தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய், வட்டி இல்லா கடன் வழங்கப்போவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதன் பின்னணியில் தனியார் சர்க்கரை ஆலை முதலாளிகளின் கூட்டு முயற்சி இருப்பதாக விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கரும்பு விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயக் கடன்கள் வழங்கப்படுகின்றன. இதற்கு அதிகபட்சம் ஓராண்டு வரை வட்டி கிடையாது. அதற்கு பிறகு ஏழு சதவீதம் வட்டி செலுத்த வேண்டும்.
கரும்பை விவசாயிகளிடம் அரசு நிர்ணயித்த விலையில் கொள்முதல் செய்துகொள்ளும் சர்க்கரை ஆலை நிர்வாகங்கள், அதற்கான தொகையை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் செலுத்திவிட வேண்டும். அதில் கடனுக்கான தொகையை கழித்துக்கொண்டு மீதியை விவசாயிகளின் சேமிப்புக் கணக்கில் கூட்டுறவு சங்கங்கள் வரவு வைத்துவிடும். இதுதான் நடைமுறை.
ஆனால், கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக விவசாயிகளுக்கு தரவேண்டிய கரும்புக்கான கூலி நிலுவைத் தொகையை பெரும் பாலான ஆலை நிர்வாகங்கள் குறித்த காலத்தில் தருவதில்லை. பல நேரங்களில் இந்தத் தொகையைக் கேட்டு கரும்பு விவசாயிகள் போராட்டம் நடத்துவர். உடனே, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் சர்க்கரை ஆலை நிர்வாகத்தையும் விவசாயிகளையும் அழைத்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்துவர்.
“எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு விட்டது. அதனால், இப்போதைக்கு இவர்களுக்கு கூலி நிலுவைத் தொகையை வழங்க நிதியில்லை” என்று ஆலைகள் தரப்பில் நீலிக் கண்ணீர் வடிப்பர். இதை அப்படியே பதிவு செய்யும் ஆட்சியர்கள், ‘பிரச்சினையை சமாளிக்க அரசு தரப்பில் ஆலை நிர்வாகங்களுக்கு நிதியுதவி அளிக்கலாம்’ என்று அரசுக்கு அறிக்கை அளிப்பர்.
இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆலை நிர்வாகத்துக்கு குறைந்த வட்டிக்கு மத்திய அரசு நிதி வழங்கும். இந்த நிதியைக் கொண்டு விவசாயிகளின் கூலி நிலுவையில் ஒரு பகுதியை செட்டில் செய்யும் ஆலை நிர்வாகத்தினர் மீண்டும் பழையபடி பஞ்சப்பாட்டு பாட ஆரம்பித்து விடுவர்.
இதுபோன்ற நேரங்களில் மத்திய அரசு நேரடியாக தலையிட்டு சர்க்கரை ஆலை நிர்வாகங்களுக்கு குறிப்பிட்ட கோடிகளை வட்டி யில்லாக் கடனாக வழங்கும். இதுவும் முழுமையாக விவசாயிகளுக்குப் போய் சேர்வதில்லை என்பதுதான் கொடுமை.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய கூட்டுறவுத் துறை அதிகாரிகள், ‘‘ஏதோ விவசாயிகளின் துயர் துடைக்க மத்திய அரசு இப்படி வட்டியில்லாக் கடனை சர்க்கரை ஆலைகளுக்கு வழங்குவதாக நினைத்து விடாதீர்கள். இதன் பின்னணியில் மிரள வைக்கும் அரசியல் லாபி இருக்கிறது. சிமெண்ட் தொழிலைப் போல வடமாநிலங்களில் சர்க்கரை ஆலை தொழிலில் மத்திய - மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பெருந்தலைகள் பலர் சம்பந்தப்பட்டுள்ளனர். சர்க்கரை உற்பத்தி, விலை நிர்ணயம் இதெல்லாம் இவர்கள் கையில்தான் உள்ளது. இவர்கள் நினைத்தால் செயற்கையான சர்க்கரை தட்டுப்பாட்டை உருவாக்குவர். உடனே மத்திய அரசு சர்க்கரையை இறக்குமதி செய்ய முடிவெடுக்கும். அப்போது மத்திய அரசிடம் லாபி செய்து இறக்குமதியை கைவிட வைத்து சர்க்கரை விலையை உயர்த்த வைத்துவிடுவர்.
மாதச் சம்பளம் பெறும் நடுத்தர வர்க்கத்தை வரி, வரி என வாட்டி வதைக்கும் மத்திய அரசு கோடிகளில் கொழிக்கும் இந்த ஆலை முதலாளிகளுக்கு மக்களின் வரிப்பணத்தை வட்டியில்லாக் கடனாக வாரி வழங்குகிறது.
மாதச் சம்பளம் பெறும் நடுத்தர வர்க்கத்தை வரி, வரி என வாட்டி வதைக்கும் மத்திய அரசு கோடிகளில் கொழிக்கும் இந்த ஆலை முதலாளிகளுக்கு மக்களின் வரிப்பணத்தை வட்டியில்லாக் கடனாக வாரி வழங்குகிறது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு 6,600 கோடி ரூபாயை வழங்கினர். இப்படி, கடந்த இருபது வருடங்களில் லட்சம் கோடிக்கு மேல் சர்க்கரை ஆலைகளுக்கு வட்டியில்லாக் கடனாக வாரி வழங்கி இருக்கிறது மத்திய அரசு. பெரும்பாலான ஆலைகள் இந்த நிதியையும் தங்களது பிற தொழில்களில் முதலீடு செய்துவிட்டு விவசாயிகளை திண்டாட விடுகின்றன.
சர்க்கரை ஆலைகளுக்கு கொடுக்கும் வட்டியில்லாக் கடன்கள் திரும்பி செலுத்தப்பட்டதா. அதற் கான காலக்கெடு என்ன? இதுகுறித்து எல்லாம் யாரும் கேள்வி கேட்பதில்லை. இதில் இன்னுமொரு வேதனை என்ன வென்றால், விவசாயக் கடன்கள் தள்ளுபடியாகும்போது கரும்பு விவசாயிகளின் கடன்களும் தள்ளு படி செய்யப்படுகின்றன. இதன் மூலம் சர்க்கரை ஆலை நிர்வாகங் கள் இரட்டிப்பு லாபம் அடைகின்றன.
இதுகுறித்து அண்மைக்கால மாகத்தான் கரும்பு விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு வந்தி ருக்கிறது. அதனால்தான் இந்த முறை மத்திய அரசு தருவதாக அறிவித்திருக்கும் நாலாயிரம் கோடியை நேரடியாக கரும்பு விவசாயிகளிடமே வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன” என்று கூறினர்.
***************************************
***************************************
கரும்புக்கு அரசு அறிவித்த ஆதார விலையை ஆலைகள் வழங்காததால், மாநிலம் முழுவதும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கரும்பிலிருந்து எத்தனால் உற்பத்திக்கு அரசு அனுமதித்து, அதை கொள்முதல் செய்தால், விவசாயிகளுக்கு உரிய விலையையும், நிலுவைத் தொகையையும் கொடுக்க முடியும் என்கின்றனர் சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர்.
தமிழக சர்க்கரை ஆலைகள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் கரும்புக்கு, டன்னுக்கு 2,650 ரூபாய் வழங்க வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது. ஆறு மாதமாகியும் இந்த உத்தரவை ஆலைகள் அமல்படுத்தாமல், விலையை குறைத்து வழங்கி வருகின்றன. இதோடு, கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் நிலுவைத் தொகையை, சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் வழங்காமல் இழுத்தடித்து வருகின்றன. இந்த இரு பிரச்சினைகளையும் முன்னிருத்தி மாநிலம் முழுவதும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிற நாடுகளில் இருந்து குறைந்த விலையில் சர்க்கரை இறக்குமதி நடப்பது மற்றும் உள்நாட்டில் தேவைக்கதிகமான உற்பத்தி போன்ற காரணங்களால் சர்க்கரைக்கு உரிய விலை கிடைக்கவில்லை. இதனால் உற்பத்தி செய்யப்பட்ட சர்க்கரையை விற்க முடியாமல் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கரும்பிலிருந்து எத்தனால் எரிபொருளை உற்பத்தி செய்ய அனுமதியளித்து, அவற்றை அரசே நியாயமான விலைக்கு கொள்முதல் செய்தால் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்கின்றனர் சர்க்கரை ஆலை உரிமையாளர்கள்.
செலவு மிச்சமாகும்
இது குறித்து ஈரோடு மாவட்டம் தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனசபை தலைவர் சுபி.தளபதி கூறியதாவது:
2013-ம் ஆண்டு சர்க்கரை ஆலைகளில் 5 சதவீத எத்தனால் உற்பத்திக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதற்கு நியாயமான விலை நிர்ணயிக்கப்படாததால், ஆலைகள் எத்தனாலை உற்பத்தி செய்ய முடியாத நிலை உள்ளது. தமிழகத்தில் டீசல் விலை உயர்வால் ஆண்டுக்கு போக்குவரத்துக்கழகங்களுக்கு ரூ.300 கோடி செலவாகிறது என அரசு கூறுகிறது. டீசல் விலை ஒரு ரூபாய் ஏறினால், அரசுக்கு 15 கோடி ரூபாய் கூடுதல் செலவாகிறது. இந்த நிலையில், டீசலுடன் 50 சதவீத எத்தனாலை கலந்து பயன்படுத்தினால், பெரும் தொகை அரசுக்கு மிச்சமாகும். சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முழுவதும் எத்தனால் எரிபொருள் மூலம் இயங்கும் பேருந்தை மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி சமீபத்தில் தொடக்கிவைத்தார். எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடப்படும் பெரும் தொகையை குறைக்கும் வகையில், நாடு முழுவதும் எத்தனால் மூலம் இயங்கும் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
இதை பின்பற்றி சோதனை அடிப்படையிலாவது எத்தனால் மூலம் இயங்கும் பேருந்துகளை தமிழக அரசு அறிமுகப்படுத்த வேண்டும். மற்ற திட்டங்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் தமிழக அரசு, எத்தனால் பயன்பாட்டை ஊக்குவித்து தங்கள் கண்ணீர் துடைக்க வேண்டுமென்பது கரும்பு விவசாயிகளின் எதிர்பார்ப்பு.
மதுபான உற்பத்திக்கு முன்னுரிமை!
சர்க்கரை உற்பத்தியின்போது கிடைக்கும் மொலாசிஸ், மதுபான உற்பத்தி ஆலைகளுக்கு வழங்கப்படுகிறது. எத்தனால் உற்பத்தி செய்தால், மதுபானம் தயாரிக்க தேவையான மொலாசிஸ் பற்றாக்குறை ஏற்படும். கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் சர்க்கரை ஆலைகள் இல்லை. ஆனால், அங்கு மதுபான உற்பத்தி ஆலைகள் இயங்குகின்றன. அவர்களுக்கு தேவையான மொலாசிஸ் இங்கிருந்து செல்கிறது. பல்லாயிரம் கோடிகள் புழங்கும் மதுபான ஆலைகளின், ‘லாபி’யும் எத்தனால் உற்பத்தியை தடுக்கிறது என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டு.
*****************************************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக