மொழியைச் சிறப்பாகப் பயன்படுத்தியதற்கான சிறப்பான உதாரணத்துக்கு நீங்கள் பார்க்க வேண்டியது உலகப் புகழ் பெற்ற நகைச்சுவைக் கலைஞர் சார்லி சாப்ளினின் முதல் பேசும் படமான ‘தி கிரேட் டிக்டேட்டர்’.
மவுனத்தின் மொழி
மொழி குறித்த எனது புரிதலைப் புரட்டிப்போட்ட படம் அது. 100 வருடங்களுக்கு முன்பே படங்களை எடுத்தவர் சாப்ளின். பேசும் படங்கள் வந்த பின்பும் மவுனப் படங்கள் எடுத்தார். சினிமாவில் காட்சிகள் பேச வேண்டும், வசனங்கள் அல்ல என்பார் அவர்.
ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர் தனது படைபலத்தால் உலகை அச்சுறுத்திய காலம். அவர் வாழ்ந்த காலத்திலேயே அவரை நையாண்டி செய்தவர் சாப்ளின்.
முதல் பேசும் படம்
அவரது முதல் பேசும் படம் ‘தி கிரேட் டிக்டேட்டர். அதில் ஹிட்லராகவும் யூத இனத்தைச் சேர்ந்த சவரத் தொழிலாளியாகவும் இரண்டு வேடங்களில் நடித்து சாப்ளின் நம்மை வயிறு குலுங்க சிரிக்கவைப்பார். தன் வெத்துப் பேச்சால் மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருப்பவர் ஹிட்லர் என கேலியோடு, நகைச்சுவை ததும்ப சித்தரித்திருப்பார்.
சினிமா என்னும் வலிமையான மொழியைக் கொண்டு போரையும், அதிகார வெறியையும், இனவெறியையும் சாப்ளின் கேலிக்கும், கேள்விக்கும் உள்ளாக்கினார்.
பிதற்றலின் மொழி
ஹிட்லர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது போல் ஒரு காட்சி. அதில் ஹிட்லர் பேசுவது ஒரு மொழியே அல்ல. ஹ, ப்ப, பூ, ஹூ, ஷ, ஹீ எனும் வெறும் சப்தங்கள்தான். அவர் பேசவில்லை, பிதற்றுகிறார் என்பதைக் கேலியாகக் காட்டுவதற்காகக் காட்சி அப்படி அமைக்கப்பட்டிருக்கும்.
கடைசியில் ஹிட்லர் வேஷத்தில் இருக்கும் யூத சவரத் தொழிலாளி மேடை ஏறி உலக மக்களிடம் உரையாற்றும் காட்சி வரும். அதுவரை விழுந்து விழுந்து சிரித்த அனைவரையும் உறையவைக்கும் காட்சி அது.
“என்னை மன்னியுங்கள், நான் பேரரசனாக விரும்பவில்லை. யாரையும் அதிகாரம் செய்வது என் நோக்கம் அல்ல…. நாம் அதிகம் சிந்திக்கிறோம். ஆனால் குறைவாக நேசிக்கிறோம். புத்திசாலித்தனத்தை விடவும் நமக்குத் தேவை மனிதநேயமே. ஜனநாயகத்தின் பெயரால் நாம் இணைவோம். விரோதம் விடுத்து அன்பு கொள்வோம்” என உரை நிகழ்த்துவார் சாப்ளின்.
இது தான் மொழி
எப்போதுமே கோமாளியாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் சாப்ளினுக்குள் இத்தனை ஆழ்ந்த சிந்தனை இருக்கிறதா? என பிரமிப்பூட்டும் காட்சி அது. கிட்டத்தட்ட 4½ நிமிடங்கள் தொடர்ந்து நிதானமான குரலில் பேசுவார்.
அவர் கண்கள் சின்ன சிமிட்டல்கூட இல்லாமல் கூர்மையாக இருக்கும். இது வெறும் வசனமல்ல. சாப்ளினின் ஆன்மாவின் குரலாகத் தோன்றும். எதை வேண்டுமானாலும் பேசுவது அல்ல மொழி, அர்த்தமுள்ள பேச்சு மட்டுமே மொழி என்று அந்தக் காட்சி எனக்கு உணர்த்தியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக