ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு வந்த காலத்தில், 100-க்கு ஏழு குழந்தைகள்தான் தமிழகத்தின் பள்ளிகளின் வாசல்படியில் கால்வைத்தன. அரசுப் பள்ளிகளில் அனைவரும் சமமாகக் கல்வி பயிலலாம் என்ற அரசின் ஆணை ஏட்டளவில்தான் அப்போது இருந்தது.
ஆங்கிலேயர் ஆட்சியில் 1939-லேயே ராஜாஜி சென்னை மாகாண முதலமைச்சராகிவிட்டார். அப்போது மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் தலித் சமூகத்தின் பெண் குழந்தைகளைப் பள்ளியில் மூன்று மணிநேரம் மட்டுமே அனுமதித்தால் போதும். மற்ற நேரம் அவர்களின் அம்மா, அப்பாவின் வேலைகளில் உதவிசெய்யட்டும் என்று ஆணையிட்டார்.
1950-ல் இந்தியா குடியரசானது. அனைவருக்கும் கல்வி தர வேண்டியது அரசின் கடமை என்று சொன்னது, சுதந்திர இந்தியாவின் அரசியல் சாசனம். சென்னை மாகாணத்தில் 1951-ல் 80% பேர் கைநாட்டுகள்தான். 1946-ல் முதல் வகுப்பில் சேர்ந்த 12 லட்சத்து 22 ஆயிரத்து 775 குழந்தைகள் 5-ம் வகுப்பு வருவதற்குள் 100-க்கு 63 பேர் பாதியிலே நின்றுவிட்டார்கள்.
இந்தச் சூழலில், சென்னை மாகாணத்தின் கல்வித் துறை 1950-ல் பத்தாண்டுத் திட்டமொன்றை உருவாக் கியது. அதில், ஆண்டுக்கு ஒரு கோடி செலவழித்தால் அடுத்தடுத்த ஆண்டுகளில் ஐந்து லட்சம் புதிய மாணவர் களைப் பள்ளியில் சேர்க்கலாம் என்றது. ஆனால், நடைமுறையில் 1950-51-ல் கல்விக்காக சென்னை மாகாணத்தில் 5 லட்சம் ரூபாய்தான் ஒதுக்கப்பட்டது.
அப்போதைய தமிழகத்தில் எல்லாக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்கத் தேவையான அளவு பள்ளிகள் கிடையாது. தேவையான எண்ணிக்கையில் ஆசிரியர் களும் கிடையாது.
அந்த நேரத்தில்தான் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக ராஜாஜி மீண்டும் வந்தார். 1953-ல், மேம்படுத்தப்பட்ட ஆரம்பக் கல்வித் திட்டத்தை அவர் அறிவித்தார்.
காமராஜரை முதல்வராக்கிய குலக்கல்வித் திட்டம்
அப்போதைய பள்ளிகள் ஐந்து மணி நேரம் இயங்கின. அதை மாற்றி, மூன்று மணி நேரம் பள்ளியில் இருக்க வேண்டும். மூன்று மணி நேரம் தங்களின் குடும்பத் தொழிலை மாணவர்கள் கற்க வேண்டும் என்று ராஜாஜி மாற்றினார். மாணவிகள் வீட்டுவேலைகளைக் கற்க வேண்டும் என்றார். குடும்பத் தொழில் செய்யும் பெற்றோர் இல்லாத மாணவர்கள் வேறொரு தொழில் செய்பவரிடம் வேலையைக் கற்கலாம். இது தவிர, மாணவர்கள் தமது ஊர்களில் துப்புரவுப் பணி, சாலைகள் அமைத்தல், கட்டிடம் கட்டுதல் போன்றவற்றில் ஈடுபடுத்தப்படுவார்கள். இரண்டு பணி நேரங்களில் தினமும் பள்ளிகள் இயங்கும் என்றார் ராஜாஜி.
தானாகவே எரிந்துகொண்டிருந்த தமிழகத்தின் மேல் இந்தக் கல்வித் திட்டம் மண்ணெண்ணெயை ஊற்றிவிட்டது. இதை, குலக்கல்வித் திட்டம் என்றார் பெரியார். மக்களின் எதிர்ப்பு விஸ்வரூபம் எடுத்து, பல கட்சிகளை ஒன்றுபடுத்தியது. காங்கிரஸ் கட்சிக்குள்ளும் காமராஜர் தலைமையில் எதிர்ப்பு வெளிப்பட்டது. ராஜாஜி வெளியேறினார். காமராஜர் 1954-ல் முதல்வர் ஆனார். ஆக, குலக்கல்வித் திட்டம் வராமல் இருந்திருந்தால் காமராஜர் முதல்வராகும் வாய்ப்பு குறைவுதான்.
கல்விக்கு உணவு தந்தவர்
இந்த நேரத்தில்தான் சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திரம் தனியாகப் பிரிந்தது. அதுவும் குலக்கல்வியைக் கைவிட்டது. அதன் பிறகு இன்றைய தமிழகத்தின் பகுதிகளில் மூடப்பட்ட பள்ளிகளையெல்லாம் காமராஜர் திறந்தார். ஆயிரக் கணக்கில் புதிய பள்ளிகளைக் கட்டினார். ஒவ்வொரு கிராமத்துக்கும் அருகில் ஒரு பள்ளி இருக்குமாறு செய்தார். இலவசக் கட்டாயக் கல்வியைத் தமிழகத்தில் உருவாக்கி வலுப்படுத்தினார்.
1925-ல் சென்னை மாநகராட்சியின் உறுப்பினராக சிங்காரவேலர் இருந்தபோது, மாநகராட்சிப் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவை வழங்க வைத்தார். அந்த மதிய உணவுத் திட்டத்தை மாநிலம் முழுவதும் காமராஜர் அறிமுகப்படுத்தினார். இது உலக அளவில் இன்னமும் பேசப்படுகிற புதிய முயற்சி. இத னால் பள்ளிகளில் குழந்தைகள் சேர்வதும், இடை யிலேயே நின்றுபோகாமல் தொடர்ந்து வருவதும் அதிகரித்தது. லட்சக் கணக்கான குடும்பங்களில் கல்வி முதன்முறையாக நுழைந்தது. தமிழகத்தைப் பின்பற்றித்தான் பல மாநிலங்கள் மதிய உணவுத் திட்டத்தில் இறங்கின.
அப்பாக்களுக்கும் பிள்ளைகளுக்கும் கடவுள்
“தனது மகன் தன்னைப் போலவே வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுவாக ஒரு அப்பாவுக்கு இருக்கும். ஆனால், பெற்றோரின் தொழிலை மட்டும் தான் பிள்ளைகள் செய்ய வேண்டுமென்றும் வேறு பிள்ளைகள் அந்தத் தொழிலுக்கு வரமுடியாது என்றும் கட்டாயமாக உருவாக்கப்படும் சூழலில் நீதியும் சமத்துவமும் இருக்காது” என்கிறார் எனது நண்பர் ஒருவர். செங்கல்பட்டில் ஒரு பண்ணையில் பரம்
பரையாக விவசாய வேலைகளைச் செய்த அப்பா ஒருவர், தான் வேலை செய்யும் இடத்துக்குத் தனது மகன்கள் வந்தால் அடித்து விரட்டுவாராம். ஆண்டை யின் கண்ணில் படாமல் தனது மகன்களை காமராஜர் உருவாக்கிய அரசுப் பள்ளியில் அவர் படிக்க வைத்தார். அந்த முதல் தலைமுறை பட்டதாரிகள் தமிழக அரசின் போக்குவரத்துக் கழகத்தில் தற்போது ஊழியர்களாக இருக்கிறார்கள். தன்னைப் போலத் தனது பிள்ளைகள் ஆகிவிடக் கூடாது என்பதற்காகத் தங்கள் அப்பா பட்ட கஷ்டங்களை நினைத்து அவர்கள் இப்போதும் கண்கலங்குகிறார்கள்.
குலக்கல்வி கிளப்பிய விவாதம் முடிந்துவிடவில்லை. கட்டாயக் கல்வியுரிமைச் சட்டம், சமச்சீர் கல்வியை அமலாக்குவதற்கான விவாதங்கள், வாழ்க்கைக்கு நெருக்கமான கல்வி ஆகிய இன்றைய விவாதங்களின் வேர் குலக்கல்வித் திட்டத்திலும் இருக்கிறது.
கல்வி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கடவுள் வாழ்த்துப் பாடுவதை நிறுத்திவிட்டு, காமராஜர் வாழ்த்து பாடலாம் என பெரியார் பாராட்டினார். இன்னமும் மக்கள் மனதில் அந்தப் பாராட்டு இருக்கிறது.
- நீதிராஜன், தொடர்புக்கு: neethirajan.t@thehindutamil.co.in
******************************
சென்னை மாகாணத்தின் காங்கிரஸ் முதல் மந்திரியாக ஓமந்தூர் பி. ராமசாமி ரெட்டியார் 1947-ல் பதவியேற்ற பிறகு, 1928-ல் பிறப்பிக்கப்பட்ட வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உத்தரவைப் பின்வருமாறு திருத்தி, ‘மொத்த உத்தியோகம் 14 என்றால், பிராமணருக்கு 2, கிறிஸ்துவருக்கு 1, முஸ்லிமுக்கு 1, ஆதிதிராவிடருக்கு 2, பிற்பட்டோருக்கு 2, மற்ற பிராமணர் அல்லாதாருக்கு 6 என்ற வீதத்தில் உத்தியோகம் வழங்கப்பட வேண்டும்' என்று உத்தரவிட்டார். 'காங்கிரஸ் ஆள்கிறதா? தாடி இல்லாத ராமசாமி ஆள்கிறாரா?' என்கிற குரல்களைக் கிளப்பிய மாற்றம் இது.
இந்தியாவை விட்டு பிரிட்டிஷார் வெளியேறுவதற்கு முன்பே, காங்கிரஸ் கட்சியின் சென்னை மாகாண அரசு, 24.03.1947 அன்று ஓர் ஆணையைப் பிறப்பித்தது. அந்த ஆணை மூலமாக, 14 பணியிடங்கள் இருந்தால், அவற்றில் இரண்டை, பிராமணர் அல்லாத பிற்படுத்தப்பட்டவருக்கு ஒதுக்கீடு செய்தது. ஓமந்தூர் பி. ராமசாமி ரெட்டியாரின் தலைமையிலான சென்னை மாகாண அரசுதான், இந்தியா விலேயே முதன்முறையாகத் தனி ஒதுக்கீடு வழங்கியது.நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, 21.11.1947 அன்று பிறப்பித்த அரசு ஆணையின்படி, இதற்கு முன் 12 என்று கணக்கிடப் பட்ட பணியிடங்கள் 14-ஆக உயர்த்தப்பட்டு, உயர்த்தப்பட்ட இரு பணியிடங்களும் பிராமணர் அல்லாத, பிற்படுத்தப்பட்டவர் களுக்கு வழங்கப்பட்டு, ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது.
நீதிமன்றம் போட்ட தடை
இந்தியா குடியரசு நாடாகி, இந்திய அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த நிலையில், இரண்டு பிராமண மாணவர்கள் வகுப்புவாரி ஒதுக்கீட்டால் தாங்கள் பாதிக்கப்படுவதாகவும், இந்த ஒதுக்கீட்டு ஆணை, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 15-வது விதி மற்றும் 29(2)-வது விதி ஆகியவற்றுக்கு முரணானது' என்றும், ‘தனிநபர் உரிமையைப் பாதிக்கும் வகுப்புவாரி உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்' என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய கமிட்டியில் இடம்பெற்ற அல்லாடி கிருஷ்ணசாமி ஐயரே இந்த வழக்கில் வாதிகளுக்காக வாதாடினார். 1928 முதல் ஓரளவுக்காவது நடைமுறையில் இருந்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உத்தரவை ‘இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 15-வது விதிக்கும் 29(2)வது விதிக்கும் முரணானது' என்று சொல்லி ரத்துசெய்து உத்தரவிட்டு, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. சென்னை மாகாண அரசு இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றபோது, ‘கம்யூனல் ஜி.ஓ. செல்லாது' என்று உயர் நீதிமன்றத் தீர்ப்பை உறுதிசெய்தது உச்ச நீதிமன்றம்.
பெரியார் நடத்திய மாநாடும் பேரெழுச்சியும்
உச்ச நீதிமன்றத் தீர்ப்பினால் விளையக்கூடிய பேராபத்தைத் தடுக்கத் திட்டமிட்ட பெரியார், 1950 டிசம்பர் முதல் தேதியன்று திருச்சியில் ‘கம்யூனல் ஜி.ஓ. மாநாடு' ஒன்றைக் கூட்டினார். ‘கல்வி, அரசியல் உத்தியோகங்களில் பின்தங்கிய மக்களுக்கு ஜனத்தொகை விகிதாச்சாரப்படி இடஒதுக்கீடு செய்யும் வகையில், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துக்கு இடமளித்து அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும்' என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார்.
கட்சி வேறுபாடின்றி மக்கள் அனைவரும் பெரியாருக்கு ஆதரவு தந்தார்கள். காங்கிரஸ் இயக்கத்தில் ஒரு பிரிவினரும்கூட பெரியாரின் நியாயமான கோரிக்கைக்கு மறைமுகமான நல்லாதரவு காட்டினர்.
தமிழகத்தில் பெரும் எழுச்சி ஏற்பட்டது. பெரியாரின் வேண்டுகோளை ஏற்று 14.08.1950 அன்று மாணவர்கள் களத்தில் இறங்கினர். சென்னை மாகாணம் முழுவதிலும், ‘அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும்' அல்லது ‘அரசியல் சட்டம் ஒழிய வேண்டும்' என்ற கோஷம் தலைதூக்கியது. இந்தத் தீர்ப்பால், மக்களுக்கு ஏற்பட இருக்கிற ஆபத்தை உணர்த்துகிற வகையில், அறிஞர் அண்ணா அப்போது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘பொன் விலங்கு' என்ற தலைப்பில் நூலாக 1953-ல் வெளியிடப்பட்டது. அதில், “30 ஆண்டுகளாக நாடு முழுவதும் நல்லறிவாளர்கள் பேசிப் பேசி ஆதரவு திரட்டினர். அந்த வகுப்புவாரி முறை, இதோ சட்ட விரோதம் என்று ஆகிவிட்டது… அமைச்சர்களே என்ன செய்யப்போகிறீர்கள்? சமூக நீதியைக் காக்கப் போரிடப் போகிறீர்களா? அல்லது சந்துபொந்து தேடி அலையப்போகிறீர் களா? நேர்மையாளர்களே! நாட்டுத் தலைவர்களே! நிலைமையைக் கவனியுங்கள். எதிர்கால வேலைத் திட்டம் என்ன?” என்று உரிமைக் குரல் எழுப்பியிருந்தார் அண்ணா.
குரலைச் செயலாக்கிய காங்கிரஸ்
மக்கள் சக்தியின் வலிமையையும், இந்தக் கோரிக்கையின் நியாயத்தையும் இந்திய அரசு உணர வேண்டிய சூழ்நிலை உருவாயிற்று. ஜனநாயகவாதியான பிரதமர் நேரு, உண்மை நிலையை அறிய, காமராஜரைக் கலந்தாலோசித்தார். காமராஜர் தந்த தெளிவான ஆலோசனைக்குப் பிறகு, இந்திய அரசமைப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்ட கொஞ்ச காலத்திலேயே, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துக்கு இடமளிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் முதல் திருத்தத் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினார்.
அரசமைப்புச் சட்டத்தின் 1951-ம் ஆண்டு செய்யப்பட்ட முதல் திருத்தம், 15-வது விதியின் 4-ம் உட்பிரிவாகச் சேர்க்கப்பட்டது. அந்தத் திருத்தம் ‘இந்த 15-வது விதியில் உள்ள எதுவும், அல்லது 29(2)-ல் கண்ட எதுவும், சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கிய குடிமக்களுக்கும் அல்லது தாழ்த்தப்பட்ட மற்றும் மலைசாதி மக்களுக்கும் முன்னேற்றம் அளிக்கக் கருதி, மாகாண அரசாங்கம் தனிச் சலுகை வழங்குவதற்காகச் செய்யும் எந்த ஏற்பாட்டையும் தடை செய்யாது' என்பதாகும்.
சமூகநீதியை முன்னெடுத்த மூலவர்
இந்த ஏற்பாட்டுக்குப் பிறகு, பிற்பட்ட வகுப்பினருக்கு 25% இடஒதுக்கீடு கிடைத்தது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஜனத்தொகை விகிதாச்சாரப்படி 15% இடஒதுக்கீடு கிடைத்தது. ஆக மொத்தம் 41% இட ஒதுக்கீடு உத்தியோகங்களிலும் கல்வி நிலையங்களிலும் கிடைத்தது. எனினும், இந்த ஏற்பாட்டில் தம் லட்சியம் நிறைவடையாததை உணர்ந்த பெரியார், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதைப் போல, பிராமணர் அல்லாத மற்ற மக்கள் அனைவருக்கும் ஜனத்தொகையின் அடிப்படையில் விகிதாச்சாரப்படி கல்வி மற்றும் உத்தியோகத் துறைகளில் அரசியல் சட்டரீதியாக இடஒதுக்கீடு செய்துதர வேண்டும்' என்று பேசியும் போராடியும் வந்தார்.
அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பெற்ற முதல் திருத்தத் துக்குப் பிறகு, பி.எஸ். குமாரசாமி ராஜா தலைமையில் இயங்கிய காங்கிரஸ் அரசு, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உத்தரவை மீண்டும் புதிதாகப் பிறப்பித்துச் செயல்படுத்தியது.
காலம்காலமாகத் தமிழ்ச் சமுதாயம் அனுபவித்துவந்த இடஒதுக்கீட்டு உரிமையைக் காக்கப் பல்வேறு வகைகளில் தொடர்ந்து போராடிய பெரியார் - அரசமைப்புச் சட்டத்தில், முதல் திருத்தம் கொண்டுவருவதற்குத் தூண்டுகோலாக இருந்த காமராஜர் - இப்பிரச்சினை குறித்துத் தொடர்ந்து கட்டுரைகள் பல எழுதி மக்கள் கருத்தைத் திரட்டிய அண்ணா ஆகிய இம்மூவருமே முதல் திருத்தம் கொண்டுவருவதற்குக் காரணமாக இருந்தார்கள். அன்று பிரதமர் நேருவோடு காமராஜருக்கு இருந்த அரசியல் நெருக்கத்தின் காரண மாகவே நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டுவந்து நிறைவேற்ற முடிந்தது. அவ்வகையில், ‘முதல் திருத்தத்தின் மூலவர்' என்று காமராஜரைக் குறிப்பிடுவது எத்தனை பொருத்தம்!
- ஆ. கோபண்ணா, பத்திரிகையாளர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு உறுப்பினர், ‘காமராஜ் - ஒரு சகாப்தம்’ என்ற நூலின் ஆசிரியர், தொடர்புக்கு:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக