செவ்வாய், 3 ஜூன், 2014

அருகமைப் பள்ளி

எவ்வளவு பெட்ரோல் மிச்சம்!
தமிழ்நாட்டில் 36,389 பள்ளி வாகனங்கள் இயக்கப் படுகின்றன என்று தமிழக அரசு அறிக்கை ஒன்று சொல்லுகிறது. இந்த வாகனங்களுக்குச் செலவாகும் பெட்ரோல், டீசல் எரிபொருள் எவ்வளவு? வசதி படைத்த குழந்தைகள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக ஏற்றிச்செல்லும் கார்கள் இதில் சேர்க்கப்படவில்லை. இவை அனைத்தும் சேமிக்கப்பட்டால் நாட்டின் இறக்குமதி எவ்வளவு குறையும்? அந்நியச் செலாவணி எவ்வளவு மீதமாகும்? நாட்டின் பற்றாக்குறை பட்ஜெட்டுகளைப் பற்றி அங்கலாய்ப்போருக்கு, அடித்தட்டு மக்களுக்கு அள்ளிக்கொடுக்கும் சலுகைகளினால்தான் பற்றாக்குறை உருவாகிறது என்று சாடுபவருக்கு இந்த ஆரோக்கியமான சேமிப்பு ஏன் தேவையானதாகத் தோன்றவில்லை? முக்கியமாக, பள்ளி வாகனங்கள் விபத்துக்கு உள்ளாவதிலும், சரியான பராமரிப்பு இன்மையாலும் ஆண்டு
தோறும் உயிரிழக்கும் குழந்தைகள் எத்தனை பேர்?
இத்தகைய அவலங்களுக்கெல்லாம் மாற்றான அருகமைப் பள்ளிகளின் அவசியம் இந்தியக் கல்வி வரலாற்றில் அனைத்துக் கல்வியாளர்களாலும், கல்வி ஆணையங்களாலும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்திருக்கிறது. இவற்றில் மிகவும் புகழ் பெற்ற கோத்தாரி ஆணையத்தின் 1964-ம் ஆண்டு அறிக்கை அருகமைப் பள்ளிகளின் பெரும் சிறப்பை நுட்பமாக விளக்குகிறது. “அவை வர்க்க-சாதி வேறுபாடு இன்றி அனைத்துக் குழந் தைகளுக்கும் சமமான கல்வியை அளிப்பது மட்டுமல்ல, இப்பள்ளிகள்தான் தரமான கல்வியை அளிக்க முடியும்” என்றும் கோத்தாரி ஆணையம் கூறுகிறது.
பகிர்ந்துகொள்ளும் வாழ்க்கை
சாமானிய மக்களுடன் வாழ்வைப் பகிர்ந்துகொள்ளல் தரமான கல்வியின் முக்கியத் தன்மை. இதே கருத்தை, சில வாரங்களுக்கு முன் லண்டன் நகரின் கல்விப் பிரச்சினைகள் குறித்த மாநாட்டில் டேவிட் லெவின் என்ற பள்ளித் தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் இப்படி வலியுறுத்துகிறார். “ஒரே வர்க்க-இன மாணவர்களைக் கொண்ட பள்ளிகளில் கற்கும் மாணவர்கள் சமுதாயம் குறித்த குறுகிய ஒற்றைப் பரிமாணப் புரிதலுடன் வெளி வருவது அவர்களுக்கும் சமுதாயத்துக்கும் கேடுதான்.”
இன்று சாமானிய குழந்தைகள் கற்கும் அரசு/உள்ளாட்சிப் பள்ளிகள் கேவலமான புறக்கணிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. இதற்கு முக்கியக் காரணம் இவை சாமானியர் மட்டுமே கற்கும் பள்ளிகள் என்பதுதான். பெரும்பாலும் முதல் தலைமுறை கல்வி கற்போரான இந்தக் குழந்தைகளும், அவர்களுடைய பெற்றோரும் குரலற்றவர்கள், சமுதாயத்தில் சக்தியற்றவர்கள். ஆகவேதான், இவர்கள் கற்கும் பள்ளிகள் மோசமான புறக்கணிப்புக்கு உள்ளாகின்றன. இதே பள்ளிகளில் வசதியும் அதிகாரமும் கொண்டோரின் குழந்தைகள் படிக்க நேர்ந்தால் நிலைமை எவ்வாறு மாறும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
சர்வதேச அளவில் இந்தியாவின் மாபெரும் செல்வம் அதன் மக்கள்தொகைதான். அதாவது, நமது மக்கள்தொகையில் மிகப் பெரும் பகுதி இளைஞர்களும் குழந்தைகளும்தான். ஆனால், பெரும்பாலோர் சிறந்த கல்வி கிடைக்காததால் ஆற்றல் பெறும் வாய்ப்பை இழக்கின்றனர். நாடு மனித வள வளர்ச்சியில் உலக அரங்கில் மிகவும் தாழ்ந்து கிடக்கிறது. அருகமைப் பள்ளிகள், முதலாளித்துவ நாடுகள் தங்கள் சமுதாயத்தின் மனிதவள மேம்பாட்டுக்கு அத்தியாவசியமாகக் கருதிக் கடைப்பிடித்த, கடைப்பிடிக்கும் வளர்ச்சிப் பாதை. இன்று முதலாளித்துவப் பாதையை மூர்க்கத்தனமாகப் பின்பற்றும் இந்தியா அந்தப் பயணத்தின் வெற்றிக்கு அடிகோலிய கல்வி முறையை மட்டும் மறுதலிக்க இயலாது.
அருகமைப் பள்ளிகள் அளிக்கும் மகத்தான பலன்கள் எவை? குழந்தைகள் குழந்தைப் பருவத்தை இழக்காமல், ஓடி விளையாடும், கூடி விளையாடும் மகிழ்ச்சியான வளர்ச்சி அடைவார்கள். சாதி-வர்க்கப் பாகுபாடுகள் மறையும் தளங்களாகப் பள்ளிகள் திகழும். தரமான கல்வி அனைத்துக் குழந்தைகளுக்கும் கிடைக்கும். எரிபொருள் சேமிப்பு பொருளாதாரத்துக்கு உதவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக