ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் லண்டன் பிஸினஸ் கல்லூரியில் தெரிவித்த கருத்துகள் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 1930களில் நடந்த சர்வதேச பொருளாதார மந்த நிலை (Great Depression) மீண்டும் வரலாம் என்று கூறினார். 2008-ம் ஆண்டு அமெரிக்காவில் சப் பிரைம் கிரைஸிஸ் உருவாகும் என்று முன்கூட்டியே கணித்தவர் ராஜன் என்பதால் அவர் கூறிய கருத்து அனைவரது புருவத்தையும் உயர்த்தியது. ஆனால் மறுநாளே ரகுராம் ராஜன் கூறியது இந்த அர்த்தத்தில் அல்ல என்பது போல ரிசர்வ் வங்கி மறுப்பு வெளியிட்டிருந்தது.
வரலாற்றை திரும்பி பார்க்க ராஜன் ஒரு வாய்ப்பு அளித்திருக்கிறார். ஒரு முறை பின்னோக்கி செல்வோம்.
என்ன நடந்தது?
1929-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 28ம் தேதி அமெரிக்க பங்குச்சந்தை 13 சதவீதம் வரை சரிந்தது. அந்த திங்கள்கிழமை கருப்பு திங்கள் என்றே அழைக்கப்பட்டது. அடுத்த நாளும் கடுமையாக சரியவே அந்த நாளையும் கருப்பு செவ்வாய் என்றே வரலாற்றில் குறிப்பிட்டுள்ளனர். 1929-ம் ஆண்டின் உச்சத்தை விட 1932-ம் ஆண்டு 89 சதவீதத்துக்கும் மேலாக பங்குச்சந்தை சரிந்தது. பங்குச்சந்தை சரிவு என்பது பொருளாதார மந்த நிலையின் ஒரு பாதிப்பே தவிர மந்த நிலையின் ஆரம்பம் அல்ல.
சரிவின் காரணம்?
1929-க்கு முன்பே பொருளாதார மந்த நிலை தொடங்கி விட்டது. 1920களில் அமெரிக்காவில் நுகர்வு கலாசாரம் உருவானது. இந்த நுகர்வு கலாசாரம் அமெரிக்க தொழில்துறைக்கு வேண்டுமானால் சாதகமாக இருக்கலாம் ஆனால் பொருளாதாரத்துக்கு பாதகமாக அமைந்தது. பெரும்பாலான நுகர்வுகள் கடனில் இருந்தன. இதனால் பொருளாதார வளர்ச்சியில் நிச்சயமற்ற தன்மை உருவானது.
இதற்கிடையே அமெரிக்காவில் விவசாய பொருட்களின் விலையும் குறைந்துகொண்டே வந்தது. முதலாவது காரணம் உற்பத்தி அதிகரிப்பு. உலகப்போர் சமயத்தில் வீரர்களுக்கு தேவையான உணவுகளை உற்பத்தி செய்வதற்கு விவசாயத்துறை விரிவடைந்தது.
மேலும் இந்த விரிவாக்க நடவடிக்கைகள் இயந்திரங்களை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்டன. இதனால் உற்பத்தி அதிகமானது. பொருட்களின் விலை குறைந்தது. கடனில் இயந்திரங்கள் வாங்கப்பட்டதால், விவசாயிகளுக்கு சுமை அதிகரித்தது. இதனால் பெரும்பாலானவர்கள் விவசாயத்தை கைவிட்டனர்.
இதுதவிர, 1920-ம் ஆண்டுகளில்தான் கார் உற்பத்தி தொடங்கியது. அந்த வகையிலும் நுகர்வு அதிகரித்து வளர்ச்சி உருவானது. 1925 களில் கார் விற்பனையில் மந்த நிலை உருவானது. மேலும் கட்டுமானத்துறையிலும் மந்த நிலை உருவானது.
1927-ம் ஆண்டுகளில் பங்குச்சந்தையில் ஊக வணிகம் அதிகரித்தது. பங்குச்சந்தையில் ஊக வணிகம் அதிகரித்த அதே சூழலில் அமெரிக்க மக்களும் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய ஆரம்பித்தார்கள். கிட்டத் தட்ட 40 லட்சம் அமெரிக்கர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்தார்கள். அதுவும் கடன் வாங்கி...
பங்குச்சந்தை முதலீடு மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளுக்கு கடன் கொடுக்கும் சூழ்நிலையில் அமெரிக்க வங்கிகள் இல்லை. பங்குச்சந்தை விதிமுறைகள் சரியாக வகுக்கப்படாததால் ஊக வர்த்தகம் அதிகம் நடந்தது. இதற் கிடையே நிறுவனங்களின் லாப நஷ்ட கணக்குகளுக்கும் அவற்றின் பங்கு விலைகளுக்கும் சம்பந்தம் இல்லாமல் இருந்தன. அக்டோபர் 23-ம் தேதி ஜெனரல் மோட்டார்ஸ் பங்கு சரிவை சந்தித்தது. வீழ்ச்சி ஆரம்பம் ஆனது. 1929-ல் இருந்த உச்சத்தை மீண்டும் தொடுவதற்கு அமெரிக்க பங்குச்சந்தைக்கு 27 வருடங்கள் தேவைப்பட்டது.
விளைவுகள் என்ன?
பங்குச்சந்தை சரிந்ததால், பணக்காரர் களுக்கு பணம் மட்டுமே இழப்பு, ஆனால் தொழிலாளர்கள் வேலையை இழந்தனர். வேலையில்லாத் திண்டாட்டம் கடுமையாக அதிகரித்தது. ஒரு கட்டத்தில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 25 சதவீதமாக இருந்தது. கிட்டத்தட்ட 1.5 கோடி மக்கள் வேலை இல்லாமல் தவித்தார்கள்.
தவிர வங்கிகளுக்கு கடுமையான விதிமுறைகள் இல்லாததால் வங்கிகள் முதலீட்டாளர்களின் பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்தன.
பங்குச்சந்தையும் சரிந்ததால் முதலீட் டாளர்களுக்கு பணத்தைத் திருப்பி கொடுக்க முடியவில்லை. அவர்களின் பணத்தை இன்ஷூரன்ஸ் செய்யவில்லை. (1934-ம் ஆண்டுதான் வங்கி டெபாசிட்களுக்கு இன்ஷூரன்ஸ் செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டது). இதனால் வங்கிகள் தங்களது மற்ற சொத்துகளை விற்று பணம் கொடுக்க ஆரம்பித்தன. இதனால் ரியல் எஸ்டேட் சரிந்தது. 80 சதவீதத்துக்கும் மேலான கட்டுமான திட்டங்கள் நிறுத்தப்பட்டன.
இதனால் பல வங்கிகள் மூடப் பட்டன. இந்த செய்தி பரவி ஒரளவு செயல்பட்டுக் கொண்டிருக்கும் வங்கி களில் முதலீட்டாளர்கள் பணம் எடுக்க முற்பட்டதால், பல வங்கிகள் திவால் ஆனது. 1929க்கு முன்பு இருந்த வங்கி களில் பாதிக்கும் மேற்பட்ட வங்கிகள் 1933-ம் ஆண்டு காணாமல் போயின.
குறைவான பணம் மட்டுமே புழக்கத்தில் இயங்கி வந்தது. இதனால் பணவாட்ட சூழ்நிலை உருவானது. அமெரிக்க பொருளாதாரம் சரிய சரிய, அதன் தொடர்ச்சியாக மற்ற உலக நாடுகளும் சிக்கலில் தவித்தன. அப்போது இருந்து பிக்ஸட் கரன்ஸி முறையும் அதற்கு ஒரு காரணம் ஆகும். முதல் உலகப்போர் சிக்கலில் இருந்த பல ஐரோப்பிய நாடுகளுக்கு, இந்த பொருளாதார மந்த நிலை மேலும் நெருக்கடியைக் கொடுத்தது. பல ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்க அரசு உதவி செய்துகொண்டிருந்தது. அங்கேயே பிரச்சினை வந்ததால் அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் கடன் குறைந்தது. குறிப்பாக இங்கிலாந்தும், ஜெர்மனியும் மிகவும் பாதிக்கப்பட்டன. ஜெர்மனியில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 25 சதவீதமாக இருந்தது.
மீண்டும் சகஜ நிலை?
இந்த மந்த நிலைமை அமெரிக்க அரசியலையும் மாற்றியது. 1929 முதல் 1933-ம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக இருந்தவர் ஹெர்பர்ட் ஹோவர். மந்த நிலை இருந்தாலும், அதனைச் சரியாக கணிக்கத் தவறியவராக இருந்தார். அதுமட்டுமல்லாமல் அமெரிக்க மக்களின் மனநிலையை குறை சொல்லியபடியும், பெடரல் அரசு எந்தவிதமான உதவியும் செய்ய முடியாது என்றும் மறுத்துவிட்டார்.
இதனால் 1932-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஹோவர் தோற்கடிக்கப்பட்டு ரூஸ்வெல்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு பொருளாதாரத்தை மீட்பதற்கு கடுமையாக நடவடிக்கைகள் எடுத்தார். நான்கு நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறை கொடுத்து, வங்கிகளை மீட்கும் நடவடிக்கைகளை எடுத்தார். அதன் பிறகு வங்கி சட்டம் இயற்றப்பட்டது. சில மாதங்களுக்கு பிறகு திவாலான வங்கிகள் மீண்டும் செயல்படத் தொடங்கின. நிலையை சீராக்குவதாக நேரடியாக மக்களிடம் பேசி நம்பிக்கையை உயர்த்தினார்.
இவர் காலத்தில்தான் வங்கி டெபாசிட்களுக்கு இன்ஷூரன்ஸ் செய்யும் முறையையும், பங்குச்சந்தை ஒழுங்கு முறை ஆணையத்தை (எஸ்இசி) அமைத்தார்.
அரசாங்க முதலீடுகளை அதிகரித்தார். மெல்ல மெல்ல வேலை இல்லாத சூழ்நிலையை குறைத்தார். ஆனாலும் 1930களின் இறுதியில் வேலையில்லாத சூழ்நிலை அதிகமாகவே இருந்தது. 1939-ம் வரை 17 சதவீதம் வரையிலும், 1941-ல் 14 சதவீதமாகவும் வேலை இல்லாதவர்களின் விகிதம் இருந்தது. அதாவது அமெரிக்கா இரண்டாம் உலகப்போரில் களம் இறங்கும் வரையில் மந்த நிலை தொடர்ந்தது. அதன் பிறகுதான் தேவை அதிகரித்தது.
ரகுராம் ராஜன் இது போன்ற சூழல் மீண்டும் நிகழலாம் என்று கணித்து சொல்லியிருந்து, பிறகு மக்களை பதற்றத்துக்குள்ளாக்க வேண்டாம் என்பதற்காக, அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என மறுத்திருக்கலாம் என்ற யூகங்களும் எழுகின்றன.
எது எப்படியோ வரலாறு மீண்டும் திரும்பாமல் இருந்தால் நல்லது.
karthikeyan.v@thehindutamil.co.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக