வியாழன், 30 ஜூலை, 2015

http://www.gigablast.com/


ஒவ்வோர் அவமதிப்பும் ஒரு மரணம்! - Children

ச.மாடசாமி
COMMENT (1)   ·   PRINT   ·   T+  
குழந்தைகளுக்குப் பள்ளியில் நேரும் அவமானங்களை நாம் பேசுவதில்லை.
பெங்களூரில் கடந்த மே மாதத்தில் நடந்த துயரச் சம்பவம் இது. நான் அந்த அடுக்ககத்தின் 16-வது மாடியில் இருந்தேன். 12-வது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டாள் ஒரு சிறுமி. மாணவி. மரணத்துக்குக் காரணம், தேர்வுத் தோல்வி. அது தமிழ்க் குடும்பம். அந்தக் குடும்பத்தின் நண்பர் சொன்னார், “குடும்பத்தில் தாத்தா- பாட்டிகூட உயிரோடு இருக்கிறார்கள். இந்தச் சிறுமியின் மரணம் - அந்தக் குடும்பத்தின் முதல் மரணம்.”
இதே மே மாதம். மதுரை அருகே தேர்வில் தோல்வியுற்ற இரு சிறுவர்கள் தண்டவாளத்தில் தலையைக் கொடுத்து உயிர்விட்ட செய்தி கேட்டு நண்பர் ஒருவர் சொன்னார், “கேட்கவே பயங்கரமா இருக்கு… சின்னஞ்சிறுவர்கள் எப்படி இந்த முடிவுக்குப் போனார்கள்?”
மரணத்தைவிட வலி மோசம்
விஷயம் இதுதான். நம் சமூகத்தில், குழந்தைகள் உயிரை மாய்த்துக்கொள்வதைத்தான் தற்கொலைகளின் பட்டியலில் சேர்க்கிறோம். அவர்கள் மனதுக்குள் மருகி மருகிச் சாவதைக் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. விளைவு, அதன் உச்சத்தில் நடக்கும் மரணங்களே நம் பார்வைக்கு வருகின்றன. மரணத்தைவிட மோசமானது வலி என்கிறது மருத்துவம். அவமதிப்பும் மரணத்தைவிட மோசமானதுதான்.
குழலி என்று அழகாகப் பெயர் சூட்டப்பட்ட குழந்தை இப்படிக் கலங்கி அழுததாக அவளுடைய அம்மா சொன்னார், “வாத்தியார் ‘கெழவீ… கெழவீ’ன்னு சிரிப்புக் காட்டிக் கூப்பிடுறார்மா… பசங்கள்லாம் சிரிக்கிறாங்க. எனக்கு ஏன் இந்தப் பேரு வச்சீங்க?” - இந்த விசும்பலுக்குள் மரணத்தின் வாசனை இல்லையா? ஒவ்வோர் அவமதிப்பும் ஒரு மரணம்!
ஒரு குழந்தை எத்தனை முறை சாவது என்ற கேள்வியை மனம் பதறிப்போகுமாறு கேட்ட புத்தகம் ‘டெத் அட் அன் எர்லி ஏஜ்’ (Death at an early age - சிறு வயது மரணம்). நூலாசிரியர் ஜோனதன் கோசல். ஒரு ஆசிரியர். 1950-களில், நிறவெறி தலைவிரித்தாடிய அமெரிக்காவில், பாஸ்டன் பள்ளி ஒன்றில் கறுப்புச் சிறுவர்களை அரவணைத்துக் கற்பித்தவர். அதன் காரணமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டவர். வகுப்பறைகளில் செத்துச் செத்துப் பிழைத்த கறுப்புக் குழந்தைகளின் வரலாறுதான் அவருடைய ‘டெத் அட் அன் எர்லி ஏஜ்’.
அதில் ஒருவன் இவன். பெயர் ஸ்டீபன். வயது எட்டு. உடல் மிக மெலிந்தவன். போதாத ஆரோக்கியம். ஸ்டீபனுக்கு அம்மா அப்பா கிடையாது. அரசிடம் சிறு உதவி பெற்று ஒரு பெண் அந்த அநாதைச் சிறுவனை வளர்த்தாள். அவள் கோபக்காரி. வீட்டில் ஒவ்வொரு நாளும் அடிவாங்கிப் பின் பள்ளிக்கு வருவான் ஸ்டீபன். ஆனால், அந்த அவமதிப்புகளைப் பள்ளியில் பகிர்வதில்லை.
கண்கள் காயப்பட்ட விதம்
ஒரு முறை கண்கள் சிவந்து வீங்கிப் பள்ளிக்கு வந்தான். கேட்டதற்கு விபத்து என்றான். பாதிக்கப்பட்ட அவன் கண்களைப் பார்க்கவே மற்ற குழந்தைகள் பயந்தனர். ஆனால், அவன் அழாமல் இருந்தான். ஆசிரியர் துருவிக் கேட்டபோது உண்மையைச் சொன்னான், வளர்ப்புத் தாய் அடித்து விரட்டியபோது மாடிப்படிக் கைப்பிடியில் முட்டிக் கண்கள் காயப்பட்ட விதத்தை.
ஸ்டீபன் நான்காம் வகுப்பு படித்தான். ஆனால், எண்ணும் எழுத்தும் அறிவதில் இரண்டாம் வகுப்பு குழந்தைக்கு உள்ள ஆற்றலே அவனிடம் இருந்தது. ஆனால், அவனிடம் ஒரு தனித் திறமை இருந்தது. ஓவியம் வரைவதும் வண்ணம் தீட்டுவதும்தான் அது. சொந்தக் கற்பனையில் வரைவான். அய்யோ, பாவம் அதுவும் அவனது ஓவிய ஆசிரியைக்குப் பிடிக்கவில்லை. “நான் வரையச் சொன்னபடி வரை”, “நான் காட்டிய படத்தில் இருப்பதுபோல் வரை!” என்பதுதான் ஓவிய ஆசிரியையின் ஆணை. சொந்தமாக வரையத் தெரிந்த அந்தக் குழந்தைக்குக் காப்பியடிக்க வரவில்லை. விளைவு, அவன் அவமதிக்கப்பட்டான்; தனித்துவிடப்பட்டான். அவன் வரைந்தவை யாவும் ‘குப்பைகள்’ ஆயின. பள்ளிக்கூடத்தில் அவமதிக்கப்பட்ட ஒவ்வொரு முறையும் அவன் மரணமடைந்தான். விரைவிலேயே அவன் ஒருவிதமான மனநோய்க்கு ஆளானான். சம்பந்தா சம்பந்தமில்லாமல் வகுப்பில் சிரித்தான். தானாகப் பேசிக்கொண்டான். வகுப்பில் ஓரமாய் ஒதுங்கிப் போய்ச் சுருண்டு படுத்துக்கொண்டான்.
பல முறை மரணமடைந்தவன்
ஸ்டீபனின் ஒரே ஆறுதல் புதிதாக வந்திருக்கும் ஆசிரியர் கோசல் (நூலாசிரியர்). எப்போதாவது நெருங்கி வந்து தான் வரைந்த படங்களை அவருக்குக் காட்டுவான். அவனைப் பாராட்டக்கூடிய ஒரே ஆள். ஓவிய ஆசிரியை கோசலைக் கண்டிக்கிறார். “அவன் உங்களிடம் அதிகச் சலுகை எடுக்கிறான். இனி, அவன் உங்கள் பக்கத்தில் வரக் கூடாது.” ஸ்டீபன் அவரிடம் இருந்தும் விலகுகிறான். இது ஸ்டீபனுக்கு எத்தனையாவது மரணம்?
இப்படி அவமதிக்கப்பட்ட குழந்தைகளின் வரலாறு களை அந்தப் புத்தகம் பேசுகிறது. எனக்கு நம்மூர் சூழல் ஞாபகத்துக்கு வருகிறது. கோவணம் கட்டாமல் பள்ளிக்கு வரும் ஏழைச் சிறுவர்களை, அவர்களின் துண்டையும் உரித்து நிர்வாணமாக வீதியில் விரட்டித் தண்டித்த 19-ம் நூற்றாண்டுக் காட்சிகள் துரத்துகின்றன.
இன்னும் தொடர்பவை
இப்போதும் நடப்பதென்ன? காது கேட்காத சிறுமியை, “ஏய் செவிடு! சொல்றது காதுல விழலையா?”என்று கேட்டுக் கன்னத்தில் ஓங்கி அறையும் ஆசிரியர்கள், வகுப்பு பூராவும் சுற்றி வளைத்து ஒரு சிறுவனைக் கொட்டவைத்த ஆசிரியர்கள், “ரெட்டைச் சடை போட்டுட்டு வரத் தெரியுது; ஹோம் வொர்க் போட முடியலையா” என்று அநாகரிகமாக உடல் அலங்காரங்களில் தலையிட்டுச் சிறுமியை வகுப்பறை வாசலில் அழ வைத்த ஆசிரியைகள், சில குழந்தைகளுக்கு ‘டிஸ்லெக்சியா’என்றொரு பிரச்சினை இருக்கிறது என்றறியாமலே, எழுத்துகளைப் பிறழ்ந்து எழுதும் குழந்தையை “ஏய்… ஏண்டா வவ்வால் மாதிரி எழுதுறே?” என்று ஆத்திரப்பட்டு வகுப்பை விட்டுத் துரத்திய ஆசிரியர்கள்... இவையெல்லாம் எப்போதோ, எங்கோ நடந்தவை அல்ல; இன்னும் தொடர்பவைதான்.
இரண்டாண்டுகளுக்கு முன் ஒரு மழலையர் பள்ளி ஆண்டு விழாவுக்குச் சென்றிருந்தேன். கலை நிகழ்ச்சியின்போது, ஒரு சிறுமி அசைவுகளை மெதுவாகச் செய்தாள் என்பதற்காக மேடைக்குள் நுழைந்து ஆசிரியை அச்சிறுமியை நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றினார். அந்தச் சிறுமியைக் கவனித்தேன். விலகித் தனிமைப்பட்ட அவள், பள்ளியின் சிறு மைதானத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த மணல்மேட்டில் தனியாக உட்கார்ந்திருந்தாள். கண்கள் நனைந்திருந்தன. தனக்குள் பேசிக்கொண்டிருந்தாள். எனக்கு அந்தக் காட்சி இப்போது நினைத்தாலும் இடியாய் இறங்குகிறது. கூப்பாடு போட்டு வரும் மரணங்கள் இறுதியில் - முடிவுரையாக - வெளிப்பட்டு நிற்கின்றன. ஆனால், அவற்றின் முகவுரையாக, வீடுகளிலும் பள்ளிகளிலும் சத்தமில்லாமல் நிகழும் மரணங்களை எப்போது நாம் வாசிக்கப்போகிறோம்?
- ச. மாடசாமி, கல்வியாளர், ‘எனக்குரிய இடம் எங்கே?’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர், தொடர்புக்கு: smadasamy1947@gmail.com

தூக்குக்கு எப்போது தூக்கு?

தூக்குக்கு எப்போது தூக்கு?

*

இன்றைக்கு நம்முடைய ஞாபக அடுக்குகளில் புதைந்துவிட்ட 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தை மீண்டும் நினைவுகூர்வது பலருக்குச் சங்கடம் அளிப்பதாக இருக்கலாம். எனினும், நியாயத்தின் உண்மையை நோக்கி நகர வேண்டும் என்றால், ஆரம்பக் கதைகளை நாம் புறக்கணிக்க முடியாது. காட்சி ஊடகங்களால் ‘தேசத்தின் மீதான போர்’ என்று வர்ணிக்கப்பட்ட 2008 மும்பை தாக்குதலைவிடவும் பெரும் உயிர்ச் சேதத்தை உருவாக்கிய பயங்கரவாத நடவடிக்கை அது. 1993 மார்ச் 12 அன்று மதியம் 1.33-க்கும் 3.40-க்கும் இடையே மும்பை அன்றைய பம்பாய் - கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்த ஒரு நகரமாகத்தான் இருந்தது.
முதல் குண்டு வெடித்தது மும்பைப் பங்குச்சந்தையில், அடுத்து கதா பஜார், சேனா பவன், செஞ்சுரி பஜார், மாஹீம், ஏர் இந்தியா வளாகம், சவேரி பஜார், ஹோட்டல் சீராக், பிளாஸா திரையரங்கம், ஜுஹு செந்தூர் ஹோட்டல், விமான நிலையம்… 127 நிமிடங்களில் அடுத்தடுத்து 12 இடங்களில் வெடித்தன குண்டுகள். சர்வதேச அளவில் முதல் முறையாக பயங்கரவாதக் குழுக்களால் ‘ஆர்டிஎக்ஸ்’ குண்டுகள் பயன்படுத்தப்பட்டதும், உலகப் போருக்குப் பின் பெருமளவில் பயன்படுத்தப்பட்டதும் இந்தச் சம்பவத்தில்தான். எங்கும் ரத்தச் சகதியும் மரண ஓலமும். 257 பேர் செத்துப்போனார்கள். 713 பேர் படுகாயமுற்றார்கள்.எல்லா மதத்தினரும்தான் அதில் அடங்கியிருந்தார்கள்.
பாபர் மசூதி இடிப்பின் தொடர்ச்சியாக, அதற்கு இரு மாதங்களுக்கு முன்புதான் தொடர்ச்சியான மதக் கலவரங்களைச் சந்தித்திருந்தது நகரம். ஒவ்வொரு நாளும் இங்கே 10 பேர், அங்கே 15 பேர் என்று கிட்டத்தட்ட 900 உயிர்களைப் பறித்திருந்தன அந்தக் கலவரங்கள். இத்தகைய சூழலில், இந்தத் தொடர் குண்டுவெடிப்பு உருவாக்கிய சேதங்களைவிடவும், இது எத்தகைய பின்விளைவுகளை உருவாக்கும் என்ற அச்சம் ஏற்படுத்திய கலக்கம் அந்நாட்களில் அதிகம். பாகிஸ்தான் பின்னிருந்து நிகழ்த்திய மிகப் பெரிய சதி அது.
இந்த வழக்கை 20 வருஷங்கள் விசாரித்தது இந்திய நீதித் துறை. 2013 மார்ச் 22 அன்று இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். வழக்கின் பிரதான குற்றவாளிகளாகக் கருதப்படும் தாவூத் இப்ராஹிம், அனிஸ் இப்ராஹிம், டைகர் மேமன் ஆகியோர் சிக்காத நிலையில், இந்தியப் புலனாய்வு அமைப்புகளாலும் விசாரணை நீதிமன்றத்தாலும் தன் முன் நிறுத்தப்பட்டவர்களில், பெரும்பாலானோருக்கு ஆயுள் தண்டனை விதித்தது; யாகூப் மேமனுக்கு மட்டும் தூக்குத் தண்டனையை உறுதிசெய்தது.
இன்றைக்கு யாகூப் மேமன் தூக்குக் கயிற்றின் முன் நிறுத்தப்பட்டிருக்கும் சூழலில், நம்மைச் சுற்றி இரு கோஷங்கள் உரக்க எழுப்பப்படுவதைக் கேட்க முடிகிறது. “இப்படியான பயங்கரக் குற்றங்களோடு தொடர்புடைய யாகூப் மேமனைப் போன்றவர்கள் திருந்தவே மாட்டார்கள், அவரை உடனே தூக்கிலிட வேண்டும்” என்பது முதலாவது. “பிரதான குற்றவாளிகள் கிடைக்காத நிலையில், அகப்பட்ட அப்பாவியைத் தூக்கிலிட்டு ஆறுதல் தேடிக்கொள்கிறது இந்திய அரசு” என்பது இரண்டாவது. அடிப்படையில், இவை இரண்டுமே இரு துருவங்களைத் தொட்டு நிற்கும் வாதங்கள். இரண்டுமே ஆபத்தானவை. மரண தண்டனைக்கு எதிராகப் பேசுவது வேறு; அதற்கான நியாயங்களை அடுக்கப்போய் அதன் உச்சத்தில் குற்றவாளிகளை அப்பாவிகளாக உருமாற்றுவது வேறு.
மும்பை வீதிகளில் வெள்ளந்தியாகப் போய்க் கொண்டிருந்த யாரோ ஒருவர் அல்ல யாகூப் மேமன். பிரதான குற்றவாளிகளால் ஒருவரான டைகர் மேமனின் தம்பி என்பதைத் தாண்டியும் இந்தச் சம்பவத்தில் அவருக்கு இருந்த தொடர்புகளை விசாரணை அமைப்புகள் நிரூபித்திருக்கின்றன. “குண்டுவெடிப்புக்கு முந்தைய நாள் அவர் மும்பையைவிட்டு, துபாய்க்குப் புறப்பட வேண்டிய தேவை என்ன?” என்ற ஒரு வரிக் கேள்வி போதுமானது அவருக்கு இந்தச் சம்பவத்தில் உள்ள தொடர்புக்கு. நம் நாட்டில் ஒவ்வொரு நாளும் விசாரணையை எதிர்கொள்ள வசதியும் இல்லாமல், படிப்பறிவும் இல்லாமல், மொழியும் தெரியாமல் தனது விதியை நொந்துகொண்டு சிறைக்குள் வதைப்படும் எத்தனையோ ஆயிரம் ஏழைக் கைதிகள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் அல்ல யாகூப். ஒரு தணிக்கையாளர். நல்ல ஆங்கில அறிவுகொண்டவர். வசதியானவர். போதுமான அவகாசம் அவருக்கு தரப்பட்டிருக்கிறது தன்னுடைய தரப்பை நிரூபிப்பதற்கு. இத்தனையையும் கடந்துதான் அவருடைய குற்றத்தை உறுதிசெய்திருக்கிறது நீதிமன்றம்.
யாகூப் மேமன் குற்றவாளி என்பது எப்படி நம்மில் பலருக்கும் நேரடியாகத் தெரியாதோ, அப்படியே அவர் நிரபராதி என்பதும் நமக்கு நேரடியாகத் தெரியாதது. இந்த வழக்கின் முடிவையே மாற்றக்கூடும் என்று சொல்லப்பட்ட, இந்த வழக்கின் புலனாய்வு அதிகாரிகளில் ஒருவரான மறைந்த ராமன் எழுதிய கட்டுரையிலும்கூட “தூக்கிலிடும் அளவுக்குக் குற்றங்களைச் செய்திடாத ஒருவரின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று முடிவெடுத்தேன்” என்றே யாகூப் மேனின் குற்றத்தைக் குறிப்பிடுகிறார் ராமன்; “குற்றத்தோடு தொடர்பே இல்லாதவர் யாகூப்” என்று அல்ல.
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸிடம் “யாகூப் மேமனை உடனடியாகத் தூக்கிலிட வேண்டும்” என்று மனு அளித்தவர்களில் ஒருவரான துஷார் தேஷ்முக் கேட்கிறார்: “யாகூப் நிரபராதி என்றால், என் அம்மா எப்படி இறந்தார்? இன்றைக்கு யாகூப்புக்காகப் பேசுபவர்கள் ஒருவர்கூட ஏன் எங்கள் நியாயத்தைப் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள்? எங்களுக்கான நீதி என்பது என்ன, சதிகாரர்களுக்கான தண்டனைதானே?”
நாம் இந்தத் தவறைத் தொடர்ந்து செய்கிறோம், மரண தண்டனைக்கு எதிர்க் குரல் என்ற பெயரில் குற்றங்களிலிருந்து ஒருவரை விடுவிக்கும் வேலையில் ஈடுபடுவது; கூடவே நீதி அமைப்புகள் மீதான நம்பிக்கையை முற்றிலுமாகக் குலைப்பது. இது முறையற்றது மட்டும் அல்ல; நாம் எவருடைய உயிருக்காகக் குரல் கொடுக்கிறோமோ, அவர்களுக்கும் எதிராகத் திரும்பக் கூடியது. இன்னமும் நம் சமூகத்தில் மரண தண்டனைக்கு ஆதரவான குரல்களே ஆகப்பெரும்பான்மைக் குரல்கள் என்பதை நாம் மறந்துவிடலாகாது. வாதத்தில், நம்முடைய குரல்கள் உச்சத்தில் உண்மையற்றதாக மாறும்போது, எதிர்க் குரல்கள் உச்சத்தில் வெறுப்பை நோக்கியே நகரும்.
ஒரு கொலையை எதன் பொருட்டும் நியாயப்படுத்த முடியாது. இந்த ஒரு எளிய நீதி போதும் மரண தண்டனையை ஒழித்துக்கட்டுவதற்கு. ஒரு நாகரிகச் சமூகம் ஒருபோதும் மரணத்தை ஒரு நீதி வழிமுறையாகக் கொண்டிருக்க முடியாது. அதுவும் “கண்ணுக்குக் கண் என்பது ஒட்டுமொத்த உலகத்தையும் குருடாக்கவே வழிவகுக்கும்” என்று சொன்ன மகாத்மாவை தேசப் பிதாவாகக் கொண்ட இந்த தேசம் மரண தண்டனையைச் சுமந்துகொண்டிருப்பது அடிப்படை பொருத்தமற்றது. நாம் யாருடைய குற்றங்களுக்கும் வக்காலத்து வாங்க வேண்டியதில்லை. மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும். குற்றவாளி திருந்தி வாழ வாய்ப்பளிக்க வேண்டும். இது இன்றைக்கு யாகூப் மேமனுக்கு மட்டும் அல்ல; நாளை டைகர் மேமன், தாவூத் இப்ராஹிம் பிடிபட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டாலும் அவர்களுக்கும் பொருந்தும். கொலைகாரர்களுக்காகவும் பயங்கரவாதிகளுக்காகவும் ஒட்டுமொத்த சமூகமும் கொலைகாரர்களாகவும் பயங்கர வாதிகளாகவும் ஆக முடியாது!

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

***************


எஸ். ஹுஸைன் ஜைதி
COMMENT (6)   ·   PRINT   ·   T+  
யாகூப் மேமன் | கோப்புப் படம்
யாகூப் மேமன் | கோப்புப் படம்

தூக்குக்கு எப்போது தூக்கு?

*
யாகூப் மேமன் தனது கர்ப்பிணி மனைவி ராஹினைக் கராச்சியில் விட்டுவிட்டு காத்மாண்டுவில் இருக்கும் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் ஜூலை 1994-ல் சரணடைந்தார். ராஹினுக்கு துபாயில் குழந்தை பிறந்தது. தானும் குழந்தையும் யாகூபுடன் மறுபடியும் சேர்ந்து புதுடெல்லியில் புதுவாழ்க்கை தொடங்கலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார் அவர்.
“நான் மனசாட்சி உள்ள மனிதன். டைகரின் தவறான செயல்களிலிருந்து என்னைத் துண்டித்துக்கொள்ள விரும்பினேன்” என்றார் யாகூப் மேமன். அது 1998-ல் நடந்தது. அப்போது நான் மும்பையில் பத்திரிகையாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்தேன். ‘பிளாக் ஃபிரைடே’ என்ற எனது புத்தகத்துக்காக ஆய்வு மேற்கொண்டிருந்தேன். யாகூபைச் சந்தித்தபோது, தனது கதையைப் பகிர்ந்துகொள்வதில் ஆர்வமாக இருந்தார். ஆனால், விசாரணை முடிவதற்கு முன் அந்தக் கதையை நான் எழுதப்போய், அதனால் இந்த வழக்குக்கு ஏதாவது குந்தகம் ஏற்படுமோ என்று அவர் பயந்தார். அவ்வப்போது தெளிவற்ற சில தகவல்களை உதிர்ப்பார். அவற்றை நான் பின்தொடர்ந்து சென்றால், மிகவும் முக்கியமான தகவல்களாக அவை இருக்கும்.
புத்திசாலித்தனமான, மனசாட்சியுள்ள மனிதர் யாகூப். சார்ட்டர்டு அக்கவுன்ட்டன்டாக இருந்திருக்கிறார். இந்து மதத்தவரான தனது பங்குதாரர் சேத்தன் மேத்தாவுடன் இணைந்து வெற்றிகரமான நிறுவனம் ஒன்றை நடத்திவந்தார். சிபிஐ-க்கு யாகூப் அளித்த வாக்குமூலத்தின்படி, மும்பை தொடர் குண்டுவெடிப்புகளைப் பற்றி அவர் முதன்முதலில் கேள்விப்பட்டது, துபாயில் இருந்தபோது 1993 மார்ச் 13 அன்று மாலை 4 மணிக்கு பிபிசி செய்திகள் மூலமாகத்தான்.
பாகிஸ்தானில் சிறைவைப்பு
துபாயில் இருந்த ஒட்டுமொத்த மேமன் குடும்பமும் குண்டுவெடிப்புகளைப் பற்றிக் கேள்விப்பட்டு அதிர்ந்துபோனார்கள். டைகர் மேமன் மட்டும் விதிவிலக்கு. அவர் அந்தக் குண்டுவெடிப்புகளைக் கொண்டாட விரும்பினார். துபாய் அரசு அந்தக் குடும்பத்தினரை அவசர அவசரமாக இந்தியாவுக்கு அனுப்பிவிடுமோ என்ற அச்சத்தில் அவர்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டியிருந்திருக்கிறது. அங்கே அவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை டைகர் செய்திருந்தார். கராச்சியில் வெவ்வேறு மாளிகைகள், ராணுவக் குடியிருப்புகள் என்று அவர்கள் மாற்றப்பட்டுக்கொண்டேயிருந்தார்கள். எனினும், டைகர் மேமனையும் அயூப் மேமனையும் தவிர, ஒட்டுமொத்த மேமன் குடும்பத்தினருக்கும் இப்படிச் சிறைவைக்கப்பட்டிருப்பது குறித்துத் துளியும் விருப்பமில்லை. அவர்கள் தாய்நாடு திரும்புவதற்கு ஏங்கிக்கொண்டிருந்தார்கள்.
யாகூப் ஒன்றும் துணிச்சல் மிக்கவர் அல்ல. ஆனால், ஒரு நொடியில் ஏற்படும் துணிவுதான், துணிச்சலான நபரையும் கோழையையும் வேறுபடுத்துகிறது. தனது கொடிய சகோதரனையும் ஐஎஸ்ஐயையும் மீறிக்கொண்டு, எல்லாவற்றையும் எதிர்கொண்டு இந்தியா திரும்புவதென்ற முடிவை அவர் தீர்க்கமாக எடுத்தார். மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஐஎஸ்ஐயின் முக்கியப் புள்ளியான தௌஃபிக் ஜாலியாவாலாவுக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்ட ஆரம்பித்தார். ரகசிய இடங்களை வீடியோ எடுத்துக்கொண்டார்; புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார்; உரையாடல்களையெல்லாம் பதிவு செய்துகொண்டார். பிறகு, போலி பாஸ்போர்ட்டுகள், பாகிஸ்தான் அரசு வழங்கியிருந்த வெவ்வேறு அடையாள அட்டைகள் போன்ற ஆவண ஆதாரங்களைத் திரட்டிக்கொண்டார்.
தனது பயணப்பெட்டி முழுவதும் ஆதாரங்கள் நிரம்பியதும், காராச்சி-காத்மாண்டு-துபாய்-காத்மாண்டு-கராச்சி என்று சுற்றுவழி பயணச்சீட்டை லூஃப்தான்ஸா விமானத்தில் எடுத்துக்கொண்டார். அவர் திரும்பிவருவார் என்ற உறுதியில் ஐஎஸ்ஐ ஆட்கள் அவரது பயணத்துக்கு முட்டுக்கட்டை போட மாட்டார்கள் என்ற நம்பிக்கையில்தான் இப்படி ஒரு ஏற்பாடு. இந்தியாவுக்கு நேரடியாகப் போக முடியாதென்பது யாகூபுக்குத் தெரியும். பாகிஸ்தான் அதிகாரிகளும் துபாய் அதிகாரிகளும் கூட்டாளிகள் என்பதால், துபாயில் சரணடைவது என்பது மிகவும் ஆபத்தாக முடிந்துவிடும். நேபாளம் இந்தியாவுக்கு நெருக்கமான நாடு என்று அவர் நினைத்ததால் காத்மாண்டுவைத் தேர்ந்தெடுத்தார். நம்பகத்தன்மை கொண்ட ஒரு தவறை அவர் வேண்டுமென்றே செய்ய நினைத்தார்.
பாதுகாப்புப் பரிசோதனையின்போது யாகூப் தனது பெட்டியைத் திறப்பதற்காக வேண்டுமென்றே தடுமாறியபோது, நிறைய பாஸ்போர்ட்டுகள் பெட்டியிலிருந்து சிதறிக் கீழே விழுந்தன. அதிகாரிகள் பிடித்தார்கள். யூசுஃப் அஹமத் என்ற பெயரில் சென்றிருந்த அவர் தனது உண்மையான பெயர் யாகூப் மேமன் என்ற உண்மையை, தான் பிடிபட்ட உடனேயே வெளிப்படுத்தினார். ரகசிய ஏற்பாட்டின்படி 48 மணி நேரத்துக்குள் அவர் இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டார். சிபிஐ தரப்பு கூறும் விளக்கம் சற்றே மாறுபடுகிறது. பாதுகாப்பு அதிகாரிகள் யாகூபின் பெட்டியில் துப்பாக்கி போன்ற ஏதோ ஒன்றைக் கண்டதாகவும் அதனால் பெட்டியைத் திறந்துகாட்ட அவர்கள் கேட்டதாகவும் அப்போதுதான் பாஸ்போர்ட்டுகள் சிதறி விழுந்தன என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.
நேபாளத்தில் கைதுசெய்யப்பட்ட பிறகு, நேபாள எல்லைக்கு அருகே யாகூப் விடப்பட்டார். தனி விமானம் ஒன்றில் அங்கிருந்து புதுடெல்லி அழைத்துவரப்பட்டார். புதுடெல்லி ரயில் நிலையத்தில் அவர் கைதுசெய்யப்பட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால், அப்படியெல்லாம் ஏதும் தன் வாழ்க்கையில் நிகழவேயில்லை என்று தான் எழுதிய கடிதமொன்றில் யாகூப் தெரிவிக்கிறார்.
வெகு விரைவில் யாகூப் எல்லா இடங்களுக்கும் கொண்டுசெல்லப்பட்டுக் காட்சிக்கு வைக்கப்பட்டார். சில வாரங்களுக்குள், யாகூப் மேமனின் உதவியோடு, மேமன் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களையும் துபாயிலிருந்து இந்தியாவுக்கு வரச்செய்தது சிபிஐ. யாகூப் கைதுசெய்யப்பட்டதும் மேமன் குடும்பத்தினரின் மற்ற உறுப்பினர்கள் எல்லோரும் அவர்களுடைய முந்தைய திட்டத்தின்படி இந்தியாவுக்குத் திரும்பலாம் என்ற நம்பிக்கையில் துபாய்க்குச் சென்றிருந்தனர்.
பரபரப்பான ஒரு நடவடிக்கையின் மூலம் மேமன் குடும்பத்தினரை ஐஎஸ்ஐயின் கண்காணிப்பிலிருந்து சிபிஐ அதிகாரிகள் அப்புறப்படுத்தினார்கள். பின்தொடரும் ஐஎஸ்ஐ ஆட்களை ஏமாற்றிவிட்டு, மேமன் குடும்பத்தினரில் எட்டுப் பேரை இந்தியாவுக்கு சிபிஐ அழைத்துவந்தது. எட்டு பாகிஸ்தான் பாஸ்போர்ட்டுகளில் சில நிமிடங்களுக்குள், அதுவும் விண்ணப்பதாரர்களைச் சந்திக்காமலேயே, இந்திய விசாக்களுக்கான முத்திரை இடப்பட்டது இந்திய வரலாற்றிலேயே இதுதான் ஒற்றை நிகழ்வாக இருக்கலாம். டைகர், அயூப், அவர்களின் மனைவியர் ஆகியோர் தவிர, ஒட்டுமொத்த மேமன் குடும்பமும் திரும்பிவந்துவிட்டார்கள். ஒரு மாதக் குழந்தை ஜுபைதாவைக் கைகளில் ஏந்திய ராஹினும் சில நாட்களுக்குப் பிறகு அவர்களோடு சேர்ந்துகொண்டார்.
மன்னிப்பு கிடைக்குமென்ற நம்பிக்கையில்
ஒட்டுமொத்த நடவடிக்கையும் சாத்தியமானது ஒரே ஒரு மனிதரின் அசாத்தியமான துணிவாலும் உறுதியாலும்தான்: அவர்தான் யாகூப் மேமன். கிட்டத்தட்ட சாத்தியமே இல்லாத இந்தப் பணியை நிறைவேற்றியதற்குப் பரிசாகத் தண்டனைக் குறைப்பும் மன்னிப்பும் கிடைக்கும் என்று யாகூப் எதிர்பார்த்தார். ஆனால், அரசு அவர் மீது தாக்குதல் நிகழ்த்த ஆரம்பித்தது. சிறையில் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். ‘என்கவுன்ட்டர்’ செய்யப்போகிறோம் என்று சொல்லி, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கும்கூட ஒரு முறை அழைத்துப்போயிருக்கிறார்கள். ஆனால், தொலைக்காட்சியிலும், ஆரம்பத்தில் தன்னைக் கையாண்ட சிபிஐ அதிகாரிகளிடமும் சொல்லியவற்றைத் தவிர, சொல்வதற்கு யாகூபிடம் வேறு எதுவும் இல்லை.
தண்டனை நிறுத்திவைக்கப்படும் என்று அவர் எதிர்நோக்கிக்கொண்டிருந்தார். வாரங்கள் மாதங்களாகின, மாதங்கள் ஆண்டுகளாகின, ஆண்டுகள் தசாப்தங்களாகின. இப்போது அவர் தூக்கு மேடையில் நிற்கிறார். ஒட்டுமொத்த விசாரணையிலும் பெரிய இழப்பு யாகூபுக்கு என்பதுதான் இதில் முரண்பாடான விஷயம். இந்திய விசாரணை முகமைகளுக்கு ஏராளமான ஆதாரங்களை அவர் கொடுத்து உதவியிருக்கிறார். அதனாலேயே, இந்தத் திட்டத்தின் மூளை என்று கடைசியில் ஆக்கப்பட்டிருக்கிறார். ஒருமுறை டைகர் மேமனும் யாகூப் மேமனும் அனல்பறக்க விவாதித்தபோது, டைகர் மேமன் யாகூபிடம் சொல்லியிருக்கிறார், “காந்தியவாதியாக இந்தியாவுக்கு நீ போகிறாய், ஆனால் கோட்சேவாக நீ இந்தியாவில் தூக்கிலிடப் படுவாய்”. இதற்கு யாகூப் மேனன் இப்படிப் பதிலடி கொடுத்தார், “நீ சொன்னது தவறு என்பதைக் கடைசியில் நான் நிரூபிப்பேன்.”
இந்த உலகில் டைகர் மேமன்கள் சொல்வதெல்லாம் உண்மையாகிவிடுவதும் யாகூப்களெல்லாம் தூக்கு மேடைக்கு அனுப்பப்படுவதும்தான் பெரும் துயரம்!
- எஸ். ஹுஸைன் ஜைதி, புலனாய்வுப் பத்திரிகையாளர், மும்பை தொடர் குண்டுவெடிப்புகளைப் பற்றிய ‘பிளாக் ஃபிரைடே’ புத்தகத்தின் ஆசிரியர்.
© ‘தி இந்து’ (ஆங்கிலம்),

புதன், 29 ஜூலை, 2015

https://www.reddit.com/


Dr.A.P.J Kalam - குழந்தைகளின் ராஷ்டிரபதி! (Tamil)

சமஸ்
COMMENT   ·   PRINT   ·   T+  

‘உலகுக்கு உண்மையான அமைதியைக் கற்பிக்க வேண்டும் என்று நாம் விரும்பினால், குழந்தைகளிடமிருந்துதான் அதைத் தொடங்க வேண்டும்’ என்றார் காந்தி. குழந்தைகளின் உலகோடு எப்போதுமே நெருக்கமாகத் தன்னை வைத்துக்கொண்டவர் அவர். நாட்டின் முதல் பிரதமரும் தொலைநோக்காளருமான நேருவிடமும் அந்தப் பண்பு இருந்தது. குழந்தைகள் மீது அவர் காட்டிய அளப்பரிய நேசம், அவர்களுடைய எதிர்காலம் மீதான அவருடைய கனவுகள் ஆகியவற்றின் வெளிப்பாடுகளில் ஒன்றுதான், நாடு முழுவதும் திறக்கப்பட்ட பொதுப் பள்ளிகளில் தொடங்கி எய்ம்ஸ், ஐ.ஐ.டி. ஐ.ஐ.எம். வரை நீண்டது. உண்மையில், சுதந்திர இந்தியாவின் முன்னோடிகள் நமக்கு அற்புதமான ஒரு முன்னுதாரணத்தையும் கலாச்சாரத்தையும் உருவாக்கித் தந்துவிட்டுத்தான் போயிருக்கிறார்கள். ஆனால், அதற்குப் பின் அந்த மரபு எங்கே அறுபட்டுப்போனது?
பிரதமர், முதல்வர்கள் இருக்கட்டும்; இன்றைக்கெல்லாம் எத்தனை அமைச்சர்களை மக்களால் நேரடியாக அணுக முடியும்! மூத்தவர்களுக்கே இதுதான் கதி என்றால், சாமானியர்களின் குழந்தைகளையும் பொருட்படுத்துபவர்கள் இருக்கிறார்களா என்ன? முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் சமகால இந்திய அரசியல் வர்க்கம் ஏதேனும் கற்றுக்கொள்ளப் பிரியப்பட்டால், அந்த வரிசையில் முதலாவது இது: குழந்தைகளுக்கு அவர் கொடுத்த முக்கியத்துவம்.
அப்துல் கலாம் மறைவுக்கு அஞ்சலி தெரிவித்து, சமூக வலைதளங்களில் பகிரப்படும் பதிவுகளைப் பார்த்தவர்கள் ஒரு விஷயத்தைக் கவனித்திருக்க முடியும். பலர் தங்களுடைய பதிவுகளோடு கூடவே கலாமுடன் அவர்கள் இருக்கும் படத்தையும் பகிர்ந்திருந்தார்கள். நம் காலத்தில் அவ்வளவு எளிமையாக அணுகக் கூடியவராக இருந்த ஒரே பிரபலம்-கலாம். உலகின் மிகப் பெரிய ஆட்சியாளர் மாளிகையான, 370 ஏக்கர் ராஷ்டிரபதி பவனில் அதிகமான பொதுமக்கள் உள்ளே நுழைய முடிந்த காலகட்டம், கலாமுடைய காலகட்டமாகவே இருக்கும். பெரும்பகுதி விருந்தினர்கள் குழந்தைகள் - மாணவர்கள். அவரைச் சந்தித்துவந்த பலர் அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க முடிந்தது. அவருடன் தொலைபேசியில் பேச முடிந்தது. மின்னஞ்சல் அனுப்பிப் பதில் பெற முடிந்தது. அவருக்குக் கடிதம் எழுதினால், நிச்சயம் பதில் வரும்.
குழந்தைகள் மீதும் இயல்பாகவே அவருக்கு மிகப் பெரிய அன்பு இருந்தது. அதனால்தான் தன்னுடைய வாழ்வின் மைல்கற்களாக அவர் குறிப்பிடும் நான்கு சாதனைகளில் ஒன்றாக - செயற்கைக்கோள் ஏவுகலன் (எஸ்எல்வி), அக்னி, பொக்ரான் அணுகுண்டு சோதனை ஆகியவற்றுக்கு இணையானதாக - ஊனமுற்ற குழந்தைகளுக்கான எடை குறைந்த செயற்கைக் கால்கள் வடிவமைப்பை அவரால் செயல்படுத்த முடிந்தது.
ஒரு பத்திரிகையாளனாக அவர் பங்கேற்ற பல நிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறேன். ஒரு ஊருக்கு அவர் வருகிறார் என்றால், நிச்சயம் அவருடைய நிகழ்ச்சி நிரலில் பள்ளி / கல்லூரிகள் நிகழ்ச்சிகளுக்கு ஒரு இடமேனும் இருக்கும். ஒருகட்டத்தில் அவரைப் பொது நிகழ்ச்சிகளுக்கு அழைக்க ஒப்புதல் பெற வேண்டும் என்றால், கூடவே பள்ளி - கல்லூரி நிகழ்ச்சிகளுக்கான திட்டங்களையும் முன்மொழிந்தால், ஒப்புக்கொள்வார் என்ற சூழல்கூட உருவானது. இப்படிக் கல்வி நிலையங்களைத் தேடி வரும்போதெல்லாம், தான் மேடையில் நின்று பேச ஏனையோர் கீழே அமர்ந்து கேட்டுக் கை தட்டல் பெற வேண்டும் என்று விரும்பியவர் அல்ல அவர். மாறாக, குழந்தைகள் மத்தியில், அவர்களில் ஒருவராகக் கலந்துரையாடியவர். குழந்தைகளை அதிகம் பேசவைத்து தான் கை தட்டியவர். கல்வி நிலையங்களுக்குச் செல்லும்போதும் கூடவே, தாமதமாகச் செல்லும் கலாச்சாரத்தையும் கூட்டிவந்து, குழந்தைகளைக் கடும் வெயிலில் கால் கடுக்க நிற்கவைத்து வதைக்கும் நம்முடைய அரசியல்வாதிகள் மத்தியில், கால தாமதமாகச் செல்வதைக் குற்றமாகக் கருதியவர். “குழந்தைகள் நமக்குத் தெரியாமலே நம்மிடமிருந்து நிறையக் கற்றுக்கொள்கிறவர்கள்; நாம் அறியாமலே நமக்கு நிறையக் கற்றுக்கொடுப்பவர்கள்; நாம் ரொம்பவே மதிப்போடும் ஜாக்கிரதையோடும் அணுக வேண்டியவர்கள்” என்பார்.
அவர் செல்லுமிடங்களிலெல்லாம் ‘கனவு காணுங்கள்’என்று போதிப்பதைப் பின்னாளில் மோசமாகப் பகடிசெய்தவர்கள் உண்டு. குழந்தைகளின் கனவுகளை வெறும் பிழைப்புக்கான தேடலாக மட்டுமே உருமாற்றிவிட்ட இந்தக் காலகட்டத்தில், அவர் விதைத்த சமூகப் பெரும் கனவுகள் அர்த்தமுடையவையாகவும் முக்கியமானவையாகவுமே தோன்றுகின்றன.
கலாமுக்குள் எப்போதும் ஓர் ஆசிரியர் இருந்தார்; எப்போதும் ஒரு மாணவரும் இருந்தார். இதுபற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது ஒருமுறை சொன்னார்:
“என்னை எப்போதும் வழிநடத்தும் கவிதை வரிகள் இவை. நான் சின்ன வயதில் படித்தவை:
‘உனது எல்லா நாட்களிலும்
தயாராக இரு
எவரையும் சம உணர்வுடன் எதிர்கொள்
நீ பட்டறைக் கல்லானால்
அடிதாங்கு
நீ சுத்தியலானால்
அடி!’ ’’
குழந்தைகளின் உலகோடு நெருக்கமானவர்களுக்குத்தான் இது சாத்தியம்!
**************

கலாமும் அறிவியலும்!

த.வி. வெங்கடேஸ்வரன்
COMMENT   ·   PRINT   ·   T+  
அப்துல் கலாம்
அப்துல் கலாம்
குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் தேர்வுசெய்யப்பட்ட பின், பதவியேற்பு விழாவை ஏற்பாடுசெய்ய அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டார். அந்த அமைச்சர் அப்போது சென்னையிலிருந்த கலாமைத் தொடர்புகொண்டு, “கலாம்ஜி நீங்கள் பதவி ஏற்க நல்ல நேரம் தேர்வு செய்துகூறுகிறீர்களா?” என்று கேட்டாராம். அதற்கு கலாம் சொன்னாராம், “பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணி நேரம் பிடிக்கிறது. அவ்வாறு சுற்றிக்கொண்டே சூரியனைச் சுற்றுகிறது. அவ்வாறு சூரியனைச் சுற்றிவர அதற்கு 365 நாள் பிடிக்கிறது. அதுபோல சூரியன் விண்மீன் திரளையும் சுற்றுகிறது. ஆகவே ‘நேரம்’ என்பது இந்த நடைமுறையைக் குறிக்கும் ஒரு நிகழ்ச்சி. அது ஒரு வானவியல் நிகழ்ச்சியே தவிர, ஜோதிட நிகழ்ச்சி இல்லை.” எப்போதுமே சரி, அவர் ஒரு விஞ்ஞானியாகவே இருந்தார்!
அரசுப் பள்ளி ஒன்றில் தமிழ்வழிக் கல்வியில் தன் தொடக்கக் கல்வியைத் தொடங்கிய கலாம், எம்.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் வானூர்தி தொழில்நுட்பப் பொறியியல் படிப்பை முடித்தார். பெங்களூரில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் நிறுவனத்தில் பயிற்சிப் பொறியாளராகப் பணியில் சேர்ந்தார். பின் 1962-ல் திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோவின் தும்பா ராக்கெட் தளத்தில் பணியில் சேர்ந்தார். அப்போது இஸ்ரோ ‘எஸ்எல்வி -3’ வடிவமைப்பில் ஈடுபட்டுவந்தது. 17 டன் எடை கொண்ட நான்கு அடுக்கு ‘எஸ்எல்வி -3’ 35 கிலோ கொண்ட செயற்கைக்கோளைப் புவியின் தாழ்வட்டப் பாதையில் செலுத்த வேண்டும். இந்த ராக்கெட் வடிவமைப்பு, தயாரிப்பு உருவாக்கம் செய்ய 1972-ல் கலாமின் தலைமையில் திட்டக்குழு அமைக்கப்பட்டது. வேறு எந்த நாடும் தொழில்நுட்பத்தைப் பகிராத சூழலிலும் சுயசார்புடன் கடுமையான முயற்சியில் வடிவமைத்தார் கலாம். குறிப்பாக, எடை குறைவான ஆனால் இழை வலுவூட்டிய பிளாஸ்டிக் பொருளைக்கொண்டு ராக்கெட் போன்ற ஏவுவூர்திகளைத் தயாரிப்பதில் முக்கியப் பங்கு அவருடையது.
ராக்கெட் வடிவமைப்பில் 44 முக்கியத் துணை அமைப்புகள் இணைந்து இயங்க வேண்டும். இவரது தலைமையில் ரோஹிணி செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக 1980-ல் ஏவப்பட்டது. ராக்கெட் தொழில்நுட்பத்தில் அதுவரை வலிமை பெற்றிருந்த ஐந்து நாடுகளுடன் ஆறாவதாக இந்தியாவும் இணைந்தது. இதே வலிமை கொண்ட ராக்கெட்டைத் தயாரித்து வெற்றிகரமாக ஏவ, அமெரிக்காவுக்குச் சுமார் பத்துப் பன்னிரண்டு ஆண்டுகள் பிடிக்க, வெறும் ஏழே ஆண்டுகளில் இஸ்ரோ வெற்றிகரமாகச் செலுத்தி சாதனை படைத்தது, கலாமின் தலைமையில்!
இஸ்ரோவில் தனது பணி முடிந்ததும் அடுத்த சவாலைச் சந்திக்கத் தயாரானார் கலாம். ராணுவ தேசியப் பாதுகாப்புக்கு ஏவுகணைகள் அவசியமாயின. குறிப்பாக, அமெரிக்கா சில அண்டை நாடுகளுக்கு ராணுவத் தளவாடங்கள் வழங்க முன்வந்த அந்தக் காலகட்டத்தில் இது ஒரு பெரும் சவாலாக எழுந்தது.
1982-ல் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்ட கலாம், தனது இஸ்ரோ அனுபவத்தை வைத்து ஒலியின் வேகத்தைவிடப் பல மடங்கு அதிக வேகத்தில் பாயக்கூடிய அக்னி, ஆகாஷ் போன்ற ஏவுகணைத் திட்டத்தின் சூத்திரதாரி ஆனார். மேலும், ரஷ்யாவிடம் பேசி அவர்களின் உயர் தொழில்நுட்பத்தைக் கற்றார். சுயமாக ‘பிரமோஸ் குரூஸ்’ ஏவுகணைத் தயாரிப்பிலும் அவர் பங்கு முக்கியமானது. அணுகுண்டுத் தயாரிப்பு, வெடிப்பு முதலியவற்றில் உள்ளபடியே கலாமின் பெரும் பங்கு ராக்கெட் மற்றும் ஏவுகணை போன்ற ஏவுவூர்த்தி வடிவமைப்பில் உள்ளது!
-த.வி. வெங்கடேஸ்வரன்,
தொடர்புக்கு: tvv123@gmail.com
*****************
சிறந்த விஞ்ஞானி, முன்னாள் குடியரசுத் தலைவர் போன்ற அடையாளங்களைவிடவும் ஒரு ஆசிரியராக மக்கள் மனதில் பதிய வேண்டும் என நீங்கள் ஆசை கொண்டிருக்கிறீர்கள். கற்பித்தலை அத்தனை உயர்வாகக் கருதுவது ஏன்?
தனி மனிதப் பண்பு, திறன், எதிர்காலம் போன்றவற்றை வளர்த்தெடுக்கும் உன்னதமான வாழ்க்கைத் தொழில்தான் கற்பித்தல் பணி. ஒரு சிறந்த ஆசிரியர் என மக்கள் என்னை நினைத்தால் அதுதான் எனக்கு மிகப் பெரிய கவுரவம்.
தொழில்நுட்ப வளர்ச்சியும் அபரிமிதமான தகவல்களும் கொட்டிக்கிடக்கும் இக்காலகட்டத்தில், ஆசிரியருக்கான அர்த்தமும் முக்கியத்துவமும் மாறிவிட்டனவா?
உண்மையைப் பின்தொடர்வதே கல்வியின் குறிக்கோள். ஞான மார்க்கத்தில் செல்லும் முடிவில்லாப் பயணம் கல்வி. மனிதத்தை விரிவுபடுத்திக்கொண்டே செல்லும் அப்பயணத்தில் குறுகிய சிந்தனை, பிளவு, பொறாமை, வெறுப்பு, பகைமை போன்றவற்றுக்கு இடமில்லை.
முழுமையானவராக, உன்னத ஆன்மாவாக, பிரபஞ்சத்துக்குக் கிடைத்த பொக்கிஷமாக ஒருவரை மாற்றும் வல்லமை படைத்தது கல்வி. ஒரு மனிதரின் கண்ணியத்தை வளர்த்து அவருடைய சுயமரியாதையை மேலும் வளர்த்தெடுப்பதுதான் உண்மையான கல்வி.
கல்வியின் சரியான அர்த்தத்தை அனைவரும் உள்வாங்கிக்கொண்டு அவர்களுடைய செயல்பாடுகளில் பின்பற்றத் தொடங்கினால், இவ்வுலகம் அற்புதமான இடமாக மாறும். இவற்றைச் செயல்படுத்தும் பொறுப்பில் இருப்பவர்கள்தான் ஆசிரியர்கள். ஞானம், அர்ப்பணிப்பு, கருணையிலிருந்து தோன்றுபவர்கள்.
சந்தேகத்துக்கு இடமின்றித் தகவல்களைச் சுலபமாகப் பெற இணையம் உதவுகிறது. சொல்லப்போனால், நவீன கருவிகளும் கல்வி தொடர்பான வலைதளங்களும் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் உதவியாக உள்ளன. ஆனால், ஒருபோதும் தொழில்நுட்பத்தால் ஆசிரியரின் இடத்தை நிரப்ப முடியாது.
குழந்தைகள் குதூகலமாக இருக்கும் இடமாகப் பள்ளிகள் மாற்றப்பட வேண்டும் என நீங்கள் அறிவுறுத்துகிறீர்கள். ஆனால், தங்களை வருத்திக் கொண்டால் மட்டுமே தொழில்சார் படிப்புகளில் சேர முடியும் என்கிற நிலையே இன்றைய மாணவர்களுக்கு உள்ளது. உயர் கல்வியைப் பெறும் நோக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் அதே நேரத்தில், போட்டியின் வேகத்தை மட்டுப்படுத்துவது எப்படி?
பள்ளி எப்போதுமே மகிழ்ச்சிக்குரிய இடமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில், கடினமான பாடங்களைச் சொல்லித்தருவதில் தவறில்லை. மாணவர்களுடன் உற்சாகமாக உரையாடியபடி மாணவர்களும் நேரடியாகப் பங்குபெறும் வகையில் வகுப்புகள் மாற்றப்பட வேண்டும். வெறும் வீட்டுப்பாடம் தருவதற்குப் பதிலாக சுவாரஸ்யமான கற்றல் அனுபவமாகக் கல்வியை மாற்ற வேண்டும். இதைத்தான் மாணவர்கள் ஆசிரியர்களிடம் எதிர்பார்க்கிறார்கள்.
நம்முடைய ஆரம்பக் கல்வி முறை படைப்பாற்றல் அற்று உள்ளது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். கற்றல் முறையை எளிமைப்படுத்தப் படைப்பாற்றல்மிக்க வகுப்புகள், கற்பனைத்திறன்மிக்க ஆசிரியர்கள், படைப்பாற்றல் மிக்க பாடத் திட்டம் தேவை. மாணவர்களிடம் நண்பராகவும் வழிகாட்டியாகவும் இருந்து அவர்களுக்கு ஆராய்ச்சி மனோபாவத்தைத் தூண்டி, ஞானம் அடையும் பாதைக்கு இட்டுச்செல்வதே ஆசிரியர்களின் கடமை.
புதிய தலைமுறை ஆசிரியர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன? பிரம்புக்கு இடமில்லாத வகுப்புகளில் ஆசிரியர்கள் எப்படி மாணவர்களுக்கு ஒழுக்கத்தைப் புகட்ட முடியும்? நீங்கள் பள்ளியில் படித்த காலத்தில் ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் நினைவிருக்கிறதா? ஆம் எனில், எங்களுடன் பகிர்ந்துகொள்ள முடியுமா?
அறிவு தனித்துவம் வாய்ந்தது. எங்களுடைய ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் நுழையும்போதே அவர்களுடைய கல்வி ஞானம் சுடர்விடும். காந்தியின் வாழ்வியலைப் பின்பற்றிய அவர்களிடம் தூய்மையின் ஒளி வீசும். என்னுடைய வகுப்பறை அனுபவத்திலிருந்து சொல்கிறேன், அறிவு தீட்சண்யம், சிந்திக்கும் விதம், வாழ்க்கை முறை இவை அத்தனையும் பொருத்தே ஒருவர் சிறந்த ஆசிரியர் எனும் மரியாதை பெறுகிறார். அத்தகைய ஆசிரியர்கள் இருந்தால் பிரம்புக்கு அவசியமே இல்லை. சிறந்த ஆசிரியர்கள் மற்றும் சிறந்த மாணவர்கள் இருக்கும் சூழலில்தான் இது சாத்தியம். ஆனால், சில நேரங்களில் பிரம்பைத் தவிர்க்கவே முடியாது.
உதாரணத்துக்கு, பாடம் ஒழுங்காகப் படிக்காமல் என்னுடைய கணித ஆசிரியர் ஸ்ரீ ராமகிருஷ்ணனிடம் நான் பிரம்படி வாங்கியிருக்கிறேன். அப்படி அடிவாங்கிய பிறகுதான் நான் பொறுப்பாகப் படித்து 100-க்கு 100 மதிப்பெண்கள் வாங்கினேன். ஆக அன்பு, கண்டிப்பு இரண்டையுமே புகட்ட வேண்டிய அவசியம் உள்ளது.
சுதந்திரமான ஆற்றல், சுயசார்புத்தன்மை, நிலையான பொருளாதாரம் மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சி பெற வேண்டுமானால், சிறப்பான கல்வியும் வேலை அளிக்கும் தகுதியும் உடைய இளைஞர்கள் அரசு வேலைகளில் சேர வேண்டும். ஆனால், கவர்ச்சிமிக்க கார்ப்பரேட் உலகில் மெத்தப் படித்தவர்கள் பலரும் வெளிநாடுகளுக்குச் செல்லும் காலகட்டத்தில் இது எப்படிச் சாத்தியம்?
நாடு பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இந்த நிலையில் இந்தியா வெல்லுமா எனும் அவநம்பிக்கை இளைஞர்களிடம் உள்ளது. போராட்டத்தில் இந்தியப் பொருளாதாரத்தை வென்றெடுக்கும் செயல்திட்டங்களைத் தீட்ட வேண்டும். அவசியமற்ற போராட்டம், வெளி நடப்பு போன்றவற்றைத் தவிர்த்துவிட்டு, இதற்கென்று பிரத்யேகமான கூட்டத்தை நாடாளுமன்றம் நடத்த வேண்டிய நேரம் இது. “இக்கட்டான நிலையில் பொருளாதாரத்தை வென்றெடுக்க நாடு கொண்டிருக்க வேண்டிய பார்வை என்ன?” எனும் தலைப்பில் கலந்துரையாடல் நடத்தலாம். மொத்தத்தில், ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் பெற்றோர், நாடாளுமன்றம், சட்டமன்ற உறுப்பினர்கள் இப்படி அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்.
இப்போதும் உங்களைத் தூங்கவிடாத ஒரு கனவு உள்ளதா?
நூறு கோடிக்கும் அதிகமான என் நாட்டு மக்களின் முகத்தில் புன்னகை காண கனவு காண்கிறேன். இந்தக் கனவு மெய்ப்பட “நிலையான பொருளாதாரத்தை உருவாக்க தேசம் கொள்ள வேண்டிய பார்வை” எனும் ஆக்கபூர்வமான கலந்துரையாடல் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட வேண்டும். தேசத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்த வெளிநாடுகளை நம்பி இருக்கக் கூடாது. அதற்குப் பதிலாக தொலைநோக்குப் பார்வை கொண்ட நாடாளுமன்றம் உயிர்ப்பான செயல் திட்டங்களை உருவாக்க வேண்டும்.
2013 செப்டம்பர் 5-ல் ஆசிரியர் தினத்தையொட்டி தி இந்து ஆங்கில நாளிதழுக்கு அப்துல் கலாம் அளித்த பேட்டி...
தமிழில்: ம.சுசித்ரா
****************

கனவுகளின் சிற்பி!

வெ. சந்திரமோகன்
COMMENT   ·   PRINT   ·   T+  
ஓவியம்: ம.ரீகன்
ஓவியம்: ம.ரீகன்
எளிய குடும்பத்தில் பிறந்து பல உயரங்களைத் தொட்ட சாதனையாளர் கலாம்
ராமேஸ்வரத்தில் தொடங்கிய பயணம், ஷில்லாங்கில் முடிந்திருக்கிறது. தன் சிறுவயதில் அன்றாடம் ரயிலில் பத்திரிகைக் கட்டைச் சேகரித்து விநியோகிக்கச் சென்ற ஒரு பையனின் மரணம், இன்றைக்கு நாட்டின் அத்தனை பத்திரிகைகளிலும் முதல் பக்கச் செய்தி. ஒருவருடைய வாழ்வின் பெறுமதி பிறப்பில் அல்ல; மறைவில்தான் வெளிப்படுகிறது!
இளம் வயதிலேயே லட்சியங்களை வகுத்துக்கொண்டதன் மூலம் வாழ்வின் திசையை வெற்றிப்படிகளை நோக்கித் திருத்தியமைத்துக்கொண்டவர் அப்துல் கலாம். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இளங்கலை இயற்பியல் பட்டப்படிப்பை முடித்த பின்னர், வானூர்தி பொறியியல் படிக்க வேண்டும் என்ற முயற்சியில் தீவிரமாக இறங்கினார். எம்.ஐ.டி-யில் வானூர்தி பொறியியல் படிப்பை முடித்தவுடன் டிஆர்டிஓவில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. மூன்று ஆண்டுகள் வெற்றிகரமாகப் பணிபுரிந்த அப்துல் கலாமுக்கு ஏரோநாட்டிகல் டெவலப்மெண்ட் எஸ்டாப்ளிஷ் மெண்ட்டிடமிருந்து அழைப்பு வந்தது. அதில் பணிபுரிந்துகொண்டிருந்த சமயத்தில், இஸ்ரோவில் பணிபுரியும் வாய்ப்பும் அவரைத் தேடிவந்தது. இம்முறை அவருக்கு அழைப்பு விடுத்தது இந்திய விண்வெளித் துறையின் தந்தை என்று அழைக்கப்படும் விக்ரம் சாராபாய். நம்ப முடியாத ஆச்சரியத்துடன் அவரைச் சந்தித்த அப்துல் கலாம், அவரைத் தனது வழிகாட்டிகளில் ஒருவராகவே கருதத் தொடங்கினார்.
இஸ்ரோ பணிகளில் ஒன்றாக கேரளத்தின் தும்பா ராக்கெட் ஏவுதளத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த அப்துல் கலாம், அமெரிக்க விண்வெளித் துறையான நாஸாவில் ஆறு மாத காலப் பயிற்சிக் காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராக்கெட் தொழில்நுட்பம் தொடர்பாக நாஸாவில் கற்றுக்கொண்ட பயிற்சியைத் தவிர, வெளிநாடுகளில் அவர் வேறு எந்த பயிற்சியையும் எடுத்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. அவரது திறமை, உழைப்பு மற்றும் ஆர்வத்தால் வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன.
இந்தியாவின் பெருமை
அமெரிக்கர்களின் கடும் உழைப்பும் அறிவியல் ஆர்வமும் விண்வெளித் துறையில் சாதனைகளுக்கு வழிவகுத்தது குறித்த வியப்பு அப்துல் கலாமுக்கு இருந்தது. அதேசமயம், ராக்கெட் தொழில்நுட்பத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவும் ஈடுபட்டிருந்ததைக் காட்டும் ஓவியம் நாஸா ஆய்வுக்கூடம் ஒன்றில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததைக் கண்ட அப்துல் கலாம் ஆச்சரியத்தில் உறைந்து நின்றார். பிரிட்டிஷ் படைக ளுக்கு எதிராகப் போரிட்ட திப்பு சுல்தான் பயன்படுத்திய ஏவுகணைகளின் ஓவியம் அது. விண்வெளித் துறையில் அமெரிக்காவுக்கு இணையாக இந்தியாவும் வெற்றிகளைக் குவிக்க முடியும் என்ற நம்பிக்கை அவருக்குள் நிலைபெற்றதும் அப்போதுதான்.
இந்தியா திரும்பிய அப்துல் கலாமுக்கு மற்றொரு மகத்தான வாய்ப்பை வழங்கினார் விக்ரம் சாராபாய். எஸ்.எல்.வி. ராக்கெட் திட்டத்தின் தலைவராக அப்துல் கலாமை நியமித்தார். 1971-ல் விக்ரம் சாராபாய் மறைவுக்குப் பிறகு, இஸ்ரோ தலைவராகப் பொறுப்பேற்ற சதீஷ் தாவனும் அப்துல் கலாமின் திறமை மீது பெரும் மதிப்பு கொண்டிருந்தார். அப்துல் கலாமை, எஸ்.எல்.வி. ராக்கெட் திட்டத்தின் பொறுப்பாளராகத் தேர்ந்தெடுத்தார் சதீஷ் தாவன். கடும் சவால் நிறைந்த பணியில் ஆரம்பக் கட்ட தோல்விக்குப் பிறகு, உலக அரங்கில் விண்வெளித் துறையில் இந்தியாவைத் தலைநிமிரச் செய்தார் அப்துல் கலாம். அக்காலகட்டத்தில் தான் எதிர்கொண்ட அனுபவங்களை அவர் பதிவுசெய்திருக்கிறார். 1979-ல் எஸ்.எல்.வி.3. ராக்கெட்டை ஏவும் பணி ஹரிகோட்டா ஏவுதளத்தில் நடந்து கொண்டிருந்தபோது, கடைசி நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதையும் பொருட்படுத்தாமல், ராக் கெட்டைச் செலுத்துமாறு உத்தரவிட்ட தாகவும், ஆனால் அந்த ராக்கெட் புவிவட்டப் பாதையில் நிலைகொள் வதற்குப் பதிலாக வங்காள விரிகுடாவில் விழுந்துவிட்டதைப் பிற்பாடு பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருக்கிறார் அப்துல் கலாம்.
“தவறு என்னுடையதாக இருந்தாலும் அணியின் தோல்வியை இஸ்ரோ தலைவராக இருந்த சதீஷ் தாவன் தனது பொறுப்பில் எடுத்துக்கொண்டார். விமர்சனங்களையும் அவரே எதிர் கொண்டார். ஆனால், 1980 ஜூலை 18-ல் ரோஹிணி செயற்கைக் கோள் எஸ்.எல்.வி.3 ராக்கெட் மூலம் வெற்றிகர மாக விண்ணில் ஏவப்பட்டதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்திக்க என்னை அனுப்பினார் சதீஷ் தாவன்” என்று அப்துல் கலாம் நினைவுகூர்ந்தார்.
பிற்காலத்தில், மாபெரும் கூட்டு முயற்சியும் அர்ப்பணிப்பும் தேவைப்படும் அறிவியல் உலகில் சாதிக்க நினைப் பவர்களுக்கு உதவும் பணியை முனைப் புடன் செய்தார் அப்துல் கலாம். 2002-ல் குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற பிறகு, அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஈடுபடுபவர் களைக் கவுரவிக்கத் தொடங்கினார். அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும், அறிவியல் துறையின் புதுமையாளர்களுக்கு குடியரசுத் தலைவர் மாளிகை கவுரவித்து வருவது குறிப்பிடத் தக்கது.
லேசான மனது!
அமெரிக்க செயற்கைக்கோள்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தியது, அக்னி, பிரித்வி ஏவுகணை களை உருவாக்கியதன் மூலம் இந்திய ராணுவத்தின் பலத்தை அதிகரித்தது என்று பல்வேறு சாதனைகளைப் புரிந்த அப்துல் கலாம், 400 கிராம் எடை கொண்ட லேசான செயற்கைக் கால்களை உருவாக்கியதுதான் தனது உண்மையான வெற்றி என்று குறிப்பிட்டிருக்கிறார். “4 கிலோ எடை கொண்ட செயற்கைக் கால் களைத் தூக்கி நடக்க முடியாமல் குழந் தைகள் சிரமப்பட்டனர். எனது அணியினர் தயாரித்திருக்கும் இந்த இலகு ரக செயற்கைக் கால்களை அணிந்து குழந் தைகள் ஓடி விளையாடுவதைப் பார்க்க அத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று நெகிழ்வுடன் கூறியவர் அவர்.
மக்களின் நாயகன்
உயர் பதவிகளில் இருப்பவர்கள் அதிகார மட்டத்திலும் வெளிநாட்டுத் தலைவர்களின் மத்தியிலும் வளைய வருபவர்களாகவே இருப்பார்கள் என்ற பிம்பத்தை உடைத்தவரும் அப்துல் கலாம்தான். இளம் தலைமுறையினரிடம் பிரபலமாக இருந்த தலைவர் அவரைத் தவிர வேறு யாரும் இல்லை என்று சொல்லலாம். திரைப்படப் பாடல்களிலும், மக்கள் மேடைகளிலும் உச்சரிக்கப்பட்ட குடியரசுத் தலைவர் அவர் ஒருவர்தான். தான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி களின்போது அரங்கில் இருப்பவர்களிடம் ஆக்கபூர்வமான மனநிலையையும், உற்சாகத்தையும் ஏற்படுத்து வதிலும் நிபுணத்துவம் பெற்றிருந்தார். ஒழுக்கம், நற்பண்பு, உழைப்பு ஆகியவற்றை வலியுறுத்தும் வாசகங் களை வாசித்துக் காட்டுவதுடன், அரங்கில் இருப்பவர்கள் அவற்றைத் திரும்பக் கூறும்படி சொல்வதும் அவரது வழக்கம். எதிரில் இருப்பவர்கள் குழந்தைகளானாலும், பெரியவர்களானாலும் அதைச் செய்தாக வேண்டும் அவருக்கு. அந்த நேரத்தில் அது வேடிக்கையாகத் தெரிந்தாலும் அவரது வார்த்தைகளைத் திரும்பச் சொல்லும் கணத்தில் ஒவ்வொரு மனதிலும் நல்லொழுக்கம், கடின உழைப்புகுறித்த சிந்தனைகள் வலுப்பெறுவதையும் மனம் தெளிவு பெறுவதையும் அவர் பங்கேற்ற கூட்டங்களில் கலந்துகொண்டவர்களால் உணர்ந்திருக்க முடியும்.
தன் வாழ்நாளின் ஒவ்வொரு கணத்தையும் குழந்தைகள், இளைஞர்கள், மாணவர்களுக்காகவே செலவிட்ட அந்த மாபெரும் மனிதர் விட்டுச் சென்ற பணிகளைத் தொடர்வதுதான் அவருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்!
தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in
***************
இந்தியக் குடியரசுத் தலைவர்களில் மிகவும் வித்தியாசமானவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். சாமானியக் குடும்பத்தில் பிறந்து, சாமானியராக வளர்ந்து, சாமானியர்களுக்காகச் சிந்தித்து, பேசி, உழைத்த அறிவியலாளர், கர்ம வீரர். இளம் வயது முதலே உழைத்தவர். பெரும் உத்வேகத்துடன் படித்து முன்னேறியவர். நாட்டின் மிக உயரிய பதவிக்கு வந்த முதல் அறிவியலாளர். தனக்கு மிகவும் பிடித்த தொண்டறமான மாணவர்களுடன் உரையாடும் நிகழ்ச்சியிலேயே தோய்ந்திருந்தபோது அவர் உயிர் பிரிந்தது. தனது விருப்பப்படியே அவர் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
மரணம் எல்லாருடைய வாழ்வுக்கும் முடிவுகட்டுகிறது. சிலர் தமது வாழ்வின் மூலம் அந்த முடிவை மறுத்து இறவாப் புகழை அடைகிறார்கள். தங்கள் பங்களிப்புகளின் மூலம், தாங்கள் ஆற்றிய பணிகளின் மூலம், சமுதாயத்தின் மீது செலுத்திய செல்வாக்கின் மூலம் அவர்கள் மரணத்தை மறுக்கிறார்கள். அர்த்தபூர்வமான வாழ்வின் தன்மை அது. அத்தகைய வாழ்வை வாழ்ந்தவர் கலாம்.
தென்கோடி ராமேஸ்வரத்தில் பிறந்த கலாமின் புகழ், வடகோடி டெல்லியின் அதிகார வாசல்வரை பரவி நிற்கிறது. ‘எஸ்.எல்.வி-3’ என்ற செயற்கைக்கோள் ஏவு வாகனத்தை உருவாக்கியதில் தொடங்கி ஏவுகணைகளையும் வடிவமைத்துத் தயாரித்து இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்ற ஏற்றத்தைப் பெற்றார். அணுசக்தித் துறைக்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி, வளர்ச்சி அமைப்புக்கும் இணக்கமான பாலமாக இருந்தவர். விண்வெளி ஏவு ஊர்தி தயாரிப்பு, அணுகுண்டு வெடிப்பு, ஆயுதசாலைகள் அமைப்பு என்று அனைத்திலும் முத்திரை பதித்த இவர், ஊனமுற்ற குழந்தைகள் வலியில்லாமல் நடக்க தாங்கு கட்டைகள் தயாரித்துத் தந்த மனிதாபிமானமுள்ள விஞ்ஞானியும்கூட.
போர் விமானியாக வேண்டும் என்ற ஆசை நிறைவேறாத நிலையில், மனம் சோர்ந்து ஹரித்வாருக்குச் சென்றபோது, சுவாமி சிவானந்தரைச் சந்தித்து அவருடைய ஆசியையும் மன சாந்தியையும் பெற்றுத் திரும்பினார். தனக்கென ஒரு குடும்பத்தை அமைத்துக்கொள்ளாமல் நாட்டின் முன்னேற்றத்துக்காக அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் தேசத் தொண்டையும் மணந்துகொண்டார். ஆன்மிகத் தேடலில் சமயத்தின் எல்லைகள் குறுக்கிட அவர் அனுமதிக்கவில்லை.
கடுமையான அறிவியல், அரசியல் பணிகளுக்கு இடையில் அவர் எழுதிய ‘அக்னிச் சிறகுகள்’ முதலான நூல்கள் இன்று இந்திய இளைஞர்களுக்கு வழிகாட்டும் துருவ நட்சத்திரமாக நிலைத்துவிட்டன. பத்மபூஷண், பத்மவிபூஷண் என்று தொடங்கி உயர்ந்த சிவில் விருதுவரை பெற்ற பாரத ரத்தினமாகப் பிரகாசித்தவர் அப்துல் கலாம்.
கலாம், பல்வேறு துறைகளில் ஜொலித்தவர். சொல்லப்போனால், அவர் தொட்டதெல்லாம் துலங்கிற்று. தனது மகத்தான கனவுகளாலும் அசாத்தியமான உழைப்பாலும் கூரிய அறிவாலும் எடுத்த காரியம் யாவினும் வெற்றிபெற்றார். பலவீனமான பின்னணியும் ஆதரவற்ற சூழலும் ஊக்கம் கொண்ட ஒருவரைச் சிறுமைப்படுத்தும் திறன் கொண்டவை அல்ல என்பதைத் தன் வாழ்வின் மூலம் நிரூபித்தார். பொறுப்பேற்ற ஒவ்வொரு துறையிலும் அதன் எல்லைகளை விரிவுபடுத்தினார். பணிசெய்த ஒவ்வொரு இடத்திலும் கலாமுக்கு முன், கலாமுக்குப் பின் என்று வரலாறு எழுதலாம் என்னும் அளவுக்குத் தன் ஆளுமையின் தடத்தை அழுத்தமாகப் பதித்தார். இத்தனையையும் அப்பழுக்கற்ற நேர்மையுடன் செய்தார் என்பதுதான் அவரது மதிப்பைக் கணிசமாக உயர்த்துகிறது.
பல்வேறு சாதனைகளையும் விருதுகளையும் ஒப்பற்ற மரியாதையையும் பெற்ற கலாம், இவற்றில் எதுவுமே தன் தலையில் கனத்தைக் கூட்டவோ தன் எளிமையைக் களங்கப்படுத்தவோ அனுமதிக்கவே இல்லை. அதிகார மட்டத்தில் புழங்க வாய்ப்பே கிடைக்காதவர்கள் நேர்மை, எளிமை என்று பேசலாம். அந்த வாய்ப்பு கிடைத்த பிறகும் இவற்றைப் பற்றிப் பேசக்கூடிய ஆளுமைகள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அத்தகைய அரிய ஆளுமைகளில் ஒருவர் கலாம். வலுவானதும் ஆழமானதுமான அவரது கருத்துக்களை விடவும் தன் வாழ்வின் மூலம் அவர் நிகழ்த்திக்காட்டிய முன்னுதாரணங்கள் வலிமையானவை. அவரது சொற்கள் உயர்வானவை. அந்தச் சொற்களின் விளக்கம் அவரது வாழ்வு.
உலகில் சாதனையாளர்களுக்குப் பஞ்சம் இல்லை. நேர்மையான சாதனையாளர்களும் கணிசமான அளவில் இருக்கிறார்கள். ஆனால், பிறரையும் சாதனையாளர்களாக ஆக்குவதற்கான ஊக்கத்தைத் தந்தவர்கள் மிகவும் குறைவு. பிறருக்கு, குறிப்பாகச் சிறுவர்களுக்கு, சாதிப்பதற்கான ஊக்கம் தருவதையே தன் வாழ்வின் தலையாய பணியாகச் செய்துவந்தவர் அப்துல் கலாம். சாதி, மதம், இனம், மொழி என எல்லா விதமான பேதங்களுக்கும் அப்பாற்பட்டு அவரது தாக்கம் இளைஞர்களிடையே பரவியிருந்தது. தன்னிடம் பேச விரும்பும் ஒவ்வொரு இளைஞருக்கும் தன் காதுகளைத் திறந்துவைத்துக் காத்திருந்தவர் அவர். சுந்தந்திர இந்தியாவில் இத்தகைய ஆளுமை என இன்னொருவரைச் சட்டென்று அடையாளம் காட்டிவிட முடியாது என்பதே அவரது அருமையை உணர்த்துகிறது.
நேர்மை என்பது படித்து வாங்கக்கூடிய பட்டம் அல்ல. சாதனை புரியும் துடிப்பு, மேலான உலகைக் காண விரும்பும் வேட்கை ஆகியவை வெறும் கோஷங்களால் உருவாகிவிடக் கூடியவை அல்ல. ஆழ்மனதில் ஏற்படும் அழுத்தமான பதிவுகளே இந்தப் பண்புகளை உருவாக்கும். வெறும் சொற்களால் ஏற்பட்டுவிடக்கூடிய விளைவு அல்ல இது. தர்க்கரீதியான சொற்களாலும் கண்கூடான தன் சுய உதாரணத்தாலும் இந்தப் பண்புகளை இளைய மனங்களில் பதியவைத்தவர் கலாம். லட்சியவாதம் என்பது பிழைக்க உதவாத பத்தாம்பசலித்தனம் என்ற கண்ணோட்டம் பொதுவாழ்வில் வேகமாகப் பரவிவரும் நிலையில், லட்சியவாதத்தின் ஆன்மாவை இளைய மனங்களில் மீட்டெடுத்தவர் கலாம். லட்சியவாதம் என்பது மேலான எதிர்காலத்துக்கான விதை என்பதைப் புரியவைத்தவர். தன் அனுபவங்களின் மூலமாக, பரந்த அறிவின் வாயிலாகத் தன் கனவுகளைத் தெளிவான வரைபடமாக மக்கள் முன்வைத்தவர். இன்றைய கனவு என்பது நாளைய யதார்த்தம் என்பதைப் புரியவைத்தார். லட்சியவாதமும் மகத்தான கனவுகளும் ஒருநாளும் காலாவதியாகாது என்பதை நிரூபித்ததே அவரது மகத்தான பங்களிப்பு!
****************************

குடியரசுத் தலைவர் மாளிகை பணியாளர்களின் அனுபவங்கள்

பழகுவதற்கு அன்பானவராகவும், எளிமையான வாழ்க்கையைக் கடைப்பிடிப்பவராகவும் இருந்தார் கலாம் என்று, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்த நாட்களை அங்கு பணியாற்றும் பணியாளர்கள் நினைவு கூர்ந்தனர்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் பணியாற்றுபவர்கள் கூட, குடியரசுத் தலைவரைச் சந்திக்க வேண்டும் என்றால், அதற்கு நிறைய விதிகள் பின்பற்றப்பட வேண்டும். ஆனால் கலாம் வித்தியாசமானவராக இருந்தார்.
அந்த மாளிகையில் சுமார் 18 ஆண்டுகளாகப் பணியாற்றும் ஜே.கே.ஷா கூறும்போது, "பொதுவாக தொலைபேசியில் யாருடனாவது குடியரசுத் தலைவர் உரையாட வேண்டுமென்றால், அவரின் செயலாளர்கள் எங்களை அழைத்து, குறிப்பிட்ட எண்ணுக்கு தொடர்பு கொடுக்கச் சொல்வார்கள்.
ஆனால் ஒருமுறை அப்துல் கலாம் நேரடியாக என்னிடம் பேசி ஓர் இணைப்பை ஏற்படுத்தச் சொன்னார். ஆனால் அவர் அழைத்த நபர் யாரென்று எனக்குச் சரியாகப் புலப்படவில்லை. மீண்டும் அவரை அழைத்துக் கேட்க எனக்குத் தயக்கமாக இருந்தது. எனவே, அவரின் செயலாளரை அழைத்தேன்.
மீண்டும் என்னை தொலைபேசியில் அழைத்த கலாம், “நான் சொல்வது உங்களுக்குப் புரியவில்லை என்றால் நீங்கள் தயங்காமல் என்னை மீண்டும் அழைத்துக் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம்” என்றார். தனக்கும் அந்த மாளிகையில் பணியாற்றுபவர்களுக்கும் இடையில் எந்த வித்தியாசத்தையும் கடைப்பிடிக்காமல் கலாம் வாழ்ந்தார்.
எல்லாவற்றுக்கும் மேலாக, தன்னைச் சந்திக்க குழந்தைகள் யாராவது காத்திருந்தால், எத்தனை தாமதமானாலும் அவர்களைச் சந்தித்துவிட்டுத்தான் மற்ற பணிகளை கலாம் பார்ப்பார்" என்று கூறினார்.
அங்கு பணியாற்றும் மற்றொரு பணியாளரான டி.கே.சாஹு கூறும்போது, "குடியரசுத் தலைவர் மாளிகையில் ஐந்து ஆண்டுகள் கலாம் தங்கியிருந்தபோது ஒரே ஒரு முறை மட்டும்தான் அவரின் குடும்பத்தினர் அங்கு வருகை தந்தனர்" என்றார்.
அங்கு பணியாற்றும் சமையல்காரரான சலீம் அகமது கூறும்போது, "அவருக்கு தென் னிந்திய உணவுகள் மிகவும் விருப்ப மானதாக இருந்தன. எனினும், ஒருபோதும் குறிப்பிட்ட உணவு வகையைச் செய்யச் சொல்லி கேட்டதில்லை. அவர் ஒருபோதும் உணவை குறை சொன்னதில்லை" என்றார்.
***********************

உண்மையான தேசியவாதி: மத்திய அமைச்சரவை புகழாரம் - நாடாளுமன்றம் 2 நாட்கள் ஒத்திவைப்பு

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உண் மையான தேசியவாதி எனப் புகழாரம் சூட்டியுள்ள மத்திய அமைச்சரவை, ‘தொலைநோக்குப் பார்வையுடைய அறிவியலாள ரையும், தலைமகனையும் தேசம் இழந்துவிட்டது’ எனப் புகழஞ்சலி செலுத்தியுள்ளது.
அப்துல் கலாம் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக பிரதமர் மோடி தலைமையில் சிறப்பு அமைச் சரவைக் கூட்டம் நேற்று நடந்தது. அதில், கலாம் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அவரின் மறைவையொட்டி நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தில், “அவரின் மறைவால், தொலை நோக்கு பார்வையுடைய அறிவிய லாளரையும், உண்மையான தேசிய வாதியையும், சிறந்த தலைமகனை யும் தேசம் இழந்துவிட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும “தொழில்நுட்பத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்து வதில் கலாம் ஆர்வம் மிக்க வராக இருந்தார். குறிப்பாக மனித நலனுக்காக அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்து வதற்கு இந்தியாவின் இளம் சமுதாயத்தை ஈர்ப்பவராக இருந்தார். இந்திய விண்வெளி ஆய்வுமையத்தின் சிறப்புமிகு உறுப்பினராக, இந்தியாவின் முதல் சுயசார்பு செயற்கைக்கோள் ஏவுகலத்தை உருவாக்குவதில் கலாம் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தார்” என அந்த தீர்மானத்தில் தெரி விக்கப்பட்டுள்ளது.
2 நாட்கள் ஒத்திவைப்பு
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், கலாம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின் இரு அவைகளும் நாள் முழு வதும் ஒத்திவைக்கப்பட்டன. இன்று நடைபெறவுள்ள கலாமின் இறுதிச்சடங்கில் எம்.பி.க்கள் பங்கேற்பதற்கு வசதியாக, இரு அவைகளும் 2 நாட்கள் ஒத்திவைக்கப்பட்டன.
குவாஹாட்டியிலிருந்து கலாமின் உடல், விமானப்படை விமானம் மூலம் டெல்லி கொண்டு வரப்பட்டது. பாலம் விமான நிலை யத்துக்கு கொண்டுவரப்பட்ட கலாமின் உடலை பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச் சர் மனோகர் பாரிக்கர், முப்படைத் தளபதிகள் ஆகியோர், முப்படை அணிவகுப்பு மரியாதை யுடன் பெற்றுக் கொண்டனர்.
கலாமின் உடலுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, துணைக் குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி உள்ளிட்ட தலை வர்கள் மலரஞ்சலி செலுத்தினர். கலாமின் உடல் டெல்லியிலுள்ள ராஜாஜி சாலை 10-ம் எண் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு மாலை 3 மணி முதல் பொதுமக்கள் கலாமின் உடலைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.
அசாதாரண ஆளுமை
அமைச்சரவைக் கூட்டத்துக்கு முன்பாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடை பெற்றது. அதில் பிரதமர்மோடி பேசியதாவது:
கலாம் அசாதாரண ஆளுமை நிறைந்த சாதாரண மனிதர். தான் வகித்த அத்தனை பதவிகளிலும் மிகச்சிறப்பாகச் செயலாற்றியவர். அரிதான மாணிக்கத்தை இந்தியா இழந்துவிட்டது. அவர் இந்த தேசத்தைப் பற்றிக் கண்ட கனவு களை நிறைவேற்றுவதுதான் அவருக்கு நாம் செலுத்தம் மிகச் சிறந்த அஞ்சலியாக இருக் கும். இந்தியத்தாயின் அன்புக் குரிய மகன். தன்னை எப்போதும் ஓர் ஆசிரியராகவே கருதிக் கொண் டார். இவ்வாறு அவர் பேசினார்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறும்போது, “கலாம் மக்களின் குடியரசுத் தலைவர். அவர் தன் வாழ்வின் கடைசி நொடியிலும் மக்களுக்காகவே செயலாற்றினார். தன் வாழ்நாள் முழுக்க அவர் இவ்வாறு வாழ்ந்த தால்தான் அவர் நமது பெருமைக் குரியவராக உள்ளார்” என்றார்.
****************************

தீப்பந்த ஒளியில் புறப்பட்ட விமானம்...: துணிச்சல் காட்டிய அப்துல் கலாம்

தனது 83-வது வயதில், வாழ்வின் கடைசி நொடியையும் மாணவர், இளைஞர் களின் மத்தியில் கழித்த அப்துல் கலாம் தீரம் மிக்க குடியரசுத் தலைவராக இருந்தார்.
குடியரசுத் தலைவராக இருந்தபோது, நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்தும், சுகோய் போர் விமானத்தில் பறந்தும், உலகின் மிக உயரமான போர் முனையான சியாச்சின் பனிச்சிகரங்களுக்குச் சென்றும், கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டில் இந்திய ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடியும் துணிச்சல் காட்டியவர்.
டார்ச் மற்றும் லாந்தர் விளக்குகளால் விமானத்தின் ஓடு பாதை ஒளியூட்டப்பட வேண்டிய சூழலில், அய்ஸ்வால் விமான நிலையத்திலிருந்து இரவில் விமானத்தில் புறப்படும் துணிச்சல் யாருக்கும் இருக்காது. ஆனால், கலாம் இதில் விதிவிலக்கு.
கடந்த 2005-ம் ஆண்டு கலாம் மிஸோரம் சென்றிருந்த போது நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார் அவரின் மூத்த உதவியாளர் ஒருவர்.
மிஸோரமில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அலுவல் நிமித்தமான பணி முடிந்தது. அடுத்த நாள் காலையில்தான் அவர் டெல்லி திரும்புவது என்பது பயணத் திட்டம். எப்போதும் புன்னகையுடன் காட்சியளிக்கும் கலாமுக்கு, இருப்புக் கொள்ளவில்லை. இரவி லேயே டெல்லி கிளம்புவது என முடிவு செய்துவிட்டார். உடனடியாக, அப்பகுதி விமானப்படை நிலைய தலைமை அதிகாரிக்கு, இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த விமான நிலையத்தில் இரவில் கிளம்புவதற்கான வசதி இல்லை என பதிலளித்தார் அந்த அதிகாரி. அத்துடன் விஷயம் முடிந்து விட்டதாக அவர் கருதினார்.
இந்த விளக்கம் கலாமை ஆசுவாசப்படுத்து வதாக இல்லை. “அவசரநிலையாக இருந்தால் என்ன செய்வீர்கள். இந்திய விமானப்படை காலை வரை காத்திருக்குமா? நான் புறப்பட வேண்டும் என அவர்களிடம் சொல்லுங்கள். தேவையான ஏற்பாடுகள் செய்யப்படட்டும்” என கலாம் கூறிவிட்டார்.
குடியரசுத் தலைவரும், முப்படைகளின் தலைவருமான கலாமின் இந்தத் தகவல் உடனடியாக விமானப்படை அதிகாரிக்குத் தெரி விக்கப்பட்டது. அந்த விமானப்படை அதிகாரி உடனடியாக டெல்லியில் உள்ள மூத்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டார்.
ஆனால், டெல்லியிருந்து விமானப்படை அதிகாரிக்கு ஆதரவான பதில் வரவில்லை. இந்தியாவின் ஏவுகணை மனிதரின் உத்தரவை நிறைவேற்றும்படி கட்டளை வந்தது. வேறு வழியில்லை. ஓடுபாதையின் அருகே லாந்தர் விளக்குகள் வைத்தும், தீப்பந்தங்களைக் கொளுத்தியும் தற்காலிக வெளிச்சம் ஏற்படுத்தப்பட்டது. விமானம் ஓடுபாதையைப் பயன்படுத்துவதற்கு தயார் செய்யப்பட்டது.
குறைந்தபட்ச அடிப்படை வசதிகளை மட்டுமே கொண்ட அந்த விமான தளத்திலிருந்து இரவில் புறப்படுவது குறித்து, குடியரசுத் தலைவரின் உதவியாளர்கள் கவலையடைந்தனர். இந்த நிலையில் ஓடுதளத்திலிருந்து விமானம் கிளம்புவது பாதுகாப்பானதுதானா என தனிப்பட்ட முறையில் விமானப்படை அதிகாரி யிடம் கேட்கப்பட்டது.
“விமானம் புறப்படும். ஆனால், அது திரும்பும்போது சில பிரச்சினைகள் எழலாம்” அதிகாரியின் பதில், கலாமின் உதவியாளர்களின் முதுகுத் தண்டை அச்சத்தால் ஜில்லிட வைத்தது.
இரவு 9 மணிக்கு, குடியரசுத் தலைவரின் விமானம், கலாம் மற்றும் அவரின் குழுவினர் 22 பேருடன் புறப்பட்டது. பாதுகாப்பாக டெல்லியை அடைந்தது. அப்போது கலாம் காட்டியது அசாத்திய துணிச்சல்.
இந்த பெரும் தேசத்தின் 11-வது குடியரசுத் தலைவராக அவர் பொறுப்பேற்ற போது, துணை குடியரசுத் தலைவர் கிருஷ்ண காந்த்துக்கு மாரடைப்பு ஏற்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கலாம், பொறுப்பேற்றவுடன் செய்த முதல் பணி, கிருஷ்ண காந்த்தை மருத்துவமனையில் சென்று பார்த்ததுதான். மருத்துவமனையில் அவரைச் சந்தித்த முதல் நபரும் கலாம்தான்.
அவரிடம் தீரம் மட்டுமல்ல ஈரமும் இருந்தது.
***********
மேகாலயாவுக்கு நான் வந்தது இங்குள்ள மக்களின் பிரச்சினைகளைப் பற்றி எழுத. அவர்களின் வாழ்க்கையை எழுத. இப்போது மேகாலயத்தின் ஆளுநர் ஒரு தமிழர் சண்முகநாதன் என்பதால், அவருடைய பேட்டியையும் பெறத் திட்டமிட்டிருந்தேன்.
இங்கு கடந்த சில நாட்களாகவே அப்துல் கலாம் பற்றிய பேச்சு அடிபட்டுக்கொண்டிருந்தது. ஷில்லாங் ஐஐஎம்-க்கு ஆண்டுக்கு ஒரு முறை இரு நாட்கள் கவுரவப் பேராசிரியராக வரு வாராம் கலாம். முழுக்க ஆசிரியப் பணி நிமித்தம்தான்.
இது இங்குள்ள இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் ஒரு விஷயம். எப்படி யென்றால், பொதுவாக வடகிழக்கு மாநிலங்கள் இந்தியச் சமூகத்திலிருந்து தனித்து, கவனிப் பாரற்று இருக்கும் மனநிலையில் இருப்பவை. டெல்லியிலிருந்தோ, இந்தியாவின் ஏனையப் பகுதிகளிலிருந்தோ யார் வந்தாலும் அவர் களுக்கு சந்தோஷம்தான். கலாம் தங்கள் இளைஞர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்க வருகிறார் என்பதால், அது கூடுதல் சந்தோஷம்.
அன்று மாலைகூட அப்படித்தான் ஒரு நண்பர் உற்சாகமாக கலாம் பற்றிப் பேசிக்கொண் டிருந்தார். திடீரென்று ஓர் அழைப்பு வந்தது. கலாம் உரையாற்றிக் கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்தார்; மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறார் என்று. அடுத்த ஒரு சில நிமிடங்களில் அடுத்த தகவல் வந்தது. கலாம் உயிருக்கு ஆபத்து என்று. ஷில்லாங்கின் மூத்தப் பத்திரிகையாளர்களில் ஒருவரான பெட்ரிஷியா முக்கிமைத் தொடர்பு கொண்ட போது அவரும் தகவலை உறுதி செய்தார்.
நான் இருந்த போலீஸ் பஜாரிலிருந்து கலாம் கொண்டுசெல்லப்பட்ட பெதானி மருத்துவ மனைக்குச் செல்ல அதிகபட்சம் கால் மணி நேரப் பயணம்தான். காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டேன். அப்போது மருத்துவ மனை வாசலில் பத்து பதினைந்துப் பேரைத் தவிர யாரும் இல்லை. எல்லாம் பெரும்பாலும் ஊடகவியலாளர்கள்; ஐஐஎம் நிறுவனத்திலி ருந்து வந்தவர்கள். கொஞ்ச நேரத்தில் ஆளுநர் வந்தார், அமைச் சர்கள் வந்தார் கள். அடுத்தடுத்த நிமி ஷங்களில் அங்கு உள்ளே சென்று திரும்பு பவர்களின் முகத்தைப் பார்த்தபோது விபரீதம் புரிய ஆரம்பித்தது. மனதை இனம் கொள்ள முடியா சோகம் பீடித்து அடித்துத் துவைக்க ஆரம்பித்தது.
அடுத்த ஒரு மணி நேரத்தில் ஷில்லாங்கில் செய்தி தீபோலப் பரவியது. “கலாம் காலமாகி விட்டார்; அதிகாரப்பூர்வமாக அறிவிக்க ஓரிரு மணி நேரம் ஆகலாம்…”
ஐயாயிரம் பேர் கூடியிருப்பார்களா, இன்னும் அதிகம் இருக்குமா? தங்கள் நேசத்துக்குரிய முன்னாள் குடியரசுத் தலைவருக்கு அஞ்சலி செலுத்த அந்த இரவிலும் ஷில்லாங்கில் நூற் றுக்கணக்கான இதயங்களகுவிந்துகொண்டே இருந்தன. மருத்துவமனையிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டபோது, கூடியிருந்த வர்கள் உணர்ச்சிப் பெருக்கெடுத்து அழ ஆரம்பித்தார்கள். யாரோ ஓர் இளைஞர் உரத்த குரலில் கத்தினார்: “கலாம் அமர் ரஹே, பாரத் மாதா கீ…” அடுத்த நொடி அந்த இடமே ஒருமித்த குரலில் அதிர்ந்தது “ஜே!”
அதன் பின்னர் கலாம் உடல் கொண்டு செல்லப்படும் ஒவ்வொரு இடத்திலும் இந்த முழக்கங்களைக் கேட்க முடிந்தது. பின்னர், கலாமின் உடல் ராணுவ மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பின் அங்கிருந்து விமானப் படைப் பயிற்சியகத்துக்கு. ஆளுநர் சண்முக நாதன் மலர் வளையம் வைக்கும்போது அவரையும் மீறி கட்டுப்படுத்த முடியாமல் கண் கலங்கினார்.
ஷில்லாங்கிலிருந்து ஹெலிகாப்டர் புறப்பட்டது. முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன: “கலாம் அமர் ரஹே, பாரத் மாதா கீ… ஜே!”
**********
அவருடன் நான் கடைசியாகப் பேசி 8 மணி நேரம் மட்டுமே கடந்திருக்கிறது. (இது கலாமின் ஆலோசகர் ஸ்ரீஜன் பால்சிங் அவரது ஃபேஸ்புக்கில் இப்பதிவை பதிந்த போது குறிப்பிடப்பட்டிருந்த நேரம்) தூக்கம் என் கண்களுக்குள் நுழைய மறுத்து இமைகளை விட்டு விலகிச் செல்கிறது. துக்கம் கண்ணீராகக் கரை புரண்டோடுகிறது. அதில் கலாமின் நினைவுகள் கலந்து வழிந்தோடுகின்றன.
அப்துல் கலாமுடன் நான் சேர்ந்திருந்த அந்த கடைசித் தருணமானது 27-ம் தேதி நண்பகல் 12 மணிக்குத் தொடங்கியது. குவாஹாட்டிக்கு விமானத்தில் ஒன்றாக புறப்பட்டோம். டாக்டர் கலாம் 1-ஏ எண் கொண்ட இருக்கையிலும் நான் 1-சி இருக்கையிலும் அமர்ந்திருந்தோம். அவர் அடர் நிறம் கொண்ட ஆடை அணிந்திருந்தார். அவரைப் பார்த்த மாத்திரத்தில் 'நல்ல நிறம்' என அவரது ஆடையைச் சுட்டிக்காட்டிச் சொன்னேன். அப்போது என் மனம் அறிந்திருக்கவில்லை அதுவே அவரை நான் பார்க்கும் கடைசி நிறமென்று.
பருவமழை காலத்தில், விமானத்தில் இரண்டரை மணி நேரம் பயணம் என்பது சற்று எரிச்சலைத் தருவதே. அதுவும் விமானத்தின் சிறு ஜெர்க்குகள் எனக்கு வெறுப்பாக இருந்தது. ஆனால், கலாமுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம். எனது வெறுப்புணர்வைப் புரிந்து கொண்ட கலாம், என் அருகில் இருக்கும் கண்ணாடி ஜன்னலுக்கு மேல் இருக்கும் திரையை இழுத்துவிட்டு "இப்போது நீ அச்சமின்றி இருக்கலாம்" என்றார்.
விமானப் பயணம் ஒருவழியாக முடிந்தது. அடுத்ததாக ஐ.ஐ.எம். ஷில்லாங்குக்கு கார் மூலமாக இரண்டரை மணி நேரப் பயணம். விமானப் பயணம், கார் பயணம் என பயணமே 5 மணி நேரத்தை விழுங்கிவிட்டது. ஆனால் அந்த 5 மணி நேரமும் நாங்கள் நிறையப் பேசினோம், ஆலோசித்தோம், விவாதித்தோம். கடந்த ஆறு ஆண்டுகளில் இதுபோன்ற நிறைய தருணம் எனக்கு வாய்த்திருக்கிறது.
இருப்பினும் எனக்கும் கலாமுக்கும் இடையேயான அந்த கடைசி பேச்சுகளில் மூன்று முக்கிய நிகழ்வுகள்/ஆலோசனைகள் எப்போதும் நினைவில் நிற்கும்.
முதலாவது, பஞ்சாபில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல் கலாமை வெகுவாகவே பாதித்திருந்தது. அப்பாவி உயிர்களின் பலி அவரைத் துயரத்தில் ஆழ்த்தியிருந்தது. அன்றைய தினம் அவர் ஷில்லாங் ஐ.ஐ.எம். அரங்கில் பேசவிருந்த தலைப்பு 'வாழ்வதற்கு உகந்த பூமி'.
பஞ்சாப் சம்பவத்தையும் அவர் பேசவிருந்த தலைப்பினையும் ஒப்பிட்ட கலாம், "மனிதர்களால் ஆன சக்திகள் பல இந்த புவியை வாழ்வதற்கு தகுதியற்றதாக மாற்றி வருகின்றன. வன்முறையும், சுற்றுச்சூழல் மாசும், சற்றும் பொறுப்பற்ற மனித நடவடிக்கைகளும் தொடர்ந்தால் இன்னும் 30 ஆண்டு காலத்தில் நாம் இந்த பூமியை விட்டுச் செல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்படும். இதைத் தடுக்க உங்களைப் போன்றவர்கள் ஏதாவது ஆக்கப்பூர்வமாக செய்ய வேண்டும். எதிர்காலம் உங்கள் கைகளிலேயே இருக்கிறது" என்றார்.
இரண்டாவதாக நாங்கள் பேசிக் கொண்டது தேசிய அரசியல் பற்றியது. நாடாளுமன்றம் முடங்கி வருவது குறித்து கலாம் மிகுந்த வேதனை தெரிவித்தார். "எனது பதவிக் காலத்தில் நான் இரு வேறு அரசுகளைப் பார்த்திருக்கிறேன். அதன் பின்னரும் நிறைய ஆட்சி மாற்றங்களை பார்த்துவிட்டேன். ஆனால், இத்தகைய முடக்கங்கள் மட்டும் மாறவில்லை. இது சரியானது அல்ல. நாடாளுமன்றம் வளர்ச்சிக்கான அரசியலை முன்னெடுத்துச் செல்வதாக இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த ஏதாவது ஒரு வழிவகை காண விரும்புகிறேன்" எனக் கூறினார்.
பின்னர் என்னிடம் ஐஐஎம் மாணவர்களிடம் கேட்பதற்காக சில கேள்விகளை தயார் செய்யுமாறு வலியுறுத்தினார். அதை தனது உரை முடிந்தவுடன் மாணவர்களுக்கு வழங்கவிருப்பதாக தெரிவித்தார். நாடாளுமன்றத்தை ஆக்கபூர்வமானதாகவும், துடிப்பு மிக்கதாகவும் மாற்றக்கூடிய வழிமுறைகள் மூன்றினை மாணவர்கள் குறிப்பிட வேண்டும். அதுவே கலாம் மாணவர்களுக்காக தயார் செய்து வைத்திருந்த அந்த கடைசி நேரக் கேள்வி.
சிறிது நேரம் கழித்து என்னிடம் அந்த கேள்வி பற்றி மீண்டும் பேசினார். என்னாலேயே இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியவில்லை என்றால் மாணவர்களால் எப்படி முடியும் என்றார். அடுத்த ஒரு மணி நேரம் இதைப் பற்றியே எங்கள் பேச்சு இருந்தது. பல்வேறு யோசனைகளை நாங்கள் பகிர்ந்து கொண்டோம். எங்களது அடுத்த படைப்பான 'அட்வான்டேஜ் இந்தியா' என்ற புத்தகத்தில் இது குறித்து சேர்க்கலாம் என முடிவு செய்தோம்.
மூன்றாவது நிகழ்வு மிகவும் நெகிழ்ச்சிகரமானது. அவரது பண்பாட்டுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றே சொல்லலாம். எங்கள் வாகனத்துக்குப் பாதுகாப்பாக 6 வாகனங்கள் வந்தன. நாங்கள் இரண்டாவது வாகனத்தில் இருந்தோம். எங்கள் காருக்கு முன்னதாகச் சென்ற ஒரு திறந்த ஜிப்ஸி வாகனத்தில் 3 வீரர்கள் இருந்தனர். இருவர் ஜிப்ஸிக்குள் அமர்ந்திருந்தனர். ஒருவர் வாகனத்தில் நின்றபடி பயணித்தார். ஒரு மணி நேர பயணம் ஆகியிருக்கும், "அந்த நபர் ஏன் நின்று கொண்டே வருகிறார்? அவர் சோர்ந்து விடுவார். இது அவருக்கு தண்டனை போல் அல்லவா இருக்கிறது? ஏதாவது செய்யுங்கள். ஒயர்லெஸ் கருவியில் தகவல் அனுப்பி அவரை அமரச் செய்யுங்கள் அல்லது கை அசைத்தாவது அவரை உட்கார சொல்லுங்கள்" எனக் கலாம் என்னிடம் கூறினார்.
அவரிடம் நான் எவ்வளவோ எடுத்துரைத்தேன். பாதுகாப்புக் காரணங்களுக்காக அவரை நிற்கும்படி மேலதிகாரி கூறியிருக்கலாம் என்றேன். ஆனால், கலாம் சமாதானம் அடையவில்லை. ரேடியோ கருவி மூலம் தகவல் அனுப்ப எவ்வளவோ முயன்றோம். ஆனால் அது சரிப்பட்டு வரவில்லை. அடுத்த 1.5 மணி நேரப் பயணத்தின் போது "ஷில்லாங் சென்றதும் அந்த நபருக்கு நான் நன்றி தெரிவிக்க வேண்டும்" என்பதை அவர் என்னிடம் மூன்று முறையாவது நினைவுபடுத்தியிருப்பார். அதேபோல் ஷில்லாங் சென்றதும், அந்த நபரை நான் ஒருவழியாக தேடிப்பிடித்தேன். அவரை கலாமிடம் அழைத்துச் சென்றேன்.
அந்த வீரரிடம் கைகுலுக்கிய கலாம், "சோர்வாக இருக்கிறாயா? ஏதாவது சாப்பிடுகிறாயா" எனக் கேட்டார். "எனக்காக நீ நீண்ட நேரம் நிற்க வேண்டியதாகிவிட்டது. அதற்காக நான் வருந்துகிறேன்" என்றார். கலாமின் பண்பைக் கண்டு வியந்துபோன அந்த வீரர், "சார், உங்களுக்காக நான் 6 மணி நேரம்கூட நிற்பேன்" என்றார்.
அதன்பிறகு நாங்கள் கருத்தரங்கம் நடைபெறவிருந்த இடத்துக்குச் சென்றோம். அவர் எப்போதுமே குறித்து நேரத்துக்குச் செல்ல வேண்டும் என்ற கொள்கையுடவர். மாணவர்களை காக்க வைக்கக் கூடாது என என்னிடம் அவர் அடிக்கடி கூறியிருக்கிறார்.
அங்கே, அவருக்காக ஒலிப்பெருக்கியைச் சரி செய்தேன். கருத்தரங்கு குறித்து சுருக்கமாக குறிப்பு வழங்கினேன். அப்போது அவர் என்னிடம், 'ஃபன்னி கை'- விளையாட்டுப் பையன் நீ!" என்றார். அவருடனான 6 ஆண்டுகளில் குறிப்பிட்ட இந்த வார்த்தைக்குப் பல அர்த்தங்களை நான் புரிந்து கொண்டிருக்கிறேன். ஒழுங்காக வேலை செய்தால், சிறு தவறு செய்திருந்தால், அவர் சொல்வதற்கு செவி சாய்க்க வேண்டுமென நினைத்தால், எனப் பல்வேறு தருணங்களில் கலாம் இந்த வார்த்தையை என்னிடம் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால், இந்த முறை அவர் கூறியதே கடைசியானது, இறுதியானது.
மேடையில் ஏறி இரண்டு நிமிடங்கள் பேசியிருப்பார். நான் அவருக்குப் பின் அமர்ந்திருந்தேன். 2 நிமிட பேச்சுக்குப் பின்னர் நீண்ட இடைவெளி. நான் அவரைப் பார்த்தேன். அவர் கீழே சரிந்தார். அவரை நாங்கள் தூக்கினோம். மருத்துவர்கள் விரைந்து வந்தனர். என்ன முதலுதவியெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்தனர். என் ஒரு கரத்தில் கலாமின் தலையைத் தாங்கிக் கொண்டிருந்தேன். பாதி மூடிய கண்களில் அவர் என்னைப் பார்த்த அந்த கடைசிப் பார்வையை என்றென்றைக்கும் மறக்க முடியாது.
அவரது கை எனது கையை இறுகப்பற்றியது; அவரது விரல்களை என் விரல்களோடு கோர்த்துக்கொண்டார். அவரது முகத்தில் அமைதி தவழ்ந்தது. அவர் எதுவும் பேசவில்லை. வலியை சிறிதும் காட்டவில்லை. அவரது கண்களில் ஞான ஒளி வீசியது. அடுத்து 5 நிமிடங்களில் நாங்கள் மருத்துவமனையை அடைந்திருந்தோம். ஆனால், அப்போதே ஏவுகணை நாயகன் நம்மைவிட்டு பறந்திருந்தார். அவரது பாதம் தொட்டு வணங்கினேன். எனது மூத்த நண்பருக்கு, எனது குருவுக்கு பிரியாவிடை செலுத்தினேன். உங்கள் நினைவுகள் என்னைவிட்டு நீங்காது. அடுத்த பிறப்பில் சந்திப்போம்.
நினைவலைகளில் இருந்து இன்னும் கொஞ்சம்...
"நீ ஒரு இளைஞன். நீ எதற்காக அடுத்தவர்களால் நினைவுகூரப்பட வேண்டும் என நினைக்கிறாய்?" இக்கேள்வியை கலாம் என்னிடம் அடிக்கடி கேட்டிருக்கிறார். அவரது கவனத்தை ஈர்க்கும் பதிலைத் தேடியலைந்திருக்கிறேன். ஒரு நாள், அவரிடம் இதே கேள்வியை நான் திருப்பிக் கேட்டேன். "நீங்கள் முதலில் சொல்லுங்கள். நீங்கள் எதற்காக நினைவுகூரப்பட விரும்புகிறீர்கள்? குடியரசுத் தலைவர், விஞ்ஞானி, எழுத்தாளர், ஏவுகணை நாயகர், இந்தியா 2020 புத்தகம் அல்லது டார்கெட் 3 பில்லியன்.... இவற்றில் எதற்காக நீங்கள் நினைவுகூரப்பட விரும்புகிறீர்கள்?" என்றேன்.
பல்வேறு பதில்களை நானே அளித்திருந்ததால் அவர் எளிதில் சொல்லிவிடுவார் என எதிர்பார்த்தேன். ஆனால் என்னை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் விதமாக, "ஆசிரியராக இருந்ததற்காகவே நினைவுகூரப்பட விரும்புவேன்!" என்றார்.
நோவற்ற மரணம் வரம்!
சில வாரங்களுக்கு முன்னதாக நானும் கலாமும் அவரது பழைய நண்பர்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது எங்கள் பேச்சு, பிள்ளைகள் தங்கள் பெற்றோரைப் பேணுவது தொடர்பாக விரிந்தது. அப்போது கலாம், "பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் வயோதிக காலத்தில் அவர்களைப் பாதுகாக்க வேண்டும். ஆனால் பல நேரங்களில் அது நடைபெறாதது வருத்தமளிக்கிறது. அதேபோல் பெரியவர்கள் தங்கள் சொத்துகளை வாரிசுகளுக்குப் பிரித்தளிக்க மரணப்படுகையில் விழும் வரை காத்திருக்கக் கூடாது. அது குடும்பத் தகராறு ஏற்பட வழி செய்யும். அதேபோல் நோவற்ற மரணம் பெரிய வரம். ஒருவர் தன் பணியின்போதே மரித்துப்போவார் எனில் அது வரமே. இறுதி மூச்சு, இழுபறியின்றி பிரிய வேண்டும்" என்றார்.
அவரது வார்த்தைகளை இன்று நான் அசைபோடுகிறேன். அவரது இறுதிப்பயணம் அவர் விருப்பத்துக்கேற்ப கற்பிக்கும்போதே நிகழ்ந்திருக்கிறது. கடைசி நேரத்தில் அவர் படுக்கையில் துவண்டு கிடக்கவில்லை. கம்பீரமாக நின்றுகொண்டு, பணி செய்துகொண்டு, உரையாற்றிக் கொண்டிருந்தார். ஒரு பெருந்தலைவர் நம்மை விட்டு மறைந்துவிட்டார். அவர் சேர்த்து வைத்தது எல்லாம் மக்களின் அன்பு மட்டுமே. இறுதிப் பயணத்திலும் அவர் ஒரு வெற்றியாளரே.
அவருடனான காலை சிற்றுண்டி, இரவு உணவு வேளைப் பொழுதுகள் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன். அவருடைய எளிமை, ஆர்வம் போன்ற குணங்கள் என்னில் எப்போதும் நினைவலைகளாக வியாபித்திருக்கும். அவர் விட்டுச்சென்ற பாடங்கள் எத்தனையோ. ஆனால், இனி அவரிடம் கற்க முடியாது என்ற வேதனை என்னை அமிழ்த்துக்கொண்டே இருக்கிறது. நீங்கள் எனக்கு கனவுகளைத் தந்தீர்கள். அந்தக் கனவுகள் சாதிக்க முடிந்த சாத்தியமாக இருக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தீர்கள். உங்களை என்றும் மறவேன்.
கலாம் சென்றுவிட்டார் ஆனால் அவரது பணிகள் காலம் கடந்து வாழும்.
உங்களுக்கு நன்றிக் கடன்பட்ட மாணவன்,
ஸ்ரீஜன் பால் சிங் - அப்துல் கலாமின் ஆலோசகர்
*
தமிழில் - பாரதி ஆனந்த்
************

கலாம்: குடியரசுத் தலைவரானது எப்படி?

ஏவுகணை விஞ்ஞானி’ என்று உலகம் முழுவதும் புகழப்பட்ட அப்துல் கலாம் அவருடைய கடின உழைப்பு, அன்பு, அடக்கம், குழுவாக இணைந்து பணியாற்றும் ஆற்றல் காரணமாகவே குடியரசுத் தலைவர் பதவிக் கான வேட்பாளராகவும் தேர்ந்தெடுக் கப்பட்டார்.
அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அவருடைய கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் வாக்களித்தால் மட்டும் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று விடுவது நிச்சயம் என்று சொல்ல முடியாது என்ற நிலையே நிலவியது. கட்சி சார்பில் அரசியல்வாதி யாரை நிறுத்தினாலும் கடும் போட்டி ஏற்படும் என்பதால் கருத்தொற்றுமை அடிப்படையில் பொதுவான ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
பொக்ரானில் நடந்த இரண்டாவது அணுகுண்டு வெடிப்பை கச்சிதமாக செய்து முடித்த கலாமைத் தவிர வேறு யாரும் அப்பதவிக்குப் பொருத்தமானவராக இல்லை. தென்னிந்தியர், இஸ்லாமியர், சர்ச்சைக்கு இடமில்லாத அறிவியர் அறிஞர் என்ற காரணங்களால் கலாம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால் சில விமர்சகர்களோ, அரசியலில் அதிகப் பழக்கம் இல்லாத கலாமைத் தேர்ந் தெடுக்கக் காரணம் அவர் அரசியல் தலைமை சொன்னபடி கேட்பார் என்பதால்தான் என்று பேசத் தொடங்கினர்.
அப்துல் கலாம் குடியரசுத் தலைவரான பிறகு அவரு டைய செயலைப் பார்த்த விமர்சகர்களும் அரசியல் தலைவர்களும் வாயடைத்தனர். காரணம் எந்த ஒரு பிரச்சி னையையும் ஆழ ஊன்றிக் கவனித்து, சட்டப்படியும் நியாயப் படியும் என்ன செய்ய வேண்டுமோ அதை உரிய ஆலோசகர்களைக் கலந்த பிறகு தீர்மானித்து செயல்படுத்தினார். எனவே அவருடைய எந்த முடிவும் கடினமான விமர்சனத்துக்கு உள்ளாகவில்லை.
போர் விமானியாகும் ஆசை நிறைவேறவில்லை
போர் விமானங்களை ஓட்டும் விமானியாக வேண்டும் என்ற ஆசை அப்துல் கலாமுக்கு நிறைய இருந்தது.
ஆனால் காலம் அவருக்கு மகத்தான பணிகளைத் தரக் காத்திருந்தது. எனவே போர் விமானிக்கான தேர்வுக்குச் சென்ற போது மொத்தம் கலந்துகொண்ட 25 பேரில் ஒன்பதாவதாக அவர் தேறினார்.
தேவைப்பட்ட போர் விமா னிகள் எண்ணிக்கையே 8 தான் என்பதால் நூலிழையில் அந்த வாய்ப்பை இழந்தார். வாய்ப்பை இழந்த சோகம் தாக்க நேராக ஹரித்துவார் சென்றுவிட்டார். அங்கே அவருக்கு மனசாந்தி ஏற்பட்டது. இனி செல்ல வேண்டிய பாதை எது என்று ஒரு முடிவுக்கு வந்தவராக மூத்த அறிவியல் உதவியாளராக மீண்டும் பணியைத் தொடர்ந்தார். படிப்படியாக பெரும் பொறுப்பு களை ஏற்றார்.
****************

ராமேசுவரத்தில் கலாம் உடல் வியாழக்கிழமை நல்லடக்கம்: இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் தீவிரம்


தலைநகரில் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் திரண்டு அஞ்சலி

*
மாரடைப்பால் உயிரிழந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடல் மேகால யாவில் இருந்து நேற்று காலை டெல்லிக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். கலாமின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான ராமேசுவரத்தில் நாளை நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்று தெரிகிறது.
மேகாலயா தலைநகர் ஷில்லாங் கில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்துல் கலாம் பங்கேற்றார். மாலை 5.40 மணிக்கு அவர் விழாவுக்கு சென்றார். 6.30 மணிக்கு உரையாற்றத் தொடங்கினார். அடுத்த சில நிமிடங்களில் அவர் திடீரென மயங்கி விழுந்தார். முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு அவர், உடனடியாக அருகில் உள்ள பெதானி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். அவரை பரிசோ தித்த டாக்டர்கள், கலாம் மாரடைப் பால் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்தத் தகவலை மருத்துவமனை நிர்வாகம் இரவு 7.45 மணிக்கு வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து கலாமின் உடல் ஷில்லாங்கில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டது. அங்கிருந்து நேற்று காலை அவரது உடல் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் அசாம் மாநிலம் குவாஹாட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது. மேகாலயா ஆளுநர் சண்முகநாத னும் உடன் சென்றார்.
குவாஹாட்டி ராணுவ விமான தளத்தில் அசாம் முதல்வர் தருண் கோகாய், உயரதி காரிகள் உள்ளிட்டோர் கலாமின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கிருந்து இந்திய விமானப் படையின் சி-130 ஹெர்குலிஸ் விமானம் மூலம் டெல்லிக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது.
பிரணாப், மோடி அஞ்சலி
டெல்லி பாலம் விமானப் படை தளத்தில் மதியம் 12.15 மணிக்கு ஹெர்குலிஸ் விமானம் தரையிறங்கியது. அப்போது 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. மூவர்ணக் கொடி போர்த்தப் பட்டிருந்த கலாமின் உடலை முப்படை வீரர்கள் சுமந்து வந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த சிறிய மேடையில் வைத்தனர்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் பாலம் விமான தளத்துக்குச் சென்று கலாமின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பாஸி, விமானப் படை தளபதி அரூப் ரஹா, கடற்படைத் தளபதி ஆர்.கே.தோவல், ராணுவ தலைமைத் தளபதி தல்பீர் சிங் ஆகியோர் மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.
பின்னர், கலாமின் உடல் ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு, பாலம் விமான நிலையத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவில் எண் 10 ராஜாஜி மார்க்கில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. வழிநெடுகிலும் ஆயிரக்கணக் கான மக்கள் சாலையின் இருபுற மும் கூடி நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
பிரபலங்கள் இறுதி அஞ்சலி
வீட்டில் வைக்கப்பட்டிருந்த கலாம் உடலுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங், உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், மனோகர் பாரிக்கர், ஹர்ஷவர்தன், ஜிதேந்திர சிங், ரவிசங்கர் பிரசாத், பாஜக தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர் அத்வானி, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் எம்.பி.க்கள் உட்பட ஏராளமான முக்கியப் பிரமுகர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.
மாலை 4 மணி முதல் கலாமின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அந்த மாமனிதருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
நாளை இறுதிச் சடங்கு
அப்துல் கலாமின் உறவினர்கள் கோரிக்கையை ஏற்று, அவரது சொந்த ஊரான ராமேசுவரத்தில் இறுதிச் சடங்குகளை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கலாமின் உடல் டெல்லியில் இருந்து இன்று பிற்பகல் விமானம் மூலம் ராமேசுவரம் கொண்டு வரப்படு கிறது. ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக கலாம் உடல் வைக் கப்படுகிறது. இன்று பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம் என அறிவிக் கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து நாளை காலை 10.30 மணி அளவில் இறுதிச் சடங்கு நடைபெறுகிது. இதையடுத்து, ராமேசுவரத்தில் இறுதிச் சடங்குக்கான ஏற்பாடு களை ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இறுதிச் சடங்கில் பிரதமர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், முக்கியப் பிரமுகர்கள் பலர் வரக்கூடும் என்பதால் பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.
மோடி வருகிறாரா?
அப்துல் கலாமின் உடலுக்கு டெல்லியிலேயே பிரதமரும், குடியரசுத் தலைவரும் அஞ்சலி செலுத்திவிட்டனர். இருப்பினும் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்க மோடி ராமேசுவரம் வருவார் என்று கூறப்படுகிறது. இதை கலாமின் பேரன் ஷேக் சலீமும் உறுதிப்படுத்தியுள்ளார். மண்டபம் அகதிகள் முகாம் அருகே உள்ள பழைய ஹெலிபேடு முழுவீச்சில் சீரமைக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கேட்டபோது, ‘‘முக்கியப் பிரமுகர்கள் பலர் வருகை தர உள்ளனர். எனவே, இங்கு 5 ஹெலிபேடுகள் தயார் நிலையில் வைக்கப்படும். இன்று முதல் 3 நாட்களுக்கு ராமேசுவரம் தீவில் மட்டும் ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்’’ என்றார்.
தமிழகத்தில் நாளை பொது விடுமுறை
தமிழக பொதுத் துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஷில்லாங்கில் 27-ம் தேதி மரணமடைந்தார். அவரது உடல் ராமேசுவரத்தில் அடக்கம் செய்யப்படும் 30-ம் தேதி பொது விடுமுறை அளிக்க அரசு முடிவெடுத்துள்ளது. இதன்படி, 30-ம் தேதி அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை அளிக்கப்படுகிறது.
இஸ்லாமிய முறைப்படி இறுதிச் சடங்கு:
அப்துல் கலாமின் உடல், ராமேசுவரத்தில் இஸ்லாமிய முறைப்படி வியாழக்கிழமை நல்லடக்கம் செய்யப்படுகிறது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கே.நந்தகுமார் கூறும்போது, "கலாமின் உடலை சுமந்து வரும் விமானம் டெல்லியிலிருந்து புதன் கிழமை (இன்று) காலை புறப்படுகிறது. பிற்பகல் 1 மணிக்கு அவரது உடல் ராமேசுவரம் வந்து சேரும். அதைத் தொடர்ந்து, பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே உள்ள மைதானத்தில் வைக்கப்படுகிறது. பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம். ராமேசுவரம் பேக்கரும்பு கிராமத்தில் அவரது உடல் வியாழக்கிழமை அடக்கம் செய்யப்படும்" என்றார்.
கலாமின் பேரன் ஷேக் சலீம் கூறும்போது, "கலாமின் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகளின் உத்தரவுப்படி மாவட்ட நிர்வாகம் வேகமாக செய்து வருகிறது. இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஆந்திரா உட்பட 6 மாநிலங்களின் முதல்வர்கள், மாலத்தீவு உள்ளிட்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். அதைத் தொடர்ந்து வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு அவரது உடல் இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்படும்" என்றார்
************
Zee Media Bureau
New Delhi: Beloved former president Dr APJ Abdul Kalam, also known as the father of India's military missile program, died on Monday after collapsing while delivering a lecture in Shillong, plunging the entire nation into a state of utter shock.
Kalam, who served as president from 2002 until 2007, was not only a renowned scientist, thinker, philosopher and teacher, but also a winner of numerous prestigious awards and honours.
It was in the year 2010, when the United Nations decided to honour this 'great scientist' on his 79th birth anniversary and declared his birthday on October 15 as the ‘World Students' Day’.
Since then, October 15 is observed as a day for students all around the world. During his lifetime, Dr Kalam had always expressed his wish to be remembered as a teacher by the people.
He was bestowed with the Padma Bhushan in 1981 and the Padma Vibhushan in 1990 for his work with ISRO and DRDO by the Government of India.
He was also honoured with 'Bharat Ratna' for his contribution to the scientific research and modernisation of defence technology in India.
In 2005, Switzerland also declared May 26 as 'Science Day' to commemorate Dr Kalam’s visit to the European country
A bachelor, the former president was a 'Veena' player and was deeply interested in Carnatic music. He remained a vegetarian all his life.
'Wings of Fire', 'India 2020 - A Vision for the New Millennium', 'My journey' and 'Ignited Minds - Unleashing the power within India' are the famous books which Dr Kalam authored.
These highly acclaimed books have been translated in many Indian languages.
.***********
எங்கு சென்றாலும் குழந்தைகளோடு குழந்தைகளாக, மாணவர்களோடு மாணவர்களாக நின்று, அவர்களோடு உரையாடி மகிழ்ந்த கலாமுக்கு நேற்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்துகிறாள் சென்னையில் உள்ள பள்ளி மாணவி. படம்: பிடிஐ
கற்றல் பயன்தரும்போது
கற்பனைவளம் மலர்கிறது.
கற்பனைவளம் மலர்கிறபோது
சிந்தனை மேம்படுகிறது.
சிந்தனை மேம்படும்போது
அறிவு ஒளி வீசுகிறது.
அறிவு ஒளி வீசும்போது
பொருளாதாரம் வளம் பெறுகிறது!
- டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
ஷில்லாங்கில் இருந்து கலாமின் உடலை சுமந்துவரும் விமானப் படை ஹெலிகாப்டர், அசாம் மாநிலம் குவாஹாட்டியில் நேற்று காலை தரையிறங்குகிறது. அதற்கு மரியாதை செலுத்தும் விமானப் படையினர். படம்: பிடிஐ
விமான நிலையத்தில் இருந்து ராஜாஜி சாலையில் உள்ள இல்லத்துக்கு ஆயுத வாகனத்தில் உடல் கொண்டுசெல்லப்படுகிறது. படம்: ஏ.எப்.பி
விமானப் படையின் சிறப்பு விமானத்தில் கலாம் உடல் டெல்லிக்கு கொண்டுவரப்பட்டது. டெல்லி வந்தடைந்த விமானத்தில் இருந்து மூவர்ணக் கொடியால் போர்த்தப்பட்டிருக்கும் கலாம் உடலை சுமந்துவரும் முப்படையினர். படம்: ஏ.எப்.பி
விமானப் படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த அதிகாரி மார்ஷல் அர்ஜன் சிங். பீல்டு மார்ஷல் பதவிக்கு நிகராக 5 ஸ்டார்கள் அந்தஸ்துடன் பதவி உயர்வு பெற்ற ஒரே அதிகாரி. 96 வயதாகும் இவர் சக்கர நாற்காலியை விட்டு பெரும்பாலும் எழுந்திருப்பதே இல்லை. நேற்று, டெல்லி விமான நிலையத்துக்கு சக்கர நாற்காலியில் விமானப் படை சீருடையில் இவரும் வந்திருந்தார். விமானப்படை வீரரின் உதவியுடன் சக்கர நாற்காலியில் இருந்து எழுந்த இவர், ஊன்றுகோல் உதவியுடன் மெதுவாக நடந்துவந்தார். வீரர் அவரைத் தாங்கிப் பிடித்திருக்க, கலாமின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் மார்ஷல் அர்ஜன் சிங். கைகள் நடுங்கியபோதும் நெஞ்சை நிமிர்த்தி சல்யூட் செய்தார். படம்: ஆர்.வி.மூர்த்தி
இந்தியத் திருநாட்டின் முதல் குடிமகனாக அப்துல் கலாம் ஐந்தாண்டு காலம் வளையவந்த குடியரசுத் தலைவர் மாளிகையில் அரைக் கம்பத்தில் பறக்கிறது தேசியக் கொடி. படம்: ராய்ட்டர்ஸ்
டெல்லி இல்லத்தில் கலாமுக்கு அஞ்சலி செலுத்த வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள். படம்: ஏ.எப்.பி
கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கர்நாடக மாநிலம் மங்களூரில் நேற்று அமைதி ஊர்வலம் சென்ற பள்ளி, கல்லூரி மாணவிகள். படம்: எச்.எஸ்.மஞ்சுநாத்
அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கமான எம்ஐடி-யில் ஏரோநாட்டிகல் இன்ஜினீயரிங் பயின்றவர் கலாம். முன்னாள் மாணவரான அவருக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள். படம்: ம.பிரபு
அஞ்சலி செலுத்தும் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால். படம்: ஆர்.வி.மூர்த்தி
டெல்லி ராஜாஜி சாலையில் வைக்கப்பட்டுள்ள கலாம் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வரும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். (அடுத்த படம்) காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. படங்கள்: ஏ.எப்.பி
கலாம் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் டெல்லியில் நேற்று நடந்த பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, மூத்த தலைவர் அத்வானி.
டெல்லியில் உள்ள கலாம் இல்லத்தில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி. படம்: பிடிஐ
மேகாலயாவில் இருந்து மாநில ஆளுநர் வி.சண்முகநாதனும் கலாம் உடலுடன் டெல்லி வந்தார். அவருடன் பேசும் பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர். படம்: ஆர்.வி.மூர்த்தி
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தும் பள்ளி மாணவிகள் படம்: ஏ.எம்.ஃபரூக்கி
பிறந்தது தென்கோடி என்றாலும், தன் கள்ளமில்லாச் சிரிப்பாலும், உற்சாகம் தரும் பேச்சாலும் நாடு முழுவதும் கோடானுகோடி இளைஞர்கள், மாணவர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர் கலாம். அவரது மறைவு இந்த தேசத்தையே கண்ணீரில் ஆழ்த்தியிருக்கிறது. சண்டிகரில் கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் பஞ்சாப் பல்கலைக்கழக மாணவர்கள். படங்கள்: அகிலேஷ்குமார்
************
அப்துல் கலாம் ஆரம்பக் கல்வி முதல் இடைநிலைக் கல்வி வரை பயின்றது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்தான். அன்றைய காலகட்டத்தை நினைவுகூர்கிறார் கள் அந்தப் பள்ளிகளின் இன்றைய தலைமை ஆசிரியர்கள்.
ராமேசுவரம் பள்ளிவாசல் தெரு வில் உள்ள கலாமின் வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ளது மண்டபம் ஊராட்சி ஒன்றியப் பள்ளி எண் 1. ராமேசுவரம் நகராட்சி அலுவலகத்தை ஒட்டியிருக்கும் இப்பள்ளிதான் இந்தியாவின் முதல் குடிமகனாக உயர்ந்த கலாமுக்கு, அகர முதல எழுத்தை கற்றுத் தந்தது.
அன்று தொடக்கப் பள்ளியாக ஓட்டுக் கட்டிடத்தில் இயங்கிய இப்பள்ளியில், கலாமை ஒன்றாவது பாரத்தில் சேர்த்தார் அவரது தந்தை ஜயினுலாபுதீன். 1941 முதல் 1946-ம் ஆண்டு வரை கலாம் பயின்ற இப்பள்ளியில்தான் அவரது தந்தையின் நண்பரும், ராமேசுவரம் கோயில் தலைமை குருக்களுமான பக்ஷி லட்சுமண சாஸ்திரியின் மகன் ராமநாத சாஸ்திரியும் படித்தார். கலாமின் மற்ற இரு நண்பர்கள் அரவிந்தன், சிவப்பிரகாசன்.
இது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியை பி.ராஜலட்சுமி கூறியதா வது: தான் விஞ்ஞானியாக உருவாக அடித்தளம் அமைத்தது இந்தப் பள்ளியின் அறிவியல் ஆசிரியர் சிவசுப்பிரமணிய ஐயர்தான் என்று கலாம் அடிக்கடி குறிப்பிடுவார். தன் மனைவிக்குப் பிடிக்கவில்லை என்றாலும் கூட, கலாமை தன் வீட்டு சமையற்கட்டுக்கே அழைத்துச் சென்று உணவு பரிமாறியவர் அவர். இது குறித்தும், பெரிய நகரங்களில் உள்ள மெத்தப்படித்தவர்களுக்கு சமமாக நீ உயர வேண்டும் கலாம் என்று அவர் வாழ்த்தியது பற்றியும் தன்னுடைய அக்னிச் சிறகுகள் நூலில் எழுதியுள்ளார் கலாம் என்றார்.
ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கலாம் படித்த ஸ்வார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி, ராமநாதபுரத்தில் ஆட்சியர் அலுவலகம் எதிரே அமைந்துள்ளது. இப்பள்ளியில் கலாம் படித்த வகுப்பறை இப்போதும் உள்ளது. அங்கு பிளஸ் 2 கணிதம், உயிரியல் பாடப்பிரிவு செயல்படுகிறது. அவரது சேர்க்கை விவரம் உள்ள பதிவேடு பொன்போல பாதுகாக்கப்படுகிறது.
இது குறித்து தலைமை ஆசிரியர் டி.பால்மாறன் கூறியதாவது:
இப்பள்ளியில் 13.6.1946-ல் கலாம் சேர்ந்துள்ளார். ராமேசுவரத் தில் இருந்து 58 கி.மீ. தொலைவில் இப்பள்ளி உள்ளதால், இங்குள்ள விடுதியில் தங்கித்தான் அவர் படித்தார். அவர் குடியரசுத் தலை வரான பிறகு எங்கள் பள்ளி மாண வர்கள் 60 பேர் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்றிருந்தோம். அவர்கள் தடுக்கப்பட்ட செய்தியை அறிந்த கலாம், ‘அவர்கள் என் குழந்தைகள் அவர்களே உள்ளே விடுங்கள்’ என்று சொன்னார். அச்சம்பவம் என் கண்ணில் இப்போதும் நிழலாடுகிறது. அவரைப் போன்று குழந்தைகளை நேசித்த ஒரு தலைவர் இனி பிறப்பது சந்தேகம் என்றார்.
************
ஒரு விழாவின் போது தனக்கு வழங்கப்பட்ட நாற்காலி மற்ற நாற்காலிகளை விடப் பெரியதாக இருந்த காரணத்தினால், அதில் அமர மறுத்தார் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.
அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்தபோது நிகழ்ந்த சம்பவம் இது. வாரணாசியில் உள்ள ஐஐடி (பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்) பட்டமளிப்பு விழாவின்போது மேடையில் ஐந்து நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.
அவற்றில் ஒரு நாற்காலி மட்டும் அளவில் பெரியதாக இருந்தது. அந்த நாற்காலி கலாமுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதில் தான் அமர மறுத்துவிட்டு, பல்கலைக்கழக துணை வேந்தரை அமரச் சொன்னார்.
ஆனால் அவரும் மரியாதை நிமித்தமாக அதில் அமரவில்லை. எனவே, உடனடியாக மற்ற நான்கு நாற்காலிகளின் அளவிலேயே இருந்த ஒரு நாற்காலி மேடைக்குக் கொண்டு வரப்பட்டது.
குடியரசுத் தலைவராக இருந்த போதிலும் தன்னை மற்றவர் களைவிட உயர்ந்தவராகக் கருதிக் கொள்ளாமல், மற்றவர்களைப் போல தானும் சாதாரணமானவன் என்று கலாம் இந்த உலகத்துக்கு எடுத்துக்காட்டிய நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி நினைவு கூரப்படுகிறது.
அவர் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டி.ஆர்.டி.ஓ) விஞ்ஞானியாக இருந்தபோது, பாதுகாப்புக் காரணங்களுக்காக ஒரு கட்டிடத்தின் சுற்றுச்சுவர்களில் உடைந்த கண்ணாடித் துண்டுகளை வைக்க திட்டமிடப்பட்டது.
ஆனால், கலாம் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். அதற்குக் காரணமாக அவர் கூறியது: "அப்ப டிச் செய்தால் அந்தச் சுவர்களின் மீது பறவைகள் அமர முடியாது!"
அதேபோல, தனக்குக் கீழ் பணியாற்றிய ஒருவர் தனது வேலைப்பளு காரணத்தால் தன் குழந்தைகளை, நகரத்தில் நடக்கும் ஒரு கண்காட்சிக்கு அழைத்துச் செல்ல முடியாமல் போனது. இதனை அறிந்த கலாம், உடனே அந்த பணியாளரின் குழந்தைகளை தானே கண்காட்சிக்கு அழைத்துச் சென்று நெகிழவைத்தார்.
2002-ம் ஆண்டில் அடுத்த குடியரசுத் தலைவர் என்று அறிவிக் கப்பட்ட பிறகு அவர் ஒரு சாதா ரணமான பள்ளிக்கு உரையாற்றச் சென்றார். அப்போது அவர் உரை யாடிக் கொண்டிருந்தபோது திடீரென்று மின்சார வெட்டு ஏற்பட்டது.
உடனே தனது பாதுகாப்பு குறித்தெல்லாம் கவலைப்படாமல், தன் இருக்கையில் இருந்து எழுந்து மாணவர்களிடையே சென்று நின்றுகொண்டார். சுமார் 400 மாணவர்களுக்கு மத்தியில் அவர் தனது உரையை எந்த வித சலனம் இன்றி நிகழ்த்தினார்.
எல்லாவற்றுக்கும் மேலாக, தான் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றவுடன் முதன் முறையாக கேரளாவுக்குச் சென்றார். அங்கு தன்னுடைய விருந்தாளிகளாக யாரை அழைத்தார் தெரியுமா? செருப்புத் தைப்பவர் ஒருவரையும், ஒரு சிறிய உணவு விடுதியின் உரிமையாளரையும்தான்.
திருவனந்தபுரத்தில் தான் விஞ்ஞானியாகப் பணியாற்றிய காலத்தில் தனக்கு அறிமுகமான இந்த எளியவர்களை தனது விருந்தாளிகளாக அழைத்ததன் மூலம் கலாம் எத்தகைய பண்பாளர் என்பது தெரிய வருகிறது.

*********
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ராமேஸ்வரத்தில் அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் குவிந்த வண்ணம் உள்ளனர்.
மேகாலயா தலைநகர் ஷில்லாங் கில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அப்துல் கலாம் திடீரென மயங்கி விழுந்தார். முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு அவர், உடனடியாக அருகில் உள்ள பெதானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், கலாம் மாரடைப்பால் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
அப்துல் கலாமின் உடல் மேகால யாவில் இருந்து நேற்று காலை டெல்லிக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
மதுரை கொண்டு செல்லப்பட்டது:
கலாமின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான ராமேசுவரத்தில் நாளை நடைபெறுகிறது. இதனையொட்டி அவரது உடல் ராணுவ விமானம் மூலம் இன்று (புதன் கிழமை) மதுரை கொண்டு வரப்பட்டது.
மதுரை விமான நிலையத்தில் ஆளுநர் ரோசய்யா, கலாம் உடலைப் பெற்றுக் கொண்டார். அவரது உடலுக்கு ஆளுநர் ரோசய்யா, தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் கொண்டு செல்லப்பட்டது.
முதல்வர் பங்கேற்பில்லை:
உடல்நிலை காரணமாக தன்னால் தற்போது பயணம் மேற்கொள்ள இயலாததால் அப்துல் கலாமின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாது என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், "ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மீது எனக்கு மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு. எனவே, அவரது இறுதிச் சடங்கில் பங்குகொண்டு எனது மரியாதையை செலுத்த வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். இருப்பினும், எனது உடல்நிலை காரணமாக என்னால் தற்போது பயணம் மேற்கொள்ள இயலவில்லை.
எனவே, எனது சார்பாகவும், தமிழக அரசின் சார்பாகவும், ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 அமைச்சர்கள் ராமேசுவரம் சென்று இறுதி மரியாதை செலுத்த நான் உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், மறைந்த அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அன்னாரது இறுதிச்சடங்கு நடைபெறும் நாளான 30.7.2015 அன்று அரசு விடுமுறை அளிக்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் பங்கேற்கிறார்:
அப்துல் கலாமின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இத்தகவலை மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு உறுதி செய்துள்ளார்.
டெல்லி பாலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கய்ய நாயுடு, "முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இறுதிச் சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். நாளை அதிகாலை ராமேசுவரம் வந்தடையும் பிரதமர் அங்கு காலை 11 மணியளவில் நடைபெறவுள்ள இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பிரதமருடன் சில மாநில முதல்வர்களும் கலந்து கொள்வார்கள்" என்றார்.
இஸ்லாமிய முறைப்படி இறுதிச் சடங்கு:
அப்துல் கலாமின் உடல், ராமேசுவரத்தில் இஸ்லாமிய முறைப்படி வியாழக்கிழமை நல்லடக்கம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கே.நந்தகுமார் கூறும்போது, "கலாமின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே உள்ள மைதானத்தில் வைக்கப்படுகிறது.
பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம். ராமேசுவரம் பேக்கரும்பு கிராமத்தில் அவரது உடல் வியாழக்கிழமை அடக்கம் செய்யப்படும்" என்றார்.
கலாமின் பேரன் ஷேக் சலீம் கூறும்போது, "கலாமின் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகளின் உத்தரவுப்படி மாவட்ட நிர்வாகம் வேகமாக செய்து வருகிறது.
இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஆந்திரா உட்பட 6 மாநிலங்களின் முதல்வர்கள், மாலத்தீவு உள்ளிட்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
அதைத் தொடர்ந்து வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு அவரது உடல் இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்படும்" என்றார்.