திங்கள், 23 ஜூன், 2014

தட்டச்சு இயந்திரத்தின் தந்தை - கிறிஸ்டோபர் லதாம் சோல்ஸ்

தட்டச்சு இயந்திரத்தின் தந்தை என்று அழைக்கப் படுபவர் அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டோபர் லதாம் சோல்ஸ் (பிப்ரவரி, 14, 1819 - பிப்ரவரி 1890). இவர் விஸ்கான்சின் மாகாணத்தின் சட்ட மன்ற உறுப்பினராக இருந்தவர். தி கெனொசா டெலிகிராஃப் எனும் செய்தித்தாளையும் நடத்தி வந்தார். இன்றுவரை பயன்படுத்தப்படும் தட்டச்சு இயந்திரத்தை உருவாக்கியவர் அவர்தான். அவருக்கு முன்னதாகவே பலர் தட்டச்சு இயந்திரங்களை உருவாக்கினர். எனினும் வணிகரீதியாக வெற்றி அடைந்த தட்டச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் இவரே. ஒருநாள் அவரது நிறுவனத்தின் அச்சுக்கோப்புத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். அவர்கள் இல்லாமலேயே அச்சுக்கோப்புப் பணியைச் செய்வதற்காக ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடிக்க சோல்ஸ் முயன்றார்.
பிறகு, புத்தகங்களுக்கு எண்கள் பதிக்கும் ஒரு கருவியை அவரும் அவரது நண்பர் சாமுவேலும் சேர்ந்து 1866-ல் தயாரித்தனர். அவர்களோடு கார்லஸ் கிளிட்டன் எனும் ஒரு வழக்கறிஞரும் சேர்ந்துகொண்டார். முதலில் பியானோ போன்ற அமைப்பில் ஒரு இயந்திரம் தயாரிக்கப்பட்டது. அதைக்கொண்டு பெரும்பாலும் மரத்தாலான தட்டச்சு இயந்திரத்தை அவர்கள் தயாரித்தனர். 1868-ல் இதே நாளில் அதற்குக் காப்புரிமை கிடைத்தது. இந்த இயந்திரத்தில் சோல்ஸ் ஒரு ஒப்பந்தத்தைத் தட்டச்சு செய்தார். முதன்முதலில் தட்டச்சு செய்யப்பட்ட ஆவணம் அதுதான். ஜேம்ஸ் டென்மோர் என்பவர் அவர்களின் காப்புரிமையின் கால்வாசியை வாங்கிக்கொண்டார். தட்டச்சு இயந்திரத்தை மேலும் நவீனப்படுத்த டென்மோர் முயன்றபோது நால்வர் குழுவில் இரண்டு பேர் விலகிக்கொண்டனர். பின்னர், சோல்ஸ், டென்மோர் ஜோடி அந்தப் பணியைத் தொடர்ந்தது. கணினி, செல்போன்களில் பயன்படும் குவார்ட்டி கீபோர்டு எனப்படும் முறையையும் சோல்ஸ்தான் கண்டுபிடித்தார்.1890 பிப்ரவரி 17-ல் காசநோயால் சோல்ஸ் மரணமடைந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக