செவ்வாய், 24 ஜூன், 2014

சர்வதேச விமான தயாரிப்பு - டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம் and RUAG

டாடா குழும நிறுவனமான டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம், சர்வதேச விமான தயாரிப்பு நிறுவனமான ருவாக் (RUAG) உடன் சேர்ந்து விமானத்தயாரிப்பில் ஈடுபட உள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா ஹைதராபாதில் நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம் நிறுவனத்தின் தலைவர் ராமதுரை, ருவாக் நிறுவனத்துடன் இணைந்து முழுமையான விமானம் தயாரிக்கும் பணியில் ஈடுபட உள்ளோம்.
இது இந்திய விமானபோக் குவரத்து துறையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றார்.
அடிபாட்லா சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமையவுள்ள ஆலை டாடாவின் நான்காவது திட்டமாகும். தற்போது அமைக்கப் படவிருக்கும் திட்டம் முழுமையான விமானம் தயாரிப்பு நிறுவனமாக மாறும் என நிறுவனம் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.
இந்த விழாவில் தெலுங்கானா முதல் அமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் பங்கேற்றார். ருவாக் நிறுவனத்தின் துணைத்தலைவர் மார்டின் பல்மன்னும் (Martin Buhlmann) இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.
ஸ்விஸ் நாட்டை சேர்ந்தது ருவாக் நிறுவனம். இதன் தலை மையகம் பெர்ன் நகரத்தில் இருக்கிறது.
இந்தத் துறையில் இந்தியாவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் திட்டமாக இது இருக்கும் என்றும், தெலுங்கானா மற்றும் ஹைதராபாதுக்கு முக்கிய திட்டமாக இருக்கும் என்றும் எஸ்.ராமதுரை தெரிவித்தார். இந்திய ஐரோப்பா கூட்டணி இந்த திட்டம் ஒரு சிறந்த உதாரணம் என்றும் அவர் தெரிவித்தார். இன்னும் ஐந்து வருடங்களில் ஏரோஸ்பேஸ் துறையில் குறிப்பிடத்தக்க நிறுவனமாக டாடா அட்வான்ஸ்ட் சிஸ்டம் இருக்கும் என்று அதன் தலைவர் ராமதுரை தெரிவித்தார்.
அடிபாட்லா சிறப்பு பொருளாதார மண்டலம் (ஏரோஸ்பேஸ்) சர்வதேச அளவில் செயல்பட்டுவரும் குறிப்பிடத்தகுந்த மண்டலம் என்று தெலுங்கான முதல்வர் தெரிவித்தார். மேலும் தெலுங்கான பகுதியில் ஆராய்ச்சி மையங்களும், ஆய்வகங்களும் இருப்பது இந்த துறைக்கு சாதகமான அம்சம் என்றார்.
ருவாக் நிறுவனத்தின் மார்டின் கூறும் போது டோர்னியர் விமானம் பல ஆண்டுகளாக இந்தியாவில் இயங்கி வருகிறது. இங்கு மேலும் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியது பெருமையாக இருக்கிறது.
இந்தியாவில் டாடா போன்ற ஒரு வலிமையான கூட்டாளி கிடைத்திருப்பதால் இந்த கூட்டணி பல ஆண்டுகள் நீடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக