வியாழன், 5 ஜூன், 2014

புகையிலைப் பழக்கம்

புகையிலையால் ஏற்படும் புற்றுநோய் உள்ளிட்ட வியாதிகளால் உலகில் ஆண்டுதோறும் சுமார் 55 லட்சம் பேர் இறக்கின்றனர் என்றால், அவர்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தியர்கள். உலகில் புகை யிலை பயன்படுத்துவதில் இந்தியா இரண்டாவது இடம் வகிக்கிறது. புகையிலையைப் பயன்படுத்துவதால் நேரடியாகவும் மறைமுகமாகவும் கடும் நோய்களுக்கு ஆளாவோரைக் குணப்படுத்த அரசாங்கம் அதிகம் செலவிட நேர்கிறது.
அரசு செலவிடுவது ஒருபக்கம் என்றால், புகையிலைப் பழக்கம் உள்ளவர்கள் சொந்தமாகச் செலவிட நேர்வதும் கணிசமாக இருக்கிறது. பல லட்சம் குடும்பங்களை இந்தச் செலவு வறுமையை நோக்கித் தள்ளுகிறது. புகையிலையால் ஏற்படும் நோய்களுக்குச் சிகிச்சை எடுத்துக்கொள்வோர் எண்ணிக்கை மட்டுமே இந்தியாவில் 9.3 லட்சம். சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் இருப்போர் இதைவிட அதிகமாகக் கூட இருக்கக்கூடும்.
கடந்த 2011- ல் மட்டும், புகையிலையால் பாதிக்கப்பட்டவர்களால் அரசுக்கு ஏற்பட்ட மருத்துவச் செலவு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல். 2011-12-ல் மத்திய அரசும் எல்லா மாநில அரசுகளும் சுகாதாரத் துறைக்காக ஒதுக்கிய மொத்தத் தொகையைவிட இது 12% அதிகம். அதே வேளையில், புகையிலைப் பொருட்கள் மீது மத்திய அரசு விதித்த வரிகளால் வசூலான தொகை, மேற்கண்ட மருத்துவச் செலவில் வெறும் 17% தான். ஆகையால், புகையிலைப் பொருட்களை அனுமதிப்பதால் அரசுக்கு வருமானம் கிடைக்கிறது என்பது உளுத்துப்போன வாதம்.

எனவே, புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைப்பதுடன், புதிய தலைமுறை அதன் அருகிலேயே செல்ல முடியாத சூழலை அரசு உருவாக்க வேண்டும். புகையிலையைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையை 2020-ல் இப்போதுள்ள எண்ணிக்கையிலிருந்து 15 சதவீதமும், 2025-ல் 30 சதவீதமும் குறைக்க மத்திய சுகாதாரத் துறை இலக்கு நிர்ணயித்திருக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக