அடுத்த ஆண்டு வரையில் பதவிக்காலம் இருக்கும் 13-வது நிதிக் குழு, மத்திய அரசின் வருவாயில் அதிகபட்சம் 39.5% அளவை மாநிலங்களுக்குப் பிரித்துக் கொடுக்கலாம் என்று பரிந்துரை செய்திருக்கிறது. அத்துடன் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தலைமையிலான குழு, பிஹார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் பின்தங்கிய நிலையைக் கருத்தில்கொண்டு அவற்றுக்குச் சிறப்பு நிதியுதவியை வழங்கலாம் என்று பரிந்துரைத்திருக்கிறது. மாநிலங்களின் தேவைகளை மட்டுமே கருத்தில் கொண்டு நிதியுதவி வழங்கப்படுவது கிடையாது. மாநிலங்களின் நிதிநிர்வாக நிலைமை, மத்திய அரசு கொடுக்கும் நிதி கடந்த ஆண்டுகளில் எப்படிச் செலவிடப்பட்டது, மாநிலங்களுக்குள்ள இயற்கை வளம், கனிம வளம், வேலைவாய்ப்புக்கான நிலைமை, எல்லையோர மாநிலங்கள் என்றால் பாதுகாப்புரீதியாக அதற்குத் தேவைப்படும் சிறப்புக் கவனம் என்று எல்லா அம்சங்களும் கவனத்தில் கொள்ளப்படும்.
கடந்த கால ஆட்சிகளின் காரணமாக பிஹார் எல்லாவற்றிலும் பின்தங்கியிருக்கிறது. எனவே, பிற மாநிலங்களுக்கு இணையான வளர்ச்சியை அடைய பிஹாருக்கு மிகப் பெரிய தொகையை, சிறப்பு அளிப்பாக அளிக்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் நிதீஷ் குமார் கோரினார். இதேபோல், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
தனிநபர் வருமான வரி, உற்பத்தி வரி (எக்சைஸ்), சேவை வரி என்று எல்லா பெரிய வரிவருவாய் இனங்களையும் மத்திய அரசு வைத்துக்கொண்டிருக்கிறது. மாநில அரசுகள் தொழில் வரி, விற்பனை வரி, பத்திரப்பதிவுக் கட்டணம் போன்றவற்றையே தங்களுடைய வருவாய் ஆதாரமாகக் கொண்டுள்ளன. மத்திய அரசைப் போல மாநில அரசுகளுக்கும் நிர்வாகப் பொறுப்புகள் அதிகம். ஆனால், அதற்கேற்ற வருவாய் ஆதாரங்கள் அவற்றிடம் இல்லை. இந்த நிலையில், நிதி ஆதாரங்களைத் திரட்டும் அதிகாரம் முழுவதும் மத்திய அரசின் கைகளில் குவியவிருப்பதாகத் தெரிகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக