செவ்வாய், 15 ஜூலை, 2014

புவி வெப்பமாதல் - ரூ. 16 லட்சம் கோடி

நம் அரசியல்வாதிகளின் நோக்கத்தை நாம் முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், முதலில் புவி வெப்பமாதல் பிரச்னையை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, புவி வெப்பமாதல் என்பது வெறும் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னை மட்டுமல்ல; வளரும் நாடுகளின் எதிர்காலத்துடனும் பல லட்சம் கோடி ரூபாய்களுடனும் பின்னிப் பிணைந்திருக்கும் பிரச்னை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

             புவியின் சாராசரி வெப்பத்தின் அளவு அதிகரித்துவருகிறது. வளி மண்டலத்திலுள்ள கரியமில வாயு உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்களின் அடர்த்தி அதிகரிப்பதுதான் இதற்கான முக்கிய காரணம் என்பதே புவி வெப்பமாதல் கருதுகோளின் அடிப்படை. ஆகையால், பசுமை இல்ல வாயுக்களின் அடர்த்தியை - குறிப்பாக, கரியமில வாயு அடர்த்தியைக் குறைப்பதற்கான இலக்குகளை நிர்ணயிப்பதே இப்பிரச்னைக்கான முடிவாகக் கருதப்படுகிறது. கரியமில வாயு அதிகரிப்புக்கு மிக முக்கியமான பெட்ரோலியப் பொருள்கள் பயன்பாட்டை வெகுவாகக் குறைப்பதும் அதிக மாசற்ற செம்மையான இயந்திரவியல் கொள்கைக்கு மாறுவதும் புவி வெப்பத்தைத் தணிக்க முக்கியத் தீர்வுகளாக முன்வைக்கப்படுகின்றன. வில்லங்கம் எங்கே தொடங்குகிறது என்றால், இங்கேதான்.

             செம்மையான இயந்திரவியல் என்பதை விரிவான பொருளில் சொல்வதென்றால், இப்போதுள்ள பழைய தொழில்நுட்பத்தை அப்படியே கடாசிவிடுவது என்பதேயாகும். விறகு அடுப்புக்குப் பதில் சூரிய சக்தி அடுப்பு என்பதில் தொடங்கி ஹைட்ரஜனில் இயங்கும் மொபெட்டுகள், ஹைபிரிட் கார்கள் வரை எல்லாமே புதியவையாகும். 'கார்பன் கிரெடிட்ஸ்' வர்த்தகத்துக்கு வழிவகுக்கும் (ஏற்கெனவே, தூய்மையான முன்னேற்றத் தொழில்நுட்பத் திட்டங்களில் [சிடிஎம்] 32 சதத் திட்டங்களில் இந்தியா பங்கேற்றுள்ளது).

             இன்றைய தேதியில் உலகிலுள்ள பெரும் தொழிற்சாலைகளை மட்டும் செம்மையான இயந்திரவியலின் கீழ் கொண்டுவர மட்டுமே ரூ. 16 லட்சம் கோடி தேவைப்படும் என்று மதிப்பிடப்படுகிறது. அதாவது, 2030}ல் உலக மாசு அளவை 2007 அளவுக்கு கொண்டுவர ரூ. 20 லட்சம் கோடி தேவைப்படும் என்று மதிப்பிடுகிறார்கள்.

             இங்கு கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் - இத்தகைய தொழில்நுட்பத்தை விற்பவர்களாக வளர்ந்த நாடுகளே இருக்கிறார்கள் என்பதாகும். அதாவது, மாசற்ற உலகுக்கான இந்தத் தொழில்நுட்பம் அவர்களுக்கு லட்சக்கணக்கான கோடிகளை ஈட்டித் தரும். தவிர, இந்தியாவின் கரியமில வாயு வெளியீட்டில் சரி பாதி அளவு இந்தியத் தொழிற்சாலைகளால் வெளியிடப்படுவதாக வளர்ந்த நாடுகள் குற்றஞ்சாட்டும் நிலையில், செம்மையான இயந்திரவியலுக்கு மாற இந்தியத் தொழிற்துறை எத்தனை லட்சம் கோடிகளைச் செலவிட வேண்டியிருக்கும் என்பதும் சர்வதேசத் தொழிற்போட்டியில் இந்தியாவுக்கு இந்தச் செலவு எத்தகைய பின்னடைவுகளை உருவாக்கும் என்பதையும் விவரிக்க வேண்டியதில்லை. "கரியமில வாயு வெளியீட்டைக் கட்டுப்படுத்த சரியான வழி, வெளியீட்டிற்கேற்ப அதற்கு வரி விதிப்பதுதான்''  என்கிறார் அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபரும் புவி வெப்பமாதல் விழிப்புணர்வுக்காக நோபல் பரிசு பெற்றவருமான அல்கோர். இதன் மறைமுகப் பொருள் செம்மையான இயந்திரவியலுக்கு மாறாதவர்களுக்கு அபராதம் விதிப்பது என்பதுதானே?

             உண்மையில், கரியமில வாயு வெளியீட்டைக் குறைக்க முதலில் தலைப்பட வேண்டிய நாடு அமெரிக்காதான். தனி நபர் கரியமில வாயு உமிழ்வு அமெரிக்காவில் 19.70 மெட்ரிக் டன்களாக இருக்கிறது. இந்த உமிழ்வு ரஷ்யாவில் 11 மெட்ரிக் டன்களாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தில் 9.17 மெட்ரிக் டன்களாகவும் இந்தியாவில் 1.31 மெட்ரிக் டன்களாகவும் இருக்கிறது. 2030-ல்கூட இந்தியாவில் தனிநபர் ஆண்டு கரியமில வாயு உஉமிழ்வு உலக சராசரியான 4.22 டன்னை தாண்ட வாய்ப்பில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், மாசின் உச்சத்திலிருக்கும் அமெரிக்கா இன்னமும் கரியமில வாயு வெளியீட்டைக் குறைக்க சர்வதேச ஒப்பந்தங்கள் எதிலும் கையொப்பமிடாத நிலையில், இந்தியாவையும் சீனாவையும் நிர்ப்பந்தித்துக்கொண்டிருக்கிறது. ஏனைய வளர்ந்த நாடுளும் அமெரிக்காவுக்கு ஒத்தூதுகின்றன. கியோட்டா பிரகடனமும் ஒப்பந்தமும் வெறும் பிரசங்கங்களாகவே மாறியது வளர்ந்த நாடுகளால்தான். இப்போது கோபன்ஹேகன் மாநாட்டுக்கான முன்வரைவும்கூட ஏறத்தாழ கியோட்டாவின் இரண்டாவது பதிப்பாக இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால், இந்திய அரசியல்வாதிகளோ அமெரிக்கக் கட்டளைக்கு ஆலாய்ப் பறக்கிறார்கள்.

             இங்கு கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், புவி வெப்பமாதல்பற்றி முதல் பேச்சு எழுந்த காலத்திலிருந்தே இந்தக் கருதுகோளே தவறு என்ற வாதமும் வலுவாகத் தொடர்கிறது என்பதாகும். புவி வெப்பமாதலும் குளிர்தலும் தொடர்ந்து சங்கிலித் தொடராக நிகழ்ந்துகொண்டிருப்பவை; இயற்கைச் சீர்கேடுகளுக்கும் இந்தக் கருதுகோளுக்கும் தொடர்பில்லை என்று ரஷ்ய விஞ்ஞானிகள் தொடர்ந்து கூறிவருகின்றனர். "புவி வெப்பமாதல் மிகப் பெரிய விஞ்ஞான தில்லுமுல்லு'' என்கிறார் ரஷ்ய விஞ்ஞானி ஆந்த்ரே காப்டிசா. இது தொடர்பாக அண்டார்டிகாவில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின் முடிவை வெளியிட்டுள்ள அவர், 1970-களில் பெரிதாக இப்படி கிளப்பிவிடப்பட்ட புவி குளிர்மயமாதல் இப்போது புஸ்வாணமாகிவிட்டதையும் சுட்டிக்காட்டுகிறார். வளரும் நாடுகளைப் பின்னுக்குத் தள்ளும் ஓர் உத்தியே புவி வெப்பமாதல் கருதுகோள் என்று ரஷ்ய விஞ்ஞானிகள் தீவிரமாகக் குற்றஞ்சாட்டுகின்றனர்.

             இது ஒருபுறமிருக்க, "மாசடைந்துவரும் சூழல் - அருகிவரும் இயற்கை வளங்கள் - மாறிவரும் தட்பவெப்பம் ஆகியவை புவிச் சூழலில் மிகப் பாதகமான அம்சங்களே. ஆனால், பூமி ஓர் உயிருள்ள செல். தன்னைதானே தகவமைப்புக்கேற்ப மாற்றிக்கொள்ளும் தன்மை புவிக்கு இருக்கிறது'' என்ற கருதுகோளும் காலங்காலமாக விஞ்ஞானிகளிடையே இருந்துவருகிறது.

             ஆக,  புவிவெப்பமாதலின் நம்பகத்தன்மையே இப்படிக் கேள்விக்குறியாக இருக்கும்போது அதன் பெயரால் முன்வைக்கப்படும் தீர்வுகள் எந்தளவுக்கு நம்பகமானவை? அவற்றைக் குருட்டுத்தனமாக அப்படியே உள்வாங்கிக்கொள்ள இந்திய அரசு துடிப்பது ஏன் என்பதே நாம் முன்வைக்கும் கேள்வியாகும்.ஏனெனில், புவி வெப்பமாதலுக்கு முன்வைக்கப்படும் தீர்வுகளை - நிர்ப்பந்தங்களை ஏற்றுக்கொண்டால், அதனால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டிய நாடாக இந்தியாவே இருக்கும். தொழிற்துறை சார்ந்து மட்டுமல்ல; இன்னமும் மின்சாரத்தைப் பார்க்காத கோடிக்கணக்கான இந்திய கிராமவாசிகளையும்கூட அது பாதிக்கும்.

             அனல் மின்சாரத்துக்கு மாற்றாக நீர் மின்சாரம், காற்று மின்சாரம், சூரிய சக்தி என்று அவர்கள் வெளியே பிரசங்கித்தாலும், அவர்களுடைய உள் நோக்கம் அணு மின்சாரத்தை விற்பதாகவே இருக்கிறது. பெட்ரோலியப் பொருள்களுக்கு மாற்றாக உயிரி எரிபொருளை முன்வைக்கிறார்கள். இதனால், ஏற்படும் உணவுப் பொருள் தட்டுப்பாட்டுக்கு மாற்றாக மரபிணி மாற்றப் பயிர்களை முன்வைக்கிறார்கள். உண்மையில் இவையெல்லாம் இப்போதுள்ள சூழலியல் அபாயங்களைவிடவும் பேரபாயங்களையே தோற்றுவிக்கும்.

             உள்ளபடியே இந்தியா செய்ய வேண்டிய காரியம் என்னவென்றால், முன்னெப்போதும் இல்லாத வகையில், புவி வெப்பமாதல் என்ற கருதுகோள் மக்களிடையே ஏற்படுத்தியிருக்கும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வையும் பீதியையும் ஆக்கபூர்வமான காரியங்களுக்குப் பயன்படுத்திக்கொள்வதுதான்.சுதந்திரம் அடைந்து ஆறு தசாம்ச ஆண்டுகள் கழித்த பின்னரும்கூட, இந்தியாவில் அடிப்படை சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கட்டமைப்பு மிக மோசமான நிலையிலேயே இருக்கிறது. கட்டாய மர வளர்ப்பு; வன விரிவாக்கச் செயல் திட்டங்கள்; ஊர்கள்தோறும் பழைய நீர்நிலைகளை மீட்டுருவாக்குதல்; தேவைக்கேற்ப புதிய நீர்நிலைகளைக் கட்டமைத்தல்; கச்சிதமான திட - திரவக் கழிவு மேலாண்மைத் திட்டங்கள்; பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், வாகனப் பெருக்கத்துக்குக் கட்டுப்பாடு; பிளாஸ்டிக் பொருள்களுக்குத் கட்டுப்பாடு; சூழலுடன் இயைந்த தொழில் வளர்ச்சித் திட்டங்கள்; கட்டுக்கோப்பான தொழிற்சாலைக் கழிவு சுத்திகரிப்புத் திட்டங்கள்; நீர்நிலைகள் - காற்று மாசுத் தடுப்பு நடவடிக்கைகள்... இப்படி சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இந்தியா மேற்கொள்ள வேண்டிய அடிப்படை - அத்தியாவசிய நடவடிக்கைகள் நூற்றுக்கணக்கில் செயலற்றுக் கிடக்கின்றன. இவற்றையெல்லாம் அரசு தீவிரமாக செயல்படுத்தலாம். சுற்றுச்சூழல் துறையை சுய அதிகாரமிக்க - தீவிர நடவடிக்கைகளை முன்னெடுக்கும் - நாடு தழுவிய அமைப்பாக விரிவாக்கலாம். சுயக் கட்டுப்பாடு நோக்கோடு கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவரலாம். மாறாக, புவி வெப்பமாதலை முன்வைத்து நடத்தப்படும் அரசியலில் பங்கெடுத்து, வளர்ந்த நாடுகளுடன் கைகோர்க்க முற்பட்டால், அது மன்மோகன் சிங் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக