சிகிச்சை நோயாளிகளுக்கு மட்டுமல்ல, மருத்துவத் துறைக்கும் தேவை
ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 1-ம் தேதி மருத்துவர்கள் தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. டாக்டர் பி.சி. ராயின் பிறந்த நாள்தான் மருத்துவர்கள் தினம். அவரது இறந்த நாளும் அதுவே! பி.சி.ராய் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். காந்தியவாதி. மகாத்மா காந்தியின் மருத்துவர். மேற்கு வங்கத்தில் 14 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தவர். பார ரத்னா விருது பெற்றவர்.
மருத்துவர்கள் தினம், மருத்துவர்கள் ஒன்றாகக் கூடிக் கொண்டாடி மகிழ்வதற்கு மட்டுமல்ல. மருத்துவர் களுடைய, மருத்துவத் துறையினுடைய பிரச்சினைகள் குறித்தும், இந்தியர்கள் அனைவருக்கும் நலவாழ்வு கிடைக்கச் செய்வதில் மருத்துவர்களின் பங்களிப்பு குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் தினமாகும்.
ஆனால், நடைமுறையில் இந்தத் தினம் அவ்வாறு கொண்டாடப்படுவதில்லை. மருத்துவர்கள் மகிழ்ச்சியாகக் கழிப்பதற்கான ஒரு தினமாகவே இத்தினம் பார்க்கப்படுகிறது. தங்களால் அன்பளிப்பாக வழங்கப்படும் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களைப் பெற்றுக்கொண்டு, கேளிக்கை, கொண்டாட்டம் என உல்லாசமாக மருத்துவர்கள் இருக்க வேண்டிய தினமாக இந்தத் தினத்தை பெருநிறுவனங்கள் மாற்றிவருகின்றன. இது வேதனையளிக்கிறது.
வருவாய் ஈட்டுவதே வாழ்க்கையா?
பெரும்பான்மையான மருத்துவர்கள் சமூகத்தைப் பற்றிய அக்கறையின்றியே உள்ளனர். வருவாய் ஈட்டுவதை மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். தங்களது தொழிலுக்கும் அப்பால் மற்றொரு உலக வாழ்க்கை உள்ளது என்பதைக்கூட அவர்கள் அறிவதில்லை. அந்த வாழ்க்கையின் அனுபவங்களைப் பெறுவதில்லை. அந்த அளவுக்கு இயந்திரமயமாகிவிட்டனர். இது அவர்களின் உடல், உளநலனுக்கே எதிராக உள்ளது. எனவே, மருத்துவர்கள் அவர்களது உரிமைகள், கடமைகள்பற்றி அறிந்துகொள்ள வேண்டும்.
உரிமைக் குரல்
நமது அரசு கடைப்பிடித்துவரும் தவறான மக்கள் நலவாழ்வுக் கொள்கையால் மருத்துவர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கூடுதல் பணிச் சுமை, மன உளைச்சல் போன்றவற்றால் ஏராளமான மருத்துவர்கள் இளம் வயதிலேயே இறந்துவிடுகின்றனர்.
மருத்துவர்களின் பணியிடங்கள் ஒப்பந்த அடிப் படையில் நிரப்பப்படுகின்றன. 8,000 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. மருத்துவர்களின் சராசரி மாத வருமானம் ரூபாய் 13 ஆயிரம் மட்டுமே. இதனால், அரசுப் பணிகளில் சேர மருத்துவர்கள் தயங்குகிறார்கள். இதை எதிர்கொள்ள, புதிய உத்தியைக் கடைப்பிடிக்க மத்திய அரசு முயல்கிறது. அதாவது, கட்டாயச் சேவை என்ற போர்வையில் தற்காலிக அடிப்படையில் ஓராண்டுக்கு மட்டும் புதிதாகப் படித்து முடிக்கும் இளம் மருத்துவர்களைக் கட்டாய வேலையில் ஈடுபடுத்த முயல்கிறது. இதனால், மருத்துவர்களின் நிரந்தர வேலை
வாய்ப்பு பறிபோய்விடும். இந்நிலையில், சென்னை மாநகராட்சியோ தனியார் நிறுவனங்கள் மூலம் வெளிக் கொணர்வு முறையில் மருத்துவர்களை நியமிக்க முயல்கிறது. இது மருத்துவர்களை விரக்திக்கு உள்ளாக்குகிறது.
ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரை அமலாக்கத் துக்குப் பிறகு, மத்திய அரசுக்கு இணையாகத் தமிழக அரசு மருத்துவர்களுக்கு ஊதியம், பதவி உயர்வு வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்தது. ஆனால், அது முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. மத்திய அரசு மருத்துவர்களுக்கு வழங்குவதுபோல் சிறப்புப்படிகள் தமிழக அரசால் வழங்கப்படுவது இல்லை. தமிழக அரசியல் தலைவர்கள் மருத்துவர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டும்.
மருத்துவர்களின் பற்றாக்குறை மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. இன்று இந்தியாவில் 6 லட்சம் மருத்துவர்கள் இருக்கிறார்கள். இன்னும் 6 லட்சம் மருத்துவர்கள் தேவை. மருத்துவர்களின் பற்றாக்
குறையைப் போக்கிட, போதிய மருத்துவக் கல்லூரி களை உருவாக்கிட மத்திய-மாநில அரசுகள் தவறி விட்டன. இதனால், மருத்துவர்களும் மக்களும் பாதிக்கப் படுகின்றனர்.
மற்றுமொரு முக்கியப் பிரச்சினை, பெருநிறுவன மருத்துவமனைகளால் சிறிய மருத்துவமனைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், சிறிய அளவில் மருத்துவத் தொழிலில் ஈடுபட்டுள்ள மருத்து வர்களும் ஏழை மக்களும் பாதிக்கப்படுவர்.
``இதுகாறும் போற்றிப் பாராட்டப்பட்டு, பணிவுக்கும் பக்திக்கும் உரியதாகக் கருதப்பட்ட ஒவ்வொரு பணித் துறையையும் முதலாளித்துவ வர்க்கம் மகிமை இழக்கச் செய்துள்ளது. மருத்துவரையும் வழக்கறிஞரையும் சமயக் குருவையும் கவிஞரையும் விஞ்ஞானியையும் அது தனது கூலி உழைப்பாளர்கள் ஆக்கிவிட்டது'' என கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் மார்க்ஸும் ஏங்கல்ஸும் 1848-ல் கூறினர். அவர்கள் அன்று கூறியதை இன்று பெருநிறுவன மருத்துவமனைகள் எதார்த்தத்தில் நிரூபித்துக்காட்டியுள்ளன. மருத்துவர்களையும் கூலி உழைப்பாளர்களாக்கி மகிமை இழக்கச்செய்துள்ளன.
மருத்துவர்கள் தங்களைப் பாதிக்கும் பிரச்சினைகளுக்கு எதிராகக் கூடுதல் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.அதேசமயம், மிகப் பெரிய வரலாற்றுக் கடமையை யும் ஆற்ற வேண்டும். குறிப்பாக, நமது மக்கள் அனை வருக்கும் நலவாழ்வு கிடைத்திடப் பணியாற்ற வேண்டும்.
வியாபாரமயம்
கடந்த 40 ஆண்டுகளில் இந்திய மருத்துவத் துறையில் மிகப் பெரிய எதிர்மறை மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. 1978-ல் அல்மா அட்டாவில் நடைபெற்ற ஆரம்ப நலப் பராமரிப்புகுறித்த சர்வதேச மாநாட்டுப் பிரகடனம், ``நலவாழ்வு என்பது அடிப்படை மனித உரிமை'' என அறிவித்தது. அதை ஏற்றுக்கொண்டு இந்தியாவும் கையெழுத்திட்டது. கையெழுத்திட்ட பேனா மை காய்வதற்குள்ளாகவே ஏற்றுக்கொண்ட உறுதி
மொழிக்கு எதிராகச் செயல்படத் தொடங்கியது நமது அரசு. விளைவு, மருத்துவம் மிக வேகமாகத் தனியார்மய மானது, வியாபாரமயமானது, பெருநிறுவன மயமானது.
பெருநிறுவன மருத்துவமனைகளிடமும், மருந்து உற்பத்தி நிறுவனங்களிடமும் தனியார் நலக் காப்பீட்டு நிறுவனங்களிடமும் நலவாழ்வு வழங்கும் பொறுப்பை அரசு ஒப்படைத்துவிட்டது. அனைவருக்கும் நலவாழ்வு வழங்க வேண்டிய தனது பொறுப்பைத் தட்டிக்கழித்துவிட்டது. மருத்துவச் செலவுகளால் சாதாரண இந்தியன் விழிபிதுங்கி நிற்கிறான்.
நலவாழ்வு என்பது உடல்ரீதியாகவும் உளரீதியாகவும் நோயற்றுத் திகழ்வது மட்டுமல்ல, சமூகரீதியாகவும் நலவாழ்வு வாழ்தலாகும். ஏறத்தாழ 80 கோடி மக்கள் நாளொன்றுக்கு வெறும் 20 ரூபாய் வருமானத்தில் வாழ்க்கையோடு போராடும் நமது நாட்டில் அனைவருக்கும் சமூகரீதியாக நலவாழ்வு வழங்க முடியுமா? அனைவரும் உடல்ரீதியான-உளரீதியான நலவாழ்வு வழங்க முடியுமா?
அனைவருக்கும் நலவாழ்வு?
ஒரு சில பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகளை மேலும் பரம ஏழைகளாகவும் இன்றைய சமூகச் சூழல் மாற்றுகிறது. குடிநீர், வீடு, சுகாதாரம், கழிப்பிடம், அடிப்படைக் கல்வி, வேலைவாய்ப்பு, சரிவிகித உணவு, மருத்துவம் போன்றவற்றைக்கூட நமது ஆட்சியாளர்களால் அனைவருக்கும் வழங்க முடியவில்லை. இந்நிலையில், அனைவருக்கும் நலவாழ்வுபற்றி முழங்குவது நகைப்புகுரியதல்லவா?
அனைவருக்கும் நலவாழ்வு என்பது அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கும் சமத்துவச் சமூக அமைப்பில் மட்டுமே சாத்தியம்.
அனைவருக்கும் நலவாழ்வு பெறுவதற்கான போராட்டம் என்பதே சமூக மாற்றத்துக்கான மிகப் பெரிய புரட்சிகர அரசியல் நடவடிக்கையாகும். “நல வாழ்வுக்கான போராட்டம் என்பதே விரிந்த பொருளில் ஓர் அரசியல் போராட்டமாகும்'' எனப் பிரபல ஜெர்மானிய நோய்க்குறியியல் மருத்துவ நிபுணர் டாக்டர்.விர்ச்சோ சரியாகக் கூறினார். அத்தகைய போராட்டத்தை மருத்து வர்கள் மட்டுமே தனித்து நின்று நடத்திவிட முடியாது. இதர பகுதி மக்களுடன் இணைந்து சரியான சித்தாந்த வழிநின்றே நடத்திட வேண்டும்.
காந்திக்குச் சிகிச்சையளிக்கச் சென்ற மருத்துவர் பி.சி. ராயிடம், ``நமது நாட்டின் 40 கோடி மக்களுக்கும் இலவசமாகச் சிகிச்சை அளித்துவிட்டு வாருங்கள், உங்களது சிகிச்சையை நான் ஏற்றுக்கொள்கிறேன்'' என மகாத்மா காந்தி கூறினார். இப்போது உயிரோடு இருந்திருந்தால் நம்மிடமும் இப்படித்தான் கூறியிருப்பார் என நமது மருத்துவர்கள் அனைவரும் உணர வேண்டிய நாளே மருத்துவர்கள் தினம்.
டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத், பொதுச் செயலாளர், சமூகச் சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம். தொடர்புக்கு: daseindia2011@gmail.com