திங்கள், 27 ஜூலை, 2015

மதுவிலக்கை அமல்படுத்தினால்

தமிழகத்தின் முக்கால் நூற்றாண்டு மது வரலாறு இது
பிரிட்டிஷார் காலத்தில் அதிகபட்ச சுதந்திரத்தை அனுபவித்தவர்கள் மதுப் பிரியர்கள்தாம். மதுவை விற்கவோ, அருந்தவோ எந்தத் தடையும் இருக்கவில்லை. மது தனிமனித உரிமை. தவிரவும், ரகசியமாகத் தயாரிக்கிறோம் என்ற பெயரில் தரக்குறைவான மது, மனித உயிருக்கு ஆபத்து என்பது பிரிட்டிஷாரின் நிலைப்பாடு. அது காங்கிரஸுக்கு வேப்பங்காயாகக் கசந்தது.
கள்ளுக் கடைகளை மூடு என்று அரசுக்கு எதிராகப் போராடுவோம் என்று காந்தியிடம் சொன்னார் ராஜாஜி. அதன் மூலம் மக்களையும் திரட்ட முடியும் காங்கிரஸையும் பலப்படுத்த முடியும் என்பது அவருடைய கணிப்பு. ஆனால், ராஜாஜியின் அரசியல் வைரியான சத்தியமூர்த்திக்கோ அந்தக் கருத்தில் உடன்பாடு இல்லை.
சத்தியமூர்த்தியின் எதிர்வினை
‘‘குடிகாரர்களே இல்லாத அடிமை நாட்டில் வாழ்வதைவிட, குடிகாரர்கள் வாழும் சுதந்திர நாட்டில் ஒரு பிரஜையாக வாழ விரும்புகிறேன்’’ என்று எதிர்வினை செய்தார் சத்தியமூர்த்தி. இப்படித்தான் மதுவிலக்கு விவகாரத்தில் வாதப்பிரதிவாதங்கள் நடந்துகொண்டிருந்தன. ஆனாலும், காந்தியின் மனம் மதுவிலக்கின் மீதே நிலைகொண்டிருந்தது. மனதில் நினைத்ததைச் செயலில் கொண்டுவர 1937-ன் தேர்தல் வெற்றிகள் வாசல் திறந்துவிட்டன.
காங்கிரஸ் ஆளும் அனைத்து மாகாணங்களிலும் மூன்றாண்டுகளில் பூரண மதுவிலக்கைக் கொண்டுவர வேண்டும் என்றது காங்கிரஸ். சென்னை, பம்பாய், பிஹார், ஐக்கிய மாகாணம் உள்ளிட்ட அரசுகள் சம்மதித்தன. களத்தில் முன்னணியில் நின்றது சென்னை. உபயம்: ராஜாஜி. என்ன ஒன்று. சேலம், சித்தூர், கடப்பா, வட ஆற்காடு ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டுமே மதுவிலக்கு நடைமுறையில் இருந்தது.
மதுவிலக்கில் சென்னைக்கு முதலிடம்
ஆனால், இரண்டாம் உலகப் போரில் இந்தியாவை ஈடுபடுத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாகாண முதல்வர்கள் பதவி விலகினர். அத்தோடு, மதுவிலக்கு நடவடிக்கையும் பாதை மாறியது. பின்னர், 1946 தேர்தலுக்குப் பிறகு சில மாகாண முதல்வர்கள் மீண்டும் மதுவிலக்கில் ஆர்வம் செலுத்தினர். இப்போதும் சென்னை மாகாணமே முதலில் நின்றது. ஓமந்தூர் ராமசாமியின் உழைப்பால் 1948-ல் சென்னையில் பூரண மதுவிலக்கு அமலுக்கு வந்தது.
அன்று தொடங்கி, சுமார் கால் நூற்றாண்டு காலத்துக்குத் தமிழகத்தில் மதுவிலக்கு அமலில் இருந்தது. ஆனால், இதர பிராந்தியங்களில் மதுவிலக்கைத் தீவிரமாக அமல்படுத்த முடியாமல் அரசுகள் தடுமாறின. வருவாய் இழப்பு, சட்ட ஒழுங்குச் சிக்கல்கள் என்று பல காரணங்கள். ஆனால், பூரண மதுவிலக்கை நிறைவேற்றியே தீர வேண்டும் என்றது காங்கிரஸ். அதற்காக 6 டிசம்பர் 1954-ல் மன் நாராயணன் தலைமையில் மதுவிலக்கு விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஓராண்டுகால ஆய்வுக்குப் பிறகு, அந்தக் குழு 15 பரிந்துரைகளைக் கொடுத்தது.
ஆனால், அவற்றையும் நடைமுறைப்படுத்த முடியாத சூழலில் 1956-ல் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் மதுவிலக்கு இணைக்கப்பட்டது. தேசிய அளவில் மதுவிலக்கைக் கொண்டுவரத் தேவையான செயல்திட்டத்தை வகுக்குமாறு திட்ட குழுவைக் கோரியது நேரு அரசு. மதுவின் பயன்பாட்டைக் குறைக்க இன்று பேசப்படும் கடைகளின் எண்ணிக்கைக் குறைப்பு, நேரக் குறைப்பு போன்ற பெரும்பாலான வழிமுறைகளைத் திட்ட குழு பரிந்துரைத்தது. முக்கியமாக, மதுவிலக்கை அமல்படுத்துவது தொடர்பாக மத்தியக் குழு ஒன்றை அமைக்கவும் திட்டக் குழு பரிந்துரை செய்தது.
பரிந்துரைகள் வந்த பிறகும், மாநில அரசுகள் அதே பல்லவியைத்தான் பாடின. மதுவிலக்கை அமல்படுத்த முடியவில்லை. ஆனாலும், மத்திய அரசு மதுவிலக்கு விஷயத்தில் மனம் தளரவில்லை. 1963 ஏப்ரலில் பஞ்சாபைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தேக் சந்த் தலைமையில் குழு ஒன்றை நியமித்தது. அந்தக் குழு 1964 ஏப்ரலில் அறிக்கை தாக்கல் செய்தது.
அதில் மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான பரிந்துரைகளைச் செய்திருந்தது. அவற்றின் அடிப் படையில், தேசிய அளவிலான பூரண மதுவிலக்குக்காக மீண்டும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. 30 ஜனவரி 1970 - காந்தியின் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தின்போது நாடு முழுக்க மதுவிலக்கு வந்திருக்க வேண்டும்.
ஆனால், அந்த இலக்கைப் பெரும்பாலான மாநில அரசுகள் ஏற்கவில்லை. பெரும்பாலான மாநிலங்கள் வருவாயைத்தான் காரணமாகக் காட்டின. அந்தச் சமயத்தில், குஜராத்திலும் தமிழகத்திலும் மதுவிலக்கு அமலில் இருந்தது.
அண்ணாவின் உறுதி
தமிழ்நாட்டில் காங்கிரஸுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அண்ணாவும் மதுவிலக்கில் உறுதிகாட்டினார். ஆனால், அவருடைய மறைவுக்குப் பிறகு நிதி நெருக்கடியைக் காரணமாகச் சொல்லி, மதுவிலக்கை ரத்து செய்யத் தீர்மானித்தது கருணாநிதி அரசு. அதனை ராஜாஜி, காமராஜர், காயிதே மில்லத் போன்றோர் எதிர்த்தனர். கொழுந்து விட்டெரியும் நெருப்பு வளையத்துக்குள் கொளுத்தப்படாத கற்பூரமாக தமிழ்நாடு எத்தனை நாளைக்குத்தான் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று கேட்டு, அண்டை மாநிலங்களில் நடக்கும் மதுவிற்பனையைச் சுட்டிக்காட்டினார் கருணாநிதி.
30 ஆகஸ்ட் 1971 அன்று மதுவிலக்கு தள்ளிவைக்கப் பட்டது. இதுவொரு தற்காலிக நடவடிக்கை என்று சொல்லியிருந்தார் கருணாநிதி. அதுபோலவே, 30 ஜூலை 1973 அன்று கள்ளுக் கடைகளும் 1 செப்டம்பர் 1974 முதல் சாராயக் கடைகளும் மூடப்படும் என்று அறிவித்தார். அதன்படி மதுவிலக்கு கருணாநிதி ஆட்சிக் காலத்திலேயே மீண்டும் அமலுக்கு வந்துவிட்டது. அது எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்திலும் நீடித்தது. இது பலரும் ‘பேச மறப்பது.’
தாய் மீது ஆணை
என் தாய் மீது ஆணையாக மதுவிலக்கை அமல் படுத்துவேன் என்று வாக்குறுதி கொடுத்த எம்.ஜி.ஆருக்கு, அதை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள். அவற்றை எதிர்கொள்ளப் பல்வேறு சட்டத் திருத்தங்களைக் கொண்டுவந்தார். ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை.
கள்ளச்சாராயச் சாவுகள் அதிகரித்தன. இந்தச் சூழலில் மதுவிலக்கை ரத்து செய்த எம்.ஜி.ஆர், 1 மே 1981 அன்று மீண்டும் கள்ளுக் கடைகள், சாராயக் கடைகளைத் திறக்க உத்தரவிட்டார்.
கள்ளுக் கடைகளும் சாராயக் கடைகளும் ஏலம் விடப்பட்டன. சாராய உற்பத்தியில் தனியார் ஈடுபடுத்தப் பட்டனர். மது தங்குதடையின்றி ஓடிக்கொண்டிருந்த சமயத்தில், 1983 ஜூலையில் டாஸ்மாக் நிறுவனத்தைத் தொடங்கினார். மதுவை மொத்தமாக விற்பனை செய்யும் பணிகளை அது செய்தது. பின்னர், எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கருணாநிதி, 1989-ல் மலிவு விலை மதுவை அறிமுகம் செய்தார். அதற்குப் பெண்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு எழவே, பின்னர் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அதனை ரத்து செய்தார்.
அதைத் தொடர்ந்து, மீண்டும் கள்ளச்சாராயச் சாவுகள் நடந்தன. மது ஒழிப்புச் சட்டத்தின்கீழ் ஏராளமானோர் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டன. ஒருகட்டத்தில் மீண்டும் சாராய விற்பனைக்கு அனுமதி வழங்கினார் ஜெயலலிதா. அன்று தொடங்கி, மதுவிலக்கு கோரிக்கை தொடர்ந்து எழுவதும், வருவாய் காரணத்தை மறைமுகமா கவும், கள்ளச்சாராயச் சாவுகளை நேரடியாகவும் சொல்லி, மதுவிலக்கு விஷயத்தில் இருபெரும் திராவிடக் கட்சிகளும் ஒரு குடையில் நிற்கின்றன.
இந்தச் சூழலில் அரசு, 2003 முதல் டாஸ்மாக் வழியாக மதுவை நேரடியாக விற்பனை செய்யத் தொடங்கியது. அரசே மதுவை விற்கும் செயலை அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்களிடமிருந்து பலத்த எதிர்ப்புக் கணைகள். பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் மதுவிலக்கைத் தங்கள் பிரதான கோஷமாக வைத் துள்ளன. 2016 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சமயத்தில், மதுவிலக்கு கோரிக்கை மீண்டும் பேருருவம் கொண்டுள்ளது.
அதன் எதிரொலியாக, ‘‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவதற்குத் தீவிர நடவடிக்கை கள் எடுக்கப்படும்’’ என்று அறிவித்திருக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி. நேற்று வரை சிறு கட்சிகள் மட்டுமே பேசிவந்த ஒரு விஷயத்தைத் தற்போது திமுக போன்ற ஆட்சி நிர்வாகத்தை அதிகம் அனுபவித்த கட்சி எடுத்திருப்பது மதுவிலக்கு விஷயத்தில் முக்கியத் திருப்பம்.
அதேசமயம், திமுகவின் மதுவிலக்கு நிலைப்பாட்டுக்கு முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து என்னவிதமான எதிர்வினை வரப்போகிறது என்று தெரியவில்லை. நீங்கள் ஆட்சிக்கு வந்தபிறகுதானே செய்வீர்கள், நான் ஆட்சியிலிருக்கும்போதே செய்கிறேன் என்று சொன்னாலும் வியப்பதற்கு விஷயமில்லை!
ஆர். முத்துக்குமார்
`திராவிட இயக்க வரலாறு' முதலான நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு:writermuthukumar@gmail.com
****************

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் ஆண்டுக்கு சுமார் ரூ.25,000 கோடி வீதம் 5 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடிக்கு அதிகமாக இழப்பு ஏற்படும். இதன் விளைவாக இலவசத் திட்டங்களுக்கு மூடுவிழா காண நேரிடும்.
"திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்" என்ற கருணாநிதியின் அறிக்கை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மாநிலத்தின் 20% வருமானத்துக்கு வழி செய்யும் டாஸ்மாக்குக்கு மூடுவிழா காண்பது சாத்தியமா என்பது குறித்து பொதுநிதி நிபுணர்கள் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.
மதுவிற்பனையும் வருமானமும்:
கடந்த 2003-04 காலகட்டத்தில் மது விற்பனையால் ஈட்டப்பட்ட வருமானம் ரூ.3,639 கோடி. 2010-11 காலகட்டதில் ரூ.14,965 கோடி, 2011-12 ரூ.18,081 கோடி, 2012-13 ரூ.21,680 கோடி, 2013-14 ரூ.21,641 கோடியாகும்.
மது விற்பனையால் ஈட்டப்படும் வருமானம் குறித்து நிதித்துறையில் உள்ள அதிகாரி ஒருவர் கூறும்போது, "ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.25,000 கோடி இழப்பை தமிழக அரசால் எப்படி சமாளிக்க முடியும்? 5 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடிகளுக்கு மேல் இழப்பு ஏற்பட்டுவிடும். இது ஈடு செய்ய முடியாது இழப்பு" என்றார்.
மற்றொரு அதிகாரி கூறும்போது, "மதுவிலக்கை பகுதியாக அரசு அமல்படுத்துகிறது என வைத்துக் கொள்வோம். எத்தனை கடைகளை அரசு மூடும். அதனால் ஏற்படும் இழப்பு எப்படி சமன் செய்யப்படும் என்பது கேள்விக்குறி. ஏனெனில் அரசு உணவு மானியத்திலோ, மின் மானியத்திலோ அல்லது சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களிலோ யாரும் கை வைக்கமுடியாது. ஆனால், இலவசங்கள் நிறுத்தப்படலாம். அவ்வாறாக இலவசங்களை நிறுத்தினால் கூட ரூ.4,000 கோடி முதல் ரூ.5,000 கோடி வரையே ஈடுகட்ட முடியும்" என்றார்.
தமிழக அரசின் முக்கிய திட்டங்கள்:
மின்சார மானியம் ரூ.5400 கோடி, உணவுப் பாதுகாப்பு மானியம் ரூ.5,300 கோடி, சமூக பாதுகாப்பு மானியம் ரூ.4,200 கோடி, மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளுக்கான மானியம் ரூ.2,000 கோடி, தமிழக உட்கட்டுமான மேம்பாட்டுக்கான நிதி ரூ.2,000 கோடி, சூரிய மின் சக்தி வீடுகளுக்கான நிதி ரூ.1260 கோடி, கூட்டு சாலை மேம்பாட்டு திட்டத்துக்கான நிதி ரூ.2,800 கோடி, சத்துணவு திட்டத்துக்கான நிதி ரூ. 1413 கோடி, ஒருங்கிணைக்கப்பட்ட குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு ரூ.1,361 கோடி, மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்கான ஒதுக்கீடு ரூ.1,100 கோடி. இவ்வாறாக முக்கிய திட்டங்களுக்கு அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
மதுவிலக்கை அமல்படுத்தினால் ஏற்படும் இழப்பை அரசு வழங்கும் மானியங்கள் அல்லது இலவசங்களை குறைத்துவிட்டு ஈடுசெய்யலாம் என்று யோசனைகள் பல வழங்கப்படும் நிலையில் அரசு மேற்கூறியவற்றில் எவற்றை புறந்தள்ள முடியும் என்பதே அதிகாரிகளின் கேள்வி.
அரசு உயரதிகாரிகள் மட்டத்தில் கருணாநிதியின் அறிவிப்புக்கு பின்னால் மறைந்திருக்கும் அரசியலைப் பற்றி பேச யாரும் தயாராக இல்லை. இருப்பினும், "பூரண மதுவிலக்கு என்பது சாதியமில்லை அப்படியே அமல்படுத்தப்பட்டாலும் அது நீடித்திருக்குமா என்பதற்கு உத்தரவாதம் இல்லை" என்பதே அவர்கள் கருத்தாக இருக்கிறது.
7-வது ஊதியக்குழு:
7-வது ஊதியக்குழு பரிதுரை தயார் நிலையில் இருக்கிறது. அதன் அறிக்கை இந்த ஆண்டு இறுதியில் சமர்ப்பிக்கப்படலாம் எனக் கூறும் மாநில நிதித்துறை அதிகாரி ஒருவர், "7-வது ஊதிய குழு பரிந்துரை வரும் 2016 ஜனவரியில் இருந்து அமலுக்கு வரலாம். ஆனால் அதற்குள் மாநிலத்தில் புதிய அரசு பொறுப்பேற்றிருக்கும். புதிய அரசு பெரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கும். கடந்த முறையே அரசு மூன்று தவணைகளில் அரசு ஊழியர்களுக்கான நிலுவையைத் தொகையை வழங்க நேரிட்டது.
கடந்த முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது மாநில நிதித்துறைச் செயலர் கே.சண்முகம், தொழில் வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் மந்த நிலை ஏற்பட்டுள்ளதால் மாநில அரசு கடுமையான நிதி சவாலை எதிர்கொண்டுள்ளது என ஒப்புக் கொண்டிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
14-வது நிதி ஆணைய பரிந்துரையில் தமிழகத்துக்கான மத்திய நிதியுதவிகள் மிகவும் குறைவாக இருக்கிறது என அரசு ஏற்கெனவே கூறி வரும் நிலையில், டாஸ்மாக்கால் இப்போது கிடைத்துவரும் வருவாயை இழப்பது என்பது மிகவும் கடினம்" எனக் கூறினார்.
எனவே மதுவிலக்கை அமல்படுத்துவது என்பது கொள்கை ரீதியாக ஏற்புடையதாக இருந்தாலும் நடைமுறை சாத்தியத்துக்கு அப்பாற்பட்டது என்பதே பல்வேறு நிபுணர்களின் கருத்தாகவும் இருக்கிறது.
திமுகவுக்கு அதிமுக பதில்:
அதிமுகவின் அதிகாரபூர்வ பத்திரிகையான டாக்டர் நமது எம்.ஜி.ஆரில் கூறப்பட்டிருப்பதாவது:
"1971-ல் மதுவிலக்கை ரத்து செய்ததன் மூலம் தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக்கொடுத்ததே திமுகதான். சுதந்திர போராட்ட வீரரும், சுவதந்தரா கட்சித் தலைவருமான ராஜாஜியின் கோரிக்கையை புறந்தள்ளிவிட்டு மதுவிலக்கை திமுக ரத்து செய்தது. ஆனால், இப்போது தேர்தல் ஆதாயத்துக்காக திமுக மதுவிலக்கை ஆயுதமாக எடுத்துள்ளது. கடந்த 1996-ம் ஆண்டும் திமுக இத்தகைய போலி வாக்குறுதியை அளித்தது. ஆனால் ஒரு சிறு கல்லைகூட நகர்த்திவைக்கவில்லை. 2006 தேர்தலின் போதும் அவர் இதே வாக்குறுதியை முன்வைத்தார்.
ஆனால், 1991-ல் அதிமுக ஆட்சிக்கு வந்தபோது, தரமற்ற மதுவை விற்பனை செய்யும் கூடங்கள் மூடப்பட்டன. ஒரு கட்டத்தில் மதுவிற்பனையில் தனியார் ஆக்கிரமித்த நிலையில் அவற்றிற்கும் அதிமுக அரசுதான் முற்றுப்புள்ளி வைத்தது. மதுவிற்பனையை மாநில அரசின் மூலம் மேற்கொள்வதால் வருமானம் ஈட்ட வழிவகை செய்யப்பட்டது. கிரிமினல் குற்றங்கள் பெருக மதுக்கடைகள் கூடாரமாக இருந்தபோது, அதிமுக அவற்றை ஒழுங்குபடுத்தியதோடு, கள்ளச்சாராய விற்பனையையும் முடிவுக்கு கொண்டுவந்தது.
இருப்பினும் தமிழகத்தை மதுவற்ற மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதற்காக அதிமுக அரசு அறிவுசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், கருணாநிதியின் அறிக்கை தேர்தலை குறிவைத்தே வெளியிடப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது
88888888888888

மது ஏன் ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்கு, ‘துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண்பவர்’ என்ற ஒரு திருக்குறள் போதும். அரசியல் நிர்ணயச் சட்டத்தின் வழிகாட்டுநெறிகள்கூட பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதை அரசின் கடமையாகக் குறிப்பிடுகின்றன.
ஒருகாலத்தில் மது ஒழிப்பில் நாட்டிலேயே முன்னோடியாக இருந்த மாநிலம் தமிழகம். இன்றைக்கு அரசே மது விற்கும் மாநிலம். குடிநோயால் கொடூரத் தாக்குதலுக்குத் தமிழகம் ஆளாகிவரும் சூழலில், பிரதான அரசியல் கட்சிகள் மது விலக்கைக் கையில் எடுத்திருப்பது ஆரோக்கியமான மாற்றம். இந்த மாற்றத்தின் பின்னணி எதிர்காலத் தலைமுறை மீதான அக்கறை என்பதைக் காட்டிலும், தேர்தல் ஓட்டுக் கணக்குகள் என்பவை சங்கடப் பட வைக்கின்றன என்றாலும் வரவேற்க வேண்டிய மாற்றம் இது.
தமிழகத்தில் சில கட்சிகள் தொடர்ந்து மதுப் பிரச்சினைக்காகக் குரல் கொடுத்துவந்தாலும், பிரதான கட்சிகள் மவுனத்திலேயே ஆழ்ந்திருந்தன. ஆனால், தேர்தல் நெருங்கிவரும் சூழலில் காட்சிகள் இப்போது மாறுகின்றன. “சுற்றி எரியும் நெருப்பு வளையத்துக்குள்ளே பற்றக்கூடிய கற்பூரமாக தமிழகம் இருக்கிறது” என்று மதுவிலக்கைத் தளர்த்த முதலில் நடவடிக்கை எடுத்தவர் எவரோ, அதே திமுக தலைவர் கருணாநிதி, “திமுக ஆட்சிக்கு வந்தால் மதுக் கடைகள் மூடப்படும்” என்று இன்று அறிவித்திருக்கிறார்.
“இது வெற்று அறிவிப்பல்ல, நாங்கள் சொன்னதைச் செய்பவர்கள்” என்று அறிவிப்பை உறுதிமொழியாக்கியிருக்கிறார் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின். சமீபத்தில் தமிழகம் வந்த காங்கிரஸ் தேசியத் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் மதுவிலக்குக்காகக் குரல் கொடுத்திருக்கிறார். மூன்றாவது அணி அமைக்க வாய்ப்புள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், அவருடைய மகன் அன்புமணி இருவரும் தொடர்ந்து மதுவிலக்குக்காகக் குரல் கொடுத்துவரும் நிலையில், மதுவிலக்கு ஓர் அரசியல் ஆயுதமாக உருவெடுப்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
நிச்சயம் ஆளும் அதிமுகவுக்கு இது ஒரு அரசியல் சவால். 1991 தேர்தலில் கள்ளச்சாராயத்துக்கு எதிராக மேற்கொண்ட பிரச்சாரத்துக்கும், முதல் முறை ஜெயலலிதா முதல்வராக ஆட்சியில் அமர்ந்தபோது, கள்ளச்சாராயத்துக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகளுக்கும் கிடைத்த வரவேற்பு அதிமுகவினருக்கு நினைவிருக்கும். ஆகையால், அதிமுகவும் மதுவிலக்கு ஆயுதத்தை விட்டுவைக்காது. அதிலும் தேர்தலுக்கு முன்பே அந்த ஆயுதத்தைக் கையில் எடுத்து, எதிர்க் கட்சிகளின் வியூகங்களை முடிவுக்குக் கொண்டுவரலாம் என்ற பேச்சும் அடிபட ஆரம்பித்திருக்கிறது.
எப்படியோ, இந்த மகத்தான முடிவை எடுக்கப்போகும் ஆட்சியாளர் முன் நிற்கும் வாய்ப்புள்ள ஒரே பெரும் சவால், மது வியாபாரம் மூலம் அரசுக்குக் கிடைக்கும் வருமானம். தமிழக அரசின் வருவாயில் சராசரியாக 25% (2013-14-ல் ரூ.21,641.14 கோடி) மதுபான விற்பனை மூலம்தான் கிடைக்கிறது. இனி, மதுவிலக்கினால் ஏற்படும் இழப்பை எப்படிச் சமாளிப்பது? அரசு இதுபற்றி அலட்டிக்கொள்ளக் கூடாது.
ஆண்டுக்கு 45 கோடி லிட்டர் மது ஆறாக ஓடும் ஒரு மாநிலத்தில், அது ஏற்படுத்தும் பின்விளைவுகளும் சேதங்களும் இழப்புகளும் இப்படி வருவாய்க் கணக்குபோல யாராலும் மதிப்பிடப்படுவதில்லை. மேலும், 28,000+ பணியாளர்களைக் கொண்ட ‘டாஸ்மாக்’ நிறுவனம் மூலம் வேறு என்னென்ன புதிய காரியங்களை மேற்கொள்ளலாம் எனும் வியூகங்களையும் இன்னும் நாம் யோசிக்கவில்லை. ஆகையால், வருமான இழப்புபற்றிக் கவலை கொள்ள வேண்டியதில்லை. துணிந்தவர்களுக்கு சமுத்திரமும் கால் மட்டம்தானே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக