ஒரு மொழி வளருகிறது என்றால் அது புழக்க மொழியாக இருக்க வேண்டும். அரசியல், கலை இலக்கியம், பொருளியியல், சூழியல், சட்டம், அறிவியல் என்று அனைத்தையும் சேர்த்துதான் ஒரு மொழி வளரமுடியும். அறிவார்ந்த செயல்பாடுகள் இல்லாவிட்டாலும், புழக்கத்தில் இல்லாவிட்டாலும் ஒரு மொழி அழிந்துவிடும். இதற்கு உதாரணமாக பாலி மொழி, கொங்கணி, துளு என்று பல்வேறு மொழிகளை குறிப்பிடலாம். தமிழ்மொழி எந்த திசைநோக்கி செல்கிறது என்றால் அதில் அறிவார்ந்த செயல்பாடுகள் இல்லை. ஆனாலும் இந்த மொழி வாழ்கிறது என்றால் தமிழகத்தில் ஆரம்பப் பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுவதுதான். ஆனால் இப்போது அங்கும் ஆங்கிலம் கற்றுக்கொடுக்க தொடங்கியிருப்பதால் நிலைமை மாறியிருக்கிறது. இந்தியா முழுக்க பல்வேறு மொழிகளும் இப்படித்தான் இருக்கின்றன. மலையாளமும் அவ்வாறே உள்ளது.
தமிழகத்தில் தமிழ் உணர்வுக்கு ஈடு இணையில்லை. அதே நேரத்தில் தமிழை அன்னையாக்கிவிட்டபோதே வீடுகளில் அம்மாக்களுக்கு அளிக்கும் மரியாதைதான் தமிழுக்கு அளிக்கப்படுகிறது. எளிமையாக சொல்லுங்கள், சுருக்கமாக சொல்லுங்கள், பொதுமொழியில் சொல்லுங்கள், தகவலை மட்டும் சொல்லுங்கள் என்ற 4 விஷயங்கள்தான் ஒரு மொழியை அழிக்கவல்லவை. நதிப்படுகைகளில் நாகரிகம் தோன்றியது குறித்த வரலாற்றை 400 வார்த்தைகளுக்குள் சொல்ல முடியாது. அவ்வாறு 400 வார்த்தைகளுக்குள் சொன்னால் சிந்திக்க முடியாத மொழியாக தமிழை மாற்றுவதாகவே அர்த்தம்.
சொல்வதை பொதுமொழியில் சொல்லுங்கள் என்கிறார்கள். சூழியல் என்ற தமிழ் கலைச்சொல்லை புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். அழகியல் என்பது ஓவியம், இசை, இலக்கியம், சிற்பம், நடனம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது. இதுபோன்ற தமிழ் கலைச் சொற்கள் தேவையில்லை என்று சொல்லக்கூடாது. கருத்துகளை தெரிந்து கொள்வதற்கும், தகவல்களை தெரிந்து கொள்வதற்கும் வேறுபாடு இருக்கிறது. கேள்விகள், சிந்தனைகள் வரவேண்டும். தகவல்களுக்கு மரியாதை இனி கிடையாது. சிந்திக்க வேண்டியவற்றை சொல்ல வேண்டும். அந்த வகையில் “தி இந்து” நாளிதழில் கட்டுரைகள் வெளியாகின்றன. 6 மாதங்களுக்கு ஒருமுறை பழைய தகவல்களை திருப்பி திருப்பி சொல்லும் பத்திரிகைகள் அதிகமிருக்கின்றன. இந்த தரைதட்டிய சூழ்நிலையில், சவாலான காலத்தில் வாராது வந்த மாமணிபோல் “தி இந்து” தமிழ் வந்தது.
கருத்துகளை புரிந்து கொள்வதற்கான பயிற்சியை கல்வி நிலையங்கள் அளிக்கவில்லை. தகவல்களை மனப்பாடம் செய்யவே கற்றுத்தருகிறார்கள். இச்சூழ்நிலையில்தான் “தி இந்து” விரிவான அறிவார்ந்த கட்டுரைகளை வெளியிட்டது. இந்த நியூஸ் பேப்பரில் நியூஸை காணவில்லை என்று முதலில் கூறியவர்கள் பின்னர் அதில் வெளியாகும் கட்டுரைகள் குறித்து பேசுகிறார்கள். இது எனக்கு இன்ப அதிர்ச்சியையே அளிக்கிறது. தரமான விஷயத்தை சொன்னால் அதை ஏற்க மக்கள் இருக்கிறார்கள் என்பதை இது உணர்த்துகிறது. மிகப்பெரும் இலக்கிய பாரம்பரியமிக்க நெல்லையில் இத் திருவிழா நடத்துவது மிகவும் சிறப்பானது என்றார் ஜெயமோகன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக