஜனதா அரசு வேறு வகைகளில் நடைமுறைப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளது. முந்தைய அரசு சமையல் எரிவாயு உருளைகள் வழங்குவதற்கு ஆதார் அடையாள அட்டையும், வங்கிக் கணக்கும் அவசியம் என்று அறிவித்தது.
சமையல் எரிவாயு உருளைகளை மானியம் இல்லாமல் விலை கொடுத்து வாங்கிக் கொண்டால், வாடிக்கையாளர் வங்கிக் கணக்கில் மத்திய அரசே மானியத் தொகையை செலுத்திவிடும் என்று கூறப்பட்டது. ஆனால், இத்திட்டம் நடைமுறையில் தோல்வி கண்டது. மேலும், சமையல் எரிவாயு உருளைக்கான மானியத் தொகையை படிப்படியாக ரத்து செய்யவே காங்கிரஸ் கூட்டணி அரசு இத்திட்டத்தைக் கொண்டு வந்தது. தற்போது மோடி அரசும் ஆதார் அட்டைக்குப் பதில், வங்கிக் கணக்கு இருந்தாலே போதும், மத்திய அரசு மானியத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்திவிடும் என்று கூறுகிறது.
உலக வர்த்தக நிறுவனமும், உலக வங்கியும் இதுபோன்ற மானியங்களை இரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதால், எதிர்காலத்தில் சமையல் எரிவாயு மட்டுமல்லாமல், பொது விநியோக முறையில் வழங்கப்பட்டு வரும் மண்ணென்ணெய், அரிசி, கோதுமை போன்ற பொருள்களுக்கும், உர மானியத்திற்கும் மத்திய அரசின் நேரடி பணப் பட்டுவாடா திட்டம் நடைமுறைப் படுத்தப்படும். இதனால், அரசின் மானியங்கள் முழுமையாக விலக்கப்பட்டுவிடும் நிலைமை ஏற்படும்.
எனவே, சமையல் எரிவாயு உருளைக்கான மானியத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தைக் கைவிட்டு, தற்போதுள்ள முறையில் மானிய உதவியுடன் சமையல் எரிவாயு உருளைகள் மக்களுக்கு தட்டுப்பாடின்றி கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று வைகோ கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக